under review

பெராவன்

From Tamil Wiki
பெராவன் இனக்குழு இளைஞன்

பெராவன் (Berawan) சரவாக்கில் வாழும் ஒராங் உலு என்னும் இனக்குழுவின் சிறுபான்மையினரில் பெராவன் பழங்குடியும் ஒன்றாகும். இவர்கள், மிரி, லோகன் மற்றும் உலு பாரம் பகுதியில் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். சரவாக் மாநிலத்தில் ஏறக்குறைய இரண்டாயிரம் பெராவன் இன மக்கள் வசித்து வருகின்றனர்.

இனப்பரப்பு

பெராவன் மக்கள் நான்கு சமூகங்களாக பிரிந்து வாழ்கின்றனர். அவை, ‘லாங் டெராவான்’ (Long Terawan), ‘பத்து பேலா’ (Batu Belah), ‘லாங் தேரு’ (Long Teru) மற்றும் ‘லாங் ஜெகன்’ (Long Jegan) ஆகிய சமூகங்கள் ஆகும். முதல் இரண்டு சமூகத்தினர் ‘டுடோ’ நதி (Tutoh river) அமைப்பில் தங்கள் குடியேற்றங்களைக் கொண்டுள்ளன. அடுத்த இரண்டு சமூக மக்கள் ‘டின்ஜர்’ நதி (Tinjar river) அமைப்பில் வாழ்ந்து வருகின்றனர். டுடோ மற்றும் திஞ்சார் இரண்டும் வடக்கு சரவாக்கில் உள்ள பாரம் ஆற்றின் முக்கிய துணை நதிகள் ஆகும்.

மொழி

பெராவன் இன மூதாதை

ஆஸ்திரேனேசியன் மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளில் பெராவன் மொழியும் ஒன்று. பெராவன் மொழி லோங் ஜெகான், Long Jegan (LJG), பத்து பேலா Batu Belah (BB), லோங் தெரு Long Teru (LTU) and லோங் தெராவன் Long Terawan (LTN) என நான்கு முதன்மை வட்டார வழக்குகளாகப் பேசப்படுகிறது. பெராங்கான் மொழிக்கான பொதுவான ஒலிப்பு முறையும் எழுத்துருக்களையும் கொண்டு வரும் முயற்சிகள் 2018-ம் ஆண்டு தொடங்கியது. பெராவன் மொழி பேசப்படும் வட்டார அடிப்படையில் வட சரவாக் மொழியாக வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. பெராவன் மொழி பேசப்படும் வட்டாரஙள் அடிப்படையில் ‘லகிபுட்’ (Lakiput), ‘நரோம்’ (Narom), ‘லெலாக்’ (Lelak), ‘டாலி’ (Dali), ‘மிரி தெரான் பஞ்சாங்’ (Miri teran panjang), ‘பெலாய்ட்’ (Belait), ‘துத்தோங்’ (Tutong) என ஏழு வட்டார வழக்குகளாகப் பேசப்படுகிறது. பெராவன் மொழி மலாய் மொழியுடன் பொது ஒலிப்பு முறை, சொற்கள் ஆகியவற்றால் நெருங்கிய தொடர்புடைய மொழியாகக் கருதப்படுகிறது.

தொழில்

பெராவன் மக்கள் குடியிருப்புப்பகுதி
பெராவன் இன மூதாட்டி

பெராவன் மக்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். இவர்கள் தங்களுக்கு தேவையான பொருளைத் தேவையான அளவில் பயிரிட்டு அறுவடை செய்வதே வழக்கம். கூடுதலான தேவை இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்கள் அதிகம் பயிரிடுவார்கள். சதுப்பு நிலம் மற்றும் மலைப்பிரதேசங்களில் நெல் பயிரிடும் வழக்கம் இருந்தாலும் கூட பெரும்பாலான பெராவன் மக்கள் மலைப்பகுதிகளில் பயிரிடவே விரும்புகின்றனர். நெல் சாகுபடியைத் தவிர்த்து மரவள்ளிகிழங்கு, ‘சேகோ’ (சவ்வரிசி) போன்றவைகளையும் பயிரிடுவது உண்டு.

பெராவன் மக்கள் குடியிருப்புப்பகுதி

சமயம்

பெராவன் இன மக்கள் பாகனிய வழிப்பாட்டுச் சடங்குகளைக் கொண்டவர்கள். 17-ம் நூற்றாண்டில் சரவாக் மாநிலத்தில் பரவத்தொடங்கிய கிருஸ்துவப் போதனைகளை ஏற்றுக் கொண்டு பெராவன் இன மக்கள் பலரும் கிருஸ்துவச் சமயத்தைத் தழுவினர். மறைதிரு பாப் இன்னசன்ட் xi கீழ் போர்னியோ தீவுகளுக்குக் கிருஸ்துவச் சமய ஊழியம் செய்ய மிஷினரிகள் அனுப்பப்பட்டனர். 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவிலிருந்து சீர்திருத்தக் கிருஸ்துவ மிஷினரிகள் சமய ஊழியம் செய்ய அனுப்பப்பட்டனர். இவர்களே பின்னர் போர்னியோ இவெங்கிலிங்கல் மிஷின் என அழைக்கப்பட்டனர். அவர்கள் தங்களின் குறிப்புகளில் பெராவன் இன மக்களை ‘inferior Kenyah’ என அழைத்தனர். இச்சபையினரின் ஊழியத்தால் பெரும்பான்மையான பெராவன் இன மக்கள் கிருஸ்துச் சமயத்தைத் தழுவினர். பெராவன் இன மக்களில் சிலர் சரவாக்கில் இருக்கும் இசுலாமியச் சமய மக்களைத் கலப்புத் திருமணம் செய்து இசுலாமியச் சமயத்தையும் தழுவினார்கள்.

உணவுமுறை

சகோ மற்றும் மரவள்ளிக் கிழங்குடன் அரிசியை சேர்த்து சமைத்து சாப்பிடுவது பெராவான் மக்களின் பிரதான உணவின் ஒரு பகுதியாக இருந்தது. அத்துடன், காட்டில் வேட்டையாடப்பட்ட விலங்குகளின் இறைச்சியை சேர்த்து சாப்பிடுவதும் வழக்கமான ஒன்று. குறிப்பாக, பெராவன் மக்கள் காட்டுப்பன்றியை விரும்பி சாப்பிடுவார்கள். மேலும், ஆற்றிலிருந்து பிடிக்கப்படும் மீன்கள் மற்றும் காட்டில் இருந்து பெறப்படும் காய்கறிகளையும் அவர்கள் தங்கள் உணவில் சேர்த்து கொள்வார்கள்.

வேட்டை

பெராவன் மக்கள் வேட்டையாடுவதில் திறவையானவர்கள். இவர்கள் நஞ்சு பதித்த ஈட்டி அல்லது ஊதுகுழல்களைக் கொண்டு வேட்டையாடும் முறையையே பயன்படுத்துகிறார்கள். சிலர் மட்டும் ஜப்பானிய ஆக்கிரமிப்பின் முடிவில் தங்களைத் தற்காத்துக் கொள்ள பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து பெற்ற துப்பாக்கிகளைக் கொண்டு வேட்டையாடுகிறார்கள். வேட்டையாடப்பட்ட விலங்குகளைக் கண்காணிக்க அவர்கள் வழக்கமாக வேட்டை நாய்களுடன் காட்டுக்குள் செல்கிறார்கள். பெராவன் மக்கள் காட்டுப்பன்றிகளை விரும்பி உண்ணும் காரணத்தால் அதிகமாக காட்டுப்பன்றிகளையே வேட்டையாடுகிறார்கள். சில சமயம், பன்றிகள் தென்படாவிட்டால் குரங்குகளை வேட்டையாடுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

திருமணம்

திருமண சீர் பொருட்கள்

பெராவன் இன மக்களின் திருமணச் சடங்கின் போது மணமக்கள் பெராவன் இனப் பாரம்பரிய ஆடைகளை அணிந்திருப்பர். திருமணத்தின் முதன்மைச் சடங்காக பூரேக் பஞ்சி எனப்படும் சடங்கு நடைபெறும். அச்சடங்கின்போது மணமகளின் குடும்பத்தார் தருகின்ற செப்புத்தாளக்கருவியான கோங் (gong tawak) மீது மணமக்கள் அமர்ந்திருப்பர். மணமக்களின் பெற்றோர் மணமக்கள் எட்டு ஆண்குழந்தைகள், பெண்குழந்தைகள் என பதினாறு குழந்தைகள் பெற்று வாழ வழிவழியாக பெராவன் இனக்குழுக்குள் பயின்றுவரப்படும் செய்யுள் ஒன்றைக் கூறி வாழ்த்துவர். அதன் பின்னர், உறவினர்களும் நண்பர்களும் சேர்ந்து மது அருந்துவர். தொடர்ந்து மணமக்களுக்கான பரிசுகள் வழங்கப்படும். திருமண நிகழ்ச்சியின் இறுதியாக பெராவன் இன மக்களின் பாரம்பரிய நடனமான ‘ங்காஜாட்’ நடனம் ஆடப்படும்.

இறப்புச் சடங்குகள்

பெராவன் இன மக்களின் இறப்புச்சடங்கு ‘நுலாங்’ (Nulang) எனப்படும் சடங்கிலிருந்து தொடங்கப்படுகிறது. எலும்புகள் என்ற பொருளைக் குறிக்கும் ‘துலாங்’ (Tulang) எனும் மலாய் மொழிச் சொல்லிலிருந்து இச்சொல் மருவி வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இறந்த ஆளின் சமூகத்தகுதிக்கேற்ப உடல் பதப்படுத்தப்பட்டு வைக்கப்படுகிறது. சமூகத்தகுதியில் உயர்ந்த ஆட்களின் உடல் நீண்ட நாட்களுக்குக் கிடத்தப்படும். இறந்த ஆளின் உடலிலிருந்து தோல் வழன்று அகலும் வரையில் வீட்டில் உடல் கிடத்தி வைக்கப்பட்டிருக்கும். தோல் அகன்று வந்ததும் ஒரே மரத்தால் செய்யப்படும் சவப்பெட்டியில் உடல் கிடத்தி வைக்கப்படும். சவப்பெட்டியின் உட்பகுதியின் அடிப்புறத்தில் இருக்கும் மூங்கில்களின் இடைவெளியின் வாயிலாக இறந்த உடலிலிருந்து அழுகும் பகுதிகள் மண்ணில் கலந்துவிடுகின்றன. உடல் பகுதிகள் முழுமையாக அகன்றப் பின் எஞ்சியிருக்கும் எலும்புகளைச் சேகரித்து சிறிய சவப்பெட்டியில் கிடத்தி வைப்பர். கிருஸ்துவச் சமயத்தின் பரவலால் இச்சடங்கு குறைந்துவிட்டது,

உசாத்துணை


✅Finalised Page