under review

ராமன் மார்க்கண்டு

From Tamil Wiki
ராமன் மார்க்கண்டு (நன்றி: செல்லையா மெற்றாஸ்மயில்)

ராமன் மார்க்கண்டு (எஸ்.ஆர். மார்க்கண்டு) (மே 30, 1919) ஈழத்து நாடகக் கூத்துக் கலைஞர். பல்வேறு இசை நாடகங்களில் நடித்ததுடன் கூத்து பழக்கியும் நாடகங்களை மேடையேற்றினார். நாடகத்துறையின் புதிய உத்திக்களையும் இசை நாடகத்தில் புதிய பரீட்சார்த்த முறைகளையும் சோதித்து பார்த்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை அச்சுவேலியில் மே 30, 1919-ல் மார்க்கண்டு சின்னப்பொடியர் ராமனுக்கு மகனாகப் பிறந்தார். தந்தை ராமன் தென்இந்தியாவைச் சேர்ந்த சின்னவடக்கனிடம் "கருநாடகம்" என்ற கூத்து வகையினைப் பயின்று மதுரைவீரன், தேசிங்குராசன், எஸ்தாக்கியர் நாடகம், வரப்பிரகாசம் நாடகம், தமயந்தி சரிதம் போன்ற பல்வேறு நாடகங்களைப் பல மேடைகளில் ஏற்றி அண்ணாவியராக பல நடிகர்களை உருவாக்கினார். மகன் எஸ்.ஆர். மார்க்கண்டு தந்தையைப் பின்பற்றி "கொட்டகைக்கூத்து" என்னும் இசை நாடகத்தைப் பயின்று பல்வேறு நாடகங்களை மேடையேற்றினார். கர்நாடக சங்கீதம் கற்றார்.

கலை வாழ்க்கை

"பவளக்கொடி" நாடகத்தில் கிருஷ்ணன் பாத்திரம் ஏற்று நடித்து புகழ் பெற்றார். இந்நாடகத்தில் வதிரியைச் சேர்ந்த அண்ணாச்சாமி ஆசிரியர் அருச்சுனனாகவும் வி.வி. வைரமுத்து பவளக் கொடியாகவும், சுண்டிக்குழி ரத்தினம் அல்லிப் பாத்திரத்தையும் ஏற்று நடித்தனர். பதின்மூன்று வயதில் சிறுதொண்டன் நாடகத்தில் சிறுதொண்டனாக நடித்து பாராட்டு பெற்றார். பதினேழு வயதில் சுண்டிக்குழி மகளிர் கல்லூரியில் சத்தியவான் சாவித்திரி நாடகத்தைத் நெறிப்படுத்தி மேடையேற்றினார். இந்நாடகத்தில் யமனாக மார்க்கண்டுவும், வீ.வீ. வைரமுத்து சாவித்திரியாகவும், அண்ணாச்சாமி சத்தியவானாகவும், குழந்தைவேலு நாரதராகவும் நடிக்கச் செய்து யாழ்நகரில் புதிய நாடகப் பரம்பரைக்கு வழிவகுத்தார். அச்சுவேலியில் இவர் ஆரம்பித்த "ராமானந்த நாடகசபா" வின் மூலம் இவர்கள் ஒரு குழுவாகச் சேர்ந்து பல நாடகங்களை மேடை ஏற்றினார்கள். யாழ்குடாநாட்டில் அக்காலத்தில் சிறந்த நாடகக் குழுவாக இயங்கிய இவர்களில் திரு . மார்க்கண்டு அவர்கள் அண்ணாவியாராக முதல்முதலில் "ஞான சவுந்திரி" என்ற நாடகத்தை வண. பாலசுந்தரம் அடிகளாரின் வேண்டுதலுக்கிணங்க அச்சுவேலி கிறிஸ்தவக் கல்லூரி மாணவர்களுக்கு பழக்கி மேடை ஏற்றி தனக்கு நடிக்க மட்டுமின்றி சிறப்பாக நடிக்க கற்றுக் கொடுக்கவும் முடியும் என்றளவில் பெரும் பாராட்டுக்களைப் பெற்றார். அரிச்சந்திரா(வளலாயில்), சத்தியவான் சாவித்திரி (அச்சுவேலியிலும் , கச்சாயிலும்) பவளக்கொடி (நவக்கிரி) போன்ற பல நாடகங்களைப் பழக்கி மேடையேற்றினார்

1964-ல் யாழ்ப்பாணத்தின் இருந்த "யூடீசி"-ல் மார்க்கண்டு முக்கிய மண்டபமாக அவர்களால் பழக்கி மேடை ஏற்றப்பட்ட "பூதத்தம்பி" நாடகம் யாழ் முழுவதும் பலரது பாராட்டைப் பெற்றது. சோவியத் தூதுவராக அக்காலத்தில் கடமை புரிந்தவரும், அவரது அதிகாரிகளும் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தபோது "பூதத்தம்பி" நாடகம் தெரிவு செய்யப்பட்டு அக்காலத்தில் உடுவில் பா.உ. தர்மலிங்கம் அவர்களால் குரும்பசிட்டியில் வைத்து மேடை ஏற்றிக்காட்டப்பட்டது. பல்வேறு இசை நாடகங்களைப் பழக்கிய துடன் தனது 65வது வயது வரையும் தொடர்ந்து நடிப்புத்துறையில் பணியாற்றி இறுதியாக "சிறுத்தொண்டன்" நாடகத்துடன் நடிப்பில் இருந்து ஓய்வு பெற்றார்.

பாராட்டுக்கள்

  • "புத்துவாட்டி சோமு பாதையில் ஒரு மார்க்கண்டு" என்ற தலையங்கம் மூலமாக "வீரகேசரி" விமர்சனம் எழுதி மார்கண்டு மேடையேற்றிய பூதத்தம்பி நாடகத்தைப் பாராட்டியது.
  • கலையரசு சொர்ணலிங்கம், ஏ.ரீ.பொன்னுத்துரை போன்ற நாடக அறிஞர்களால் பலமுறை பாராட்டப்பட்டார்.
  • அச்சுவேலியில் 1977-ல் கலாநிதி ஜனசமூக நிலையத்தில் பேராசிரியர் கலாநிதி அ.சண்முகதாஸ் அவர்கள் "நாடகமணி" என்று பட்டமளித்து பொன்னாடை போத்தி, கிரீடம் அணிவித்துப் பாராட்டப்பட்டார்.

நடித்த கூத்துகள்

  • சிறுத்தொண்டன் (4 தடவைகள்) - சிறுத்தொண்டன்
  • பவளக்கொடி (50 தடவைகள்) - கிருஷ்ணன்
  • சத்தியவான் சாவித்திரி (100 தடவைக்குமேல்) - யமன்
  • சாரங்கதாரா (50 தடவை) - நரேந்திரன்
  • அல்லி அருச்சுணா (25 தடவை) - கிருஷ்ணன்
  • பூதத்தம்பி (125க்கு மேல்) - அந்திராசி
  • அரிச்சந்திரா (45) - விசுவாமித்திரன், அரிச்சந்திரன்
  • அம்பிகாவதி (20 முறை) - குலோத்துங்கன்
  • கிருஷ்ணலீலா (10 தடவை) - கம்சன்
  • கோவலன் சரித்திரம் (15 தடவை) - கோவலன்
  • மார்க்கண்டேயர் (15 தடவை) - யமன்

பழக்கிய நாடகங்கள்

  • சிறுத்தொண்டன்
  • ஞானசெந்தரி
  • சத்தியவான் சாவித்திரி
  • அரிச்சந்திரா (3 இடங்களில்)
  • பவளக்கொடி (3 இடங்களில்)
  • சாரங்கதாரா (5 முறை)
  • பூதத்தம்பி
  • அல்லி அருச்சுனன் (6 முறை)
  • அம்பிகாபதி (4 தடவைகள்)
  • கோவலன் சரித்திரம் (5 தடவை)

உசாத்துணை


✅Finalised Page