under review

செமாய் (மலேசியப் பழங்குடி)

From Tamil Wiki
Orang Asli - Semai.jpg

செனோய் இனக்குழுவில் உள்ள உட்பிரிவுகளில் ஒன்று செமாய் ஆகும். செமாய் பழங்குடி தீபகற்ப மலேசியாவிலுள்ள மற்ற பழங்குடிகளை விட அதிகமான மக்கள் தொகையைக் கொண்டவர்கள்.

வாழிடம்

செமாய் பழங்குடியினர், திதிவங்சா மலைத்தொடர்களில் வசிப்பவர்களாவர். அதில் நடு பேராக், தென் பேராக், மேற்கு பஹாங் மாநிலங்கள் அடங்கும்.

சமூக படிநிலை

செமாய் பழங்குடியினர் சமூதாய கட்டமைப்புக்குள் வாழ்வர். இவர்களின் இனத்தலைவரை ‘பாத்தின்’ (Batin) என்றும் தொக் ஹாலாக் (Tok Halak) என்றும் அழைப்பார்கள். பாத்தினும் தொக் ஹலாக்கும் சடங்கு சம்பிரதாய தலைவர்கள். இவர்களே செமாய் இனத்தின் மேல் வர்க்கத்தினர். சடங்கு சம்பிரதாய தலைவர்களை போமோ (Bomoh) குழுவிலிருந்தும் பாவாங் (Pawang) குழுவிலிருந்தும் தேர்ந்தெடுப்பர். 'போமோ' என்பவர் தாந்திரீகர். 'பாவாங்' என்பவர் மந்திரங்களால் கனிவளங்களைக் கண்டுபிடிக்கவும் அதிகரிக்கவும் செய்யும் சக்தியுடைவர் என செமாய் பழங்குடி நம்புகின்றனர்.

தொழில்

செமாய் மக்கள் வாழ்வாதாரத்திற்காக விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டவர்கள். செமாய் பழங்குடியினர் மீன் பிடிப்பதையும் வனவிலங்குகளை வேட்டையாடுவதையும் தொழிலாகக் கொண்டவர்கள்.

கலை

சும்பிட். நன்றி: www.therojakprojek.com
சிம்பாய். நன்றி: www.therojakprojek.com

செமாய் பழங்குடியினர் பின்னல் கலையில் ஈடுபாடு கொண்டவர்கள். இவர்கள் கையில் அணிந்திருக்கும் கெலாங் ரோட்டன் (Gelang Rotan) எனும் பிரம்பு வளையல், பிரம்பினால் செய்யப்படும் மோதிரம், சிம்பாய் (Simpai) என்று அழைக்கப்படுகிறது. சும்பிட் (Sumpit) எனும் வேட்டையாடும் கருவியைச் செமாய் பழங்குடி மக்கள் உபயோகிக்கின்றனர்.

மெங்குவாங் இலைகள். அறிவியல் பெயர்; Pandanus artocapus

செமாய் பழங்குடியினர் மெங்குவாங் (Mengkuang) இலைகளைப் பின்னி தானியங்கள், முட்டைகள் வைக்கும் கைப்பைகள், கூடைகள், பாய்கள், சிறுவர்களின் பாரம்பரிய விளையாட்டு பொம்மைகள், தளவாடப்பொருட்களென நெசவு செய்வர்.

பண்பாடு

செக் ரிஜ்ஜினுஎஜ் (Chek Rijnuej)

செமாய் சிறுவர்கள் செக் ரிஜ்ஜினுஎஜ்' (Chek Rijnuej) எனும் சிறுவர் பாரம்பரிய விளையாட்டில் பங்கெடுப்பர். செமாய் மொழியில் செக் ரிஜ்ஜினுஎஜ் என்றால் தவறான வழி எனப்பொருள். செமாய் பழங்குடியினர் முன்பு வேட்டையாடச் செல்லும்போது இரு மூங்கில் குச்சிகளுக்கிடையில் ஒரு நூலைக் கட்டி வைப்பர். இப்படி செய்தால் வன தேவதைகள் சீண்டாமலும் சீண்டப்படாமலும் இருப்பர் என செமாய் மக்கள் நம்பினர். இந்த விளையாட்டைக் காட்டில் விளையாடுவதால், ஆவிகளின் கவனம் விளையாட்டிலிருப்பதாக செமாய் பழங்குடி நம்பினர். வன தேவதைகளின் கவனம் திசை திருப்பப்படுவதால் வேட்டையாளர்கள் பாதுகாப்பாக வீடு வந்து திரும்புவரென செமாய் பங்குடி நம்புகின்றனர். இந்த வழக்கமே பிறகு செமாய் சிறுவர்கள் விளையாட்டாக மாறியது.

இசை

செமாய் பழங்குடியினர் சியோய் (Sioi), பென்சோல் (Pensol), ரங்கொயிட் (Rang’oit), கிரேப் (Kereb) எனும் இசைகருவிகளை வாசிப்பர். இதில் சியோயை மூக்காலும், ரங்கொயிட்டை வாயாலும் வாசிப்பர். கிரேப் பெரும்பாலும் செமாய் பெண்கள் வாசிப்பர்.

1990ல் ஜெல்மோல் (Jelmol) இசைக்குழு தெமியார்-செமாய் பழங்குடி இசை ஆர்வலர்களால் தொடங்கப்பட்டவை. ஜெல்மோல் இசைக்குழு இரு இசை தொகுப்பை வெளியிட்டுள்ளது.

பண்டிகை, விழா

கெங்கூலாங் நாள்

பேராக் மாநிலத்தில் வசிக்கும் செமாய் மக்கள் கெங்கூலாங் நாளை (Gelanggulang) டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரி, பிப்ரவரி ஆரம்பத்தில் கொண்டாடுவர். கெங்கூலாங் நாள் கிராமத்தின் பாதுகாப்புக்காகக் கொண்டாடப்படுகிறது.பாலெய் (Balei) எனும் வழிப்பாட்டு இடத்தில் நம்பிக்கையான ஆவிகளை மந்திரசக்திகளைக் கொண்ட பாவாங் அழைப்பர். பாலெயானது பல பூக்கள், செர்டாங், மெங்குவாங் இலைகளுடன் அலங்கரிக்கப்படும். பலெய் வாசலில் வலது, இடது இருபக்கமும் பலாப்பழம் வைக்கப்படும். ஆவிகளின் விருந்துக்காக கவுனி அரிசி, வாஜிக் பெரியோங் (Wajik Beriang), கிழங்கு இலை, பூசணி, கிழங்கு வகைகள், கோழி முட்டை, கோழி இரத்தம் போன்றவை வைக்கப்படும். கெங்கூலாங் நாள் காலையிலிருந்து மறுநாள் விடியும் வரை நடத்தப்படும். இசையும், மோடேக் எனப்படும் பாரம்பரிய செமாய் நடனமும் ஆடப்படும். இந்நாளில் செமாய் மக்கள் ஒன்றிணைந்து உண்பது வழக்கம்.

ஜிஸ்பாய் (Jispai)

செமாய் பழங்குடியினரின் புத்தாண்டு ஜிஸ்பாய் எனப்படும்.

பாக்பாய் (Bakpai)

செமாய் பழங்குடியினரின் பாக்பாய் எனும் அறுவடை பெருநாளைக் கொண்டாடுவர். புது நெல்லை செமாய் மக்கள் அவர்களின் கிராமத்துடன் பகிர்ந்துக்கொள்வர்.

சடங்குகள்

திருமணம்

செமாய் ஆண் அவர் பெண் எடுக்கும் வீட்டில் மூன்று நாள் தங்குவார். இந்த ‘தேர்ந்தெடுத்தலில்’ பெண்ணின் தந்தைக்கு உடன்படில்லையெனில் திருமணம் நடக்காது. ஆண் தேர்ந்தெடுக்கப்பட்டால், அடுத்த திருமண சடங்குகள் நடைபெறும்.

முதலாம் சடங்கு: மெரிசிக் சடங்கு (Adat Merisik)

செமாய் ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு ஒப்புதல் தெரிவித்தால் பெண் பார்க்கும் சடங்கு நடைபெறும். பெண் பார்க்க வரும் சடங்கை மெரிசிக் சடங்கு என அழைப்பர்.

இரண்டாம் சடங்கு: நிச்சயதார்த்தம்

மாப்பிள்ளை வீட்டார் பெண்ணுக்குச் சீதனம் கொண்டு வருவர். அதில், சாலின் தீகா (Salin Tiga) எனப்படும் பெண்ணுக்கான ஓவியங்கள், குறியீடுகளற்ற வெற்று துணி, பெலாஞ்ட துபோ (Belanja Tubuh) எனும் மலேசியா ரிங்கிட் 60.25 ரொக்கப் பணம், சால்வை, வெள்ளி மோதிரம், வெற்றிலை தட்டு ஆகியவை அடங்கும்.

மூன்றாம் சடங்கு: ஜீவனாம்சம் ஏற்பு

மாப்பிளை நிச்சயதார்த்ததின் போது, பெண்ணை மணப்பதற்காக விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகளை ஒப்புக்கொள்ள வேண்டும். அவற்றுள் ஒன்று, மாதத்திற்கு ஜீவனாம்சமாக மலேசிய ரிங்கிட் பதினைந்து பெண்ணுக்குக் கொடுக்க வேண்டும். அதுவே பொருளாகக் கொடுக்க நினைத்தால் பெண்வீட்டுக்கு மாப்பிள்ளை அப்பொருட்களை அனுப்பி வைக்க வேண்டும்.

நான்காம் சடங்கு: நிச்சயதார்த்தம்

மணமக்களுக்குப் நிச்சயதார்த்தத்தில், பெண்ணுக்குரிய திருமண ஆடைகள், ஜோடி செருப்பு அனைத்தையும் மணமகன் நிவர்த்தி செய்ய வேண்டும். திருமணத்திற்கு முன் மணமக்கள் மருதாணியிட்டு, தடங்கல்களைத் தவிர்க்க எலுமிச்சை குளியல் செய்ய வேண்டும்.

ஐந்தாம் சடங்கு: திருமணம்

மணமகள் ஆண் வீட்டார் வாங்கித் தந்த ஆடைகளை உடுத்தியிருப்பார். மணமகன் மணமகள் வீட்டுக்குச் சென்று சில சடங்குகளைச் செய்ய வேண்டும்.

மாப்பிளை அழைப்பு

மாப்பிள்ளையும் அவரது தாய் தந்தையரும் அவர்களது வாரிசுகள் மணமகளின் வீட்டிற்கு கால்நடையாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுவார்கள். வழியில் பாலுவான் ரெபானா (Paluan Rebana), கோங் (Gong) வாசிப்பதும், கவிதைகள் புனைவதுமுண்டு.

மாப்பிளை வரவேற்பு

பெண் வீட்டை மணமகன் வீட்டார் அடைந்தவுடன், அவர்களின் மீது நீர் தெளித்து, பெர்த்திஹ் (Bertih) தெரிவித்து வரவழைப்பர். பெண்வீட்டார் மணமகனுக்கு மூன்று முறை வணக்கத்தைச் செலுத்துவர்.

குறி கேட்டல்

செமாய் மணமகனின் தாய் தந்தையர் மணமேடைக்குச் செல்ல அவர்கள் மூன்று முறை அனுமதி கோர வேண்டும். வந்திருப்பவர் உன்மையான மணமகன் என நிரூபிக்க அவரது பெற்றோர்கள் கெரிஸ்சை (Keris) காண்பிக்க வேண்டும்.

பரிசம்

மணமகன் மணமேடைக்குச் செல்ல அனுமதி பெற்றவுடன், மணமகள் பக்கத்தில் அமர்வார். நாசி குன்யிட் (Nasi Kunyit) எனும் மஞ்சளில் வேகவைத்த கவுனி அரிசியை ஒருவருக்கொருவர் ஊட்டிக்கொள்வர்.

ஆறாம் சடங்கு: அறிவுரை பெறுதல்

மணமக்கள் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டு, அவர்கள் வீட்டின் பெரியவர்களை வணங்குவதற்கான சடங்குகளை நடத்தப்படும். திருமண சம்பிரதாயங்கள் பற்றிய அறிவிப்பும் ஆலோசனைகளும் வீட்டின் பெரியவர்கள் வழங்குவர்.

ஏழாம் சடங்கு: மணமக்கள் ஒன்றிணையும் சடங்கு

பிள்ளை பேறு

புதிதாக பிறந்த செமாய் குழந்தைகளை குளிப்பாட்டி, மருந்துகள் பூசும் சடங்கை செமாய் பழங்குடியின மக்கள் மேற்கொள்வர். தாய் சேயின் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், கெட்ட ஆவிகள் தொந்தரவு செய்யாமல் இருக்கவும் இச்சடங்கு குழந்தை பிறந்த ஆறு நாட்களுக்கு நிகழும். தோக் ஹாலாக்எனப்படும், பிரசிவித்த தாய்க்கும் பிறந்த குழந்தைக்கும் குணப்படுத்தும் கலவையைத் தெளிப்பார். இந்த கலவை காட்டு மரங்களின் வேர்கள் மற்றும் பழங்களின் கலவையாகும். இக்கலவையில் Selaq Bird, Calun இலை, Bantaq அல்லது Rotan Bantang, Selaq Selboq உபயோகிக்கப்படும்.

மரணம்

செமாய் குடும்பத்தில் ஒருவர் மரணித்தால் அச்செய்தியைத் தொக் பாத்தேனிடம் சொல்ல வேண்டும். துக்க சடங்கு ஆறு நாட்களுக்கு நடத்தப்படும். ஆறாம் நாளில் தெனாமாக் எனும் சடங்கு நிகழ்த்தப்படும். இச்சடங்கில் புதை மணல் தளர்த்தப்படும். ஏழாம் நாள், தூஜோ ஜூரேஹ் ஆசிர்வாதத்திற்கான நாள். இறந்தவரின் வீட்டார், இரு மரண சடங்குகளான 'குகாவ்' அல்லது 'தெனாமோ' சடங்கினைப் பேசி தேர்ந்தெடுப்பர். தெனாமோ' சடங்கு இறந்தவரின் ஆசையை நிறைவேற்றும் சடங்காகும். செமாய் பழங்குடியின் நம்பிக்கைபடி, 'தெனாமோ' செய்தால் இறந்தவர் நிம்மதியடைவர். இந்நிகழ்வு ஆறு நாட்கள், ஆறு இரவுகள் நடத்தப்படும். சாகோ (Cagoh) எனும் பிரார்த்தனையுடன் தோக் ஹலாக் தெனாமோ ஆரம்பிப்பார். தெனாமோக்கு அடுத்து 'குகாவ்' நிகழும்.

குகாவ் சடங்கு பாடி (Badi), எனும் இறந்தவரின் கெட்ட சக்தியை நெருங்கிய குடும்பத்தினரிடமிருந்து தவிர்க்க இச்சடங்கு செய்யப்பட்டுவருகிறது. தொக் ஹலாக் செம்பிட் என்றழைக்கப்படும் காட்டு வேர்களை இறந்தவரின் குடும்பத்தார் உடல் உறுப்புகளிடம் தடவி விடுவார். இச்சடங்கு முடிந்தவுடன் தொக் ஹலாக் சுற்றுச்சூழலை கவனிப்பார். மரம் விழுவது போல் அல்லது பெரிய சத்தங்கள் கேட்டால், இறந்தவர் தனது பிறப்பில் பெரிய தவறுகள் இழைத்திருக்கிறார் அல்லது முடிவு பெறாத ஆசையுள்ளதாகப் பொருள்படும். இதனால் இறந்தவரின் குடும்பத்தார் புதிய இடத்துக்கு மாற்றாலாகி செல்வதுண்டு. இச்சடங்கு ஒரு நாளில் முடிவுறும்.

உசாத்துணை


✅Finalised Page