under review

சு.பசுபதி

From Tamil Wiki
பசுபதி
சங்கச்சுரங்கம்

சு.பசுபதி (செப்டெம்பர் 21, 1940- பிப்ரவரி 12, 2023) பேராசிரியர், தமிழ் இலக்கிய ஆவணச் சேகரிப்பாளர், கல்வியாளர், இணைய விவாதங்களில் தமிழிலக்கிய வரலாறு குறித்து எழுதியவர்.

பிறப்பு, கல்வி

சு.பசுபதி வாங்கல் எம். சுப்பராயன் - ஜெயலக்ஷ்மி இணையருக்கு செப்டெம்பர் 21, 1940-ல் சென்னையில் பிறந்தார். சென்னை ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி (தியாகராய நகர்)யில் பள்ளிக்கல்வியை முடித்தபின் லயோலா கல்லூரி, விவேகானந்தா கல்லூரி, கிண்டி பொறியியல் கல்லூரியில் தொலைத்தொடர்புத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1966-ல் சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில்( ஐ.ஐ.டி) முதுகலைப் பட்டப்படிப்பை (MTech) முடித்தார். முதல் மாணவருக்கான பரிசை சர். சி.வி. ராமனிடமிருந்து பெற்றார்.

அமெரிக்காவின் யேல் (Yale) பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் பொறியியலில் (Communication Engineering ) , பேராசிரியர் பீட்டர் ஷுல்தாய்ஸ் (Prof.Peter Schultheiss) கீழ் முனைவர்பட்டம் பெற்றார். பள்ளியில் ஆசிரியர்கள் சாம்பமூர்த்தி ஐயர், ஸ்ரீநிவாசாச்சாரியார் ஆகியோரும் ஐ.ஐ.டியில் எம்.கே.அச்சுதன், சம்பத், வி.ஜி.கே.மூர்த்தி ஆகியோர் தனக்கு ஊக்கமளித்த ஆசிரியர்கள் என்று குறிப்பிடுகிறார்.

தனிவாழ்க்கை

பசுபதி 1980-ல் ஜயாவை மணந்தார். ஒரு மகள், வாணி. பசுபதி ஐ.ஐ.டி(சென்னை), யேல் பல்கலைக் கழகம், டொராண்டோ பல்கலைக் கழகம் ( கனடா) ஆகியவற்றில் பணியாற்றினார். டொராண்டோ பல்கலைக் கழகத்தின் தகவுறு பேராசிரியர் (Professor Emeritus) ஆக கௌரவிக்கப்பட்டார்.

இலக்கியவாழ்க்கை

பசுபதி உ.வே.சாமிநாதையர், சி.சுப்ரமணிய பாரதியார், கல்கி, தேவன் ஆகியோரை தன்னை மிகவும் பாதித்த முன்னோடிகள் எனக் குறிப்பிடுகிறார். பசுபதியின் முதல் கவிதை 'தமிழணங்கு' 1982-ல் செந்தாமரை என்னும் இதழில் (டொராண்டோ, கனடா) வெளிவந்தது. உ.வே.சாமிநாதையர், சி.சுப்ரமணிய பாரதியார், கல்கி, தேவன் ஆகியோர் தனக்கு முன்னோடிகளாக உள்ளனர் என்கிறார். யாப்புலகம்[1] என்னும் இணையக் குழுமத்திலும் கவிதைகள் எழுதினார்.

கனடாவில் பல தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தினார். டொராண்டோவில் 2006-ல் நடந்த திருமுறை மாநாட்டில், 'நாயன்மார்கள்' என்ற தலைப்பில் நடந்த கவியரங்கிற்குத் தலைமை வகித்தார். டொராண்டோ Reference Libraryயின் அழைப்பில், 1987-ல் “பாரதியும் இசையும்” என்ற தலைப்பில் தன் மனைவி, மகள் பாடல்களுடன் உரை (lec-dem) நிகழ்த்தினார்.

மன்ற மையத்தின் (Forumhub) “மையம்” – Hub Magazine என்ற மின்னிதழில் 'கவிதை இயற்றிக் கலக்கு' என்ற தலைப்பில் மாதத்திற்கு ஒன்றாக எழுதிய, 50-க்கு மேற்பட்ட யாப்பிலக்கணக் கட்டுரைகள் 'யாப்புலகம்' என்ற வலைத்தளத்தில் படிக்கக் கிடைக்கின்றன.

'சங்கச் சுரங்கம்' என்ற தலைப்பில் 'திண்ணை', 'இலக்கியவேல்', 'இருவாட்சி' போன்ற இதழ்களில் 60-க்கு மேற்பட்ட கட்டுரைகள் எழுதினார்.

பசுபதி நடத்தும் பசு பதிவுகள்[2] என்னும் இணையப்பக்கம் இலக்கிய ஆவணங்களின் சேகரிப்பாக விளங்குகிறது. இசை சார்ந்த கட்டுரைகள் பலராலும் விரும்பிப் படிக்கப்படுகின்றன.

மறைவு

பசுபதி பிப்ரவரி 12, 2023 அன்று கனடாவில் காலமானார்.

நூல்கள்

  • கவிதை இயற்றிக் கலக்கு
  • சங்கச் சுரங்கம் – மூன்று பகுதிகள்
  • சொல்லயில்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page