under review

ராஜம்மாள் தேவதாஸ்

From Tamil Wiki
டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ்

ராஜம்மாள் தேவதாஸ், (ராஜம்மாள் பாக்கியநாதன் தேவதாஸ்; பிறப்பு: ஜூலை 15, 1919 - இறப்பு: மார்ச் 17, 2002) சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் ஹோம் சயின்ஸ் (மனை அறிவியல்) பட்டதாரி. அமெரிக்காவின் ஓஹையோ பல்கலைக்கழகத்தில் ஹோம் சயின்ஸில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் தமிழ்ப் பெண். கோவை அவிநாசிலிங்கம் மனையியல் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றினார். பெண்கள், குழந்தைகள் நல உயர்வுக்காக, கல்வி மேம்பாட்டிற்காக உழைத்தார். இந்திய அரசின் ‘பத்ம ஸ்ரீ’ விருது பெற்றுள்ளார்.

பிறப்பு, கல்வி

ராஜம்மாள் தேவதாஸ், ஜூலை 15, 1919-ல், திருவண்ணாமலை அருகே உள்ள செங்கத்தில், பாக்யநாதன் - சொர்ணத்தம்மாள் தம்பதியினருக்குப் பிறந்தார். தந்தை வன இலாகா அதிகாரியாகப் பணியாற்றினார். அடிக்கடி பணி மாறுதல் ஏற்பட்டதால், ராஜம்மாள் திருச்சி கிறிஸ்டியன் போர்டிங் ஸ்கூலில் சேர்க்கப்பட்டார். உயர்நிலைக் கல்வியை சென்னை நார்த் விக் பள்ளியில் படித்தார். பட்டப் படிப்பை, ராணி மேரிக் கல்லூரியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருந்த ‘ஹோம் சயின்ஸ்’ பாடப்பிரிவில் சேர்ந்து பயின்றார். இறுதித் தேர்வில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்று தங்கப் பதக்கம் வென்றார். ‘சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் ஹோம் சயின்ஸ் பட்டதாரி’ என்ற சிறப்பைப் பெற்றார்.

அமெரிக்காவின் ஓஹையோ பல்கலைக்கழகத்தில் உணவு மற்றும் ஊட்டச்சத்து துறையில் (Food and Nutrition) எம்.எஸ்.சி மற்றும் மனையியலில் (Home Science Education) (எம்.ஏ)பட்டங்கள் பெற்றார். ஊட்டச்சத்து மற்றும் உயிர் வேதியியல் (Nutrition & Bio-Chemistry) துறையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். ஓஹையோ பல்கலைக்கழகத்தில் மனையியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் தமிழ்ப் பெண்ணாக ராஜம்மாள் தேவதாஸ் கருதப்படுகிறார்.

முனைவர் ராஜம்மாள் தேவதாஸ்

தனி வாழ்க்கை

தந்தை திடீரென நோய்வாய்ப்பட்டதால், அவர் இறுதி விருப்பப்படி, இளம் வயதிலேயே ராஜம்மாள், தன் தாய்மாமா எட்வர்ட் தேவதாஸை மணந்தார். தேவதாஸ் காவல்துறையில் பணியாற்றி வந்தார். திருமணத்திற்குப் பின் தொடர்ந்து கல்வி பயின்றார் ராஜம்மாள். தான் படித்த ராணி மேரிக் கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணியாற்றினார். அமெரிக்காவில் மேற்கல்வி பயின்றாதால் ராஜம்மாள் தேவதாஸுக்கு மத்திய அரசின் பணி கிடைத்தது. ராஜம்மாள் - தேவதாஸ் இணையருக்கு ஒரே மகன், மோகன்.

கல்விப் பணிகள்

கோயம்புத்தூரில், பெண்களின் முன்னேற்றத்துக்காக, மனையியல் கல்லூரி (Avinashilingam Institute for Home Science and Higher Education for Women) ஒன்றைத் தோற்றுவித்தார் தி.சு. அவிநாசிலிங்கம் செட்டியார். அக்கல்லூரியில் பணியாற்றுமாறு வந்த வாய்ப்பை ராஜம்மாள் ஏற்றுக் கொண்டார். மத்திய அரசின் பணியில் இருந்து விலகி கல்லூரியின் முதல்வர் பொறுப்பை ஏற்றார்.

சில ஆண்டுகளிலேயே அக்கல்லூரியை கோவையின் முதன்மையான கல்லூரியாக உயர்த்தினார். சமூக சேவையுடன் இணைந்த கல்வியையும் அறிவியல், மனை அறிவியல், உணவு சார் கல்வி, சூழலியல் என பல துறைகளிலும் பலவேறு புதிய பாடத் திட்டங்களைக் கொணர்ந்தார். புதிய புதிய பட்ட மற்றும் பட்டய, பட்ட மேற்படிப்புகளை அறிமுகப்படுத்தினார்.

1978-ல் அவிநாசிலிங்கம் மனையியல் கல்லூரிக்கு சென்னைப் பல்கலைக்கழகம் ‘தன்னாட்சி’ அதிகாரம் வழங்கியது. தன்னாட்சி அதிகாரம் பெற்ற அக்காலத்தின் எட்டு கல்லூரிகளில் அது ஒன்றுதான் மகளிர் கல்லூரி. 1988-ல் அக்கல்லூரி நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தகுதி பெற்று, அவிநாசிலிங்கம் பெண்கள் பல்கலைக்கழகமாக உயர்ந்தது. ராஜம்மாள் தேவதாஸ் அதன் துணைவேந்தர் ஆனார். பின்னர் அதன் வேந்தராகவும் செயல்பட்டார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களுடன் தொடர்பினை விரிவாக்கி மாணவ, மாணவியர் மென்மேலும் கற்கவும், ஆசிரியர்கள் மூலம் அறிவுப் பரிவர்த்தனைகள் நிகழவும் காரணமானார்.

சமூகப் பணிகள்

ராஜம்மாளுக்கும் காந்தியச் சிந்தனைகளின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. எப்போதும் கதராடை அணிந்தார். கிராமப் பெண்களின் முன்னேற்றத்திற்காக உழைப்பதைத் தனது லட்சியமாகக் கொண்டார். கல்வியே அவர்களை முன்னேற்றும் என்பதை உணர்ந்து அதற்கான முயற்சிகளை முன்னெடுத்தார். கிராமப்புறங்கள் கல்வியில் பின் தங்கியிருப்பதற்கு முக்கியக் காரணம், வறுமையும், அம்மாணவர்களுக்கு சமச்சீரான உணவு கிடைக்காததும் தான் என்பதை உணர்ந்தார். அதுகுறித்த விரிவான ஆய்வுகளை மேற்கொண்டார்.

குழந்தைகளுக்குப் போதிய, சமச்சீரான உணவுகள் கிடைக்காததால் இறப்பு சதவிகிதமும் நோய்களும் அதிகரிக்கின்றன என்பதைக் கண்டறிந்த அவர், குழந்தைகளுக்கு, குறிப்பாக, ஐந்து வயதுக்குட்பட்ட கிராமப்புறக் குழந்தைகளுக்கும், கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் சமச்சீரான சத்துள்ள உணவு வழங்கப்படுவதன் முக்கியத்துவத்தை அரசிடம் வலியுறுத்தினார். ராஜம்மாள் தேவதாஸ் தனது ஆய்வறிக்கையில் அளித்திருந்த திட்டங்கள் மத்திய, மாநில அரசுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டு இன்றைக்கு ’சமச்சீர் உணவு’ என்பது உள்பட பல்வேறு வகையில் செயல்பாட்டில் இருக்கின்றன.

ராஜம்மாள் தேவதாஸ், 1963-ல் ஒரு மாதிரிப் பள்ளியை உருவாக்கி கல்வியோடு அங்கேயே மதிய உணவையும் அளிக்க ஏற்பாடு செய்தார். அதன் தொடர்ச்சியே பிற்காலத்தில் சத்துணவுத் திட்டமாக உருப்பெற்றது.

மாற்றுத் திறனாளிக் குழந்தைகளும் மற்ற குழந்தைகள் போல் செயல்பட, கல்வி கற்க, பாடத்திட்டங்களை வகுத்து Community Based Rehabilitation (CBR) Programme என்பதை அமைத்து அவர்கள் முன்னேற உதவினார். கோவையின் விவேகானந்தபுரத்தில் ராஜம்மாள் தேவதாஸ் உருவாக்கிய ‘அவிநாசிலிங்கம் ரூரல் சென்டர்’ ஒரு மாதிரி அமைப்பாகத் திகழ்கிறது.

பொறுப்புகள்/பணிகள்

ராஜம்மாள் தேவதாஸ், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் தேசிய ராணுவப் படையின் கெளரவப் படைத்தலைவராகப் பணியாற்றினார். 1987-1991 வரை இந்திய ஊட்டச்சத்துச் சங்கத்தின் (Nutrition Society of India) தலைவராகப் பணிபுரிந்தார். காந்தி கிராம கிராமப்புற சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனம், (Gandhigram Institute of Rural Health and Family Planning), நேஷனல் லிட்ரஸி மிஷன்(National Literacy Mission), சிக்மா சை (Sigma Xi), சிக்மா டெல்டா எப்ஸிலான் (Sigma Delta epsilon), ஒமைக்ரான் நூ (Omicron Nu) மற்றும் பை உப்ஸிலான் ஒமைகிரான் (Phi Upsilon Omicron) போன்ற அமைப்புகளில் உறுப்பினராகப் பணியாற்றினார்.

மனை அறிவியல் சங்கத்தின் (Home science Association) தலைவியாகப் பொறுப்பு வகித்தார். இந்தியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் இவரது ஆலோசனைகளைப் பெற்று பாடத்திட்டங்களை உருவாக்கின. தமிழக அரசின் திட்டக் கமிஷனின் உறுப்பினராகவும், ஆலோசகராகவும் பணியாற்றினார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா என உலகின் பல நாடுகளுக்கும் சென்று சர்வ தேசக் கருத்தரங்குகளில் உரை நிகழ்த்தினார். ஐக்கியநாடுகள் சபையில் குழந்தைகளுக்கான சமச்சீர் சத்துணவின் தேவை குறித்து உரையாற்றி, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தார்.

இதழியல்

சிறார்களுக்களிடையே விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அறிவு வளர்வதற்காக ‘விஞ்ஞானச் சுடர்’ என்ற இதழைத் தொடங்கினார். அதில் பல கட்டுரைகளை எழுதியதுடன், அதன் ஆசிரியராகவும் செயல்பட்டார்.

ஜம்ன்லால் பஜாஜ் விருது, பிரதமர் வாஜ்பாயிடமிருந்து
பஜாஜ் விருது

விருதுகள்

  • டெல்லி சாஹித்ய சம்மேளனம் வழங்கிய ’விஞ்ஞான சரஸ்வதி' பட்டம்
  • தமிழக அரசின் சிறந்த ஆசிரியைக்கான விருது
  • மனித வள மேம்பாட்டுத்துறையின் தேசிய விருது
  • துர்காபாய் தேஷ்முக் விருது
  • பிர்லா விருது
  • மஹிளா சிரோன்மணி விருது
  • தாகூர் விருது
  • மால்கம் ஆதிசேஷய்யா விருது
  • ஜமன்லால் பஜாஜ் விருது
  • இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது
  • வியன்னாவில் நடந்த தேசிய மாநாட்டில் வழங்கபட்ட International Nutrition Scientist Award
  • கான்பூர் சந்திரசேகர ஆசாத் பல்கலைக்கழகம் வழங்கிய கௌரவ டாக்டர் பட்டம்
  • ஒரிகன் பல்கலைக்கழகம் வழங்கிய கௌரவ டாக்டர் பட்டம்
  • அயர்லாந்து பல்கலைக்கழகம் வழங்கிய கௌரவ டாக்டர் பட்டம்

மறைவு

ராஜம்மாள் தேவதாஸ், மார்ச் 17, 2002 அன்று, தமது 83-ம் வயதில், சிட்னியில், தன் மகன் இல்லத்தில் காலமானார்.

நினைவேந்தல்

கோவை அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகம் மற்றும் நியூட்ரிஷன் சொசைட்டி ஆஃப் இந்தியா இணைந்து ராஜம்மாள் தேவதாஸ் நினைவைப் போற்றும் வகையில், ராஜம்மாள் பி. தேவதாஸ் விருதினை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.

ராஜம்மாள் தேவதாஸ் நூல்கள்
ராஜம்மாள் தேவதாஸ் நூல்கள்

நூல்கள்

ராஜம்மாள் தேவதாஸ், 500-க்கு மேல் ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார். ஊட்டச்சத்து மற்றும் கல்வியியல் குறித்துப் பல கட்டுரைகளை, நூல்களை எழுதியுள்ளார். ‘நமது உணவைப் பற்றிய உண்மைகள்’, ’குடும்பக்கலை’ எனப் பலவிதமான தலைப்புகளில் 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். மேல்நிலைக் கல்விக்காக (+2) ‘ஹோம் சைன்ஸ்’ குறித்த பாடப் புத்தகங்களை எழுதியுள்ளார்.

குழந்தைகள் நலம் பற்றி இவர் எழுதியுள்ளவை 17 நூல்கள். டி. எஸ். அவினாசிலிங்கம் செட்டியாரின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படுத்தியுள்ளார்.

ஆங்கில நூல்கள்
  • Nutrition in TamilNadu
  • Methods of Teaching Home Science
  • The school lunch programme; organisation and outcomes
  • The Meaning of Home Science
  • A Text Book on Child Development
  • Directions of national development : T.S. Avinashilingam 70th year commemoration volume
  • Contributed articles on life and work of T.S. Avinashilingam
  • Ayya Dr. T.S. Avinashilingam : saga of dedicated life and service
  • Report of the Commission on Higher Education for Women
  • Management of development programmes for women and children
  • The semester pattern for the under-graduate courses : a Guide
  • Home Science: Higher Secondar First year Book
  • Home Science: Higher Secondary Second Year Book
  • Ethical values in a changing world : silver jubilee commemoration volume of Sri Avinashilingam Home Science College
ஆய்வுக் கட்டுரைகள்
  • Community and social service as curricular component in higher education
  • Planning and programming adult education : Report of the Workshop of Principals on the University's Participation in the National Adult Education Programme

உசாத்துணை


✅Finalised Page