under review

வேள்நம்பி

From Tamil Wiki
வேள்நம்பி

வேள்நம்பி (கோ.வேள்நம்பி, விஜயராஜன்) (நவம்பர் 27, 1935) மரபிலக்கிய அறிஞர். திராவிட இயக்கத்தில் செயல்பட்ட இலக்கியவாதி. நாடகங்களும் கவிதைகளும் எழுதினார்

பிறப்பு, கல்வி

கோ. வேள்நம்பியின் இயற்பெயர் விஜயராஜன். நவம்பர் 27, 1935-ல் சி.கோபால்சாமி -கமலம்மாள் இணையருக்கு சேலத்தில் பிறந்தார். 1983-ல் ஈழத்தமிழர் போராட்டம் உச்சநிலைக்கு வந்தபொழுது விஜயன் என்ற சிங்கள மன்னன் இலங்கையின் முதல் அரசனாகக் குறிக்கப்படும் வரலாறு அறிந்து தன் பெயரை வேள்நம்பி என்று அரசிதழில் பதிவு செய்துகொண்டார்.

பள்ளிப் படிப்பை மேட்டூர் அணையிலும், வித்துவான் படிப்பைக் கரந்தைப் புலவர் கல்லூரியிலும் (1954-1959)பெற்றார். கரந்தையில் இவருக்கு ஆசிரியராக வாய்த்தவர்களுள் புலவர் ந. இராமநாதனார், ச.பாலசுந்தரம், அடிகளாசிரியர், சி. கோவிந்தராசன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். தனிப்படிப்பின் மூலம்(private study) இளங்கலை (1969), முதுகலை (1971), பி.எட். (1978 மண்டலக் கல்லூரி, மைசூர்), எம்.எட் (1989, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) ஆகிய பட்டங்களைப் பெற்றார்.

வேள்நம்பி மனைவியுடன்

தனிவாழ்க்கை

வேள்நம்பி 1958-ல் இரண்டாம் நிலைத் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கி, முதல்நிலைத் தமிழாசிரியர், முதுகலை ஆசிரியர், தலைமை ஆசிரியர் (1989-1993) என்று பல நிலைகளில் ஆசிரியப் பணிபுரிந்தார். தமிழாசிரியர் கழகப் பொறுப்புகளும் வகித்தார்.

வேள்நம்பி இரா.சரோஜாவை மணந்தார். மகன்கள் அதியமான், கதிரவன், கால்டுவெல். மகள் அன்பரசி.

இலக்கியவாழ்க்கை

வேள்நம்பி 1956-ல் குமுதம் இதழ் நடத்திய 'திராவிட நாடு வேண்டும்' என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப்போட்டியில் மூன்றாம் பரிசுபெற்றார். திராவிட இயக்கக் கருத்துக்களை முன்வைத்து நாடகங்களும் கவிதைகளும் எழுதினார். மேடைகளிலும் பேசினார்.

போராட்டங்கள்

வேள்நம்பி தமிழகத் தமிழாசிரியர் கழகம் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்துகொண்டார். 1985- ல் ஆசிரியர் போராட்டத்தில் சிறைத்தண்டனை அடைந்தார். 1999-ல் சென்னையில் தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்திச் சாகும்வரை போராட்டம் மேற்கொண்ட 102 தமிழறிஞர்களுள் ஒருவர்.

அரசியல்

வேள்நம்பி திராவிட இயக்கச் சார்புடையவர். பிப்ரவரி 8, 1948- ல் மேட்டூர் அணையில் ஈ.வெ.ராமசாமிப் பெரியாரின் சொற்பொழிவை முதன்முதல் கேட்டார். செப்டெம்பர் 20, 1949-ல் ஓமலூரில் சி.என்.அண்ணாத்துரையைச் சந்தித்தார். ஆகஸ்டு, 1950-ல் நடைபெற்ற வகுப்புவாரி இட ஒதுக்கீடு வேண்டி நடந்த பள்ளி மாணவர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றார்.

வேள்நம்பி திராவிட இயக்க வராலற்றைச் சொல்லும் வகையில் 'பயணம்' என்ற நெடுங்கதை நூலை எழுதினார். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்று பிரிவுகளாக அமைந்த இந்த நூல் 3014 பக்கங்களைக் கொண்டது.

விருதுகள்

  • அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் அருவினையாளர் விருது (ஜூலை 5, 2008)
  • தினத்தந்தி, தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் விருது (செப்டெம்பர் 27, 2008)

இலக்கிய இடம்

வேள்நம்பி திராவிட இயக்கத்தின் அரசியல், சமூகவியல் கருத்துக்களை எளிய வாசகர்களை நோக்கி நேரடியாக முன்வைக்கும் படைப்புகளை எழுதியவர்.

நூல்கள்

நாடகம்
  • நெருஞ்சிப்பூ
  • முத்தமிழ்
  • விடியலைக் காணாத விழிகள்
கவிதை:
  • தனக்குவமை இல்லாதான்
  • வண்ணண நிலவின் வளர்கலை
  • வெள்ளி உருகி விழுதுகள் ஆகி
உரைநடை:
  • புரட்சிக்கவிஞரின் தாலாட்டு
  • செய்யுள் நயம்
  • தமிழ் தந்த பேறு (அமெரிக்கப் பயண இலக்கியம்)
  • சிறகுமுளைத்த நாள்முதல்
நீள்கதை
  • பயணம்
தொகுப்பு
  • தமிழனை உயர்த்திய தலைமகன் உரைகள் (அறிஞர் அண்ணா உரைகள்) - 2009

உசாத்துணை


✅Finalised Page