under review

சே வோங் (தீபகற்ப மலேசியாவின் பழங்குடி)

From Tamil Wiki
நன்றி: Shahir Ramlan

சே வோங் மலேசியாவின் பழங்குடியினர். இந்த இனக்குழு தீபகற்ப மலேசியாவின் செனோய் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

வாழிடம்

சே வோங் பழங்குடியினர், ராவூப், தெமெர்லோ, குவாலா காண்டாவில் வசிக்கின்றனர். சே வோங் பழங்குடியினர் ஆரம்பத்தில் திதி தோட்டத்தில் குவாலா பஹாஙில் வசித்தனர். ராவா போருக்குப் பின் தெமெர்லோ, பஹாங்கிற்குக் குடி பெயர்ந்தனர். 2000-ல் மலேசிய அரசாங்கம் சே வோங் பழங்குடியினருக்கு வீடுகள் கட்டி தந்தது. பெரும்பான்மையான சே வோங் பழங்குடியினர் பஹாங் மாநில அரசு உருவாக்கிக்கொடுத்த வீடுகளில் வசிக்கின்றனர்.

பின்னணி

வாய்மொழி வரலாற்றின் மூலம் சே வோங் பழங்குடியினருக்கு இரண்டு தொன்மங்கள் உள்ளன. முதலாவது, சே வோங் பழங்குடி தீபகற்ப மலேசியாவின் பூர்வகுடி என்பதாகும். சே வோங் பழங்குடியினர் தங்களை தீபகற்ப மலேசியாவின் முதல் குடி என நம்புகின்றனர். தீபகற்ப மலேசியாவில் அவர்களுக்குச் சுயமான அரசாட்சி இருந்ததாக நம்புகின்றனர். அந்நம்பிக்கையின் அடிப்படையில் பினாங் ராஜ (Raja Pinang). இவர்களின் முதலாம் அரசர் ஆவார். இரண்டாவது, சே வோங் சயாம் ராஜ வம்சத்தின் வம்சாவளி என்பதாகும். சே வோங்கின் அரசர் சயாம் நாட்டிலிருந்து மலாயாவிற்குக் குடி புகுந்ததாகவும் நம்புகின்றனர். சயாம் அரசரின் பெயர் ராஜா சே (Raja Che).

தொழில்

சே வோங் பழங்குடியினர் வன விலங்குகளை வேட்டையாடுவதும், வன வளங்களைச் சேகரிப்பதும் தொழிலென கொண்டவர்கள்.

மொழி

சே வோங் மக்களின் மொழி மொன் - மேர் (Moh Khmer) மொழி குடும்பத்தைச் சார்ந்ததாகும். சே வோங் பழங்குடியினர் இரு வட்டார வழக்குகளைப் பேசுகின்றனர். அதில் ஒன்று சே வோங் மொழி. இரண்டாவது சந்தை மொழி. இரண்டாம் வட்டார வழக்கு செமெலாய் பழங்குடியரின் மொழிக்கு ஒத்திருக்கும்.

சமூக படிநிலை

சே வோங் பழங்குடியினர் தங்களின் சமூக தலைவரைத் தொக் பாத்தின் (Tok Batin) என அழைக்கின்றனர். சே வோங் சமூகத்தில் மத தலைவரென எவரும் இல்லை. ஆவிகளுடன் பேசும் சடங்குகளில் யார் வேண்டுமானாலும் மந்திரங்கள் படிக்கலாம்.

நம்பிக்கைகள்

இலை மனிதர்கள்

சே வோங் பழங்குடியினர் பூக்களிலும் மரங்களிலும் ‘இலை மனிதர்கள்’ வாழ்வதாக நம்புகின்றனர். இலை மனிதர்கள் பூக்களை, மரங்களைப் போல உடுத்தியுள்ளதாக நம்புகின்றனர்.

அனைத்திலும் ஆன்மா

சே வோங் மக்கள் தங்களைப் போலவே மலைகள், ஆறுகள், மரங்களென அனைத்திலும் ஆன்மா இருப்பதாக கருதுகின்றனர். எனவே, இயற்கைக்குப் பங்கம் விளைக்கும் செயல்களைச் செய்தால் நோய் வருமென நம்புகின்றனர்.

ஆவிகளுடன் பேசுதல்

சே வோங் பழங்குடியினர் ஆவிகளின் துணையுடன் இறந்தவர்களுடன் பேசும் சடங்குகளை நிகழ்த்துவர். இந்த சடங்கு நோய்களைக் குணப்படுத்தும் நோக்கமுடையது.

குடும்பம்

ஓக்.jpg

சே வோங் குடும்பங்களில் ஆண் உழைப்பைக் கோரும் வேலைகளைச் செய்வர். சே வோங் பெண்கள் உயிரியல் பணியான பிள்ளை பெற்றலும் பாலூட்டுதலையும் செய்வர். சே வோங் ஆண்களும் பெண்களும் பொருளீட்டுவதற்காக வேட்டையாடுதல் தோட்ட வேலை, மீன் பிடித்தல் என செய்வர். சே வோங் குடும்பங்களில் பாலின சமத்துவமெனும் கருத்துப்படிவம் இல்லை. குடும்பங்களில் ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம்.

பிள்ளை வளர்ப்பு

சே வோங் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு ஏழாம் வயதானதும் தொடர்ந்த கவனமும் பாதுகாப்பையும் அளிக்கின்றனர், வயதடைந்த பிள்ளைகளை சம பாலின நண்பர்களுடன் பழக அனுமதியளிக்கின்றனர். பிள்ளைகளின் இளமை பருவத்தில் கட்டாயப்படுத்தி எதையும் கற்றுக்கொடுப்பதில்லை. சே வோங் பெற்றோர்கள் பிள்ளைகளே அனுபவத்தினால் அனைத்தையும் கற்றுக்கொள்வர் என நம்புகின்றனர்.

வரலாற்று நிகழ்வு

இரண்டாம் உலகப் போரின் போது, சே வோங் மக்கள் கம்யூனிஸ்ட் குழுக்களால் க்ரோ பகுதியில் (Kawasan Kroh) படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆய்வுகள்

Signe Howell [நன்றி: www.sv.uio.no

சிக்னி ஹாவல் (Signe Lise Howell) எனும் நோர்வே மானுடவியலாளர் சே வோங் பழங்குயினருடன் தங்கி கள ஆராய்சிகளை மேற்கொண்டார். இவர் சே வோங் பழங்குடியினரைப் பற்றி மூன்று புத்தகங்கள் எழுதியுள்ளார். இவர் சே வோங் பழங்குடியினரைக் கலங்கமும் சண்டைகளும் விரும்பாத குணமுடையவர்களாக மதிப்பிடுகிறார்.

புத்தகங்கள்

  • Women and Development (Signe Howell, 1983)
  • Society and Cosmos: Chewong of Peninsular Malaysia (Signe Howell, 1984)
  • “To Be Angry Is Not To Be Human, But To Be Fearful Is”: Chewong Concepts of Human Nature” (Howell, 1989)
  • Che Wong – Khazanah Yang Menghilang (Jamal Rizal Razali, Anis Nabilla Ahmad, Jamilah Bebe Mohamad, Hasmadi Hassan, 2021)

உசாத்துணை


✅Finalised Page