under review

கபிலர் குன்று

From Tamil Wiki

To read the article in English: Kabilar Rock. ‎

கபிலர் குன்று
கபிலர் குன்று அறிவிப்பு
கபிலர் குன்று
கபிலர் குன்று ஏரி

கபிலர் குன்று: கபிலர் உயிர்விட்டதாக கருதப்படும் இடத்தில் அமைந்துள்ள குன்று. விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூர் வட்டத்தில் கபிலர் குன்று உள்ளது. இங்கு கபிலர் உயிர்துறந்தார் என்றும் ஆகவே கபிலக்கல் என்னும் பாறை அவர் நினைவாக உள்ளது என்றும் கல்வெட்டுச்செய்தி ஒன்று உள்ளது.

(பார்க்க கபிலர் )

இடம்

விழுப்புரத்தில் இருந்து ஏறத்தாழ 40 கி.மீ தொலைவில் திருக்கோயிலூர் உள்ளது . பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள வீரட்டானேஸ்வரர் கோயிலின் அருகில் இக்குன்று தென்பெண்ணை ஆற்றின் நடுவில் உள்ளது . இது ஒரு பாறைமேல் அமைந்துள்ள இன்னொரு சிறிய பாறை. அதன்மேல் மிகச்சிறிய கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது..

கோயில் அமைப்பு

செங்கற்களாலும் சுதையாலும் கட்டப்பட்ட இக்கோயில் பதினான்காம் நூற்றாண்டுக்கு முற்பட்டது.அதற்குள் சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது. துறவுபூண்டு உயிர்விடுபவர்களின் பள்ளிப்படைகளில் சிவலிங்கம் நிறுவப்படும் வழக்கம் உண்டு என்பதனால் இது கபிலரின் பள்ளிப்படை என கருதப்படுகிறது. நெடுங்காலம் இங்கே குன்றுப்பாறைமேல் லிங்கம் மட்டும் இருந்திருக்கலாம் என்றும் கோயில் பிற்காலத்தையது என்றும் ஆய்வாளர் கூறுகிறார்கள்.

கோயிலின் மேலே தெய்வச் சிற்பங்களுடன் இரண்டு ஆண் உருவங்களும், இரண்டு பெண் உருவங்களும் தெரிகின்றன. அப்பெண் உருவங்கள் அங்கவை, சங்கவையாகவும், ஆண் உருவம் கபிலர், மற்றும் மலையமான் என்றும் கருதப்படுகிறது. கபிலர் குன்று தமிழக தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது .

வரலாறு

இன்று விழுப்புரம் மாவட்டத்திலுள்ள் திருக்கோவிலூரை தலைமையாக கொண்ட நாடு மலாடு என்றும் மலையமான் நாடு என்றும் அழைக்கப்பட்டது. அந்நாட்டை மலையமான்கள் ஆட்சி செய்தனர். அவர்களின் மலை முள்ளூர் எனப்பட்டது. மலையமான் திருமுடிக் காரி என்னும் அரசன் கடையெழு வள்ளல்களில் ஒருவன். கபிலர் மலையமான் திருமுடிக்காரியை பாடியுள்ளார் (புறநானூறு 121, 122, 123, 124). முதலாம் ராஜராஜ சோழனின் அன்னை மலையமான் வம்சத்தைச் சேர்ந்தவர். ராஜராஜன் மற்றும் ராஜேந்திர சோழனின் படைத்தளபதிகளாகவும் மலையமான்கள் இருந்தனர்.

வேள் பாரி மூவேந்தர்களால் கொல்லப்பட்ட பின் அவர் நண்பரான கபிலர் அவனுடைய மகள்களை மன்னர் எவருக்கேனும் மணமுடித்து வைக்க முயன்று இருங்கோவேள் முதலியவர்களை அணுகினார். அவர்கள் மறுத்துவிட்ட நிலையில் பாரிமகளிரை அந்தணரிடம் அளித்துவிட்டு கபிலர் வடக்கிருந்து உயிர் துறந்தார் (புறநாநூறு 236 ).

பொ.யு. 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என கருதப்படும் திருக்கோவிலூர் கல்வெட்டு கபிலர் பாரிமகளிரை திருக்கோயிலூர் மலையமானுக்கு மணமுடித்துக் கொடுத்துவிட்டு நெருப்பில் இறங்கி உயிர்விட்டதாகச் சொல்கிறது. அந்த இடமே பின்னர் கபிலர் கல் என அறியப்படுகிறது என்று ஆய்வாளர் கூறுகிறார்கள்.

அரசாணை எண். 80/த.வ.ப.துறை/நாள்/17.01.85 வழியாக இச்சின்னம் தொல்லியல் சின்னமாக அறிவிக்கப்பட்டு கபிலரின் நினைவிடமாக கருதப்படுகிறது

கோவலூர் புராணம்

கி.பி. 14-ம் நூற்றாண்டில் தமிழகம் சந்தித்த கலைப் பண்பாட்டுச் சரிவிற்குப் பின்பு 15-ம் நூற்றாண்டில் மறுமலர்ச்சி ஏற்பட்ட போது கபிலக்கல்லுக்குப் புராண அடிப்படையில் புதிய கதை எழுதினர். கபிலச்சருக்கம் என்ற தலைப்பில் கோவலூர் புராணம் இயற்றினர். கபிலன் என்னும் தவமுனி தன் இடர்களை நீக்க திருக்கோவலூர் பெண்ணையாற்றில் உள்ள பாறை மீது லிங்கம் வைத்து வழிபட்டுப் பின்னர் சிவனடி சேர்ந்ததாக புராணம் கதைக் கூறுகின்றது.

கோவலூர் புராணத்திற்கும் 150 ஆண்டுகளுக்கு முன்னர் அப்புராணத்தைப் பற்றிய ஓவியம் தீட்டப்பட்டிருக்கிறது. அவை திருக்கோவலூர் கோபுர விதானத்தில் தீட்டப்பட்டது. அதில் ஒரு காட்சியில் பெண்ணையாற்றில் உள்ள கற்பாறை மீது சிறு கோவிலில் லிங்கத்தை கபில முனிவர் பூஜை செய்வது போன்ற காட்சியுள்ளது. அதன் கீழே கபிலமுனி சருக்கத்தின் குறிப்பும் தமிழில் உள்ளது. அதன் அருகில் ஔவையார் பாரி மகளிர் திருமணத்திற்காக விநாயகரை வணங்கும் காட்சியும், மேலும் பல கோவலூர் புராணக் காட்சியும் இடம்பெற்றுள்ளன.

கோவலூர் புராணத்தில் தெய்வீக அரசன் கதையில் பாரி சிங்கள நாட்டின் அரசனாகச் சித்தரிக்கப்படுகிறான். பாரி மகளிர் அங்கவை, சங்கவை பாரியின் இறப்பிற்கு பின் ஔவையார் திருக்கோவலூர் மன்னன் தெய்வீகனுக்கு திருமணம் செய்துவைத்ததாகவும் குறிப்பு உள்ளது. கி.பி.15-ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 19-ம் நூற்றாண்டு இறுதிவரை திருக்கோவலூரில் கபிலக்கல் மீது கோவில் இருந்ததும். அதிலிருந்த லிங்கம் கபிலேசுவரர் என்றழைக்கப்பட்டதும் அறிய இதன் மூலம் முடிகிறது.

திருக்கோயிலூர் கல்வெட்டு

திருக்கோவிலூர் வீரட்டானேசுவரர் கோயிலின் கருவறையின் வடபுறச்சுவரில் உள்ள முதலாம் இராஜராஜசோழன் காலத்துக் கல்வெட்டு இவ்வாறு சொல்கிறது

செஞ்சொற் கபிலன் மூரிவண் தடக்கைப்

பாரிதன்னடைக்கலப் பெண்ணை மலையர்க்குதவி

மினல்புகும் விசும்பின் வீடுபேறெண்ணி

அந்தரிக்ஷம் செல கனல்புகும் பெண்ணை

அலைபுனல் அழுவத்து கபிலக் கல்லது"

உசாத்துணை


✅Finalised Page