under review

வா.மு. கோமு

From Tamil Wiki
வா.மு.கோமு

வா.மு. கோமு (பிறப்பு:ஜூன் 20, 1969) (வா.மு.கோமகன்) தமிழில் தொடர்ந்து எழுதிவரும் எழுத்தாளர். நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், இலக்கிய விமர்சனங்கள் எழுதி வருகிறார். தன் எழுத்துக்களில் கொங்குப் பகுதியிலுள்ள எளிய விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையை பகடி கலந்த மொழியில் வெளிப்படுத்துபவர்.

பிறப்பு, கல்வி

வா.மு.கோமு (வா.மு.கோமகன்) ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலைக்கும் மேற்கே பதிமூன்று கி.மீ தூரத்திலிருக்கும் வாய்ப்பாடி என்கிற கிராமத்தில் முத்துச்சாமி, மணி தம்பதிகளுக்கு 20-மே-1969-ல் பிறந்தார் வா.மு.கோமுவின் தந்தை ’முத்து பொருணன்’ என்ற பெயரில் கவிதைகள் எழுதிவந்தார்.

உள்ளூர் அரசாங்க துவக்கப்பள்ளியில்நான்காம் வகுப்பு வரையும் சென்னிமலை கொமரப்பா செங்குந்தர் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரையும்ரை படித்தார். வாய்ப்பாடிக்கு மேற்கில் இருக்கும் ஊத்துக்குளி அரசாங்க உயர்நிலைப்பள்ளியில் மேல்நிலைக்கல்வியை முடித்தார். திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில் பி.எஸ்.ஸி கெமிஸ்ட்ரி ஒருவருடத்தோடு படிப்பை முடித்துக்கொண்டார்

தனிவாழ்க்கை

வா.மு.கோமு 990-களில் ஜெகதீஸ்வரியை மணந்தார். மகன் துரையரசு. வா.மு.கோமு அச்சு உட்பட சில தொழில்கள் செய்தபின் , முழுநேர எழுத்தாளராக வாழ்கிறார்.

இதழியல்

வா.மு.கோமு தன் தாத்தாவின் ஊரான கோவையில் இருவருடம் தங்கியிருந்தபோது, 1989-ல்' ஊன்றுகோல்' என்னும் பத்திரிக்கையை நண்பர் ஜேபிஆருடன் இணைந்து சைக்ளோஸ்டைல் முறையில் 100 பிரதிகள் ஆரம்பித்து நடத்தினார். பின்பு அது ’ட்ரெடில்’ அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு நான்கு இதழ்கள் வெளிவந்து நின்றது.

திருப்பூரில் அச்சகத்தொழிலில் இருந்தபோது 1991-ல் நடுகல் என்கிற இலக்கிய இதழை நண்பர்களுடன் இணைந்து ஆரம்பித்து நடத்தினார். 21 இதழ்கள் வந்த அந்த இதழ் நின்றுபோய் 2018 முதல் மூன்று மாதத்திற்கு ஒருமுறை வெளிவருகிறது.

இலக்கிய வாழ்க்கை

தந்தை முத்து பொருணனிடமிருந்து இலக்கிய வாசிப்பை தொடங்கிய வா.மு.கோமு கல்லூரி காலத்திலேயே மாலைமுரசு இதழில் கதைகள் எழுதினார். தஞ்சையிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த சுந்தரசுகன் (சௌந்தர சுகன்) இதழில் 51 சிறுகதைகள் எழுதினார். வா.மு.கோமுவின் முதல் சிறுகதை தொகுதி ‘அழுவாச்சி வருதுங் சாமி’ (சுகன் 2006) யை அவ்விதழின் ஆசிரியர் சுகன் சுந்தர சுகன் பதிப்பகம் சார்பில் வெளியிட்டார். உயிர்மை இதழில் தொடர்ச்சியாக எழுதிய வா.மு.கோமு இலக்கியக் கவனம் பெற்றார்.

திரைப்படம்

2016-ல் வெளிவந்த கடலை என்னும் படத்திற்கு வா.மு.கோமு வசனம் எழுதியிருக்கிறார்.

விருதுகள்

  • சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விகடன் விருது ( "தவளைகள் குதிக்கும் வயிறு" சிறுகதைத் தொகுப்புக்காக) 2008
  • பறம்பு தமிழ்ச்சங்கம் சிறுகதை போட்டி விருது 2022
  • க.கந்தசாமி நினைவு இலக்கிய விருது,சேலம் 2022
  • செளமா இலக்கிய விருது , மணப்பாறை 2022
  • பேரா.சிவசுந்தரம் நினைவு இலக்கிய விருது, தஞ்சாவூர் 2022

இலக்கிய இடம்

வா.மு. கோமு

வா.மு. கோமு ஈரோடு மாவட்டத்தின் கிராமிய வாழ்க்கையிலுள்ள சாதிய ஒடுக்குமுறை மற்றும் பாலியல் மீறல்களை பகடியுடன் சித்தரிக்கும் எழுத்தாளர். கூரிய சமூக விமர்சனத்திற்காகவே இலக்கிய கவனம்பெற்றவர்.

"வா.மு.கோமுவின் அழகியல் இரண்டு சரடுகளால் ஆனது. ஒன்று சிற்றிதழ் சார்ந்த இலக்கிய உலகின் அடித்தளத்தில் செயல்படும் ஒருவனின் கசப்புகளும் நையாண்டிகளும் கலந்த ஒரு படைப்புலகு. இரண்டாவதாக பாலியல் மீறலை அறக்கண்டனத்துடன் அவர் பார்க்கவில்லை. ஒருவரை ஒருவர் நுகர்ந்தும் வெறுத்தும் ஏமாற்றியும் களியாட்டமிடும் இவ்வாழ்க்கைப் பரப்பை ஒருவகையான கொண்டாட்டமாகவே அவர் பார்க்கிறார். வா.மு.கோமுவின் புனைவுலகில் அவர் அவர்களுடன் சேர்ந்து அக்களியாட்டத்தை நிகழ்த்துவது தெரிகிறது" என்று அழுவாச்சி வருதுங் சாமி தொகுப்பிய முன்வைத்து எழுத்தாளர் ஜெயமோகன் மதிப்பிடுகிறார்.

நூல் பட்டியல்

நாவல்
  • கள்ளி (உயிர்மை)
  • கூப்பிடுவது எமனாக இருக்கலாம் (உயிர் எழுத்து)
  • சாந்தாமணியும் இன்னபிற காதல்கதைகளும் (உயிர்மை)
  • மங்கலத்து தேவதைகள் (உயிர்மை)
  • எட்றா வண்டியெ (உயிர்மை)
  • சகுந்தலா வந்தாள் (நடுகல்)
  • 57 ஸ்னேகிதிகள் சினேகித்த புதினம் (எதிர்)
  • மரப்பல்லி (எதிர்)
  • சயனம் (எதிர்)
  • நாயுருவி (உயிர்மை)
  • ரெண்டாவது டேபிளுக்கு காரப்பொரி (மலைகள்)
  • தானாவதி (டிஸ்கவரி)
  • ராட்சசி (உயிர்மை)
  • குடும்ப நாவல் (உயிர்மை)
  • அன்னிய ஆடவன் (மலைகள்)
  • ஆட்டக்காவடி
  • திவ்யா WEDS பழனிச்சாமி
சிறுகதைகள்
  • அழுவாச்சி வருதுங் சாமி (சுகன் 2006)
  • மண்பூதம் (உயிர்மை)
  • அருக்காணிக்கு சொந்த ஊரு விஜயமங்கலம் (அகரம் 2008)
  • தவளைகள் குதிக்கும் வயிறு (உயிர் எழுத்து)
  • சேகுவேரா வந்திருந்தார் (உயிர்மை)
  • பிலோமி டீச்சர் (எதிர்)
  • என்னை மரணத்தின் வருகை என்கிறார்கள் (எதிர்)
  • தேர்த்திருவிழா (நடுகல்)
  • வேற்றுகிரகவாசி (டிஸ்கவரி)
  • நகரில் தனித்தலையும் ஆடு (வாசகசாலை)
  • ஆச்சரியம் காத்திருக்கிறது (யாவரும்)
  • வெள்ளந்தி (உயிர்மை)
  • மாஸ்டர் ஒரு சாதா டீ (வாசகசாலை)
  • வா.மு.கோமு சிறுகதைகள் தொகுதி 1 (நடுகல்)
  • வா.மு.கோமு சிறுகதைகள் தொகுதி 2 (நடுகல்

குறுநாவல்கள்

  • டுர்டுரா (டிஸ்கவரி)
  • இவன் தானா கடைசியில் (உயிர்மை)
  • சிவப்பு குதிரை (உயிர்மை)
  • ஜீலர் நரி (நடுகல்)
  • நெஞ்சமதில் நீயிருந்தாய் (உயிர்மை)
  • என் நேசமுள்ள பூஞ்சிறகே (உயிர்மை)
  • இது நீயிருக்கும் நெஞ்சமடி (உயிர்மை)
  • காயாவனம் (யாவரும்)
கவிதைகள்
  • வெறுங்குண்டி அம்மணம் போட்டுக்கடி சம்மணம் (இறக்கை 2004)
  • சொல்லக் கூசும் கவிதை (உயிர்மை)
  • இப்படியாயிற்று எல்லா கிழமைகளிலும் (புதுஎழுத்து)
  • காத்திருந்தவன் பொண்டாட்டியை கூட்டியோடிய கவிதை (நடுகல்)
  • தொடுப்பு (உயிர்மை)
நினைவோடை குறிப்பு
  • அப்பச்சி வழி (நடுகல் பதிப்பகம்)
  • தண்டவாளங்களின் அருகிருக்கும் வாழ்வு (யாவரும்)
சிறார் இலக்கியம்
  • கட்டெறும்பு
  • குருவி நரியாரும் காட்டு ராஜாவும்
  • நகரும் நாவல் மரம்
  • பேசும் எலியும் குழந்தை பேயும்
  • மருதபுரியில் ராட்சத காளான்கள்
  • கபி என்கிற வெள்ளைத் திமிங்கிலம்
  • என் பெயர் ராஜா
  • சுப்பிரமணி கொப்பரை தேங்காய்
  • மாலாவும் மங்குனி மந்திரவாதியும்
  • நொண்டிச் சிறுத்தை
  • காயாவனம்
  • மாயத்தொப்பி

வெளி இணைப்புகள்


✅Finalised Page