under review

பூலோகவியாஸன்

From Tamil Wiki
பூலோக வியாஸன் இதழ் முகப்புப் பக்கம் (படம் நன்றி: பூலோகவியாஸன்: தலித் இதழ்த் தொகுப்பு, காலச்சுவடு பிரசுரம்)
பூலோகவியாஸன்: தலித் இதழ்த் தொகுப்பு: காலச்சுவடு வெளியீடு

பூலோகவியாஸன், ஒரு மாத இதழ். 1903 முதல், மாதந்தோறும் சென்னையிலிருந்து, வெளிவந்தது. பண்டிதர் சதாவதானம் பூஞ்சோலை முத்துவீரன் பிள்ளை இதன் ஆசிரியர். பூலோகவியாஸன் அச்சகத்தில் இவ்விதழ் அச்சிடப்பட்டது. 1917-ல் இந்த இதழ் நின்று போனது.

பதிப்பு, வெளியீடு

பூலோகவியாஸன் ஒரு தலித் இதழ். இவ்விதழ் சென்னையிலிருந்து அக்டோபர் 1903 முதல் வெளிவந்தது. பண்டிதர் சதாவதானம் பூஞ்சோலை முத்துவீரன் பிள்ளை நாவலர் இதன் ஆசிரியராக இருந்தார். முத்துவீரன் பிள்ளையின் மைத்துனர், வேதமாணிக்கம் பிள்ளைக்குச் சொந்தமான பூலோகவியாஸன் அச்சகத்தில் இவ்விதழ் அச்சிடப்பட்டது. இதன் ஆண்டுச் சந்தா ரூபாய் ஒன்று. இதழின் விற்பனை ஆரம்பகாலத்தில் 300 ஆக இருந்தது. 1910-க்குப் பின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை குறைந்ததால் விற்பனையும் குறைந்தது.

பூலோகவியாஸன் அச்சக நூல்கள்

பூலோகவியாஸன் அச்சகம் மூலம் கீழ்காணும் நூல்கள் வெளியாகின.

  • திருப்போரூர் ஆண்டவர் இரட்டைமணிமாலை
  • திருப்போரூர் சண்முகக்கடவுள் மும்மணிமாலை
  • ஸ்ரீசச்சிதாநந்த சுவாமிகள் இணைமணிமாலை
  • புத்தபகவான் ஸ்தௌத்யப் பத்து கீர்த்தனைகள்
  • மதுவிலக்குக் கும்மி
  • தியானக் கீர்த்தனங்கள்
  • அனுபவாநந்த தீபிகை
  • தேவமாதா தேடியழுதேகும் பிரலாபப் பண்ணாபரணம்

ஆசிரியர் குறிப்பு

பண்டிதர் பூஞ்சோலை முத்துவீரன் பிள்ளை (பூஞ்சோலை முத்துவீரன் நாவலர்: பூ.மு. நாவலர்) முறையாகத் தமிழ் இலக்கியம் கற்றவர். சதாவதானியாக அறியப்பட்டிருக்கிறார். மாணவர் பலருக்கு அவதானக் கலையைக் கற்றுத் தந்துள்ளார். ‘மஹாஞானபானு’ என்று போற்றப்பட்டுள்ளார். பள்ளி ஒன்றில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். எம்.சி. ராஜா, ஏ.எஸ். சகஜானந்தர், புலவர் மதுரை எல்லப்பப் பிள்ளை, ஷட்டாவதானி தே.சி. கங்காதரபால தேசிகர் ஆகியோர் இவரிடம் தமிழ் பயின்றவர்கள். வள்ளுவர் சாதியில் பிறந்த முத்துவீரன் பிள்ளை 1910-ல் புத்த மதத்தைத் தழுவினார். அதன் பின் புத்த மதம் சார்ந்த கருத்துக்கள், கட்டுரைகள் பூலோகவியாஸனில் இடம்பெற்றன. பூஞ்சோலை முத்துவீரன் பிள்ளை, 1917-ல் காலமானார்.

உள்ளடக்கம்

பூலோகவியாஸன் இதழின் முகப்பில்,

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு” - என்ற குறள் இடம் பெற்றுள்ளது. அரசியல், கல்வி, சமூகம், மதம், விவசாயம், புதினங்கள் எனப் பல விஷயங்களுக்கு இவ்விதழ் இடமளித்தது. கூடுவிட்டுக் கூடு பாய்தல், அத்வைத நிரூபணம், இந்தியாவின் காலபேதம், நூலரங்கேற்றம், ஆங்கில அரசாட்சி, பொருளும் பொருளாளிகளும், சாக்கைய பௌத்தர்கள், 1908-ம் வருடத்திய இந்தியன் நாஷனல் காங்கிரஸ் - எனப் பல கட்டுரைகள் இவ்விதழில் வெளியாகியுள்ளன. விளம்பரங்களும் இடம்பெற்றுள்ளன. ‘பறையர் மகாஜன சபை’யின் பதிவுகளைப் பூலோகவியாஸன் வெளியிட்டது. தலித் அறிவுக்குழுக்களுக்கிடையே நிகழ்ந்துவந்த விவாதங்கள் குறித்த குறிப்புகளும் இவ்விதழில் இடம்பெற்றன. கருத்து மோதல்களுக்கும், வாசகர் கடிதங்களுக்கும் இவ்விதழ் இடமளித்தது. உண்மை ஞானப் பறையன், ஆத்மநேசன், அவதானியார், செந்தமிழ்ப் பாநு, தேசிகன், சோதரப்பிரியன், அஷ்டவதானியார், ஓர் பரோபகார சிந்தையான், கண்டுகளித்தோன் போன்ற புனைபெயர்களில் கடிதங்கள் வெளியாகியுள்ளன.

பங்களிப்பாளர்கள்

  • பண்டிதர் பூஞ்சோலை முத்துவீரன் பிள்ளை
  • ஏ.பி. பெரியசாமி புலவர்
  • எஸ். ஸ்வப்பநேஸ்வரி அம்மாள்
  • தி. வெங்கடராம ஐயர்
  • சி.வி. பாஸ்கரன்
  • சிவானந்த முதலியார்

மற்றும் பலர்.

இதழ் நிறுத்தம்

1917-ல், பூலோகவியாஸன் ஆசிரியர் பூஞ்சோலை முத்துவீர நாவலர் காலமானார். அவரது மறைவுக்குப் பின் இவ்விதழ் நின்று போனது.

ஆவணம்

சென்னை ஆவணக்காப்பகத்தில் இவ்விதழின் 1909-ம் வருடத் தொகுப்பு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பேராசிரியர் ஜெ. பாலசுப்பிரமணியம், இவ்விதழ் குறித்து ஆய்வு செய்துள்ளார். அந்த ஆய்வு நூலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

வரலாற்று இடம்

அயோத்திதாசப் பண்டிதரின்தமிழன்’ இதழ், இரட்டைமலை சீனிவாசனின் ’பறையன்’ இதழ் வரிசையில் ‘பூலோகவியாஸன்’ இதழும் தலித் வரலாற்றியலில் முக்கிய இடம் பெறுகிறது.

உசாத்துணை


✅Finalised Page