under review

சீதை (கட்டுரைத் தொடர்)

From Tamil Wiki
பி.ஆர்.ராஜம் ஐயர்

தமிழில் யதார்த்தவாத எழுத்தின் முன்னோடி எழுத்தாளரான பி. ஆர். ராஜம் ஐயர் எழுதிய படைப்பு 'சீதை'. விவேகசிந்தாமணி இதழில் கமலாம்பாள் சரித்திரம் எழுதிய ராஜம் ஐயர், மேலும் சில கட்டுரைகளையும் தொடர்களையும் எழுதியிருக்கிறார். அவற்றுள் ஒன்றுதான் சீதை.

சீதை - கட்டுரைத் தொடரின் சிறப்பு

சீதை கட்டுரை தான் கம்பராமாயணம் பற்றி வெளியான தமிழின் முதல் இலக்கியத் தொடர். கம்பனைப் பற்றி முதன்முதலில் தமிழில் விரிவாக ஆராய்ந்தவர் என்று சொல்லப்படும் வ.வே.சு. ஐயருக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே கம்ப ராமாயணத்தை அறிமுகப்படுத்தித் தொடர் கட்டுரை எழுதியவர் ராஜம் ஐயர். ராஜம் ஐயர் அத்தொடரை எழுத ஆரம்பித்தது ஜனவரி 1896-ல். ஆனால், எட்டு அத்தியாயங்கள் மட்டுமே கொண்ட இக்கட்டுரைத் தொடர் நிறைவுற்றது ஜனவரி 1898-ல். தொடர், ராஜம் ஐயருக்கு இடையில் ஏற்பட்ட உடல்நலக்குறைவு மற்றும், தொடர் சிகிச்சைகள் காரணமாக மாதா மாதம் தொடர்ச்சியாக வெளியாகவில்லை.

சீதை - தொடரின் சுருக்கம்

ராமர் விசுவாமித்திரருடன் காட்டுக்குச் சென்று அவருக்கு உதவியாக இருந்து, அரக்கிகளைக் கொல்கிறார். யாகத்தைக் காத்துப் பின் ஜனகனின் அரண்மனைக்குச் சென்று சிவ தனுசை முறித்துச் சீதையை மணம் புரிகிறார். பின் மிதிலைக்குப் புறப்படுகிறார். செல்லும் வழியில் பரசுராமர் வருகிறார். பரசுராமரைக் கண்டு அஞ்சிய தசரதர் பரசுராமரின் காலில் விழுந்து வேண்டுகிறார். காரணம், க்ஷத்திரியர்களை முற்றிலுமாக அழிப்பேன் என்று விரதம் பூண்டிருக்கும் பரசுராமர் தங்களையும் (தான் மற்றும் இராமன்) கொன்று விடுவானோ என்ற அச்சம் தான். ராஜம் ஐயர் எழுதுகிறார், "கல்யாண தீட்சையில் இருப்பவர்களைக் கொல்வது கூடாததால் அவர் அயோத்தியை நோக்கிவரும் பொழுதெல்லாம் தசரதர் நூதனமாக ஒவ்வொரு கல்யாணம் செய்துகொண்டு விடுவது வழக்கம். அது காரணம் பற்றியே அவருக்கு அறுபதாயிரம் மனைவியர். இத்தருணம் அவர் திடீரென்று வந்துவிட்டபடியால் கல்யாண தீட்சையிலிருக்கக் கூடாது போயிற்று. ஆதலால் தன் வயோதிகத்தைக் காட்டியாவது உயிர்பிச்சை பெறலாமென்று அவர் பரசுராமரைச் சரண்புகுந்தார்."

ஆனால் பரசுராமர், தசரதரை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை. தசரதர் வயதானவர் என்பதாலோ அல்லது இனிமேல் எல்லாமே 'ராமன்’ தான் என்பதை அறிந்ததாலோ என்னவோ பரசுராமர் நேரடியாக ராமர் முன் சென்று நின்று கர்ஜிக்க ஆரம்பித்தார். பரசுராமரின் செருக்கை அடக்கி அவரது 'விஷ்ணு தனுசை’நாணேற்றி வென்றான் ராமன். பரசுராமர் மீண்டும் தவம் புரிய காட்டுக்குச் சென்று விடுகிறார். இதனை தனது கட்டுரைத் தொடரில் விரிவாக விளக்கியிருக்கிறார் ராஜம் ஐயர். பி.ஸ்ரீ.ஆச்சார்யாவின் பிற்காலத்துத் தொடரான கம்பசித்திரத்திற்கு முன்னோடியாக இக்கட்டுரைப் பகுதி அமைந்துள்ளது.

நடராஜன் - ஜானகி உரையாடல்

சீதை கட்டுரைத் தொடர் (விவேக சிந்தாமனி)

கம்பனின் கவிச் சிறப்பையும், சீதையின் பெருமையையும் ஜானகி, நடராஜன் என்ற இருவர் வியந்து உரையாடுவது போல் சீதை கட்டுரைத் தொடரைப் படைத்திருக்கிறார் ராஜம் ஐயர். நடராஜன், ஜானகியை சீதையுடன் ஒப்பிடுகிறான். அதற்கு ஜானகி, "என்னை சீதையுடன் ஒப்பிடாதீர்கள். சீதை கஷ்டப்படத்தான் பிறந்தாள்" என்கிறாள். அதற்கு நடராஜன் மறுமொழியாக, "சீதைக்குச் சமானமாக யாருண்டு? அவளுடைய சரித்திரத்தைக் கேட்டுக் கொண்டிருந்தாலே அழியாத புண்ணியமுண்டு" என்று சொல்லி அவளது புகழைப் பலவாறாகச் சொல்ல ஆரம்பிக்கிறான்.

"புருஷன் ராஜ்யத்தை யிழந்துவிட்டான், காட்டுக்குப் போக வேண்டியவனாய் விட்டான் என்றதற்காக அவள் வருத்தப்படவில்லையாம். ஆனால், 'நான் போய் வருகிறேன். நீ துக்கப்படாமல் இங்கேயிரு’ என்று ராமன் சொன்ன கொடியசொல் அவள் காதில் நெருப்புப் போல் பட்டதாம். பட்டாபிஷேகம் தடைபட்டுப் போய்விட்டது, ராஜ்யத்தை ராமன் இழக்க வேண்டி வந்துவிட்டது என்று அவளுக்குக் கொஞ்சம் கூடக் கவலையில்லை. கோசலை, லெட்சுமணன் இவர்களெல்லாருங் கூட இப்படி கஷ்டம் நேரிட்டதே என்று துக்கத்தையும் கோபத்தையுமடைந்தார்கள். ஆனால், சீதையோ, அவளது பெருந்தன்மையின் விசேஷமது, கொஞ்சம்கூட அதற்காகக் கைகேசியைக் கோபிக்கவுமில்லை; தனக்காகவும் ராமனுக்காகவும் துக்கப்படவுமில்லை. அவள், ராமன் இரண்டுபேர் தவிர மற்றவர்கள் எல்லாருக்கும் கைகேசியைக் கொன்று விடோமோ என்று கோபம், பிரம்ம ஞானியாகிய வசிஷ்டருக்குக் கூடக் கோபம். ஆனால், சீதை அவளை நிந்தித்து ஒரு வார்த்தையாவது சொன்னவளல்லள். அவளை நினைக்குந்தோறும் எனக்குக் கண்ணீர் வருகிறது" என்கிறான் நடராஜன்.

ஜானகி அதைக் கேட்டு ஆச்சரியப்படுகிறாள்.

காட்டுக்குத் தன்னுடன் வரக் கூடாது என்று ராமன் வாதம் செய்ய, அவனுடன் எதிர்வாதம் செய்து தானும் மரவுரி தரித்து அவன் முன் வந்து நிற்கிறாள் சீதை. அப்போதும் ராமன், "காட்டுக்கு நீ வந்தால் உன்னால் எல்லையில்லாத துன்பம் ஏற்படும்"என்று சொல்லித் தவிர்க்கப் பார்க்க, உடனே சீதை, குயில் போலச் சினந்து, "உற்று நின்ற துயரம் இது ஒன்றுமே? என் துறந்த பின், இன்பம் கொலாம்?" என்கிறாள். அதற்கு மறுமொழி ஏதும் சொல்ல இயலாத ராமன் அவளையும் கூட்டிக் கொண்டு காட்டுக்குப் புறப்படுகிறான். இதனை 'ராமனும் சீதையும் காட்டுட் புகுந்ததைக் கம்பர் ஒரு கலியாணம் போல வர்ணித்திருக்கிறார்’ என்று நடராஜன் கூற்றாகச் சொல்கிறார் ராஜம் ஐயர்.

சீதையின் பெருமையை, அவள் பெருந்தன்மையை, அன்பை, பணிவை, அடக்கத்தை, அசோகவனத்தில் சிறைப்பட்டுத் தவித்த தவிப்பை கம்பனின் பாடல்களிலிருந்தும், வால்மீகியிலிருந்தும் எடுத்துக் காட்டி அவள் பெருமையை நிறுவுகிறார். அதிலும் குறிப்பாக ராமன் முன் அவள் அக்னிப் பிரவேசம் செய்யும் காட்சியை சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் ராஜம் ஐயர்.

தொடரின் இறுதியில் நடராஜன் கூற்றாக, "நாம் அந்த சாசுவதமான புகழையுடைய சீதையைப் பற்றிப் பேசக் கூடச் சக்தியுள்ளவர்களல்ல. 'ஒசைபெற்றுயர் பாற்கடலுற்றொரு பூசை முற்றவும் நக்குபு புக்கென’ அதாவது அலைகளை வீசி ஆரவாரித்து விளங்குகின்ற திருப்பாற்கடலை ஒரு சிறிய பூனை போய் முழுவதும் குடிக்க எத்தனித்தது போலிருக்கிறது தான் ராமாயணம் பாடியது என்று கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பரே சொல்லியிருக்க நாம் ராமன், சீதையைப் பற்றி வாய்திறந்து பேசவாவது யோக்கியதை உடையவர்களோ!" – என்று நடராஜன் சொல்வதாகச் சொல்லிக் கட்டுரையை முடிக்கிறார் பி. ஆர். ராஜம் ஐயர்.

அச்சில் சீதை

சீதை தொடர் வெளியான விவேக சிந்தமாணி இதழைப் பாதுகாப்பாக வைத்திருந்த சி.சு.செல்லப்பா, பிற்காலத்தில் அதனை எழுத்தாளரும், பதிப்பாளருமான கி.அ. சச்சிதானந்தத்திடம் (பீகாக் பப்ளிகேஷன்) கையளித்தார். அவரும் அதனை அச்சிட்டு வெளியிட்டார். ஆனால் அதுவே முதலும் கடைசியுமானது. அதன் பின் சீதை நூல் இதுவரை மறுபதிப்பு செய்யப்படவில்லை.

இலக்கிய இடம்

கம்ப ராமாயணம் பற்றிப் பேசிய முதல் நவீன உரைநடைநூல் பி.ஆர்.ராஜம் ஐயரின் சீதை என ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். நவீன இலக்கியத்தில் கம்பராமாயணம் பற்றிய ஏராளமான நூல்கள் தொடர்ச்சியாக வெளிவர இது முதற்புள்ளியாக அமைந்தது.

உசாத்துணை


✅Finalised Page