under review

மலேசிய ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி பேச்சியம்மன் ஆலயம்

From Tamil Wiki
WhatsApp Image 2021-08-17 at 16.04.24.jpg

ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி பேச்சியம்மன் ஆலயம் மலேசியாவின் கோலசிலாங்கூர் புக்கிட் தாலாங் தோட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியான பேச்சியம்மன் சயனக் கோலத்தில் காணப்படுகிறாள். இந்த ஆலயம் ஏறக்குறைய 120 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

ஆலய அமைவிடம்

மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தின் அமைந்துள்ள கோலசிலாங்கூரில் லாடாங் புக்கிட் தாலாங் எனும் தோட்டத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி பேச்சியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

வரலாறு

தமிழகத்தில் புகழ்பெற்ற சிவாலயமான திருச்செங்கோட்டுச் சிவன் ஆலயத்திலிருந்து 14 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் மணியனூர் எனும் கிராமத்திலிருந்து இந்த ஆலயத்தின் வரலாறு தொடங்குகிறது. இந்த ஊரில் கோயில் கொண்டிருக்கும் அங்காளம்மனை வழிவழியாகப் பல குடும்பங்கள் வழிபட்டு வந்தனர். அக்கோயிலுக்கு அவர்கள் பாதுகாவலர்களாகவும் விளங்கினர். பின்னர், மாரிமுத்து முதலியார் மற்றும் கருப்பாயி என்ற தம்பதியர் மணியனூரில் இருந்த அங்காளம்மன் ஆலயத்தைத் தங்கள் பாதுகாப்பில் வைத்திருந்தனர்.

அவர்கள் மலாயாவிற்கு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பிழைப்புத் தேடி வந்தபிறகு, தங்களின் குடிசைக்கு அருகில் அங்காளம்மனை வைத்து வழிபட்டனர். பின்னர், அங்காளம்மன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தனக்கு ஆலயம் எழுப்பும்படி அத்தம்பதியினருக்கு உத்தரவு இட்டுள்ளாள். தங்களின் குலதெய்வமான மணியனூர் அங்காளம்மன் ஆலயத்திலிருந்து உடன் கொண்டு வந்த சில புனிதமான பொருட்களைச் சக்தி வழிபாட்டின் முறைப்படி புதைத்து அங்காளம்மனுக்குப் புது ஆலயத்தை எழுப்பினர். கருப்பாயியின் மிகுந்த பக்தியின் காரணமாக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆலயத்தில் ஒரு பாம்புப் புற்றும் தோன்றியஹாகக் கூறப்படுகிறது. இதைத் தெய்வத்தின் இருப்பின் அடையாளமென்று கருப்பாயி எண்ணினார்.

அதன் பிறகு, மணியனூர் ஆலயத்தில் இருப்பது போன்ற பேச்சாயி தெய்வத்தினுடைய சிலையையும் இங்கே அவர் நிர்மாணித்தார். அதன் பிறகு இங்கு வரும் பக்தர்களுக்குத் திருமணம் கைகூடி வருதல், குழந்தை வரம் கிடைத்தல் போன்ற வேண்டுதல்கள் நிறைவேறியதைத் தொடர்ந்து சில பக்தர்கள் தொடர்ந்தாற்போல் ஆலயத்தில் பூசைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.

ஆலயப் பராமரிப்பு

கருப்பாயிக்குப் பிறகு அவருடைய மகனான ஆறுமுகம் ஆலயத்தின் பாதுகாவலாரக ஆனார். ஆறுமுகம் சொந்த ஊருக்குத் திரும்பி விட்டமையால், அவருடைய தாய்மாமாவான செல்லப்பன் ஆலயத்தைத் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டார். அவரே தன்னுடைய சொந்த சேமிப்பிலிருந்து அங்காளம்மனுக்கு ஒரு சிறு ஆலயத்தை நிர்மாணித்தார். அவருக்குப் பிறகு குருநாதன் என்பவர் ஆலயத்தைத் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு, தன்னுடைய தந்தையான ராமசாமியின் வழிகாட்டுதலோடு ஆலயத்தைப் பராமரித்து வருகிறார்.

பூசை முறை

மலேசிய ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி பேச்சியம்மன் ஆலயத்தில் காலை 9 மணி முதல் மாலை 6 வரை பூசைகள் நடக்கின்றன. அதற்குப்பிறகு, ஆலயத்தினுள் யாரையும் அனுமதிப்பது இல்லை. ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக சில பொருட்கள் நிறைந்த தட்டினை வாங்க வேண்டும். அம்மனிடத்தில் ஏற்றி வைக்க நெய்விளக்கு, சூடம் மற்றும் ஊதுபத்தி, அம்மன் மீது தூவ மஞ்சள், குங்குமம் போன்றவை அத்தட்டில் வைக்கப்பட்டுத் தரப்படுகின்றன. ஆதி காலத்திலிருந்து அம்மனுக்கு வேத மந்திர பூசை இல்லை என்பதால் இந்த ஆலயத்தில் வேத மந்திரம் ஒலிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு ஞாயிறும் அமாவாசையன்றும் சிறப்புப் பூசை நடைபெறுகிறது.

இந்த ஆலயத்தின் பூசைமுறைகள் ஏனைய ஆலயங்களின் பூசை முறைகளிலிருந்து வேறுபட்டுள்ளன. இதற்கு இந்த ஆலயம் மணியனூரில் உள்ள ஆலயத்தின் பூசை முறைகளைப் பின்பற்றுவதே காரணமாகும். அவற்றுள் பேச்சாயி தெய்வத்தின் அருளைப் பெறுவதற்காக அதன் சிலைமீது மஞ்சள் குங்குமத்தைத் தூவும் வழக்கம் குறிப்பிடத்தக்கது.

ஆலயத்திலுள்ள தெய்வங்கள்

பேச்சாயி
அங்காள 5.png

ஆலயத்தின் முதன்மைத் தெய்வமாக வானை நோக்கி படுத்த கோலத்தில் கிடக்கும் பேச்சாயி அம்மனே விளங்குகிறாள். இவள் தனக்குக் கூரை வேண்டாமென்று தானே கேட்டுக் கொண்டதாக ஆலய நிர்வாகத்தினர் கூறுகின்றனர். தன்மீது மழையும் வெயிலும் விழ வேண்டும் என்பது அவளுடைய விருப்பமாக இருந்துள்ளது. அதற்கு சான்றாக, அவளுக்கு மேல் பல முறை போடப்பட்ட கூரைகள் இருந்த இடம் தெரியாமல் காணாமல்போன சம்பவங்களைக் குறிப்பிடுகின்றனர். இவளுக்குக் கோயில் எடுத்த எல்லா முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்துள்ளன. பக்தர்கள் இவள் மீது மஞ்சளையும் குங்குமத்தையும் கலந்து தூவி தங்களுடைய வேண்டுதலை முன் வைக்கின்றனர். குறிப்பாக, குழந்தை வரத்தினை வேண்டுகின்றனர். குழந்தை வரம் கிடைப்பதற்கென்றே இவளுக்குச் சிறப்புப் பூசைகள் செய்யப்படுகின்றன.

சுதையால் உருவாக்கப்பட்டிருக்கும் இவள் உருளை உருளையான வடிவத்தில் செய்யப்பட்டிருக்கிறாள். இரண்டு கைகள் மட்டுமே இவளுக்கு இருக்கின்றன. தலைக்கு நேர் உச்சியில் ஒற்றை நாகம் குடைப்பிடித்துள்ளது. நாக்கை வெளியே நீட்டியப்படி உருட்டிய கண்களோடு உக்ர தேவியாக விளங்குகிறாள். சுயம்பு மூர்த்தியான இவள் மீது மழையும் வெயிலும் படுவதால் பாளம் பாளமாக வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இவளுக்கு முன்பு சூலமும் வேலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவளுக்கு விலங்குகளைப் பலியிட்டு அவற்றின் தலைகளை இவளின் கால்மாட்டில் வைக்கின்றனர். இவளுக்குப் பன்றி, ஆடு, சேவல் போன்றவற்றைப் பலி கொடுக்கின்றனர்.

அங்காளம்மன்
அங்காள 2.png

பேச்சாயி அம்மனுக்கு அடுத்து வழிபடப்பெறும் முக்கியத் தெய்வமாக அங்காளம்மன் விளங்குகிறாள். இவளின் பெயராலேயே ஆலயம் தொன்று தொட்டு இயங்கி வருகிறது. இவளுக்குத் தனியாக பூசைகள் செய்யப்படுகின்றன. சைவப் படையலே இவளுக்குப் போடப்படுகிறது. சுதையினால் முக்கோண வடிவத்தில் இவளின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. வெறும் முகச்சிலையை மட்டுமே வைத்துப் பூசை நடத்துகின்றனர். அம்மனின் கண்களில் கண்மலர் சாற்றப்பட்டுள்ளது.

முனீஸ்வரர்

பேச்சாயி அம்மனுக்கு இடது புறத்தில் முனீஸ்வரர் அமர்ந்துள்ளார். வெறும் முகச்சிலை மட்டுமே உள்ளது. தனியாக ஆலயம் ஒன்றும் இவருக்காக எழுப்பப்பட்டுள்ளது. பேச்சாயிக்குக் காவலாக இவர் அமர்ந்துள்ளார்.

ஆதிபராசக்தி
அங்காள 4.png

இங்குள்ள ஆதிபராசக்தி வரம் தரும் தெய்வமென அறியப்படுகிறாள். ஒரு கையை அருள் முத்திரையோடும் (அபயவரதம்), மற்றொரு கையைத் தொடை மீதும் வைத்தபடி காட்சியளிக்கிறாள்.

சிவன் / விநாயகர்

சிவனும் விநாயகரும் அங்காளம்மனுக்கு அருகில் சிறு கருங்கல் சிலைகளாக நிறுவப்பட்டுள்ளனர். சிவன் லிங்க வடிவில் உள்ளார். இவர்களுக்கு நித்திய பூசை நடக்கிறது.

காப்பு மரம்

ஆதிபராசக்தி சன்னதிக்கு அருகில் காப்பு மரங்கள் உள்ளன. மக்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேற சிவப்பு மற்றும் மஞ்சள் துணிகளை இந்த மரங்களில் கட்டுகின்றனர். குழந்தை வரம் வேண்டி தொட்டில்களும் கட்டப்படுகின்றன. மரங்களுக்குக் கீழேயும் அருகிலேயும் மனித உருவப் பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன.

திருவிழா

மலேசிய ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி பேச்சியம்மன் ஆலயத்தில் மாசித் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மார்ச் மாதம் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமை திருவிழா கொண்டாடப்படுகிறது.

நாட்டார் கதை

மலேசிய ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி பேச்சியம்மன் ஆலயத்தைப் பற்றிய ஒட்டி ஒரு நாட்டார் கதை நிலவுகிறது. ஒரு பெண்ணைப் பாலியல் வல்லுறவு செய்ய நான்கு ஆடவர்கள் துரத்திச் சென்றபோது அவர்களிடமிருந்து தப்பிக்க அப்பெண் ஜீவசமாதி ஆனதாகவும். பின்னர், அவள் காவல் தெய்வமாக மாறிவிட்டதாகவும், தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளைத் தீர்ப்பதாகவும் செவிவழி கதை உலவுகிறது.

மக்கள் நம்பிக்கை

ஆலயத்தின் திரிவிழாவுக்காக திருக்காப்பு இட்ட பிறகு அங்கு அம்மன் சூட்சுமமாக நடமாடுவதாக நம்பப்படுகிறது. அவளின் சலங்கை ஒலியைப் பலர் கேட்டதாகவும், ஒரு குழந்தையைக் கண்டதாகவும் கூறுகின்றனர். அங்காளம்மன் குழந்தை வடிவினள் என்றும் அவள் கோபம் கொள்ளும் போதே அங்காளம்மனாக மாறுகிறாள் என்று ஆலயத்திலுள்ள அறிவிப்பு வாசகம் தெரிவிக்கிறது.

மேற்கோள்


✅Finalised Page