under review

பள்ளி

From Tamil Wiki
விளாப்பாக்கம் பெண் பள்ளி, தமிழகத்தின் மிகப்பெரிய சமணப்பள்ளி
வேடல் பள்ளி
திருநறுங்கொண்டை குகைப்பள்ளி

பள்ளி :சமணர்களின் மதக்கல்வி மையம். சமண ஆலயமும், சமண மெய்யாசிரியர்கள் தங்கும் இடமும் அங்கே அமைந்திருக்கும். சமண மதத்தைச் சேர்ந்தவர்கள் அங்கே தங்கி மதக்கல்வியும் தவப்பயிற்சியும் பெறுவார்கள். சமணர்கள் அல்லாதவர்கள் வந்து கல்விகற்றுச் செல்வார்கள். சமணர்களின் பள்ளி என்னும் அமைப்பு பொ.மு 3-ம் நூற்றாண்டு முதல் ஆயிரம் ஆண்டுக்காலம் இந்தியாவில் கல்வியைப் பரப்புவதில் பெரும்பங்கு வகித்தது. இன்று கல்விக்கூடத்திற்கு பள்ளிக்கூடம் என்னும் பெயர் சமணர்களின் பள்ளி என்னும் சொல்லில் இருந்து பெறப்பட்டதுதான்.

வேர்ச்சொல்

பள்ளை என்றால் தமிழில் விலா. விலா படியும்படிப் படுத்தல் என்பது பள்ளி கொள்ளுதல் என சொல்லப்பட்டது. (பள்ளி யானையின் உயிர்த்து: குறுந்தொகை 142, கபிலர்) படுக்கையறை பள்ளியறை எனப்பட்டது. சமணத்துறவிகள் வெறுந்தரையிலேயே படுக்கவேண்டும். மழைக்காலத்தில் அவர்கள் குகைகளில் தங்குவார்கள். சமணத்துறவிகள் தங்கும் இயற்கையான குகைகளில் அவர்கள் படுப்பதற்காக கற்பாறையில் படுக்கைகள் வெட்டிக்கொடுக்கும் வழக்கம் இருந்தது. அரசர்களும் செல்வந்தர்களும் இதை ஓர் அறக்கொடையாக செய்தனர். இந்த குகைகள் பள்ளிக்குகைகள் எனப்பட்டன. நாளடைவில் பள்ளிகள் என வழங்கின.

சொல்லின் வளர்ச்சி

பொ.யு 2-ம் நூற்றாண்டில் தவத்தோர் வாழும் இடமே பள்ளி எனப்பட்டது . (மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்ததும் :மணிமேகலை 18-8) பள்ளி என்பது மிகத்தூய்மையானது. அங்கே சமணமதத்தின் தூய்மை நெறிமுறைகள் பேணப்பட்டன. சமணப் பள்ளிக்குகைகளை ஒட்டியே கால்கை கழுவும் சுனைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த நெறிகள் பின்னர் இஸ்லாமிய மதத்திலும் உறுதியாக பேணப்படுகின்றன. சான்றோரின் சபையில் பேதை புகுவது கழுவாத காலுடன் தவத்தோர் கல்விகற்பிக்கும் பள்ளிக்குள் நுழைந்து அமர்வதுபோன்றது என குறள் குறிப்பிடுகிறது.(கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல்-குறள் 840 )

பின்னாளில் இஸ்லாமிய மதம் இந்தியாவுக்கு வந்தபோது அனைவரும் கூடி நூல்பயிலும் இடம் என்னும் பொருளில் மசூதிகள் பள்ளிவாசல்கள் என அழைக்கப்பட்டன. கிறிஸ்தவ தேவாலயங்களும் பள்ளிகள் எனப்பட்டன. ஆசிரியர் தன் வீட்டில் கற்பிக்கும் கல்விக்கூடங்கள் திண்ணைப்பள்ளிகள் எனப்பட்டன. நவீனப் பொதுக்கல்வி அறிமுகம் செய்யப்பட்டபோது அக்கல்விக்கூடங்களுக்கும் பள்ளிக்கூடம், பள்ளி என்னும் பெயர்கள் அமைந்தன

பள்ளி என்னும் சொல் மலையாளத்திலும் தமிழிலுள்ள அதே பொருளில் கல்விக்கூடத்தைச் சுட்ட பயன்படுத்தப்படுகிறது. இஸ்லாமிய வழிபாட்டிடங்களும், கிறிஸ்தவ வழிபாட்டிடங்களும் பள்ளிகள் எனப்படுகின்றன. தெலுங்கில் பள்ளி என்றும், கன்னடத்தில் ஹள்ளி என்றும் இச்சொல் புழக்கத்தில் உள்ளது. தமிழ்ப்பேச்சுவழக்கில் அள்ளி என்றும் சொல்லப்படுவதுண்டு.

பள்ளிகள் அமைந்த இடங்களுக்கும் பள்ளிகள் என்று பெயர் அமைந்தது. தென்னிந்தியா முழுக்க பள்ளி என பெயர்கொண்ட ஊர்கள் உள்ளன. உதாரணம், திரிச்சிராப்பள்ளி தமிழகத்திலுள்ள பெரிய நகர்.

கல்விப்பணிகள்

சமணர்கள் ஐந்துவகை கொடைகளை மதப்பணியாகச் செய்தனர். அன்னம் அளித்தல் , கல்வி அளித்தல், அடைக்கலம் அளித்தல், மருத்துவ உதவி அளித்தல், அருளுரை அளித்தல் . அவற்றில் முதன்மையாக கல்விப் பணியை அவர்கள் முன்னெடுத்தனர். சமணப் பள்ளிகளில் இலக்கணம், அறவியல், மருத்துவம் ஆகியவை கற்பிக்கப்பட்டன. தமிழகத்தில் பொ.யு 2 முதல் பொ.யு 7-ம் நூற்றாண்டு வரை சமண மதம் மையமதமாகச் செல்வாக்குடன் இருந்தது. அக்காலகட்டத்தில் சமணர்கள் தங்கள் கல்விக்கொடைக்காக இலக்கணநூல்களையும், அறநூல்களையும், மருத்துவ நூல்களையும் உருவாக்கினர். முந்தைய இலக்கிய ஆக்கங்களை தொகைநூல்களாகத் தொகுத்தனர். சங்க இலக்கிய நூல்கள் சமணர்களால் சேர்க்கப்பட்டு தொகுக்கப்பட்டவைதான் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நன்னூல், பன்னிரு பாட்டியல்நூல்களில் பழங்காலத்தவை, யாப்பெருங்கலம், யாப்பெருங்கலக் காரிகை, நேமிநாதம் போன்றவை சமணர்களால் உருவாக்கப்பட்ட இலக்கண நூல்கள். பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், அருங்கலச்செப்பு போன்றவை சமணர்களால் உருவாக்கப்பட்ட அறநூல்கள். இவை அனைத்துமே சமணர்களின் கல்விக்கூடங்களுக்கான பாடநூல்களாக அமைந்தவை.

தனித்தன்மை

பள்ளி என்னும் சொல்லை கல்விக்கூடம், மதக்கல்விநிலையம் என்னும் பொருட்களில் பயன்படுத்தலாம் என்றாலும் சமணப் பள்ளி என்பது இவற்றிலிருந்து பல வேறுபாடுகள் கொண்டது. அது கல்வியும், ஆன்மிகப்பயிற்சியும் நிகழும் இடம். ஆசிரியருடன் மாணவர்கள் ஒரே இடத்தில் வாழும் இடமும்கூட.

பார்க்க

உசாத்துணை


✅Finalised Page