under review

கந்தர் கலிவெண்பா

From Tamil Wiki
Revision as of 21:47, 27 June 2024 by Logamadevi (talk | contribs)

கந்தர் கலிவெண்பா (திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா) (பதினைந்தாம் நூற்றாண்டு) குமரகுருபரரால் பாடப்பட்ட பக்தி இலக்கிய நூல். திருச்செந்தூர் முருகன் மீது கலி வெண்பா யாப்பில் பாடப்பட்டது.

தோற்றம் - தொன்மம்

கந்தர் கலிவெண்பா நூலை இயற்றியவர் குமரகுருபரர். இவருக்கு ஐந்து வயதாகியும் பேச்சு வராததால் பெற்றோர் தங்கள் குல தெய்வமான திருச்செந்தூர் தலத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கேயே தங்கி முருகப்பெருமானிடம் வேண்டிக் கொண்டனர். நள்ளிரவில் பெற்றோர் அயர்ந்து உறங்க, செந்திலாண்டவன், உறங்காமல் விழித்திருந்த குமரகுருபரருக்குக் காட்சி அளித்தான். ‘குருபரா’ என்று அன்போடு அழைத்து, நாவில் சடாக்ஷர(ஆறெழுத்து) மந்திரமெழுதி ஆசிர்வதித்து மறைந்தான். முருகப் பெருமான் குமரகுருபரருக்குப் பூவைக் காட்டியதால் ஊமை நீங்கப் பெற்று, ’பூமேவு’ என்று பாடலைத் தொடங்கினார் என்றும், உலக வழக்கின் மங்களகரமாகப் ’பூ’ என்று தொடங்கினார் என்றும் கூறப்படுகிறது.

முருகன் அருளால் உலக ஞானம் அனைத்தும் கைவரப் பெற்ற குமரகுருபரர், தமது ஐந்தாம் வயதில் பாடிய அந்தப் பாடலே கந்தர் கலிவெண்பா என்னும் திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா.

நூல் அமைப்பு

கந்தர் கலிவெண்பா நூல், சைவ சித்தாந்தம், கந்த புராணம், கவசம் ஆகிய மூன்றும் ஒருங்கே கொண்ட நூலாக அறியப்படுகிறது. இந்நூலில், ’பூமேவு செங்கமலப் புத்தேளுந் தேறரிய’ என்ற பாடல் தொடங்கி, ’ஆயும் பழைய அடியாருடன்கூட்டி' வரை 122 கண்ணிகளாக, 61 பாடல்கள் இடம்பெற்றன. இந்நூலில் உள்ள முருகன் உருவ வர்ணனையே முருகத் தியானமாக உள்ளது. ‘குட்டிக் கந்தபுராணம்’ என்ற சிறப்புப் பெயரும் இந்நூலுக்கு உண்டு.

உள்ளடக்கம்

கந்தர் கலிவெண்பா இந்நூலில் முருகனுடைய திரு அவதாரம், திருவிளையாடல்கள், முருகனின் கேசாதிபாத வருணனை, நான்முகனைக் குட்டிச் சிறை வைத்தது, தந்தையாகிய சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்தது, கிரவுஞ்ச மலையைப் பிளந்தது, சூரனை வதம் செய்தது, தெய்வயானை வள்ளி திருமணங்கள் ஆகிய செய்திகள் சுவைபட விவரிக்கப்பட்டுள்ளன. மேலும் முருகனின் ஆறு முகங்களின் அழகு, பன்னிரு கரங்களின் செயல்கள், சைவ சித்தாந்த நுட்பங்கள், முருகப்பெருமானின் பெருமை, கருணை, அருள், ஆற்றல், அடியவர்க்கு அருள் செய்யும் விதம் ஆகியன கூறப்பட்டுள்ளன.

பாடல் நடை

முருகனின் திருவுருவச் சிறப்பு

தோய்ந்தநவ ரத்நச் சுடர்மணியாற் செய்தபைம்பொன்
வாய்ந்த கிரண மணிமுடியும் - தேய்ந்தபிறைத்
துண்டம் இரு மூன்று நிரை தோன்றப் பதித்தனைய
புண்டரம் பூத்த நுதற் பொட்டழகும் - விண்ட
பருவமலர்ப் புண்டரிகம் பன்னிரண்டு பூத்தாங்கு
அருள் பொழியுங் கண்மலர்ஈ ராறும் - பருதி
பலவும் எழுந்து சுடர் பாலித்தாற் போலக்
குலவு மகரக் குழையும் - நிலவுமிழும்
புன்முறுவல் பூத்தலர்ந்த பூங்குமுதச் செவ்வாயும்
சென்மவிடாய் தீர்க்குந் திருமொழியும்
வெவ்வசுரர் போற்றிசைக்கும் வெஞ்சூரனைத் தடிந்து
தெவ்வருயிர் சிந்துந் திருமுகமும் - எவ்வுயிர்க்கும்
ஊழ்வினையை மாற்றி உலவாத பேரின்ப
வாழ்வு தருஞ் செய்ய மலர்முகமும் - சூழ்வோர்
வடிக்கும் பழமறைகள் ஆகமங்கள் யாவும்
முடிக்குங் கமல முகமும் - விடுத்தகலாப்
பாச இருள் துரந்து பல்கதிரிற் சோதிவிடும்
வாச மலர்வதன மண்டலமும் - நேசமுடன்
போகமுறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடிக்கும்
மோகம் அளிக்கும் முகமதியும் - தாகமுடன்
வந்தடியிற் சேர்ந்தோர் மகிழ வரம்பலவும்
தந்தருளுந் தெய்வமுகத் தாமரையும்
தேவர்க் குதவுந் திருக்கரமும் சூர்மகளிர்
மேவக் குழைந்தணைந்த மென்கரமும் - ஓவாது
மாரி பொழிந்த மலர்க்கரமும் பூந்தொடையல்
சேர அணிந்த திருக்கரமும் - மார்பகத்தில்
வைத்த கரதலமும் வாமமருங் கிற்கரமும்
உய்த்த குறங்கில் ஒருகரமும் - மொய்த்த
சிறு தொடி சேர் கையு மணி சேர்ந்ததடங் கையும்
கறுவுசமர் அங்குசஞ்சேர் கையும் - தெறுபோர்
அதிர் கே டகஞ்சுழற்றும் அங்கைத் தலமும்
கதிர்வாள் விதிர்க்குங் கரமும்

உசாத்துணை


✅Finalised Page