under review

வண்டிமலைச்சி அம்மன்

From Tamil Wiki
VandiMalaichi .jpg
வண்டிமலைச்சி1

வண்டிமலைச்சி அம்மன் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வழிபாட்டில் உள்ள நாட்டுப்புறத் தெய்வம். கைக்கோள முதலியார் இனத்தின் தெய்வமாகக் கருதப்படுகிறாள். படுத்த கோலத்தில் இருக்கும் சிலை பெரும்பாலும் மண்ணால் செய்யப்பட்டிருக்கும். வண்டிமலைச்சி அம்மன் சாலை காவல் தெய்வமாக கருதப்படுகிறாள். பெரும்பாலும் முச்சந்திகள் உள்ள இடத்தில் வண்டிமலையச்சி, வண்டிமலையனுடன் படுத்த கோலத்தில் இருப்பாள்.

தொன்மங்கள்

Vma1.jpg

ஏழு அண்ணன் கதை

வண்டிமலைச்சி ஏழு சகோதரர்களுக்கு இளையவள். வண்டி மலையன் மீது காதல் கொண்டாள். ஏழு அண்ணன்களும் அவள் காதலுக்கு மறுப்பு சொல்லவே கோபம் கொண்ட வண்டிமலைச்சி வீட்டை விட்டுச் சென்றாள்.

வண்டிமலைச்சி வீட்டை விட்டுச் சென்றதும் வண்டிமலையனும் உடன் சேர்ந்து கொண்டான். இருவரும் சிறிது தூரம் சென்றதும் பசி பொறுக்க முடியாமல் தவித்தனர். இவர்கள் பசியைக் கண்ட நெசவு செய்யும் கைக்கோள முதலியார்கள் பசைக்கஞ்சி கொடுத்தனர். அவர்களிடம் பசியாறிச் சென்ற இருவரையும் ஏழு அண்ணன்மார்களும் தேடிக் கொன்றனர்.

பலியான இடத்தில் இருந்து வஞ்சினம் கொண்டு கிளம்பிச் சென்ற வண்டிமலைச்சி ஏழு அண்ணன்களையும் பழிவாங்கி, அவர்கள் குருதி குடித்து பின்னர் அடங்கினாள். அங்கிருந்து திரும்பி தன் பசியைப் போக்கிய முதலியார் வீட்டின் முன் காவல் தெய்வமாக அமர்ந்து அவர்கள் குறைகளைப் போக்கினாள்.

அண்ணன் தங்கை

வண்டி மலையனையும், வண்டி மலையச்சியையும் அண்ணன் தங்கை எனச் சொல்லும் கதையும் உண்டு. பஞ்ச காலத்தில் தாய், தந்தையை இழந்த அண்ணன் தங்கை உணவு தேடி சென்றனர். களைப்பில் நெசவாளர் குடியில் புகுந்து அங்கே நூலுக்குக் கஞ்சிபோட வைத்திருந்த கஞ்சி கண்டனர். பசியால் கஞ்சியை ஆளுக்கு ஒரு கலயத்தில் எடுத்துக் குடித்தனர்.

பாவுக்கஞ்சியை இழந்ததால் ஆத்திரமடைந்த நெசவாளர்கள் கோபம் கொண்டு பாவுக் கஞ்சிக் கலயத்தால் இருவரையும் அடித்தனர். வலுவிழந்திருந்த இருவரும் அடி தாங்க முடியாமல் அங்கேயே விழுந்து உயிர் இழந்தனர். இறந்தவர்கள் நெசவாளர்கள் துணி கொண்டுச் செல்லும் மாட்டு வண்டியை ஆவியாக வந்து மேலே செல்லவிடாது மறித்தனர்.

நெசவாளர்கள் ஆத்திரத்தில் தாங்கள் செய்த குற்றத்தை உணர்ந்து அவர்கள் இருவரிடமும் மன்னிப்புக் கேட்டு அவர்களுக்கு கோவில் கட்டி வழிபாடு செய்வதாக வாக்களித்தனர்.

தாருகன் வதை கதை

காளியால் கொல்லப்பட்ட தாருகன் மேலிருந்து கீழே பூலோகத்தில் விழுந்தான். அவன் உடம்பிலிருந்து வழிந்த குருதியை வாரி வண்டியில் இடவும் அக்குருதியில் இருந்து வண்டி மலையன் பிறந்தான். அவனுக்குத் துணையாக அருகில் வண்டிமலைச்சியும் பிறந்தாள்.

இவர்கள் இருவரும் முப்புராதிகளுடன் சேர்ந்து அவர்கள் இட்ட பணியைச் செய்து வந்தனர். (முப்புராதி அம்மன் கதைப்பாடல்)

அஷ்ட கன்னிகள் கதை

Vma2.jpg
பிறப்பு

பூமிக்கு கீழே உள்ள நாகர் உலகத்தில் மாணிக்கப்புற்று ஒன்றில் நாகராஜனும், நாககன்னிகையும் வாழ்ந்தனர். அவர்கள் குழந்தைப்பேறு இல்லாமல் இருந்தனர். இதனைப் போக்க இருவரும் குழந்தை வரம் வேண்டி சிவனிடம் தவம் புரிந்தனர். இவர்களின் தவவல்லமை நாளுக்கு நாள் கூடவே சிவன் வீற்றிருக்கும் கயிலை மலை முழுவதும் இருளடையத் தொடங்கியது. அதைக் கண்ட சிவபெருமான் தன் தவத்தில் இருந்து எழுந்தார். கயிலை இருளாவதற்கான காரணத்தை நந்தி தேவரிடம் கேட்டு அறிந்தார்.

நாகராஜனும், நாககன்னிகையும் குழந்தைப் பேறு பெற்று வாழ இருவருக்கும் வரமருள்வதற்காக கயிலையை விட்டுச் சென்றார். சிவன் கயிலையை விட்டு செல்வதறிந்த பார்வதி தானும் உடன் வர வேண்டி பணிந்தாள். சிவன் பார்வதியிடம், 'தேவி கயிலையை இருள் சூழ்ந்துள்ளது. சிவன் சக்தி என நாம் இருவரும் கயிலையை விட்டுச் சென்றால் கயிலை மொத்தமாக இருண்டுவிடும். நீ இங்கு இரு. நான் வரமருளிவிட்டுத் திரும்பி வருகிறேன்’ என்றார். சிவனின் சொல் கேட்காமல் பார்வதி உடன் செல்ல பிடிவாதமாக இருந்தாள். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பார்வதி வாதம் செய்யும் தோறும் சிவனின் கோபம் கூடியது. சிவனின் கோபம் உச்சம் அடைந்த போது தன் நெற்றிக் கண்ணைத் திறந்தார். நெற்றிக்கண்ணில் இருந்து வெளிவந்த தீப்பொறி பார்வதியை எரித்து எட்டு முட்டைகளாக மாற்றியது. சிவன் அந்த எட்டு முட்டைகளை எடுத்துக் கொண்டு நாக தம்பதியரிடம் சென்றார். நாக கன்னிகையின் கையில் எட்டு முட்டைகளையும் கொடுத்து, 'இதனை நாற்பத்தியோரு நாட்கள் பாதுகாத்து வந்தால் உங்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும்’ என்றருளி மறைந்தார்.

அஷ்டகன்னிகள்

சிவனின் சொல் கேட்டு நாகராஜனும், நாககன்னிகையும் எட்டு முட்டைகளையும் பாதுகாத்து வந்தனர். நாற்பத்தியோராம் நாள் முடிவில் அதிலிருந்து எட்டுக் கன்னிகைகள் வெளிவந்தனர். முதல் முட்டையிலிருந்து வண்டிமலைச்சி வெளிவந்தாள். அவளைத் தொடர்ந்து முத்தாரம்மன், மூன்றாவதாக முப்பிடாதி, நான்காவது முட்டையில் இருந்து சந்தனமாரி வெளிவந்தாள். அக்னிமாரி ஐந்தாவது முட்டையில் இருந்து வெளிவந்தாள், தொடர்ந்து கருங்காளி, பத்திரகாளி, உச்சினி மாகாளி என அடுத்தடுத்த முட்டையிலிருந்து வந்தனர்.

நாக தம்பதியர் இவர்கள் எட்டு பேரையும் நல்ல முறையில் வளர்த்தனர். பருவமடைந்த கன்னிகைகள் மனதில் அவர்கள் பிறப்பு குறித்து சந்தேகம் எழுந்தது. பெற்றோர் இருவரும் நாகப் பிறவிகளாக இருக்க அவர்கள் உடல் மட்டும் எப்படி மனித உருக்கொண்டது என எண்ணினர். அவர்கள் சந்தேகத்தை பெற்றோரிடமே நேரடியாகக் கேட்டனர். நாக தம்பதியர் அதனை சொல்ல மறுக்கவே எட்டு பேரும் தனித்தனியாக சிவனை நோக்கித் தவமிருந்தனர்.

மகிஷன் வதம்

எட்டு கன்னியரின் தவத்தின் பொருட்டு சிவன் மீண்டும் கயிலையை விட்டு வந்தார். எட்டு பேரிடமும் அவர்களின் பிறப்பின் ரகசியத்தைப் பற்றிச் சொன்னார். மேலும் சிவன் எட்டு பேருக்கும் மகிஷனின் கதையைச் சொல்லலானார்.

பூலோகத்தில் மச்சரிசி வனத்தில் எருமைத்தலையும், மனித உடலும் கொண்ட மகிஷாசுரன் ஆட்சி செய்து வந்தான். தன் தவத்தின் வல்லமையால் சிவனிடம் தனக்கு தேவர்கள், ஆண்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகளால் மரணம் ஏற்படக்கூடாது என்று வரம் பெற்றான். சிவனின் வரம் கிடைத்ததும் தனக்கு சாகா வரம் கிடைத்தது என்றெண்ணி மகிழ்ந்தான். ஆணவம் தலைக்கேறவே தேவருலகம் சென்று இந்திரனை போருக்கு அழைத்தான். இதனை அறிந்த இந்திரன் அங்கிருந்து தப்பி கயிலைக்குச் சென்று சிவனிடம் முறையிட்டான்.

இச்செய்தியை சிவன் எட்டு கன்னிகைகளிடம் கூறி, "பார்வதிக்கு தான் அளித்த எட்டு சாபங்களின் பயனாகப் பிறந்த உங்கள் எட்டு பேரால் தான் மகிஷாசுரன் அழிக்கப்படுவான்." எனக் கூறினார். அதனைக் கேட்ட எட்டுக் கன்னியரும், "நாங்கள் அவ்வாறு மகிஷனை அழித்து கயிலை திரும்பினால் எங்கள் எட்டு பேரையும் நீங்கள் மணந்து கொள்ள வேண்டும்" என வேண்டினர். சிவன், "எட்டு கன்னியரின் வேண்டுதல் நிறைவேற்றப்படும் வென்று வாருங்கள்" எனச் சொல்லி மறைந்தார்.

சிவன் சொல்லைக் கேட்ட எட்டு கன்னியரும் நாகருலகத்தில் இருந்து புறப்பட்டனர். சிவன் கொடுத்த ஆயுதத்தை எடுத்துக் கொண்டு வண்டிமலைச்சி தலைமையில் எட்டு பேரும் பூலோகம் சென்றனர். எட்டு கன்னியருக்கும், மகிஷனுக்கு நீண்ட போர் நிகழ்ந்தது. எட்டாவது நாள் போரில் மகிஷனின் தலையை வண்டிமலைச்சி கொய்தாள்.

மகிஷனை வென்ற அஷ்ட கன்னியர் கயிலையை நோக்கி விரைந்தனர். அவர்கள் வருவதை தன் தவத்தால் அறிந்த சிவபெருமான் பிரம்மாவை அழைத்து, "பிரம்ம தேவா, நீ அவர்கள் வரும் வழியில் உள்ள வண்டு மலைக்குச் சென்று எட்டு வண்டுகளைப் பிடித்து எட்டுக் குழந்தைகளாக மாற்றி அவர்கள் வரும் வழியில் கண்ணில் படும்படி போட்டு விடு" என்றார். சிவன் சொல் படி பிரம்மனும் செய்தார்.

எட்டுக் கன்னியரும் தாங்கள் வரும் வழியில் வண்டுமலை அடுத்து குழந்தை அழும் சத்தம் கேட்டு நின்றனர். தாய்மையுணர்வு கொண்ட கன்னியர்கள் அந்த எட்டுக் குழந்தைகளை எடுத்துக் கொண்டு கயிலை விரைந்தனர். கையில் குழந்தையுடன் கன்னியர்களைக் கண்ட சிவபெருமான், "குழந்தையுடன் வந்த பெண்களை என்னால் மணம் செய்துக் கொள்ள முடியாது" என மறுத்தார். சிவன் சொல்லால் ஏமாற்றமடைந்த கன்னியர்கள் கயிலையை விட்டு பூலோகம் சென்றனர். கன்னியரின் செயல் கண்ட சிவபெருமான் கயிலையில் உள்ள வேள்வித் தீயில் இருந்து தர்ப்பை ஒன்றை எடுத்து பூலோகத்தில் வீசினார். அதிலிருந்து வண்டிமலையன், வைரவன், அரசமகன் இருளப்பன், சட்டநாதன், சடுகநாதன், சங்கிலிவாய்ப் பூதத்தான், எண்ணிறந்த பேய்ப்படை, இருபத்தியொரு வாதைகள் தோன்றினர். அவர்கள் யாவரும் எட்டுக் கன்னியருக்குத் துணையாக பூலோகம் சென்றனர்.

அவர்கள் எல்லோரும் பூலோகம் வந்ததை மக்களுக்கு தெரிவிக்கும் பொருட்டு மனிதர்கள் அச்சப்படும் படியான செயல்களைச் செய்தனர். அவர்கள் செயலால் அச்சமடைந்த மக்கள் பூசாரியை அழைத்துக் குறிகேட்டனர். பூசாரி வந்திருக்கும் எட்டுக் கன்னியர்களையும் அவர்களின் துணை வாதைகளையும் அறிந்தார். அச்சப்பட்டு நின்ற மக்களிடம், "கயிலையிலிருந்து அஷ்ட கன்னியரும் அவர்களின் துணை வாதைகளும் வந்துள்ளனர். அவர்களுக்கு கோவில் கட்டி வழிபட்டால் பயம் நீங்கும்" என்றார். இதனைக் கேட்டவர்கள் வண்டி மலைச்சிக்கு நாகலாபுரத்தில் கோவில் எழுப்பினர். அங்கிருந்து தாங்கள் இடம்பெயர்ந்த இடத்திலெல்லாம் வண்டி மலைச்சிக்கு கோவில் அமைத்து வழிபட்டனர்.

மாற்று கதை வடிவங்கள்

  • அம்பாசமுத்திரத்தில் பெற்றோரை இழந்து அகால மரணமடைந்த அண்ணன் தங்கை பேயாக வந்து வழிப் போவோரை வழிமறித்துத் துன்புறுத்தினர். அகத்திய முனிவர் அவர்களைச் சாந்தப்படுத்தி, ஊர் மக்களை அவர்களுக்குக் கோவில் எழுப்பும் படிச் சொன்னார் என்ற கதை உள்ளது.
  • செங்கோட்டையில் உள்ள கதைப்படி வண்டிமலைச்சி பிரம்மனால் தேவலோகத்திலிருந்து பூலோகத்திற்கு அனுப்பப்பட்ட பெண்.
  • ஆய்வாளர் முத்தலாங்குறிச்சி காமராசுவின் ஆய்வின் படி அம்பாசமுத்திரத்திலுள்ள கதையின் வேறொரு வடிவத்தில் பாகாசுரன் என்ற அரக்கனும் அவனது மனைவி பகாசுரவல்லியுமே வண்டி மலையனும், வண்டி மலைச்சியும்.

பெயர் காரணம்

வண்டிகளை செல்ல விடாமல் மறித்ததால் வண்டி மறிச்சி, வண்டி மறிச்சான் எனப் பெயர் பெற்றனர் என ஆய்வாளர் ஆ. சிவசுப்பிரமணியன் குறிப்பிடுகிறார்.

சிலை வடிவம்

Vma.jpg

வண்டிமலைச்சி கோவிலில் வண்டிமலையனுடன் கிடந்த நிலையில் (சயன நிலையில்) அமைத்திருப்பாள். வெட்ட வெளியில் தரையில் விழுந்து இறந்து போனதால் இருவரும் மேற்கூரையின்றி தரையில் படுத்த நிலையில் இருப்பர்.

வழிபாடு

வண்டிமலைச்சிக்கு ஆடி, ஆவணி மாதங்களில் செவ்வாய்கிழமை பொங்கல் வைத்து வழிபடுவர். திங்கட்கிழமை வன்னிகுளம் கருப்பசாமிக் கோவிலுக்குச் சென்று பொங்கல் வைத்து வண்டிமலையனையும், மலைச்சியையும் அழைத்து வருவர். செவ்வாய் இரவு மாரியம்மன் கோவிலில் இருந்து கும்பம் கொண்டு வருவர். அன்று பொங்கல் வைத்து கோழி, சேவல் இறைச்சியுடன் படைப்பு வைப்பார்கள். மாவிளக்கு கொண்டு வருவார்கள். புதன் மாலை மஞ்சள் நீராட்டு முடிந்த பின் பள்ளயம் பிரித்துக் கொடுத்து வழிபடுவர்.

வழிபடும் ஊர்கள்

நெல்லை மாவட்டத்தில் உள்ள நாகலாபுரம், அயன் பொம்மையாபுரம் போன்ற ஊர்களில் வண்டி மலைச்சியம்மனும், வண்டி மலையனும் கிடந்த கோலத்தில் மல்லாந்து படுத்தப்படி உள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள வண்டி மலைச்சி, வண்டி மலையன் சிற்பம் அளவில் பெரியது. தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் உள்ள நாட்டார்களுக்கு பாத்தியப்பட்ட கோவிலில் வண்டி மலையன் உருவம் உள்ளது.

எட்டையாபுரத்தில் வாழும் நெசவாளர்கள் குடியிருப்பு பகுதியில் முன்பு ஒரு வண்டிமலைச்சியம்மன் கோவில் இருந்தது அதிலிருந்த வண்டி மலைச்சியம்மனை இப்போது நின்ற கோலத்திற்கு மாற்றியுள்ளனர். எட்டையாபுரத்தில் மொத்தம் நான்கு வண்டி மலைச்சியம்மன் கோவில் உள்ளது. தூத்துக்குடி விட்டிலாபுரத்தில் ஒரு கோவில் உள்ளது.

குமரி மாவட்டத்தில் வேளாளர்குடியினர் இவர்கள் இருவருக்கும் பூசை செய்கின்றனர். இங்கே கார்த்திகை மாதத்தில் திருவிழா நடைபெறும். சுசீந்திரம், தாழக்குடி கோவில்களிலும் இதுவே நடைமுறை.

நின்ற கோல வண்டிமலைச்சி

எட்டையாபுரத்தில் நெசவாளர்கள் குடியிருப்பு பகுதியில் மொத்தம் நான்கு கோவில்கள் உள்ளன. அதில் இரண்டில் அம்மன் நின்ற கோலத்திலும், ஒன்றில் அமர்ந்த கோலத்திலும் இருந்தது. வண்டி மலைச்சி அம்மன் மட்டும் அனந்த சயனத்தில் இருப்பதைக் கண்ட கோவில் நிர்வாகியான செல்வந்தர் அதனை நின்ற கோலத்தில் மாற்ற எண்ணினார். அவர் எண்ணத்திற்கு ஊரிலிருந்து எதிர்ப்பு வரவே காஞ்சிபுரம் சங்கர மடத்துக்குச் சென்று அம்மன் உருவம் நிறுவுவது பற்றிச் சொன்னார். சங்கராச்சாரியார் ஆலோசனை படி பழைய அம்மனை குழி தோண்டிப் புதைக்கும் போது அவர் கொடுத்த எந்திரத்தையும் உடன் புதைத்து புதிய சிலையை நிறுவினார். இதன் பின் வண்டி மலைச்சி அம்மன் தோற்றக் கதையும் மாற்றம் அடைந்தது. உயிர்பலி கொடுப்பது நிறுத்தப்பட்டு அம்மன் தேவலோகத்துப் பெண்ணாக புராணத்தில் உருபெற்றாள்.

பின் சில ஆண்டுகள் கழித்து கோவில் திருவிழாவின் போது சாமியாடியின் மேல் அம்மன் இறங்கி உயிர்ப்பலி கேட்டாள். நிறுத்திவைக்கப்பட்ட பலியை மீண்டும் நிறைவேற்ற வேண்டுமா என்ற குழப்பத்திற்கு தீர்வாக கோவிலுக்குத் தொலைவில் உள்ள நந்தவனத்தில் உயிர்ப்பலி கொடுக்கப்பட்டது. இதன் தாக்கத்தால் எட்டையாபுரத்தில் உள்ள சண்முக முதலியார் தெருவில் உள்ள வண்டி மலைச்சி அம்மன் கோவிலையும் நின்ற நிலைக்கு மாற்றியுள்ளனர். மேலத்தெரு மேகலிங்கபுரம் பகுதியில் உள்ள வண்டி மலைச்சிக்கு இம்மாறுதல் இன்னும் நிகழவில்லை.

உசாத்துணை

வெளி இணைப்புகள்


✅Finalised Page