under review

செமோக் பேரி (தீபகற்ப மலேசியாவின் பழங்குடி)

From Tamil Wiki
நன்றி: www.thestar.com.my

செமோக் பேரி இனக்குழு தீபகற்ப மலேசியாவின் செனோய் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். செமோக் பேரியின் சிறுபான்மையினர் கிறிஸ்துவ மதத்தினர் ஆவர்.

பெயர் விளக்கம்

செமோக் பேரி பழங்குடியினர் தங்களைச் ‘செமோக்’ என அழைத்துக்கொள்வர். ‘செமோக்’ என்றால் இவர்களின் மொழியில் 'மக்கள்' என்று பொருள்.

வாழிடம்

தாசிக் கென்யீர், திரங்கானுவில் செமோக் பேரி பழங்குடியினர். நன்றி: www.majalahsains.com

செமோக் பேரி பஹாங், திரங்கானு ஆகிய பகுதிகளில் வாழ்கின்றனர். அவற்றில் ஜெராந்துட், குவாந்தான், மாரான், ஹுலு திரங்கானு, கெமாமான் மாவட்டங்கள் அடங்கும். பெரும்பான்மையான செமோக் பேரி பழங்குடியினர் தெம்பெலேங் ஆற்றிலும் மற்ற பஹாங் ஆறுகளில் அருகிலும் வாழ்கின்றனர்.

மொழி

செமாக் பேரி பழங்குடியினரின் மொழியைச் ‘செமாக் பேரி’ மொழி என்று அழைப்பர். ஆஸ்திரோ-ஆசிய வகையான இம்மொழி தீபகற்ப மலேசியாவில் பஹாங் பூர்வ குடிகளால் பேசப்பட்ட’செமெலாய்’ மொழி வகையைச் சேர்ந்ததாகும்.

தொழில்

செமோக் பேரி காடுகளை நம்பி வாழ்பவர்கள். செமோக் பேரி பழங்குடியினர் காட்டின் வளங்களைச் சேகரித்தும், மீன் பிடித்தும், வேட்டையாடியும் வாழ்கின்றனர். சிலர் மூங்கிலில் கைவினை பொருட்களைச் செய்வர்.

சமூக படிநிலை

நன்றி: www.majalahsains.com

செமோக் பேரி சமூகத்தில் கெலாமின் எனப்படும் குடும்ப அமைப்பு உள்ளது. கெலாமின் என்றால் 'குடும்பம்' எனப்பொருள்.

சமூக ஒழுங்கு

செமோக் பேரி சமூகத்தில் குற்றங்களைச் செய்பவர்க்கு தண்டனையளிக்கப்படும். குற்றங்களின் பட்டியலில் மாற்றான் மனைவியைச் சீண்டுதல், பெண் பிள்ளைகளைச் சீண்டுதல், திருடுதல், சண்டையிடுதல் அடங்கும். குற்றம் செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். செமோக் பேரி பழங்குடிக்கு ஒரு விலையும் மற்றவருக்கு அதைவிட இரட்டிப்பு விலையும் விதிக்கப்படும். ஆனால் கொலையாளிக்கு அபராதமில்லை. செமோக் பேரி சமூகத்தில் கொலைபுரிந்தவர்களைக் கொலை செய்வர்.

நம்பிக்கைகள்

செமோக் பேரி பழங்குடிகள் இயற்கை நிகழ்வுகளான இடி, மின்னல், கிரகணங்களைப் பார்த்து பயப்படுவர். செமோக் பேரி பழங்குடியினர் காடு முழுக்க ஆவிகளால் நிரம்பப்பட்டுள்ளதென நம்புகின்றனர். செமோக் பேரி பழங்குடியினரின் கனவும், சன்னத நிலையும் வன ஆவிகள் கட்டுப்படுத்தி மனிதனுக்கு ஆசியும் வழிகாட்டலையும் தருவதாக நம்புகின்றனர்.

செமாக் பேரி பழங்குடியினர் ‘நெநெக்’ (Nenek) என்றும் ‘தொக்’ (Tok) எனும் இரு நாகங்கள் இருக்கின்றன எனும் நம்பிக்கை உடையவர்கள். நெநெக் என்றால் பாட்டி என்றும் தொக் என்றால் தாத்தா என்றும் மலாய் மொழியில் பொருள்படும். இந்த இரு நாகங்களும் செமாக் பேரியின் நம்பிக்கையான பூமியின் பாதாளத்தில் இருப்பதாக நம்புகின்றனர். நெநெவும் தொக்வும் பூமியைச் சீராக வைத்துள்ளதாகவும் பேரிடர்களை வராமல தடுத்து வருவதாகவும் நம்புகின்றனர். செமோக் பேரி பழங்குடியினர் நெநெவும் தொக்வும் மனிதர்கள் தவறிழைத்தால் பேரிடர்களை நிகழ்த்தி மனிதர்களைக் கொல்ல உரிமையுடையவர்களென நம்புகின்றனர். நெநெவும் தொக்வும் போமோ எனும் மந்திரவாதியின் கண்களுக்கு மட்டுமே தெரிவர்.

செமோக் பேரி பழங்குடியினர் துவான் புத்தரி (Tuan Puteri) எனும் தேவதையை வணங்குவர். துவான் புத்தரிக்கு இறப்பு இல்லை. துவான் புத்தரிக்கு மரணத்தை வெல்லும் நெஞாவா டுலோ (Nyawa Duloh) எனும் உயிர் உள்ளது. செமோக் பேரி பழங்குடியினர் துவான் புத்தரிக்கு வெள்ளை இரத்தம் என்றும் அவர் மனிதரைவிட பெரும் சக்தியுடையவரென நம்புகின்றனர். இதனால், துவான் புத்தரியின் உதவி கேட்டு அவரைப் பீயேய் (Piyey) சடங்கில் வரவழைப்பர். செமோக் பேரி பழங்குடியினரின் நம்பிக்கைபடி, துவான் புத்தரி பூமியின் ஏழாம் நிலமான சொர்கலோகம் / மரிகாட் உலகத்தில் வாழ்வார். அதனிலிருந்து பூமிக்குக் கீழிறங்கினால், டஹ்லான் (Dahlan) மலையிலும் அயேர் (Air) மலையிலும் தங்குவார். போமோவின் கண்களுக்கு மட்டுமே துவான் புத்தரி தெரிவார்.

கிஜாய் மரம். அறிவியல் பெயர்: Leuconotis griffithii

செமோக் பேரி பழங்குடியினர் கிஜாய் மரத்தை எரித்தால் கரேயின் கோபத்தைக் குறைக்கலாம் என்று நம்புகின்றனர். செமோக் பேரி பழங்குடியினர், இந்தச் சடங்குகளைத் தொடர்து மேற்கொண்டால் அவர்களுக்கு அவர்களின் நம்பிக்கைகளுடன் இறுக்கமான உறவு இருக்குமென நம்புகின்றனர்.

செமோக் பேரி புராண கதைகள்

உலகம் உருவான கதை
கவாவுல் (Kawaul), Wood Sandpiper

செமோக் பேரியின் நம்பிக்கைபடி, அதெ (Ateh) எனும் உலகம் ஒரு பரந்த கடல். இந்த கடலை உருவாக்கியது கவாவுல் (Kawaul) எனும் பறவையும் வாத்தும் ஆகும். வாத்து அந்தக் கடலின் நீரை முழுக்க உறிஞ்சியது. கவாவுல் மிச்சமிருந்த சேற்றை உருண்டையாக்கி பூமியை உருவாக்கியது. பூமி உருவாகியதும், துஹான் (படைக்கும் கடவுள்) ஒரு ஆணையும் பெண்ணையும் படைத்தார். இருவரும் துஹானிடம் வேண்ட, துஹான் மரங்களைப் படைத்தார். அந்த ஆணும் பெண்ணும் மணந்து குழந்தைகளை உருவாக்கினர். அந்த ஜோடி மனிதர்கள் குழந்தைகள் உணவு உண்ண துஹானிடம் பழ மரங்களை வேண்டினர். ஆனால் துஹான் பழ மரங்களை உருவாக்க மனிதனிடம் ஒரு பணியைக் கொடுத்தார். துஹான் சொன்ன பணியானது ஒரு மனிதர் தனது தம்பியைச் சிறு பாகங்களாக வெட்டி தரையில் பரப்ப வேண்டும் என்பதாகும். பரப்பப்பட்ட நிலங்களில் பழ மரங்கள் முளைத்தன.

விலங்குகள் உருவான கதை

செமொக் பேரி பழங்குடியினர் அசாம் கெதும்பா (Asam Ketumba) / சாங் கிளெம்பாய் (Sang Kelembai) என்பவர்களை இறைவனின் தூதுவர்கள் என நம்புகின்றனர். இவர்கள் மனிதர்களைப் பாதுகாக்கும் கடமையுடையவர்கள். செமோக் பேரி அசாம் கெதும்பாவின், சாங் கிளெம்பாயின் சாபத்தால் குறிப்பிட்ட மக்கள் அனைவரும் மிருகமாகிவிட்டனர் என நம்புகின்றனர். செமோக் பேரி பழங்குடியினர், மனிதன், மரம், விலங்கு எனும் மூன்று படைப்பு வந்தவுடன் பூமி முழுமை பெற்றதாக எண்ணுகின்றனர்.

பூமியின் வடிவம்

செமோக் பேரி பழங்குடியினர் பூமி ஏழு நிலைகளையும் வானம் ஏழு நிலைகளையும் உடையது என நம்புகின்றனர். செமோக் மேரி பழங்குடி பூமிக்குப் பின் வானம் பதினான்கு நிலைகளைப் கொண்டது என நம்புகின்றனர்.

சடங்குகள்

செமோக் பேரியின் அனைத்து சடங்குகளிலும் போமோ கலந்து கொள்வார். போமோ செமோக் பேரியின் பழங்குடியினர் நம்பும் ‘கண்களுக்குத் தெரியாத’ அம்சங்களுக்கும், செமோக் பேரி பழங்குடியினருக்கும் இடைத்தரகராகச் செயல்படுவார்.

ஜாம்பி (Jampi)

செமோக் பேரி பழங்குடி ஜாம்பி சடங்கை பெரேஹ் (Bereh) தண்டனை பெற்றவருக்கு செய்வர். பெரேஹ் தண்டனை என்பது வேட்டையாடும் போது விசிலடிப்பவருக்கும் பாடுபவருக்கும், வேட்டையாடிய விலங்கின் இறைச்சியைக் காய்கறிகளுடன் சேர்த்து சமைக்கும் போது முடியைக் கட்டினவருக்கும் சீவினவருக்கும் விதிக்கப்படும்.

இரத்தம் கொடுக்கும் சடங்கு

செமோக் பேரி பழங்குடியினரில் ஒருவருக்குச் செலாவ் (Celau) தண்டனை விதிக்கப்பட்டால், அவர் இரத்தம் கொடுக்கும் சடங்கை மேற்கொள்வார். செமோக் பேரி சமூகத்தில் செலாவ் தண்டனை இயற்கையை அவமதிப்பவருக்கு விதிக்கப்படும். செமோக் பேரி நம்பும் இந்தப் பாவங்களிலிருந்து விடுபட குற்றவாளி இரத்தம் கொடுத்து மன்னிப்புக் கேட்பார்.

பியேய் (Piyey) சடங்கு

பியேய் சடங்கில் செமோக் பேரி பழங்குடியினர், துவான் புத்தரியை வரவழைத்து பாடி, அவரிடம் வழிகாட்டல்களைக் கேட்பர்.

உசாத்துணை


✅Finalised Page