under review

பிரகிருதி: Difference between revisions

From Tamil Wiki
(Finalized)
(Corrected errors in article)
 
Line 101: Line 101:
* [https://www.linkedin.com/pulse/decoding-samkhya-philosophy-understanding-prakritis-cosmic-gijare-vfemf Decoding Samkhya Philosophy: Understanding Prakriti's Cosmic Manifestation]
* [https://www.linkedin.com/pulse/decoding-samkhya-philosophy-understanding-prakritis-cosmic-gijare-vfemf Decoding Samkhya Philosophy: Understanding Prakriti's Cosmic Manifestation]
*[https://kreately.in/sankhya-the-true-experience-of-purusha-and-prakriti/ Sankhya: The True Experience Of Purusha And Prakriti]
*[https://kreately.in/sankhya-the-true-experience-of-purusha-and-prakriti/ Sankhya: The True Experience Of Purusha And Prakriti]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|21-Jun-2024, 21:59:08 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 20:46, 24 June 2024

பிரகிருதி. நன்றி Pariksith Singh

பிரகிருதி: (ப்ரக்ரிதி) நம்மைச்சூழ்ந்துள்ள பிரபஞ்சப்பொருள். இயற்கை. தானாக இயல்வது. தானாகவே தன்னை பரப்பி நிலைநிறுத்திக் கொள்வது. சம்ஸ்கிருதத்தில் இச்சொல் இயற்கை என்னும் சாதாரண பொருளிலும், அனைத்துப் பொருட்களும் அடங்கிய பொருள்வயப் பிரபஞ்சம் என்னும் பொருளிலும், ஒன்றின் இயல்பு என்னும் பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது. சாங்கிய தரிசனத்தில் இது முதலியற்கை என்றும், பிரபஞ்சத்தின் மூலப்பொருள் என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்திய சிந்தனைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் பிரகிருதியை விளக்குகின்றன.

சொற்பொருள்

பிரகிருதி என்னும் சொல் ப்ர+க்ருதி என பிரிந்து பொருள் படும். கிருதி என்றால் செய்யப்பட்டது, செயல்கொண்டது என்று பொருள். ப்ர என்றால் முன்னரே இருப்பது, திகழ்வது, பரவுவது என்று பொருள். இச்சொல் யாஸ்கர் இயற்றிய தொன்மையான சம்ஸ்கிருத சொல்லகராதியான யாஸ்க நிருக்தத்தில் இயற்கை, மூலப்பருப்பொருள் என்னும் இரு பொருளில் காணப்படுகிறது.

இச்சொல் சம்ஸ்கிருதத்தில் மூன்றுவகையில் பயன்படுத்தப்படுகிறது.

  • இயற்கை: பிரகிருதி என்னும் சொல் இயற்கை என்னும் பொருளில் சாதாரணமாக கையாளப்படுகிறது. உதாரணமாக பிரகிருதி சௌந்தர்ய: என்றால் இயற்கையின் அழகு.
  • இயல்பு: ஒன்றின் இயல்பை பிரகிருதி என்னும் சொல்லால் குறிப்பிடுவதுண்டு. உதாரணமாக வாத பிரகிருதி என்றால் ஒருவரின் உடலில் வாதம் ஓங்கியிருக்கும் இயல்பு
  • முதலியற்கை: சாங்கியம் போன்ற தரிசனங்களிலும் பிற தத்துவக் கொள்கைகளிலும் பிரகிருதி என்பது பருப்பொருட்களாலான இப்பிரபஞ்சத்தை ஒட்டுமொத்தமாகக் குறிக்கும் கலைச்சொல். இது நிலம், தீ, காற்று, நீர் என நான்கு பருப்பொருட்களாக முதலிலும் வானமும் சேர்ந்து ஐந்து பருப்பொருட்களாக பின்னரும் பிரிக்கப்பட்டது.

தமிழில் இயற்கை என்னும் சொல் இதற்கு இணையானது. அச்சொல்லும் மேற்குறிப்பிட்ட மூன்று பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலத்தில் nature என்னும் சொல் முதல் இரண்டையும், matter என்னும் சொல் மூன்றாவது பொருளையும் குறிக்கப்பயன்படுத்தப்படுகிறது

பிரகிருதி வரையறை (தத்துவம்)

பிரகிருதி எனப்படும் முதலியற்கைக்கு எவ்வகையான வரையறை அளிக்கப்படுகிறது என்பது இந்திய சிந்தனை மரபில் ஒரு குறிப்பிட்ட தத்துவப்பார்வையை வரையறை செய்யும் அம்சங்களில் ஒன்று.

சாங்கியம்

இந்திய சிந்தனை முறைகளில் ஆறு தரிசனங்களில் ஒன்றாகிய சாங்கியம், பிரகிருதி என்னும் கருத்தை முதன்மையாக முன்வைத்து, அதையே தன் பிரபஞ்சக்கொள்கைகளில் முதன்மையாக முன்வைத்தது. பிரகிருதி பருப்பொருளால் ஆனது. அது எவராலும் படைக்கப்படுவதோ அழிவதோ அல்ல. அதற்கு நோக்கமோ உள்ளுணர்வோ சாரமோ மையமோ இல்லை. அதைக் கடந்த எதனாலும் அது இயக்கப்படுவதுமில்லை. அது தன்னுள் உறையும் சத்வம், தமஸ், ரஜஸ் (நேர்நிலை, எதிர்நிலை, செயலூக்க நிலை) என்னும் மூன்று குணங்களினாலானது. அம்மூன்று குணங்களின் சமநிலையழிவால் அது செயல்நிலை கொள்கிறது. முடிவில்லாத வடிவவேறுபாடுகளை அடைந்து பிரபஞ்சமாக ஆகிறது. பிரபஞ்ச இயக்கம் நிகழ்வது பிரகிருதியிலுள்ள இயல்புகள் மற்றும் அவை இணைவதன் நெறிகளால் மட்டுமே. பிரகிருதியின் முக்குணங்களையும் அறிவது புருஷன் என்னும் தன்னிலை. இதுவே சாங்கியத்தின் கொள்கையாகும். புருஷனால் அறியப்படுவதற்கு முந்தைய பிரகிருதி பிரதான (முதன்மை) என அழைக்கப்படுகிறது

யோகம்

பிரகிருதியிலுள்ள குணங்களை அறியும் தன்னிலையே புருஷன். பிரகிருதி பெருகும்போது புருஷனும் பெருகி பலகோடி தனிப்பிரக்ஞைகளாகிறான். அவனே பிரபஞ்சத்தை அறிகிறான். பிரகிருதியை அவன் தனித்தனிப்பொருட்களாக அறிகிறான். அந்த தனித்தன்னிலை அகன்று அவன் புருஷன் என்னும் ஒற்றைநிலையென தன் அகத்தை ஆக்கிக்கொள்கையில், பிரகிருதியும் தன் முழுமையுருவாக அவன் முன் நிற்கிறது. இந்த பிரகிருதி-புருஷ இணைவே விடுதலை. அதுவே துயரை நீக்கும் வழிமுறை. இது சாங்கியத்தின் துணைத்தரிசனமாகிய யோகம் முன்வைக்கும் பார்வையாகும்.

வேதாந்தம்

இந்திய வேதாந்தம் (உத்தர மீமாம்சம்) பிரகிருதியை இரண்டு வகைகளில் வரையறை செய்கிறது.

பிரம்மம் என்னு கருத்துருவத்த்தின் அல்லது முழுமுதல் தெய்வத்தின் ஒரு வெளிப்பாடு பிரகிருதி. பருப்பொருளாலான பிரபஞ்சம். தனக்கென சாரமோ, நோக்கமோ, இயக்கமோ அற்றது. ஆகவே ஜடப்பிரபஞ்சம். பிரம்மம் அதன் உள்ளடக்கமும் சாரமும் ஆக உள்ளது. பிரம்மத்தால் அது இயங்குகிறது.

பகவத்கீதை

பகவத் கீதை பிரகிருதியை பல படிகளாக வரையறை செய்கிறது. புருஷனாகிய பிரம்மத்தால் படைக்கப்பட்டு ஆளப்படும் அடிப்படைப்பொருள் அது (கீதை அத்தியாயம் 6). பிரகிருதி வழியாகவே பிரம்மம் வெளிப்பாடுகொள்கிறது. பிரகிருதி இரண்டு வகை. ஒன்று ஐந்து பருப்பொருட்கள், மனம், புத்தி, அகங்காரம் ஆகிய எட்டு கூறுகள் கொண்டு இங்கே வெளிப்படும் இயற்கை இது தாழ்ந்த பிரகிருதி. அதில் இருந்து வேறுபட்டது பிரம்மத்தின் தோன்றாநிலையாகிய பிரகிருதி, அதுவே உயர்ந்தது. அதன் வழியாகவே உலகம் நிலைகொள்கிறது (அத்தியாயம் ஏழு).

பிரகிருதி புருஷன் இரண்டுமே நிரந்தரமானவை. தொடக்கமும் முடிவும் இல்லை. எல்லா பிரபஞ்ச நிகழ்வுகளும் பிரகிருதியில் நிகழ்பவை மட்டுமே. (அத்தியாயம் 13). இயற்கையை தங்குமிடம் (க்ஷேத்ரம்) என்றும், பிரம்மத்தை தங்குவது (க்ஷேத்ரக்ஞ) என்றும் வரையறை செய்கிறது. பிரகிருதியில் குடிகொள்ளும் பரமபுருஷனே பிரம்மம் என குறிப்பிடுகிறது (கீதை அத்தியாயம் 15).

சங்கரர்

பிரம்மம் என்னும் முழுமுதன்மையின் மாயை தோற்றமே பிரகிருதி. பிரம்மமே உண்மையில் உள்ளது, அதுவே சத். பிரகிருதி இல்லாதது அசத். பிரம்ம சத்ய ஜகன் மித்ய என்று அத்வைத மரபின் ஆசிரியரான சங்கரர் குறிப்பிடுகிறார். பிரம்மசூத்திரத்தின் உரையில் சங்கரர் பிரகிருதி பற்றிய சாங்கியத்தின் கொள்கைகளை கண்டிக்கிறார். பிரகிருதி என்பது மாயை, அது அசத், அதற்குக் காரணமாக உள்ள பிரம்மம் மட்டுமே சத் என வரையறை செய்கிறார்.

சாக்தம்

பிரகிருதி என்னும் கருத்துருவம் இந்திய மெய்யியலில் பெரும்பாலும் பெண்பாலாகவே பயன்படுத்தப்படுகிறது. சக்தியின் பெயர்களில் ஒன்றாகவும் உள்ளது. இப்போதும் பெண்களுக்கு இப்பெயர் போடப்படுகிறது. சக்தியை மையத் தெய்வமாகக் கொண்ட சாக்தம் மரபின் படி முழுமுதல் தெய்வமான பராசக்தியின் உலகத்தோற்றம் அல்லது பொருள்வயத் தோற்றமே பிரகிருதி ஆகும். சாக்த மரபின் நூல்களான தேவி பாகவதம், தேவி மகாத்மியம் ஆகியவை பஞ்சபிரகிருதிகள் என ஐந்து தேவியரை குறிப்பிடுகின்றன. சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை ஆகியவர்கள் மூன்று முதன்மை தேவியர். அவர்களுடன் காயத்ரி, ராதை ஆகிய இருவரையும் சேர்த்து பஞ்சபிரகிருதிகள் என்கிறார்கள். பராசக்தி பிரகிருதியின் வடிவில் தோன்றும்போது அவளுடைய ஐந்து இயல்புகளின் ஐந்து முகங்கள் இத்தேவியர் (தேவி பாகவதம், ஒன்பதாம் காண்டம்).

பிரக்ருதி என்பது சக்தியின் தோற்றம், அதில் ஈஸ்வரன் உள்ளுறைகிறது. ஊழிக்காலத்தை விவரிக்கும் சிவபுராணம் சக்தியை பிரகிருதி, பிரதானை (முதன்மையானவள்), மாயை, குணவதி (முக்குணங்கள் கொண்டவள்), பரை (முந்தைய வடிவம்), விக்ருதிவர்ஜிதை (மாற்றமற்றவள்) என பல சொற்களில் வர்ணிக்கிறது (சிவபுராணம் 2.1.6).

சைவம்

பிரகிருதி என்பது முழுமையான இயற்கை, புருஷன் என்பது முழுமுதல் உள்ளம். பரம்பொருளாகிய பிரம்மம் ஒன்றேயாக இருந்தது. அதில் முதல் மகத் (விழைவு) உதித்ததும் அது புருஷன், பிரகிருதி என இரண்டாகப் பிரிந்தது. புருஷன் ஆண், பிரகிருதி பெண். பிரகிருதி சக்திரூபம். புருஷன் சிவரூபம். புருஷன் பிரகிருதியின் எல்லா அம்சங்களிலும் உறைந்திருப்பதனால் அவன் ஈஸ்வரன் எனப்பட்டான். அவர்களின் ஆடலால் பிரபஞ்சம் உருவானது. பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவிலும் சிவசக்தி லயம் உள்ளது. சிவலிங்கம் என்பது சிவமும் சக்தியும் ஒன்றேயாக ஆன உருவம். ஜடநிலையிலுள்ள பிரகிருதிக்குள் புருஷன் கருநிலையாக, உள்ளுறையாகத் தோன்றுகிறார். இது புருஷனின் முதல் பிறப்பு. சக்திவடிவமான பிரகிருதி செயல்நிலை கொண்டு பெருகி பிரபஞ்சமாக ஆகும்போது பிரபஞ்சத்தை ஆளும் மையமாக புருஷன் வெளிப்படுகிறார். இது இரண்டாவது பிறப்பு (சிவபுராணம் அத்தியாயம்-1).

பௌத்தம்

பௌத்தக் கொள்கையின்படி பிரகிருதி என்பது மகாதர்மத்தின் பருவடிவ வெளிப்பாடு. அது மயக்கமோ பொய்யோ அல்ல. மெய்யான ஓர் இருப்பே (அதை பௌத்தம் சர்வாஸ்திவாதம், அனைத்திருப்பு வாதம் என்கிறது). பிரகிருதி தனக்குரிய தர்மத்தின்படி இயங்குவது. ஒவ்வொரு பொருளும் காரணத்தில் இருந்து காரியத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறது. காரியம் காரணமாக ஆகிக்கொண்டிருக்கிறது. ஆகவே எப்பொருளும் நிலையான தன்மை கொண்டது அல்ல. இங்கே பிரகிருதியாகத் தோற்றமளிப்பது மகாதர்மம் நிகழ்ந்துகொண்டிருக்கும் விதம்தான். இது பொருள்வயமானதாக, நிலையானதாக தோன்றினாலும் உண்மையில் இது ஒரு நிகழ்வு மட்டுமே. பொருள்வயப் பிரபஞ்சமான பிரகிருதிக்கு சாராம்சம் இல்லை, நோக்கம் ஏதுமில்லை. இதை பௌத்தம் பிரதீத சமுத்பாதம் என விளக்குகிறது.

சமணம்

சமணக் கொள்கையின்படி பிரகிருதி என்பது பொருள்வயமானது, மெய்யானது. அது பவசக்கரம் என சமணம் சொல்லும் பெருஞ்சுழலில் தன் நெறிகளின்படிச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. சமணக் கொள்கையின்படி ஆத்மாக்கள் நான்கு வகையான பந்தங்களால் (கட்டுகள், தளைகள்) கட்டப்பட்டிருக்கிறார்கள். அவற்றில் ஒன்று பிரகிருதி பந்தம். பிரகிருதி உயிர்களை பிணைத்துள்ளது. எட்டுவகையான மூடுதிரைகளை அது உயிர்களுக்கு போட்டிருக்கிறது.

  • அறிவை மறைத்தல் (ஞான ஆரண)
  • புலனுணர்வு மறைத்தல் (தர்சன ஆவரண)
  • உணர்வை உருவாக்குதல் (வேதனியா)
  • உளமயக்கு (மோகனியா)
  • வாழும்கால வரையறை (ஆயு)
  • உடல், பெயர் அளித்தல் (நாம)
  • தரநிலையை தீர்மானித்தல் (கோத்ரா)
  • உள்நின்று தடைசெய்தல் (அந்தராய)

இந்த எட்டையும் சமணம் மேலும் பல துணைப்பிரிவுகளாகப் பிரித்துக்கொண்டே செல்கிறது.

பிரகிருதி வரையறை (பிற)

பிரகிருதி என்னும் சொல் தத்துவத்தில் வரையறை செய்யப்பட்ட ஒரு கலைச்சொல். வேறு வகையில் பிற அறிவுத்தளங்களில் பயன்படுத்தப்படுகிறது

நாட்டிய சாஸ்திரம்

பரத முனிவர் எழுதிய நாட்டிய சாஸ்திரம் பிரகிருதி என்பதை மூன்று வகைகளில் கையாள்கிறது

  • பிரகிருதி என்பது ஒரு சந்தம் (சந்தஸ்). இருபத்தொரு அசைகளைக் கொண்ட ஒரு பாதம் (அடி) அது (நாட்டிய சாஸ்திரம் அத்தியாயம் 15)
  • பிரகிருதி என்பது துருவ என்று சொல்லப்படும் பாடலில் உள்ள கதாபாத்திரங்களின் இயல்பைக் குறிக்கிறது. உயர்ந்த, தாழ்ந்த, நடு இயல்பு கொண்டவை அவை. (நாட்டிய சாஸ்திரம் 32- 400)
  • பிரகிருதி என்னும் சொல் தாளகதியின் இயல்பைச் சொல்ல பயன்படுத்தப்படுகிறது. (நாட்டிய சாஸ்திரம் 33)

வியாகரணம்

சம்ஸ்கிருத சொல்லிலக்கணமான வியாகரணம், பிரகிருதி என்னும் சொல்லை சொற்களின் அடிப்படை இயல்பு என்னும் பொருளில் பயன்படுத்துகிறது. சொற்களில் இரண்டு இயல்புகள் உள்ளன. அதன் மூலவடிவம் (பிரகிருதி), மாற்றியமைக்கப்பட்ட வடிவம் (விகிருதி). பிரகிருதி என்பது சொல்லின் தாது (வேர்ச்சொல்). விகிருதி என்பது அதிலிருந்து கிளைத்தும், திரிபடைந்தும் உருவாகும் பிற சொற்கள் (வையகரணபூஷணசாரம்)

காவியயியல்

காவிய இயலில் பிரகிருதி என்னும் சொல் இரண்டு பொருளில் கையாளப்படுகிறது. வெளியே உள்ள இயற்கை. மனிதனின் உள்ளே உள்ள இயல்புகள். இரண்டு இயற்கைகளையும் காவியங்கள் விவரிக்கவேண்டும் என காவியயியல் சொல்கிறது

கணிதம்

சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்ட பழைய கணிதநூல்களில் பிரகிருதி என்பது மூன்றுவகையில் பயன்படுத்தப்படும் சொல்

  • பழைய சம்ஸ்கிருத கணிதவியலில் எண்களைச் சொற்களால் குறிப்பிடும் வழக்கம் உண்டு. அதில் பிரகிருதி என்னும் சொல் 21 என்னும் எண்ணிக்கையைக் குறிக்கிறது. கல்வெட்டுகள் மற்றும் பழைய சுவடிகளில் இது பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • சம்ஸ்கிருத பீஜகணிதம் ( இயற்கணிதம், Algebra ) ஒன்றை பெருக்கும் எண்ணை(coefficient) குறிப்பிடும் பல சொற்களில் பிரகிருதி என்பதும் உண்டு. குணக, ரூப என்னும் சொற்களும் கையாளப்படுவதுண்டு. ஸ்ரீபதியின் சித்தாந்தசேகரம், இரண்டாம் பாஸ்கரரின் பீஜகணிதம் ஆகிய நூல்களில் இச்சொல் பயன்படுத்தப்படுகிறது
  • சம்ஸ்கிருத கணிதம் சதுரங்களைப் பெருக்கும் கணக்கீட்டில் வர்கபிரகிருதி என்னும் சொல்லை கையாள்கிறது

வானியல், சோதிடம்

சம்ஸ்கிருத வானியல் மற்றும் சோதிட மரபில் பிரகிருதி என்னும் சொல் ஒரு கோள் அதன் தன்னியல்பான நிலையில் இருப்பதைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. (பிருஹத்சம்ஹிதா. வராகமிகிரர். அத்தியாயம் 16)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Jun-2024, 21:59:08 IST