under review

நா.கோவிந்தசாமி

From Tamil Wiki
நா.கோவிந்தசாமி
இடமிருந்து இராம.கண்ணபிரான், தி.ஜானகிராமன், கோவிந்தசாமியின் மனைவி உஷா, நா.கோவிந்தசாமி
அகிலனுடன்நா.கோவிந்தசாமி
இளமைக்கால நண்பர்களுடன்

நா. கோவிந்தசாமி ( ஏப்ரல் 18, 1946 – மே 26, 1999) சிங்கப்பூரின் முன்னோடித் தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர், இலக்கியச் செயல்பாட்டாளார், கல்வியாளர். கணினித் தமிழுக்கு சீரிய பங்களிப்பை நல்கியவர். சிங்கப்பூர்-மலேசியத் தமிழ் இலக்கியத்துறையில் திறனாய்வுத் துறைக்கு ஏற்றம் தந்தவர்.

பிறப்பு, கல்வி

சிங்கப்பூரில் ஏப்ரல் 18, 1946-ல் பிறந்த கோவிந்தசாமியின் தந்தை நாராயணசாமி. தாயார் மாரியம்மாள். தமக்கை அழகம்மாள். மிகச் சிறு வயதில் தாயின் இழப்பு, இளம் வயதில் தந்தையின் மரணம் என வலிகளும் வேதனைகளும் நிறைந்தது அவரின் இளமைக் காலம். உடல் உழைப்பாளியான தந்தை, மனைவி இறந்ததும் மகனின் கல்வி தொடரவேண்டும் என்பதற்காக தமிழகத்தில் மணமுடித்திருந்த மகளிடம் அனுப்பிவைத்தார். அங்கு அவருக்கு ஏற்பட்ட துன்பங்களால் தொடக்கப்பள்ளியோடு அவரது பள்ளிப்படிப்பு தடைப்பட்டது. பின்னர் சிங்கப்பூர் திரும்பியதும் இரவுப்பள்ளியில் உயர்கல்விப் படிப்பை முடித்தார். ஆசிரியர் பயிற்சி முடித்து தமிழாசிரியர் ஆனபின்னர் வேலை பார்த்துக்கொண்டே தமிழில் பட்டக்கல்வியை முடித்தார்.

தனிவாழ்க்கை

கோவிந்தசாமி 1978--ம் ஆண்டில் உஷாவை மணந்தார். செந்தில்குமரன், நக்கீரன் ஆகிய இரு மகன்கள்.

கல்விப்பணி

அலெக்சாண்டிரா ஹில் தொடக்கப்பள்ளித் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கிய நா.கோவிந்தசாமி, 33 வயதில் தேசியக் கல்விக் கழகத்தில் விரிவுரையாளரானார். மொழியின் மீதும் பள்ளிகளில் அது கற்பிக்கப்படும் முறையின் மீதும் அவர் அதிக அக்கறை செலுத்தினார். தம்மிடம் பயின்ற மாணவ-ஆசிரியர்களிடம் மொழிப் புலமையையும் இலக்கிய அறிவையும் வலியுறுத்தியதோடு, கற்பித்தலியலில் மாற்றங்களைக் கொண்டு வந்தார். சிங்கப்பூர்த் தேசியக் கல்விக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றியபோது, பயிற்சி ஆசிரியர்களுக்கு நவீன தமிழ் இலக்கியத்தை அறிமுகப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியவர்.

இலக்கிய வாழ்க்கை

1965--ம் ஆண்டில் எழுதத் தொடங்கிய நா.கோவிந்தசாமி முதலில் பத்திரிகைகளில் சிறுகதைகள் எழுதினார். பின்னர் வானொலி, தொலைக்காட்சியிலும் நாடகங்கள் எழுதினார்.

சிறுகதைகள்

1965 முதல் 1968 இறுதிவரை நா.கோவிந்தசாமி 14 சிறுகதைகளை எழுதினார். 1968--ல் ‘தமிழ் முரசு நாளிதழ் நடத்திய சிங்கை-மலேசியச் சிறுகதைப் போட்டியில் ‘காட்டாற்றங்கரையினிலே’ என்னும் அவரது சிறுகதை முதல் பரிசு வென்றது. மீண்டும் 1976-லிருந்து பத்திரிகைகளில் கதைகள் எழுதி வந்தார். இவரது தொடக்க காலக் கதைகள் பெரும்பாலும் காதலைப் பேசுபொருளாகக் கொண்டவை. இரண்டாம் காலப் பிரிவில் சமூகம், தனிமனிதச் சிக்கல்கள் பற்றிய கதைகளை எழுதினார். அவர் எழுதிய சிறுகதைகள் சிங்கப்பூரில் பல தொகுப்புகளிலும்இடம்பெற்றன.

1990-ல் ‘உள்ளொளியைத் தேடி’ என்னும் சிறுகதைத் தொகுதியும், ‘வேள்வி’ என்னும் குறுநாவலும் வெளியீடு கண்டன. சிறுகதைகளும் குறுநாவலும் இணைந்த ‘தேடி’ என்னும் நூல் 1991--ல் வெளியிடப்பட்டது. இந்த நூல் 1992-ல் சிங்கப்பூர்த் தேசிய புத்தக மேம்பாட்டு மன்றத்தின் விருதை வென்றது. 1994-ல் தாய்லாந்து அரசு வழங்கும் தென்கிழக்காசிய எழுத்தாளர் விருது நா.கோவிந்தசாமிக்கு வழங்கப்பட்டது.

வானொலி

நா.கோவிந்தசாமி 1968 முதல் வானொலி நாடகத் துறையில் பணியாற்றினார். இவர் எழுதிய 'அன்புக்கப்பால்'…., 'அலைகள் ஓய்வதில்லை' போன்ற வானொலி தொடர் நாடகங்கள் ஏராள வாசகர்களைப் பெற்று, கோவிந்தசாமியைப் பிரபலமாக்கின.

இலக்கிய ஆய்வு
சக ஆசிரியர்களுடன் நா.கோவிந்தசாமி

1989--ம் ஆண்டு மொரிசியஷில் நடைபெற்ற ஏழாம் உலகத் தமிழ் மாநாட்டில் ‘முதல் தமிழ்ச் சிறுகதை’ என்ற தம் ஆய்வுக்கட்டுரை மூலம் 1888--ல் சிங்கப்பூரில் மகுதூம் சாயபு எழுதிய ‘வினோத சம்பாஷணை’ என்ற உரையாடல் பாணிக் கதையே முதல் தமிழ் சிறுகதை என வாதிட்டார். எனினும் அது ஆய்வுபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றும் 1924-அம் ஆண்டு ‘பொது ஜனமித்திரன்’ ஏட்டில் வெளிவந்த ‘பாவத்தின் சம்பளம் மரணம்’ என்னும் கதையே சிங்கபூரில் வெளிவந்த முதல் சிறுகதை என்றும் மூத்த செய்தியாளரும் ஆய்வாளருமான திரு பாலபாஸ்கரன் கூறுகிறார்.

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் மலாயாத் தமிழ் இலக்கியத்தின் கூறு என்பதில் நா.கோவுக்கு உடன்பாடு -ல்லை. தொடக்கம் முதல் சிங்கப்பூர், தனித்த நிலையில் தனிநாடாகத் தமிழ் இலக்கியத்தை தோற்றுவித்தது என்று கருதினார். சிங்கப்பூர் அ.சி. சுப்பையாதான் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்திற்குப் பெரியாருக்கு வழிகாட்டியாக விளங்கியவர் என்பதை அவர் ‘குடியரசு’ இதழில் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி எழுதிய கட்டுரைகளுடன் நிரூபித்தார்.

சிங்கப்பூர் எழுத்தாளர் வாரத்தில் பேராசிரியர் சிவத்தம்பியுடன்

எழுத்து, ஆய்வுகளுடன் இலக்கிய விமர்சனத்தையும் அறிமுகத்தையும் இருவேறு நிலைகளில் நா.கோ முன்னெடுத்தார்.முனைவர் அ.வீரமணியின் தலைமையின்கீழ் செயல்பட்ட சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத் தமிழப் பேரவையின் இரண்டாவது ஆய்வரங்கத்தில் (1981) ‘சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வளர்ச்சி: ஒரு சமூகவியற் கண்ணோட்டம்’ என்ற தலைப்பில் கட்டுரை படைத்த நா.கோவிந்தசாமி சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்திற்கு 100 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாறு உள்ளதென நிறுவினார். ‘சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகள் ஓர் அறிமுகம்’ (சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகள் 1981), ‘சிங்கப்பூரில் சிறுகதை வளர்ச்சி’ ஆகிய இரு வேறு கட்டுரைகளையும் அவர் பின்னர் எழுதினார்.

அமைப்புச் செயல்பாடுகள்

சிங்கப்பூர் எழுத்தாளர் வாரத்தில் சுந்தர ராமசாமி, ந.முத்துசாமி, இராம.கண்ணபிரான், நா.கோவிந்தசாமி, ரெ.கார்த்திகேசு (1991)

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் 1975--ம் ஆண்டு தொடங்கப்பட்டபோது அதன் உறுப்பினராகவும் செயலாளராகவும் இருந்து பல பணிகளை ஆற்றியுள்ளார். சிங்கப்பூர் எழுத்தாளர் வாரம் 1988-ல் தொடங்கியது முதல் 1999--ம் ஆண்டுவரை எழுத்தாளர் வார செயற்குழு உறுப்பினராக செயல்பட்டு, தமிழ் எழுத்தாளர்கள் பலரை சிங்கப்பூர்த் தமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்தினார். இவரின் முயற்சியால் 1975-ல் எழுத்தாளர் அகிலன் சிங்கப்பூருக்கு அழைக்கப்பட்டார். அகிலனின் வருகை சிங்கப்பூருக்கும் தமிழகத்துக்கும் இடையே ஓர் இலக்கியப் பாலம் அமையக் காரணமாக இருந்தது.

சிறுகதைகளுக்கென 1976-ல் ‘சிங்கப்பூர் இலக்கியக் களம்’ என்னும் ஒரு திறனாய்வு அமைப்பை நா.கோவிந்தசாமி நிறுவினார். ந.பழநிவேலு, சே.வெ.சண்முகம், ஏ.பி.சண்முகம், பெ.த.இராசன், எஸ்.எஸ்.சர்மா, மா. இளங்கண்ணன் ,இராம கண்ணபிரான், பொன் சுந்தரராசு, இளங்கோவன், உதுமான் கனி ஆகிய பத்துப் படைப்பாளிகளைக் கொண்ட அந்த அமைப்பு நான்கு ஆண்டுகளே செயல்பட்டாலும் மலேசிய- சிங்கப்பூர் எழுத்தாளர்களிடையே ஓர் உறவுப்-பாலமாக அமைந்து அவர்களின் படைப்புகளுக்குத் தமிழக அளவிலும் உரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.

1995 பிப்ரவரியில் சிங்கப்பூரில் தமிழ்வெப் தொடங்கப்பட்டபோது இணையத்தில் இடம்பிடித்த முதல் இந்திய மொழி தமிழ் என்ற பெருமையைப் பெற்றது. இந்த திட்டம் சிங்கப்பூர் குழுவால் முன்னெடுக்கப்பட்டது. தமிழ்-ஆங்கிலம் இருமொழி இணையத் தகவல் வளக் காப்பகத் திட்டமானது, தேசிய பல்கலைக்கழக கணினி மையத்தின் இணைய ஆய்வு, மேம்பாட்டுப் பிரிவின் (IRDU) தலைவராக இருந்த டாக்டர் டான் டின் வீ (இடது), தேசிய கல்விக் கழக விரிவுரையாளராக இருந்த திரு நா கோவிந்தசாமி (நடு), இணைய ஆய்வு, மேம்பாட்டுப் பிரிவைச் சேர்ந்த இணையத் தொழில்நுட்பர் லியோங் கோக் யோங் (வலது) ஆகியோரால் ஒருங்கிணைக்கப்பட்டது.

இலக்கியக் களம் உறுப்பினர்கள் இரு மாதங்களுக்கு ஒருமுறை கூடி மலேசிய, சிங்கப்பூர் பத்திரிகைளில் வெளிவந்த கதைகளை விவாதித்து தேர்வுபெற்ற சிறுகதைக்கு $30 பரிசு கொடுக்கும் வழக்கம் இருந்தது. இந்த அமைப்பின் ஏற்பாட்டில் 1977--ம் ஆண்டின் சிறந்த சிங்கப்பூர்-மலேசியச் சிறுகதைகள்’ தொகுப்பு 1981-ல் வெளிவந்தது. ஆண்டுதோறும் இந்தத் தொகுப்பைக் கொண்டுவரத் திட்டமிட்டிருந்தனர். எனினும், அவர்களது ஆசை நிறைவேறவில்லை. இலக்கியக் களத்தை நான்காண்டுகளுக்கு மேலாக அவர்களால் தொடர இயலவில்லை. காத்திரமான முன்னுரை, எழுத்தாளர் குறிப்புகள், விமர்சனங்களுடன், ஒரு சீரான முறையில் பதிப்பிக்கப்பட்ட சிங்கப்பூர் கதைகளின் தொகுப்புகளாக நா.கோவின் முயற்சியில் வெளிவந்த ‘இலக்கியக் களம் தொகுப்பும்’, 1992-ல் வெளிவந்த ‘சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகள்’ தொகுப்பும் இன்றும் கவனிக்கப்படுபவையாக உள்ளன.

நா.கோவிந்தசாமி 1990--ம் ஆண்டில் தொடங்கிய ஆர்க்கிட் பப்ளிஷிங் ஹவுஸ் என்ற பதிப்பகம் மூத்த எழுத்தாளர் பி. கிருஷ்ணனின் ‘புதுமைதாசன் கதைகள்’ சிறுகதை நூலையும், மா.இளங்கண்ணனின் ‘உணர்வுகளின் கோலங்கள்’ நாவலையும் வெளியிட்டது. இவ்விரண்டு நூல்களும் சிங்கப்பூர்த் தேசிய புத்தக மேம்பாட்டு மன்ற விருதுகளை வென்றன. பின்னர் தமிழ்நாட்டில் ரகு என்னும் பதிப்பாசிரியருடன் இணைந்து தாம் தொடங்கிய ‘கணியன்’ பதிப்பகம் மூலம் புதுமைதாசனின் புகழ்மிக்க நாடகமான ‘அடுக்கு வீட்டு அண்ணாசாமி’ என்ற நூலை வெளியிட்டார்.

1990 முதல் 1999 வரை சிங்கப்பூர்த் தேசிய கலை மன்றத்தில் நாடகத் தணிக்கைக்குழு உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.

இணைத் தொகுப்பாசிரியராய் இருந்தும் ஐந்து ஆங்கில நூல்களையும் ஒரு தமிழ் நூலையும் நா.கோவிந்தசாமி வெளியிட்டிருக்கிறார். 1990-ல் பேராசிரியர் எட்வின் தம்புவைத் தலைமைத் தொகுப்பாசிரியராய்க் கொண்ட ‘THE FICTION OF SINGAPORE’ என்ற சிறுகதை நூலின் மூன்று தொகுப்புகள், 1991-ல் திரு.ராபர்ட் இயோவைத் தலைமைத் தொகுப்பாசிரியராகக் கொண்ட MODERN ASEAN PLAYS: SINGAPORE என்ற நாடகத் தொகுப்பு நூல் ஆகிய தொகுப்புகளின் தமிழ்ப் பிரிவுக்குத் தொகுப்பாசிரியர்களாகப் பணியாற்றியவர்களுடன் நா.கோவிந்தசாமியும் ஒருவர். 1992-ல் இளங்கோவனைத் தலைமைத் தொகுப்பாசிரியராய்க் கொண்ட ‘சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகள்’ என்ற தமிழ் நூலையும், 1995--ல் பேராசிரியர் எட்வின் தம்புவுடன் இணைந்து, JOURNEYS: WORDS, HOME AND NATION என்ற கவிதைத் தொகுப்பு நூலையும் வெளியிட்டிருக்கிறார்.

சிங்கப்பூர் முன்னோடி இலக்கியமான 'சிங்கை நகர் அந்தாதி', 'சித்திர கவிகள்' என்னும் நூல்களை இலண்டன் நூலகத்திலிருந்து வருவித்துச் சிங்கப்பூர் தெண்டாயுதபாணி கோயில் குடமுழுக்கு விழா மலரில் (1983) வெளியிட நா.கோ உதவியுள்ளார்.

இணையத்தமிழ்

அப்போது கல்வி அமைச்சராக இருந்த டியோ சீ ஹியனிடம் கணினியில் தமிழ் குறி்தது விளக்குகிறார் நா.கோவிந்தசாமி (1997)

சிங்கப்பூரில் தமிழ்க் கல்வியிலும் இலக்கியத்திலும் ஆற்றிய அளவுக்கு இணையத்தில் தமிழை வளர்ப்பதற்கான தொடக்ககால முயற்சிகளை பேராசிரியர் டான் டின் வீ போன்றோருடன் இணைந்து தீவிரமாக மேற்கொண்டவர் நா.கோவிந்தசாமி. 1990-களின் தொடக்கத்தில் கணினித் தொழில்நுட்பத்தில் ஈடுபாடுகொள்ளத் தொடங்கிய நா.கோவிந்தசாமி விசைப்பலகை உருவாக்கம், இணையத்தில் தமிழைப் பதிவேற்றுவது, சிங்கப்பூரில் தமிழ் இணைய மாநாடு என்று தொடர்ந்து செயல்பட்டார்.

தமிழ் எழுத்துகளின் பயன்பாடு, இலக்கணம் குறித்து நீண்ட கால ஆய்வுகளை மேற்கொண்டு 1989--ம் ஆண்டு 'ஐஇ' விசைப்பலகை (IE Key Board) என்னும் புதிய தட்டச்சு வடிவமைப்பை உருவாக்கினார். இன்று சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் இந்த விசைப்பலகை பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

சிங்கப்பூரின் ஆய்வாளர் சமூகத்திற்கான முதல் இணையக் கட்டமைப்பான டெக் நெட்டை (TechNet) 1990களில் உருவாக்கிய பேராசிரியர் டான் டின் வீ 1994-ல் சீன குழுவுடன் இணைந்து சீனத்துக்கான இணையக் கட்டமைப்பை உருவாக்கினார். அந்நேரத்தில், தமிழும் இணையத்தில் இடம்பெற வேண்டும் என்ற அவாவில் பேராசிரியர் டான் டின் வீ, லியோங் கோக் யாவ் ஆகியோருடன் இணைந்து இணையத்தில் தமிழைக் கொண்டுவருவதற்கான முயற்சிகசை நா.கோவிந்தசாமி மேற்கொண்டார்.

அவரின் முயற்சியால், அக்டோபர் 195-ல் அன்றைய சிங்கப்பூர் அதிபர் அமரர் ஓங் டோங் சியோங் தொடங்கி வைத்த Journey: Words, Home and Nation - Anthology of Singapore Poetry (1984-1995) என்ற நான்கு தேசிய மொழிக் கவிதைகளுக்கான வலையகத்தில் முதன் முதலில் தமிழ் இணையத்தில் அடி எடுத்து வைத்தது.

மாநாட்டு நிகழ்ச்சியில் எஸ்.ஈஸ்வரன், அமரர் மா.ராமையா, முனைவர் ஆர்.சிவகுமாரன், நா.கோவிந்தசாமி

தொடர்ந்து கணியன்.காம் என்ற பெயரில் இணையப்பக்கத்தைத் தொடங்கி தமிழுலகச் செய்திகளை இடம் பெறச் செய்தார். இதைச் செயல்படுத்த தமிழகத்தில் ஓர் அலுவலகத்தை வைத்திருந்தார். இந்தியா டூடே இதழில் பணியாற்றிய செ.ச. செந்தில்நாதன் அந்த இணையப் பக்கத்தின் பொறுப்பாளராகச் செயல்பட்டார். கணியன் என்ற எழுத்துருவையும் இவர் உருவாக்கினார். தேசிய பல்கலைக்கழகக் கணினித் துறையுடன் இணைந்து 'கணியன்' தமிழ் மென்பொருளை உருவாக்கினார். மாணவர்களுக்காக 'செந்தமிழ்' எனும் குறுவட்டுகளையும் உருவாக்கினார். இவை சிங்கப்பூர் பள்ளிகளில் நீண்ட காலம் பயன்படுத்தப்பட்டன.

1997--ம் ஆண்டு முதல் தமிழ் இணைய மாநாடான தமிழ்நெட் 97 மாநாட்டை (tamilnet'97 - International symphosium for tamil information processing and resources on the internet) சிங்கப்பூரில் நடத்தினார். அந்த மாநாட்டில் உலகத் தமிழ் இணைய செயல்பாடுகள் அறிய வந்தன. பல மென்பொருள் உருவாக்கங்களும் தெரிய வந்தன. பல நாடுகளிலும் பல்வேறு பணிகளுக்குக் கணினி வழித் தமிழைப் பயன்படுத்தி வரும் பலரும் ஒருங்கிணைய அம்மாநாடு வழிவகுத்தது.

பிப்ரவரி, 1999-ல் சென்னையில் இரண்டாவது தமிழ் இணைய மாநாடு நடைபெற்றது. பிரமாண்டமான முறையில் தமிழக அரசு நடத்திய அம்மாநாட்டில் தமிழக முதல்வர் கருணாநிதி நா.கோவிந்தசாமி (சிங்கப்பூர் பிரதிநிதி)யை கெளரவித்தார். அந்த மாநாட்டில் சிங்கப்பூரின் முக்கியப் பிரதிநிதியாகப் பங்கேற்ற நா.கோவிந்தசாமி, சிங்கப்பூரில் தமிழ் கணினித்துறை வளர்ச்சி குறித்து உரையாற்றினார்.

நா. கோவிந்தசாமியின் மறைவிற்கு பிறகு 2000--ம் ஆண்டு சிங்கப்பூரில் திரு அருண் மகிழ்நன் தலைமையில் நடைபெற்ற மூன்றாம் தமிழ் இணைய மாநாட்டில் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) தொடங்கப்பட்டது. இம்மன்றம் ஆண்டுதோறும் தமிழ் இணைய மாநாட்டை நடத்தி வருகிறது.

நா.கோவிந்தசாமி

இறுதிக்காலம்

உயர் ரத்த அழுத்தம், சீரற்ற இதயத்துடிப்பு பிரச்சினைகள் இருந்தபோதும் ஓய்வின்றி கடுமையாக உழைத்துக்கொண்டிருந்தவர் நா.கோவிந்தசாமி. இணையத்தில் தமிழ் தட்டச்சுக்கான கணியன் மென்பொருள், தமிழ்ப் பாடத் துணைக்கருவிகள், இலக்கியப் படைப்பாக்கம், கல்வித்துறைப் பணிகள் என்று இறுதிநாள் வரையிலும் பரபரப்பாகவும் துடிப்போடும் செயல்பட்டுக்கொண்டிருந்தார். பணி காரணமாக ஜோகூர் சென்றிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு மே 26, 1999-ல் தமது 53-வது வயதில் மரணமடைந்தார். 'அன்புக்கப்பால்…'., 'அலைகள் ஓய்வதில்லை' ஆகிய இரு நாடக நூல்களையும் 'மனப்போர்கள்' எனும் சிறுகதைத் தொகுப்பையும் ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பையும் வெளியிடத் திட்டமிட்டிருந்தார்.

தாய்லாந்தில் தென்கிழக்காசிய விருது வாங்கியபோது
மற்ற நாட்டு எழுத்தாளர்களுடன்

பொறுப்புகள்

  • 1976-1979 அமைப்பாளர், சிங்கப்பூர் 'இலக்கியக் களம்'
  • சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் உறுப்பினர் 1975 முதல்
  • சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் 1977-1979 செயலாளர்
  • சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்1981-1987 செயலவை உறுப்பினர்
  • சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்1987-1991 செயலாளர்
  • சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்1991-1992 துணைத் தலைவர்
  • 1990-1993 நூல் பதிப்பாளர், ஆர்க்கிட் பதிப்பகம், சிங்கப்பூர்
  • 1998-1999 இணைப் பதிப்பாளர், கணியன் பதிப்பகம், சென்னை
  • 1993-1999 உறுப்பினர், நாடகத் தணிக்கைக் குழு, சிங்கப்பூர்
  • 1993-1999 உறுப்பினர், இலக்கிய ஆலோசனைக் குழு, சிங்கப்பூர்
  • 1988-1999 ஏற்பாட்டுக்குழு உறுப்பினர், 'எழுத்தாளர் வாரம்', சிங்கப்பூர் தேசிய கலைகள் மன்றம்
  • 1990,1994,1996,1998 நடுவர் - கவிதை, புனைகதை நூல்கள் சிங்கப்பூர்த் தேசிய புத்தக மேம்பாட்டு மன்றம்

விருதுகள்

  • 1968 தமிழர் திருநாளையொட்டி தமிழ் முரசு நடத்திய சிங்கப்பூர்- மலேசிய சிறுகதைப் போட்டியில் காட்டாற்றங்கரையினிலே என்ற இவரது சிறுகதை முதல் பரிசை வென்றது.
  • 1992 ‘தேடி’ நூல் தேசிய புத்தக மேம்பாட்டு மன்றத்தின் National Book Development Council’s award (Highly commended) விருதை வென்றது.
  • 1994 தென்கிழக்காசிய விருது S.E.A. Write Award
  • 1998 ஏழாவது இந்தியப் பண்பாட்டு விழாவின் புத்தாக்க விருதினை (7th Indian Cultural Festival Innovation Award) தமிழ் வெப் திட்டத்தினை உருவாக்கியதற்காக தனது குழுவினரான டான் டின் வீ (Tan Tin Wee), லியாங் காக் யாங் (Leong Kok Yong) ஆகியோரோடு இணைந்து பெற்றார்,
தேசிய நூலக வாரியம் வெளியிட்ட நா.கோவிந்தசாமி மலர்

நா.கோவிந்தசாமி பற்றி நூல்களும் ஆய்வுகளும்

  • 2004 நா.கோவிந்தசாமியின் கல்வியியல் ஆய்வுகள் - முனைவர் சீதாலட்சுமி
  • 2010 ‘நா கோவிந்தசாமி எனும் படைப்பாளி’ என்ற தலைப்பில் சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம் 15.11.2009ல் ஆய்வரங்கை நடத்தி, அதில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளை தொகுப்பாக வெளியிட்டது (நா.கோவிந்தசாமி எனும் படைப்பாளி, வாழ்க்கை வரலாறு).

இலக்கிய இடம்

படைப்பிலக்கியத்தில் கறார்த் தன்மையும் நேர்மையும் கொண்டிருந்த நா.கோவிந்தசாமி இலக்கியத்தரத்தைக் கட்டிக்காப்பதில் சமரசம் செய்துகொள்ளாதவர். அதனால், விருதுகளும் இலக்கிய பிரதிநிதிப்பும் உயரிய உயரிய தரத்தில் இருப்பதை அவர் காலத்தில் உறுதிசெய்தவர். சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்தை நவீனத்துவம் நோக்கி எடுத்துச் சென்றவர்.

இலக்கிய ஆர்வலராகவும் விரிவுரையாளராகவும் அமைச்சு சார்ந்த குழுக்களில் அங்கம் வகித்ததன் மூலமாகவும் நல்ல எழுத்துகளை அடையாளம் கண்டு வளர்ப்பதிலும் நா.கோவிந்தசாமி முக்கிய பங்காற்றியுள்ளார். இளம் தலைமுறை எழுத்தாளர்களை ஊக்குவித்து வளர்த்தவர். திறனாய்வுத் துறைக்கு வலுச்சேர்த்தார்.

அமரர் திரு.நா.கோவிந்தசாமி செய்த இலக்கியப் பங்களிப்புகள் இவ்வட்டாரத்து இலக்கிய உலகிலும், தமிழக இலக்கியச் சூழலிலும் ஆக்ககரமான பல தாக்கங்களை அவர் வாழ்ந்த காலத்தும் ஏற்படுத்தின; அவர் மறைவுக்குப் பின்னும் ஏற்படுத்தி வருகின்றன என்று மூத்த எழுத்தாளர் இராம கண்ணபிரான் கூறியுள்ளார்.

நா.கோவிந்தசாமியின் 20வது ஆண்டு நினைவு 26.5.2019 அன்று நினைவுகூரப்பட்டபோது, சிராங்கூன் டைம்ஸ் வெளியிட்ட சிறப்பிதழ்

நா.கோவிந்தசாமி ஒரு முக்கியமான இலக்கியமையமாகச் சிங்கப்பூரில் செயல்பட்டிருக்கிறார். அவருடனான விவாதங்கள் வழியாக இங்கு நவீன இலக்கியத்தின் சில எழுத்தாளர்கள் உருவாகி வந்திருக்கிறார்கள். அவரை ஓர் இலக்கிய இயக்கமாகச் சொல்லமுடியும், விரைவிலேயே நின்றுவிட்ட ஓர் இயக்கமாக என்று எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிட்டுள்ளார்.

எதையும் ஆய்வுக் கண்கொண்டு அணுகும் மனப்பான்மை அவரிடம் இயற்கையாகவே இருந்தது. அதற்கான முயற்சியும் உழைப்பும் அறிவும் திறமையும் உள்ளவராக அவர் விளங்கினார். இந்த மனப்பான்மை கணினித் துறையில் பல புதுமைகளைச் செய்ய அவருக்கு வழிவகுத்தது என்று கணினித் தொழில்நுட்ப வல்லுநரும் செல்லியல், முரசு அஞ்சல் மென்பொருள்களை உருவாக்கியவருமான முத்து நெடுமாறன் குறிப்பிட்டுள்ளார்.

நூல்கள்

வெளியீடுகள்
  • 1990 உள்ளொளியைத் தேடி (சிறுகதைத் தொகுப்பு)
  • 1990 வேள்வி (குறுநாவல்)
  • 1991 தேடி (சிறுகதை, குறுநாவல் தொகுப்பு, Orchid Publishing House, Singapore)
தொகுப்பாசிரியராகப் பங்காற்றிய நூல்கள்
  • 1981 சிங்கப்பூர் இலக்கியக் களம்: 1977-ம் ஆண்டின் சிறந்த சிங்கப்பூர், மலேசியச் சிறுகதைகள் (தமிழ்ப் புத்தகாலயம் வெளியீடு)
  • 1990 இணை ஆசிரியர் (தமிழ்க் கதைகள்), Fiction of Singapore: Anthology of ASEAN Literatures (3 Volumes), (Singapore: Published under the sponsorship of the ASEAN Committee on Culture and Information)
20 ஆண்டு நினைவுகூரல் (26.5.2019) நிகழ்ச்சியில் சிறப்பிதழை வெளியிட்ட திரு முஸ்தபா, நூலைப் பெற்றுக்கொண்ட திருவாட்டி உஷா கோவிந்தசாமி, கோவிந்தசாமியின் மகன் நக்கீரன்
  • 1991 இணைத் தொகுப்பாசிரியர் - Modern ASEAN plays : Singapore (ASEAN Committee on Culture and Information, Singapore :[Ministry of Information and the Arts], 1991).
  • 1992 இணைத் தொகுப்பாசிரியர் - சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகள்
  • 1995 இணை ஆசிரியர் Journeys: words, home and nation, Anthology of Singapore Poetry (1984-1995) (Singapore: UniPress, 1995)

உசாத்துணை


✅Finalised Page