under review

மாலதி மைத்திரி

From Tamil Wiki
மாலதி மைத்திரி

மாலதி மைத்திரி (பிறப்பு: 1968) தமிழில் எழுதி வரும் கவிஞர், கட்டுரையாளர், இதழாசிரியர், பதிப்பாளர். இடதுசாரி அரசியல்பார்வை கொண்ட களப்பணியாளர். பாண்டிச்சேரியில் பிறந்து வளர்ந்தவர். டெல்லியை மையமாக்கிச் செயல்படுகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

மாலதி மைத்திரி புதுச்சேரியில் 1968-ல் பிறந்தார். பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது ஏற்பட்ட தீவிபத்தால் பள்ளிக்கு செல்வது தடைபட்டது. இருபது வயதில் வீட்டைவிட்டு வெளியேறி தனியாக வாழ்ந்தார். வரலாற்றுப் பாடத்தை தொலைதூரக்கல்வியில் பயின்றார். மாலதி மைத்திரி எக்ஸ்போர்ட் கம்பெனி, ஸ்வீட் ஸ்டால், ஜவுளிக் கடை போன்ற பல இடங்களில் 1988 முதல் வேலை செய்தார். ஆரோவில்லில் நூல் கத்தரிக்கும் பெண்ணாகச் சேர்ந்து லெதர் ஜாக்கெட் டிசைன் செய்யும் பணியில் இருந்தார்.

அரசியல் வாழ்க்கை

ஈழத்தில் தீவிரமான அரசியல் போராட்டம் நடைபெற்ற 1983-ம் ஆண்டுகளில் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெற்ற பேரணிகளில் மாணவர் அணியில் மாலதி மைத்திரி பங்கெடுத்தார். இதன் மூலம் தி.க மாணவர்களின் பரிச்சயம் ஏற்பட்டது. தர்ணா, போராட்டம், உண்டி குலுக்குதல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டார். விளிம்பு நிலை மக்கள், புதுச்சேரியின் மீனவ சமுதாய மக்களுக்கான உரிமைக்காக களச்செயல்பாடுகள் செய்தார். கூடன்குள அணு ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் பங்கு பெற்றார். பெண்ணியம், தலித்தியம், மனித உரிமை சார்ந்த சமூக பிரச்சனைகளை தொடர்ந்து பேசியும், எழுதியும் வருகிறார்.

இதழியல்

மாலதி மைத்திரி

தி முருகன் (குங்குமம் இணை ஆசிரியர்), நாகு, சரவணன், அருணன், தி சிவக்குமார், ‘எதிரு’ சிவக்குமார் போன்ற நண்பர்களுடன் சேர்ந்து கையெழுத்துப் பிரதி துவங்கினார். அதில் சில ஆரம்ப கவிதைகளை எழுதினார். அணங்கு என்ற பெண்ணிய இலக்கிய இதழை நடத்தி வருகிறார்.

பதிப்பாளார்

மாலதி மைத்திரி 'அணங்கு' பதிப்பகத்தை நடத்தி வருகிறார். மீனா கந்தசாமியின் ஆங்கில நாவலை தமிழில் 'குறத்தியம்மன்' என்ற பெயரில் பிரேம் மொழிபெயர்ப்பில் வெளியிட்டார். ப.சிவகாமியின் 'உயிர்', 'இடதுகால் நுழைவு'; ஆனி ஜைதியின் (Annie Zaidi) 'குலாப்' ஆகிய நூல்களை வெளியிட்டார். ஆப்பிரிக்க கறுப்பின எழுத்தாளர் சிமாமந்தா எங்கோசி அடிச்சி (Chimamanda Ngozi Adichie ) எழுதிய 'ஊதாநிறச் செம்பருத்தி' (Purple Hibiscus) நாவலை பிரேமின் மொழிபெயர்ப்பில் வெளியிட்டார்ர். ஆஸ்திரேலிய ஆதிகுடிகளின் பெண்ணிய கவிதைகளை, 'பூலகைக் கற்றலும் கேட்டலும்' என்ற தலைப்பில் ஆழியாள் மொழிபெயர்ப்பில் வெளியிட்டார்.

இலக்கிய வாழ்க்கை

மாலதி மைத்திரி 1989 முதல் எழுதி வருகிறார். மாலதி மைத்திரியின் முதல் கவிதைத்தொகுப்பு ’சங்கராபரணி’ 2001-ல் வெளியானது. 'அணங்கு' எனும் இலக்கிய இதழை நடத்தி வருகிறார். 'பறத்தல் அதன் சுதந்திரம்', 'அணங்கு' ஆகிய இரு தொகுப்பு நூல்களை வெளியிட்டுள்ளார். 'Wild Girls, Wicked Words' என்ற கவிதைத்தொகுப்பு குட்டி ரேவதி, சல்மா, சுகிர்தராணி, மாலதி மைத்ரி ஆகியோர் இருமொழியில் எழுதி லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோம் முன்னுரையுடன் வெளிவந்தது.

நூல்கள்

கவிதைத் தொகுப்புகள்
  • சங்கராபரணி (2001)
  • நீரின்றி அமையாது உலகு (2003)
  • நீலி (2005)
  • எனது மதுக்குடுவை (2012)
  • முள்கம்பிகளால் கூடு பின்னும் பறவை (2017)
  • கடல் ஒரு நீலச்சொல் (2019)
  • பேய் மொழி (2022)
கட்டுரை
  • விடுதலையை எழுதுதல் (2004)
  • நம் தந்தையரைக் கொல்வதெப்படி (2008)
  • வெட்டவெளி சிறை (2014)
தொகுப்பு நூல்கள்
  • பறத்தல் அதன் சுதந்திரம் (2004)
  • அணங்கு (2005)
ஆங்கிலம்
  • The Race of Homes (veedukalal aana ienam)
  • Elephant Story (yaanai kathai)
பிற
  • அருட்பெருஞ்சோதி
  • நீரோடு போதல்
  • ஒளியை அறுவடை செய்யும் பெண்கள்
  • அறுந்த வால்
  • ஓணான் கொடி
  • வீடுகளால் ஆன இனம்
  • கலாச்சாரத்தின் கழைக்கூத்தும் தமிழர்களின் பொய்நடையும்
  • வளர்ச்சித் திட்டங்களா? வறியவர்களை கொல்லும் திட்டங்களா?
  • படுகளம்
  • வெளி
  • நிற் தகைக்குநர் யாரே?
  • பார்வை - மீள் பார்வை
  • கண்காணிப்பு - தணிக்கை - தண்டனை
  • இன்பம் ஆணுக்கு தண்டனை பெண்ணுக்கு
  • ரோஜாப்பழம்
  • நெடுஞ்சாலை நடனம்
  • ஞாயிற்றுக்கிழமைச் சந்தை
  • கோடைத்துயில்
  • மழைக்காலச் சிறுமி
  • சவப்பேழையின் அரசன்
  • கடலை அழைத்து வருதல்
  • அலைகள்
  • புலி
  • நிறம்மாறும் திரைச்சீலைகள்
  • கூடு
  • பந்துகளின் இருப்பிடம்
  • ஊஞ்சல்
  • விஸ்வரூபம்
  • கன்னியாகுமரி

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page