under review

எழுத்து

From Tamil Wiki

To read the article in English: Ezhuthu (Magazine). ‎

எழுத்து தொகுப்பு

எழுத்து (1959 - 1970) சி.சு. செல்லப்பா தொடங்கி நடத்திய சிற்றிதழ். இலக்கிய விமர்சனத்திற்கென தொடங்கப்பட்டது. ஆனால் புதுக்கவிதை தமிழில் தோன்றி வளர்வதற்குரிய களமாக மாறியது. எழுத்து கவிதை இயக்கம் என்னும் இலக்கிய இயக்கம் உருவாக வழிவகுத்தது. தமிழில் பின்னாளில் அறியப்பட்ட முக்கியமான புதுக்கவிஞர்கள் எழுத்து இதழ் வழியாக அடையாளம் பெற்றவர்கள். (பார்க்க சி.சு. செல்லப்பா)

வரலாறு

மணிக்கொடி இதழ் நின்றுபோன பின்னர் மணிக்கொடி எழுத்தாளர்கள் கலாமோகினி, கலைமகள் , தேனீ முதலிய சிற்றிதழ்களில் எழுதினர். மணிக்கொடி குழுவைச் சேர்ந்த சி.சு.செல்லப்பா அவற்றில் இருந்து விலகி இலக்கிய விமர்சனக் கொள்கைகளை ஆழ்ந்து பயில்வதில் ஆர்வம் காட்டினார். 1953 வரை தினமணி இதழில் பணியாற்றினார். பின்னர் இலக்கிய விமர்சனத்துக்காக மட்டும் எழுத்து இதழை தொடங்கினார். எழுத்து இதழ் ஜனவரி 1959-ல் , 'புதுமை இலக்கிய மாத ஏடு' என்னும் அறிவிப்புடன் வெளிவந்தது. விலை: ந. பை. 50. அதில் சி.சு.செல்லப்பா "இலக்கிய அபிப்ராயம் சம்பந்தமாக மாறுபட்ட கருத்துகளுக்குக் களமாக எழுத்து அமைவது போலவே, இலக்கியத்தரமான புது சோதனைகளுக்கும் எழுத்து இடம் தரும்" என்று முதல் இதழின் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

தொடக்கத்தில் க.நா.சுப்ரமணியம் இதழில் முதன்மைப் பங்களிப்பாளராகவும் வழிகாட்டுநராகவும் இருந்தார். க.நா.சுப்ரமணியம் நடத்திய சந்திரோதயம் என்னும் இதழே செல்லப்பாவுக்கும் முன்னுதாரணமாக இருந்தது.

எழுத்துவின் போக்கில் கருத்து வேறுபாடுகொண்ட க.நா.சுப்ரமணியம் முதலில் அதில் இருந்து விலகினார். பின்னர் சுந்தர ராமசாமியும் பிரமிளும் விலகிக்கொண்டனர். வெங்கட் சாமிநாதன் இறுதியாக விலகினார். காலப்போக்கில் எழுத எவருமின்றி எழுத்தின் தரத்தில் தொய்வு ஏற்பட்டது. பொருளாதார நெருக்கடிகளும் பெருகின. பத்தாவது ஆண்டில் இருந்து எழுத்து காலாண்டிதழாக உருமாறியது. பன்னிரண்டாம் ஆண்டில் 1970-ல் , 119-வது இதழுடன் எழுத்து தன் வெளியீட்டை நிறுத்திக்கொண்டது.

1959 முதல் 1970 வரை மொத்தம் 119 இதழ்களை சி.சு.செல்லப்பா வெளியிட்டார். 1968-ல் , 112 இதழ் வரை எழுத்து மாத இதழாக வெளிவந்தது. பின்னர் காலாண்டு இதழாக மாற்றப்பட்டது. 1970 ஜனவரி-மார்ச் இதழாக வந்த 119-வது இதழுடன் எழுத்து நிறுத்தப்பட்டது.

எழுத்து

உள்ளடக்கம்

எழுத்து முதல் இதழில் 'எழுத்து வளர’ ( சி.சு.செல்லப்பா, தலையங்கம்) சாகித்ய அகாதெமி தமிழ்ப் பரிசு (க.நா.சுப்ரமணியம்) பெட்டிக்கடை நாரணன் (ந. பிச்சமூர்த்தி) கவிதை (மயன்) எம்.வி.வி கதைகள் (தி.ஜானகிராமன்) போன்ற படைப்புகள் இடம்பெற்றிருந்தன.

எழுத்து இதழில் சி.சு.செல்லப்பா தன் அலசல் பாணியில் பி.ஆர். ராஜம் ஐயர், பி.எஸ். ராமையா, கு.ப. ராஜகோபாலன், லா.ச. ராமாமிர்தம் ஆகியோரின் புனைவுலகம் பற்றி விரிவாக எழுதினார். வெங்கட் சாமிநாதன் எழுத்து இதழில்தான் வாசகர் கடிதங்கள் எழுதியபடி தன் விமர்சனங்களை தொடங்கினார். பிரமிளும் மௌனி போன்றவர்களைப் பற்றி விரிவான விமர்சனக் கட்டுரைகளை எழுத்து இதழில் எழுதினார்.

ஆனால் எழுத்து இதழ் அதன் இரண்டாம் இதழில் இருந்தே புதுக்கவிதை இயக்கத்தை தொடங்கி வைத்தது.புதுக்கவிதையின் முதற்கட்டக் கவிஞர்களான ந. பிச்சமூர்த்தி, க.நா. சுப்ரமண்யம் போன்றவர்களுடன் தி. சோ. வேணுகோபாலன், நகுலன், (பசுவய்யா) சுந்தர ராமசாமி, சி. மணி, பிரமிள், எஸ். வைத்தீஸ்வரன் போன்றவர்கள் எழுத்துவின் மூலம் அறிமுகமானவர்களே. ந. பிச்சமூர்த்தியின் 'வழித்துணை', சி. மணியின் 'நரகம்', 'வரும் போகும்', 'பச்சையம்' போன்ற நீண்ட கவிதைகள் எழுத்துவில் வெளிவந்தன. இவர்களின் கவிதை மொழியும் பார்வையும் தனித்தன்மை கொண்டவையாக இருந்தன. தமிழில் புதுக்கவிதையை ஊக்குவிக்கும் வகையில் மேலை நாட்டுக் கவிதைகள், கவிதைச் சிந்தனைகளையும் எழுத்து தொடர்ந்து வெளியிட்டு வந்தது. புதுக்கவிதை பற்றிய விவாதங்களையும் உருவாக்கியது. (பார்க்க எழுத்து கவிதை இயக்கம் )

எழுத்து 5-வது இதழ் கு.ப. ரா. நினைவு மலர் என்றும், 7-வது இதழ் புதுமைப்பித்தன் நினைவு மலர் எனவும் உருவாயின. பிச்சமூர்த்தி மணிவிழா சிறப்பு மலர், 'பி. எஸ். ராமையா மலர்’ ஆகியவை வெளிவந்தன. எழுத்து 117-வது இதழ் 'சங்கு சுப்ரமணியம்’ நினைவுமலராகப் பிரசுரிக்கப்பட்டது.

எழுத்து இடர்கள்

எழுத்து

"2000 பிரதிகளுக்கு மேல் அச்சாகாது, நேரில் சந்தாதாரராகச் சேருபவருக்குத்தான் கிடைக்கும்" என்று எழுத்து முதல் இதழில் செல்லப்பா இரண்டு நிபந்தனைகள் விதித்தார். சந்தாதாரர்களைச் சேர்ப்பதற்குப் பல சலுகைகளை அறிவித்ததுடன், எழுத்துவை ஏஜெண்டுகள் மூலம் விற்பதற்கும் ஏற்பாடுகள் செய்தார். எழுத்துவின் முதல் இதழிலேயே முழுப்பக்க அளவில் சினிமா விளம்பரம் வெளிவந்துள்ளது.

எழுத்து இதழை கல்லூரி, பல்கலைக்கழக மட்டத்தில் நவீன இலக்கியத்தைக் கொண்டுசெல்ல செல்லப்பா முயன்றார். சி.கனகசபாபதி முயற்சியால் அந்நூல் மதுரை பல்கலைகழகத்தில் பாடநூலாக ஆகியது. இதற்காகச் சில 'சமரசங்கள்' செய்துகொண்டதாக அவர் மீது ஒரு விமர்சனம் எழுதது. சி.சு.செல்லப்பா தொகுத்த 'புதுக்குரல்கள்' கவிதைத்தொகுதி மதுரைப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றபோது அத்தொகுப்பில் சுந்தர ராமசாமியின் 'மேஸ்திரிகள்' உட்பட ஓரிரு கவிதைகள் நீக்கப்பட்டன.அக்கவிதைகள் கல்லூரிப் பண்டிதர்களை விமர்சனம் செய்பவை. அதனைப் 'பல்கலைக்கழக மாணவர்களுக்கென்று சுத்தப்படுத்தப்பட்ட' தொகுப்பு என்று சிற்றிதழாளர் கிண்டல் செய்தனர். நவீன இலக்கியத்தைப் பரவலான வாசகர்களிடம் கொண்டு செல்வதற்கான ஒரு எத்தனமாகவே அதனைச் செய்தார் என ராஜமார்த்தாண்டன் கருதுகிறார்.எழுத்து தொடர்ச்சியாக தன் வாசகர்களிடம் சந்தா கோரியும் நூலகங்களிடம் ஆணை கோரியும் போராடிக்கொண்டே இருந்தது. இறுதியாக அதை செல்லப்பா நிறுத்தவேண்டியிருந்தது.

இலக்கிய இடம்

எழுத்து தமிழில் சிற்றிதழ் என்னும் வரையறையுடன் வெளிவந்த முதல் சிற்றிதழ் எனப்படுகிறது. அமெரிக்கச் சிற்றிதழ் இயக்கத்தைச் சேர்ந்த என்கவுண்டர் போன்ற இதழ்களின் செல்வாக்கால் அக்கருத்துருவம் சி.சு.செல்லப்பாவிடம் உருவானது. எழுத்து தன் வாசகர்களையும், வாசக எண்ணிக்கையையும் முன்னரே வகுத்துக் கொண்டது. வாசகர்களைக் கவரும்படி எதையும் வெளியிடவில்லை. இலக்கியத்தை மட்டுமே இலக்காக்கியது.

எழுத்து இதழின் பங்களிப்பு மூன்று வகைகளில் அமைந்தது

  • எழுத்து தமிழ் புதுக்கவிதை இயக்கத்தை உருவாக்கி நிலைநிறுத்தியது. இது எழுத்து கவிதை இயக்கம் எனப்படுகிறது
  • எழுத்து தமிழில் இலக்கிய விமர்சனத்தில் அமெரிக்க புதுத்திறனாய்வாளர்களை அடியொற்றி அலசல் விமர்சனத்தை உருவாக்கியது
  • எழுத்து தமிழில் தீவிரமான இலக்கிய விவாதங்கள் சிலவற்றை நடத்தியது. வெங்கட் சாமிநாதன், பிரமிள் முதலியவர்களின் விமர்சன எழுத்துக்களை வெளியிட்டு அவர்களை அறிமுகம் செய்தது. பின்னாளில் அவர்கள் மாறுபடும் கருத்துத் தரப்புகளாக உருவாயினர்.

உசாத்துணை


✅Finalised Page