under review

செமெலாய் (தீபகற்ப மலேசியாவின் பழங்குடி)

From Tamil Wiki
3178636089 e68c98ef5d c.jpg

செமெலாய் பழங்குடியினர் தீபகற்ப மலேசியாவின் மலாயு ப்ரோதோ குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

பெயர் விளக்கம்

செமெலாய் என்றால் நிலத்தின் மகன் என்று செமெலாய் மொழியில் பொருள்படும். இந்தப் பெயர் செமெலாய் பழங்குடியினர் சீனர்களுடன் பேச்சு வார்த்தை கொண்டதால் உருவாகியிருக்கலாமென ஆராய்ச்சியாளர்கள் R. Gianno (1997) மற்றும் N. Kruspe (1999) ஆகியோர் பதிவு செய்துள்ளனர்.

வாழிடம்

செமெலாய் பழங்குடியினர், பஹாங் நடுவே பெரா நதி, பெரா ஆறு, தெரியாங் ஆறு, பாடா சதுப்பு நிலங்களிலும் நெகிரி செம்பிலான்-பஹாங் விளிம்பின் செர்திங் ஆறு, லுய் ஆறு, உலு முவார் பகுதிகளில் வசிக்கின்றனர்.

மொழி

செமெலாய் மொழி ஓர் அஸ்லியன் மொழியாகும், (Aslian Language). செமெலாய் மொழி ஆஸ்தொரோ-ஆசிய (Austroasiatic) மொழி குடும்பத்தின், மொன்-க்மேர் (Mon Khmer) பிரிவைச் சேர்ந்தது. செமெலாய் மொழிக்கு வாய்மொழி ஆவணங்களைத் தவிர எழுத்து குறியீடோ, தொகுக்கப்பட்ட வரலாறோ கிடையாது.

தொழில்

செமெலாய் பழங்குடியினர் ஆரம்பத்தில் நெல் பயிரிடும் விவசாயிகளாகவும், வன கனிமங்களை வணிகம் செய்தும், மீன் பிடித்தலும், வேட்டையாடுதலும் செய்து வந்தனர். அரசாங்கத்தின் வழிகாட்டலால், செமெலாய் பழங்குடியினர் பின் ரப்பர் தோட்டங்களிலும் பனைத் தோட்டங்களிலும் கூலி வேலை செய்தனர். செமலாய் பழங்குடியினர் இப்போது, பேரா ஏரியின் காப்பகத்தில் மலேசிய சுற்றுலாத்துறைக்கு வேலை செய்கின்றனர். செமெலாய் பெண்கள் பாய்களைப் பின்னுவர்.

துறைசார் அனுபவக்கல்வி

காடு
கெருயிங் மரம் [அறிவியல் பெயர்: (Dipterocarpus caudiferus) (Dipterocarpaceae)]

செமெலாய் பழங்குடியினர் வன விலங்குகள், வனச் செடிகளின் குறித்த பரந்த அறிவுடையவர்கள். செமெலாய் பழங்குடியினர் மண்ணில் இருக்கும் கால் தடம் பார்த்து வன விலங்குகளை அடையாளம் காண்பர். கெருவீங் மரப்பட்டையை வாசனைத் திரவியம் செய்ய பயன்படுத்துகின்றனர்.

விண்மீன்

செமெலாய் பழங்குடியினர் நட்சத்திரத்தைப் பிந்தாங் என்றழைப்பர். பிந்தாங் என்பது மலாய் மொழியின் வார்த்தை. செமெலாய் பழங்குடியினர் ஏழு வகை நட்சத்திரக் கூட்டங்களைக் கணித்து வைத்துள்ளனர். அதில், பிந்தாங் பெய் (bintang peyh), பிந்தாங் ஜெகாட் (bintang jekat), பிந்தாங் கெரான் சோங் (bintang keran cong), பிந்தாங் துகுல் (bintang tukul), பிந்தாங் ஜோங் (bintang jong), பிந்தாங் தெம்பாகா (bintang tembaga) மற்றும் பிந்தாங் டெனாய் (bintang denai) ஆகியவை அடங்கும். செமெலாய் பழங்குடியினருக்கு விண்மீன்களின் துணைகொண்டு பெர்காராங்கான் (Perkarangan) மேற்கொள்வர். செமெலாய் மொழியில் பெர்காராங்கான் என்றால் வேட்டையாடுதலின் வழி உணவு தேடுதல் என்று பொருள். செமெலாய் பழங்குடியினர் விலங்குகளின் தடங்களைப் பின் தொடர்ந்தும் பொறிகள் வைத்தும் வேட்டையாடி வந்தனர். செமெலாய் பழங்குடியினர் இன்றைய நெல் பயிரிடும் வாழ்க்கை முறைக்கு முன் விண்மீன்களை குறித்த அறிவைக்கொண்டு வேட்டையாடும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர்.

இசை

செமெலாய் பழங்குடியினர் ‘ரெபானா’ மற்றும் ‘கோங்’ இசைக்கருவிகளை வாசிப்பர். கோங் இசைக்கருவி பெண், ஆண் என வேறுபடுத்தப்பட்டுள்ளது. செமெலாய் சமூகத்தில் இசைக்குக் குணப்படுத்தும் சக்திகள் உள்ளன என்று நம்புகின்றனர். இசைக்கருவிகளை இசைக்கும் போது, செமெலாய் மொழியில் பாடல்களைப் பாடுவர்.

நம்பிக்கைகள்

செமெலாய் பழங்குடி பேய்களையும் ஆவிகளையும் நம்புகின்றனர். செமெலாய் பழங்குடி மிடார் மர இலைகளை வேகவைத்து குடித்தால், தீய சக்திகளைப் போக்க முடியுமென நம்புகின்றனர். கெமென்யான் மரப்பட்டையை நல்ல சகுனத்திற்காகவும், வழிபாட்டுக்காகவும் பயன்படுத்துவர்.

செமெலாய் பழங்குடியினர் தூங்கும் வேளையில் அவர்களது ஆன்மா அவர்கள் நினைக்கும் இடங்களில் சஞ்சரிக்குமென நினைக்கின்றனர். இவர்களின் கனவில் வரும் பலதரப்பட்ட மக்களையும் விலங்குகளையும் பல வகையான கலாச்சார விளக்கங்களுக்கு ஏற்ப விரித்துக் கொள்கின்றனர்.

தொன்ம கதைகள்

செம்லாய் சமூகத்தில் தொன்ம கதைகள், நாட்டார் கதைகள், வாய் வழி வரலாறுகள் இரவில் சொல்லப்படும். செமெலாய் பழங்குடியினர் இந்தக் கதைகளை இவர்களின் மூதாதையர்களிடமிருந்து செவி வழி கற்றுக்கொண்டனர்.

சிகாத்தி மோனோங்கும் சிறுவனும்

சிகாத்தி மோனோங், (Sikati Monong) என்பது செமெலாய் பழங்குடி நம்பும் ஒரு நாகம். சிகாத்தி மோனோங் கொம்புடன் தங்கக் கருப்பு நிறத்தில் இருக்கும். ஒரு நாள் சிகாத்தி மோனோங் கிழவராய் உருவமெடுத்து கல்லில் அமர்ந்திருந்தது. சிறுவனின் சாயலில் செமெலாய் பழங்குடியினர் நம்பும் தோஹான் (Tohan) இறங்கி வந்தார். சிறுவன் அதிகப்பிரசங்கித்தனமாக கிழவரைப் பார்த்து சிரித்தான். கிழவர் சினமடைந்து சிறுவனிடம் பெரியவர்களைப் பார்த்து ஏளனமாகச் சிரிப்பது அவமரியாதைக்குரிய செயலாகும் என்று அறிவுறுத்தினார். சிறுவன் பதிலுக்குத் தான் கிழவரை விட வயதில் மூத்தவன் என வாதிட்டான். இருவருக்கும் வாய்சண்டை நிகழ்ந்தது. சிறுவன் கிழவரிடம், அவர் தன்னைவிட பெரியவராகயிருந்தால் பூமியைத் தண்ணீரால் நிரப்பச் சொல்லி சவால்விட்டான். கிழவரும் அதற்கேற்ப பூமியைத் தண்ணீரால் நிரப்பினார். சிறுவன் சட்டென ஒரு படகை செய்து, அதில் அமர்ந்து பெருவெள்ளத்திலிருந்து தப்பித்தான். சிறுவன் கிழவரின் அகந்தையை அடக்க நினைத்தான். கிழவரின் இரு கண்களையும் பிடுங்கினான். சிகாத்தி மோனோங்கின் கண்களைப் பிடுங்கிய சிறுவன் வலது கண்ணை ஒரு புறமும், இடது கண்ணை எதிர் புறமும் வீசி எறிந்தான். அதன் பின், நாகத்தின் வலது கண் சூரியனாகவும், இடது கண் சந்திரனாகவும் மாறியது.

சிகாத்தி மோனோங்கின் கண்களை வீசி எரிந்த சிறுவன், தண்ணீர் மட்டத்தை இறங்க செய்து, பூமியில் தண்ணீர் இல்லாமலாக்கினான். கண்களை இழந்த கிழவர் மிகுந்த தாகத்தால் சிறுவனிடம் குடிக்க தண்ணீர் கேட்டார். சிறுவன் கிழவரிடம் லெபாக் இலையில், அதாவது காட்டு வாழை இலையில் நீர் அருந்தச் சொன்னான். கிழவரும் லெபாக் இலையில் நீர் அருந்தினார். லெபாக் இலையிலிருந்து தொடர்ந்து நீர் கட்டற்று வந்தது. இதனால், செமெலாய் பழங்குடியினர்களிடம் லெபாக் ‘தொடர்ந்து நீரைக் கொடுக்கும் காட்டு வாழை’ எனும் நம்பிக்கையுள்ளது.

சூரா அலாம்

செமெலாய் பழங்குடியினர் தங்களின் அண்டவியல் நம்பிக்கையைச் சூரா அலாம் (Sura Alam) என்று அழைப்பர். செமெலாய் பழங்குடியின் நம்பிக்கையின்படி பூமி எனும் தேசம் கோள வடிவில் இருக்கும். பூமியின் வெளியைச் கடல் குமிழிகள் சுற்றியுள்ளதாக இவர்கள் நம்புகின்றனர். செமெலாய் பழங்குடியின் நம்பிக்கையின் படி, பூமியின் ஏழு அடுக்குகளை மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். முதலிலிருந்து மூன்றாம் அடுக்கின் பெயர் மாலீங் (Maling) எனும் வான். மாலீங்கையடுத்து நான்காம் அடுக்கு பூமி எனும் நிலம். ஐந்து முதல் ஏழாம் அடுக்கு பூமியின் கீழ் அடுக்காகும். ஏழு அடுக்குகளைக் கொண்ட பூமியை, ஏழு துணிகளைத் துளைத்த ஊசியின் நூலைப்போல சிகாத்தி மோனோங் ஒவ்வொரு அடுக்காக தன் உடலால் கோர்த்துக் கொண்டிருக்கிறது. இப்படியாக சிகாத்தி மோனோங் ஏழு முறை பூமியைத் துளைத்து கட்டுக்குள் வைத்துள்ளது. மனிதர்கள் பூமியில் தவறுகளையும் அநீதிகளையும் நிகழ்த்தினால், சிகாத்தி மோனோங்கின் கட்டு அவிழும். சிகாத்தி மோனோங்கின் கட்டவிழ்ந்தால் பூமியில் பேரிடர்கள் நிகழும் என செமெலாய் பழங்குடியினர் நம்புகின்றனர். அப்படி நிகழ்ந்தால், பூயாங் (Puyang) எனும் மந்திரவாதி மட்டுமே சிகாத்தி மோனோங்கின் கட்டை இறுக்க முடியுமென நம்புகின்றனர்.

பகலும் இரவும்

செமெலாய் நாட்டார் கதைகளில் பகலும் இரவும் உருவான கதை உள்ளது. ஆதியில் சூரியனும் சந்திரனும் ஒன்றாகவே வானில் இருப்பர். சூரியனுக்கும் சந்திரனுக்கும் தனி தனியாக நிலங்கள் இருந்தன. சூரியனின் நிலம் எப்போதும் வறண்டிருந்தது. சந்திரனின் நிலம் செழிப்பாக இருந்தது. ஒரு நாள் சூரியன் சந்திரனின் நிலத்திலும், சந்திரன் சூரியனின் நிலத்திலும் இடம் மாற்றிக் கொண்டனர். சந்திரனின் நிலம் வறண்டும், சூரியனின் நிலம் செழித்தும் காணப்பட்டது. சந்திரனுக்குச் சூரியனின் பிள்ளைகளால்தான் நிலம் வறண்டுப் போகிறது என்று தெரிய வந்தது. நிலங்களைச் செழிக்க வைக்க சந்திரன் சூழ்ச்சியை மேற்கொண்டது. சந்திரன் தனது பிள்ளைகளை உடலுக்குப் பின் மறைத்துக்கொண்டு சூரியனைப் பார்க்கச் சென்றது. சூரியன் சந்திரனிடம் சந்திரனின் பிள்ளைகளைக் காணவில்லயேயென விசாரித்தது. அதற்கு சந்திரன் தனது பிள்ளைகளை விழுங்கிவிட்டாதாகப் பதிலளித்தது. சந்திரன் தன்னைப்போலவே சூரியனைத் தனது பிள்ளைகளை விழுங்க சவாலிட்டது. சூரியனும் சவாலுக்கிணங்க தனது குழந்தைகளை விழுங்கியது. இதன் பிறகு, சந்திரன் தனது குழந்தைகளை வெளிக் கொண்டு வர, சூரியனுக்கும் சந்திரனுக்கும் பெரும் சண்டை நிகழ்ந்தது.

சூரியனையும் சந்திரனையும் உருவாக்கிய துஹான் இருவரையும் ஆற்றுப் படுத்த நினைத்தார். சூரியனையும் சந்திரனையும் நட்சத்திரங்களையும் ஒருத்தருக்கொருவர் பார்த்துக்கொள்ளக் கூடாதென கட்டளையிட்டார். அதனால், சூரியனும் சந்திரனும் ஒருவரையடுத்து மாறி மாறி வானில் தோன்றினர். இதனால் இரவும் பகலும் உருவானதென செமெலாய் பழங்குடியினர் நம்புகின்றனர். ஜஹாய் பழங்குடியினரும் செமெலாய் பழங்குடியினருக்கு நிகரான சூரிய சந்திர தோற்ற தொன்ம கதைகளை நம்புகின்றனர்.

சடங்கு

திருமணம்
நன்றி: Maza Wira

செமெலாய் சமூகத்தில் சடங்குகளை நிகழ்த்தி வைப்பவர் காடி எனப்படுபவர். திருமணத்தின் போது செமெலாய் மணமகன் காடியிடமிருந்து புகையிலை சுருட்டைப் பெற்றுக் கொண்டு புகைபிடிப்பார். மணமகன் சில முறை புகை இழுத்த பின், மணமகளிடம் கொடுப்பார். மணமகள் புகையிழுப்பார். இருவரும் புகையிலை சுருட்டை புகை இழுத்த பின், காடி இருவரிடமும் திருமணத்திற்குச் சம்மதமா எனக் கேட்பார். மணமக்கள் ஒப்புதல் கொடுக்க வேண்டும். மணமக்களின் ஒப்புதலுடன் ‘சா’ (Sah) என்று உரக்கச் சொல்வார். சா என்றால் மலாய் மொழியில் ’செல்லுபடி’ என்று பொருள்.

திருமணத்திற்கு வந்த விருந்தினர்களுக்கு துவாக் வழங்கப்படும். துவாக் என்பது பல மணி நேரம் நொதித்த கரும்பு அல்லது வாழை பானம். துவாக் பானம் குடிப்பது ஒரு சடங்கு போலவே நிகழும். காடி முதலில் துவாக் குடித்து இந்த சடங்கை துவங்கி வைப்பார்.

உசாத்துணை


✅Finalised Page