under review

நாவலர் சோமசுந்தர பாரதியார்

From Tamil Wiki
நாவலர் சோமசுந்தர பாரதியார்

நாவலர் சோமசுந்தர பாரதியார் (ஜுலை 27, 1879 - டிசம்பர் 14, 1959) தமிழறிஞர், கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் சொற்பொழிவாளர். தமிழிலக்கிய, இலக்கண ஆராய்ச்சியிலும் படைப்பிலக்கியத்திலும் ஈடுபட்டவர். இவரின் வஞ்சி நகரம் பற்றிய ஆராய்ச்சியும், பண்டைத் தமிழகத்தில் தாய்வழி சமூக மரபு பற்றிய ஆராய்ச்சியும் தமிழிலக்கியத்தில் குறிப்பிடத்தகுந்தவை.

பிறப்பு, கல்வி

நாவலர் சோமசுந்தர பாரதியார் ஜுலை 27, 1879 அன்று எட்டயபுரத்தில் சுப்பிரமணிய நாயகருக்கும் முத்தம்மாளுக்கும் ` பிறந்தார். இவருடைய இயற்பெயர் சத்தியானந்த சோமசுந்தரம். சோமசுந்தர பாரதியார் எட்டயபுரம் அரண்மனையில் அரசியாரின் அரவணைப்பில் வளர்ந்தார். இளமையில் பாரதியாருடன் நட்பு கொண்டிருந்தார். தனது தொடக்கக் கல்வியை எட்டயபுரத்திலும் இடைநிலைக் கல்வியை நெல்லையிலும் முடித்ததார்.

எஃப்.ஏ. முடித்ததும் கிறிஸ்தவக் கல்லூரியில் (இன்றைய தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரி) பி.ஏ. வரலாறு படித்தார். 1901-1903 வருடங்களில் இக்கல்லூரியில் மறைமலையடிகளும், பரிதிமாற்கலைஞரும் தமிழாசிரியர்களாக இருந்தனர். சென்னை சட்டக் கல்லூரியில் படித்து 1905-ம் ஆண்டில் சட்ட இளவர் பட்டமும் (Bachelor of Law) பெற்றார். தேர்வு எழுதிய உடனேயே வருவாய்த்துறையில் வேலையும் கிடைத்தது. அங்கு ஓர் ஆண்டு வேலை பார்த்து, பின் தூத்துக்குடியில் குடியேறினார். தூத்துக்குடியில் வழக்கறிஞராகத் தொழிலாற்றியபொழுது தானே பயின்று 1913-ம் ஆண்டில் முதுகலைப்பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

1894-ல் சோமசுந்தரத்திற்கு 15 வயதில் கடம்பூர் மீனாட்சியுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இராசராம் பாரதி, இலக்குமிரதன் பாரதி என்னும் மகன்களும் இலக்குமி பாரதி என்னும் மகளும் பிறந்தனர். தனது 48-ம் வயதில் சோமசுந்தர பாரதியார் திருவெட்டாற்றில் டிசம்பர் 1, 1927-ல் வசுமதியை மணந்தார். இவர்களுக்கு மீனாட்சி மற்றும் லலிதா ஆகிய இரு மகள்கள் பிறந்தனர். 1906-1959 ஆண்டுகளில் சோமசுந்தர பாரதியார் முழுநேர வழக்குரைஞராக இருந்தார்.

இலக்கியவாழ்க்கை

நாவலர் சோமசுந்தர பாரதியார் பத்து நூல்கள் எழுதியுள்ளார். பெரும்பாலும் இலக்கியக் கூட்டங்களிலும் காங்கிரஸ் மேடைகளிலும் பேசுவதிலேயே இவரது நேரம் கழிந்திருக்கிறது. இளமையிலேயே தமிழிலக்கியத்தில் ஈடுபாடுகொண்டிருந்த சோமசுந்தர பாரதியார், பின்னாளில் தமிழிலக்கிய, இலக்கண ஆராய்ச்சியிலும் படைப்பிலக்கியத்திலும் ஈடுபட்டார். தனது ஆராய்ச்சிகளைச் சொற்பொழிவின் வழியாகவும் ஆய்வுநூல்கள் எழுதுவதின் வழியாகவும் வெளியிட்டார். 1932 -1933-ம் ஆண்டுகளில் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராக இருந்தார். தமிழிசைத் துறைக்கும் தலைவராக இருந்தார். இக்காலத்தில் பண்டிதமணி கதிரேசன் செட்டியார். ஏ.சி. செட்டியார், வேங்கடசாமி நாட்டார் போன்றோர் இவரின் சக ஆசிரியர்களாய் இருந்தனர். நாவலரின் மாணவர்கL க. வெள்ளைவாரணர், அ.ச.ஞானசம்பந்தம், அ.மு. பரமசிவானந்தம் போன்றோர்.

நூல்கள்

சோமசுந்தர பாரதியார் சங்ககால வஞ்சி நகரம் பற்றி எழுதிய நூலும், 'சேரர் தாய் முறை' என்ற நூலும் நாவலரின் ஆராய்ச்சி நெறிமுறைக்குச் சான்றாக இருப்பன. வஞ்சி நகரம் பற்றிய நூல் 'Some Studies about the Chera of Yore' என்னும் தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது சேரர் தாய்முறை என்ற நூல் பண்டைத் தமிழகத்தில் தாய்வழி சமூக மரபு இருந்திருக்கிறது என்று நிறுவுகிறது. இந்த நூல் பதிற்றுப்பத்தின் வழி பண்டைய உறவுமுறைகளையும், வம்சாவழியையும் ஆராய்கிறது. இதுவும் 'System of Succession in Chera kingdom' என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

கவிதைகள்

நாவலர் எழுதிய 'மாரிவாயில்', 'மங்கலக் குறிச்சியில் பொங்கல் விழா' இரண்டும் கவிதை நூல்கள். அர்ஜுனன் பாண்டியன் மகளுக்குத் தூது விடுப்பது போன்ற அமைப்புடைய 122 பாடல்களைக் கொண்ட சிற்றிலக்கியம் 'மாரிவாயில்'. 'மங்கலக்குறிச்சியில் பொங்கல் விழா' நூல் பொதியமலையில் நிகழ்வதாகப் புனையப்பட்ட காதல் கதை.

உரைகள்

சோமசுந்தர பாரதியார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை வகுப்பு மாணவர்களுக்குத் தொல்காப்பியம் பொருளதிகாரத்தைப் பாடம் நடத்தியபோது மாணவர்கள் எழுதிய குறிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல் ’தொல்காப்பியம், பொருட்படலம் - புதிய உரை’. இது 1942-ல் வெளியானது. தொல்காப்பியத்தின் பொருள் இலக்கணப்பகுதியில் உள்ள அகத்திணை, புறத்திணை, மெய்ப்பாட்டியல் ஆகிய மூன்று இயல்களுக்கும் முழுமையாக உரை எழுதினார். மீதமுள்ளவற்றுள் களவியல், கற்பியல், செய்யுளியல் ஆகியவற்றில் இன்றியமையாச் சில நூற்பாக்களுக்கு மட்டும் புத்துரை எழுதினார்.

1997-ல் 'நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி - 2, தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை' என்னும் தலைப்பில் பொ.வெ. சோமசுந்தரனார் தொல்காப்பிய பொருளதிகாரத்திற்கு எழுதிய உரைகள் அனைத்தையும் திரட்டி மதுரை ச. சாம்பசிவனாரை பதிப்பாசிரியராகக் கொண்டு நாவலரின் மகள் மருத்துவர் லலிதா காமேசுவரன் அந்நூலை வெளியிட்டார்.

சிலப்பதிகாரத்தைப் பாடம் நடத்தியபோது மாணவர்கள் எழுதிய குறிப்புகளைக் 'கானல்வரி' என்னும் தலைப்பில் தெ.பொ.மீனாட்சிசுந்தரம் நூலாக வெளியிட்டார். நச்சினார்க்கினியர், பரிமேலழகர் இருவருமே வடமொழி நூல்களை மேற்கோள் காட்டுபவர்கள். இவர்கள் தங்கள் காலக்கட்டத்தைப் பிரதிபலிப்பவர்கள் அல்லர் என்று கருதினார்.

கட்டுரைகள்

சோமசுந்தர பாரதியார் பல்வேறு இதழ்களிலும், மலர்களிலும் எழுதிய கட்டுரைகள் 'நற்றமிழ்', 'பழந்தமிழ் நாடு' என்னும் தலைப்புகளில் நூல்களாக வந்துள்ளன. தொகுக்கப்படாத கட்டுரைகளும் உள்ளன. இவரது ஆங்கில நூல் 'Tamil Classics and Tamilakam'. சங்கப்பாடல்களில் குறிக்கப்படும் கரிகாலனும் திருமாவளவனும் வேறானவர்கள். மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார், மணிமேகலை சீத்தலைச் சாத்தனாரினின்று வேறானவர், மெய்கண்டாரின் சிவஞானபோதம் மொழி பெயர்ப்பல்ல என்பன போன்ற கருத்துகள் இவரது கட்டுரைகளில் காரசாரமாய் விவாதிக்கப்படுகின்றன.

சொற்பொழிவாளர்

சோமசுந்தர பாரதியார் ஆகஸ்ட் 16, 1916 அன்று கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் 'தசரதன் குறையும் கைகேயி நிறையும்' என்னும் தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவு இதே தலைப்பில் பின்னர் நூலாக வெளியிடப்பட்டது.

மதுரைத் தமிழ்ச் சங்கமும் இளம் கிறித்துவ ஆடவர் சங்கமும் (YMCA) மதுரையில் ஜனவரி 26, 1926 அன்று நடத்திய ஆய்வரங்கிலும், மார்ச் 11, 1929-ல் சென்னைப் பல்கலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கூட்டத்திலும் சோமசுந்தர பாரதியார் திருவள்ளுவர் பற்றி ஆற்றிய உரைகள் பின்னர் 'திருவள்ளுவர்' என்னும் நூலாக மதுரைத் தமிழ்ச் சங்கம் வழியாக உ.வே.சா உதவியுடன் வெளிவந்தது.

திராவிடக் கழகம் கம்பராமாயணத்தையும் பெரிய புராணத்தையும் எரிக்க வேண்டும் என இயக்கம் நடத்தியது. அதன் ஒருபகுதியாக நடைபெற்ற பட்டிமன்றத்தில் சோமசுந்தர பாரதியார் கலந்துகொண்டு கம்பராமாயணத்தை எரிக்கக் கூடாது என அண்ணாதுரையுடன் வாதிட்டார். அச்சொற்பொழிவு 'தீபரவட்டும்' என்னும் நூலில் இடம்பெற்றிருக்கிறது.

கரந்தைத் தமிழ்ச்சங்கக் கூட்டம் ஒன்றில் (1916) 'தசரதன் நிறையும் கைகேயியின் குறையும்' என்னும் தலைப்பில் இவர் பேசினார். இலக்கியக் கதாபாத்திரங்களை முழுமையான விமர்சனத்துக்கு உட்படுத்தும்போது பொதுவான சட்டங்களையும் காலப்பின்னணியையும் துணையாகக்கொள்ள வேண்டும் என்னும் முன்னுரையுடன் தசரதனை விமர்சிக்க ஆரம்பித்த இவரின் வாதம் அப்போதே சிறு பிரசுரமாக வந்தது. 1916 - 1919-ம் ஆண்டுகளில் இதே தலைப்பில் மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி எனப் பல இடங்களில் பேசிய பேச்சு விரிவாக அப்போது நூலாக வந்தது. சோமசுந்தர பாரதியார் முன்வைத்த கருத்துகள் இவருக்கு எதிரான ஒரு கூட்டத்தையும் உருவாக்க காரணமாயிருந்திருக்கின்றன.

மொழி அரசியல்

நாற்பதுகளிலும் ஐம்பதுகளிலும் தமிழகத்தில் மொழிக்காக நடந்த பெரிய மாநாடுகளில் நாவலர் முக்கிய இடத்தை வகித்திருக்கிறார்.

  • மதுரை முத்தமிழ் மாநாட்டுத் தலைவர் (1942),
  • கோவை முத்தமிழ் மாநாட்டுத் தலைவர் (1950)
  • அண்ணாமலை நகர் தமிழாசிரியர் மாநாட்டுத் திறப்பாளர் (1954)
  • மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா மாநாட்டுப் பொறுப்பு (1956)
  • திருச்சி சாதி ஒழிப்பு மாநாட்டுத் தலைமை (1958)

விடுதலைப் போராட்டம்/அரசியல்

சோமசுந்தர பாரதியார் 1905-ல் தூத்துக்குடியில் வழக்கறிஞராகத் தொழிலாற்றத் தொடங்கியபொழுது, இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கம் நடத்திய பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். இதனால் 1905-ம் ஆண்டு முதல் 1919-ம் ஆண்டு வரை அவரது பெயர் அரசினரின் சந்தேகப் பட்டியலில் இடம்பெற்று இருந்தது. இந்த காலத்தில்தான் இவருக்கு அன்னிபெசன்டின் நட்பு ஏற்பட்டது.

வ. உ. சிதம்பரம் பிள்ளையின் அழைப்பை ஏற்று சோமசுந்தர பாரதியார் 'இண்டியன் நேவிகேஷன்' என்னும் சுதேசி கப்பல் கம்பெனியின் செயலாளராக இருந்தார். மதுரையில் தமிழ் மாநிலக் காங்கிரஸ் மாநாட்டினைக் கூட்டி அதன் செயலாளராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றினார். 1926-ம் ஆண்டில் சித்தரஞ்சன் தாசை மதுரைக்கு அழைத்து, சொற்பொழிவாற்றச் செய்தார்.

1937-ல் இராஜகோபாலாச்சாரியார் சென்னை மாகாண முதலமைச்சராகப் பதவியேற்றபோது உயர்நிலைப் பள்ளிகளில் முதல் மூன்று படிவங்களில் (6, 7, 8-ம் வகுப்புகளில்) இந்தி மொழி கட்டாயப் பாடமாக்கப்பட்டது. தாய்மொழியைத் தவிர்த்து வேற்று மொழியைத் திணிக்கக் கூடாதென்ற கருத்தால் இந்தி எதிர்ப்பு இயக்கத்தை நாவலர் உருவாக்கினார். செப்டம்பர் 5, 1937-ல் சென்னையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டின் தலைவராகப் பொறுப்பேற்றார். அக்டோபர் 25, 1937-ல் கட்டாய இந்திக் கல்வியைக் கைவிடக் கோரி, அன்றைய முதலமைச்சர் இராஜகோபாலாச்சாரியருக்குத் திறந்த மடல் ('An Open Letter to Honourable Minister C. Rajagopalachariar)'ஒன்றை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதினார். 1948-ம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாவது இந்திப் போராட்டத்தின்பொழுது சோமசுந்தர பாரதியார் அன்றைய கல்வி அமைச்சர் தி. சு. அவிநாசிலிங்கனாருக்கு மடல் எழுதினார். மதுரை கோவில் நுழைவுப் போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஆகியவற்றிலும் பங்கேற்றார் .

விருதுகள்

  • 1944 - ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் மன்றம் சோமசுந்தர பாரதியாருக்கு நாவலர் பட்டம் வழங்கியது
  • 1954 - மதுரைத் திருவள்ளுவர் கழகம் சோமசுந்தர பாரதியாருக்கு கணக்காயர் விருது அளித்தது.
  • அண்ணாமலைப் பல்கலைக் கழகம், அதன் வெள்ளி விழாவில் சோமசுந்தர பாரதியாருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியது.
  • 1959 - மதுரையில் சோமசுந்தர பாரதியாரின் 80-ம் அகவை நிறைவுப் பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது.
  • 1959 - மதுரை நகரவையும் தமிழகப் புலவர் குழுவும் இணைந்து சோமசுந்தர பாரதியாருக்குப் பாராட்டுக் கூட்டம் நடத்தினர்.

இறுதிக்காலம்

டிசம்பர் 14, 1959-ல் சோமசுந்தர பாரதியார் காலமானார். டிசம்பர் 15 அன்று அவரது உடல் பசுமலையில் எரியூட்டப்பட்டது

1998-ம் ஆண்டு சோமசுந்தர பாரதியின் நூல்கள் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டன.

நூல்கள் பட்டியல்

ஆய்வு நூல்கள்
  • தசரதன் குறையும் கைகேயி நிறையும் (1926)
  • திருவள்ளுவர் (1929) - தமிழ், ஆங்கிலம்
  • சேரர் தாயமுறை (1960) - தமிழ், ஆங்கிலம்
  • தமிழும் தமிழரும்
  • சேரர் பேரூர் (1917) - தமிழ், ஆங்கிலம்
  • அழகு
  • பழந்தமிழ் நாடு (1955)
  • நற்றமிழ் (1957)
  • Tamil Classics and Tamilakam (1912)
படைப்பிலக்கியங்கள்
  • மங்கலக் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி: ஒரு செய்யுட் கதை (1947)
  • மாரி வாயில் (1936)
உரைநூல்
  • இந்தி கட்டாய பாடமா?
வாழ்க்கை வரலாறு
  • நான் கண்ட சுப்பிரமணிய பாரதி
சோமசுந்தர பாரதியாரைப் பற்றிய நூல்கள்
  • ச. சாம்பசிவனார் எழுதிய நாவலர் சோமசுந்தர பாரதியாரின் 'தமிழ் இலக்கியப்பணி' என்னும் நூலில் இவரது வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பும் இலக்கியப்பணி பற்றிய திறனாய்வும் இடம்பெற்றிருக்கின்றன.
  • குன்றக்குடி பெரியபெருமாள் எழுதிய தமிழ் வளர்த்த 'நல்லறிஞர்கள்' என்னும் நூலில் இவரைப் பற்றிய கட்டுரை இடம் பெற்றிருக்கிறது. (சென்னை, 1996)
  • தமிழ்ப்பிரியன் எழுதிய 'இரு நூற்றாண்டுகளும் 50 தமிழ் அறிஞர்களும்' என்னும் நூலில் இவரைப் பற்றிய கட்டுரை இடம் பெற்றிருக்கிறது. (சென்னை, 2005)

உசாத்துணை


✅Finalised Page