under review

ஸ்ரீவேணுகோபாலன்

From Tamil Wiki
Revision as of 09:07, 23 August 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (changed single quotes)

To read the article in English: Srivenugopalan. ‎

Pushpa thangadurai.jpeg

ஸ்ரீவேணுகோபாலன் (புஷ்பா தங்கதுரை) (1931-2013) தமிழ் பொதுவாசிப்புக்கான நாவல்களை எழுதிய எழுத்தாளர். ஸ்ரீவேணுகோபாலன் என்ற தன் சொந்தப் பெயரில் வரலாற்று நாவல்களையும், புஷ்பா தங்கதுரை என்ற புனைபெயரில் சமூக நாவல்களையும் எழுதினார். திருவரங்கன் உலா அவரது வரலாற்று நாவல்களில் மிகவும் புகழ்பெற்றது. புஷ்பா தங்கதுரை என்ற பேரில் அவர் எழுதிய ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது, நந்தா என் நிலா, லீனா மீனா ரீனா (அந்த ஜூன் 16-ஆம் நாள் என்ற பெயரில்) போன்ற நாவல்கள் திரைப்படமாகவும் வந்திருக்கின்றன

வாழ்க்கைக் குறிப்பு

ஸ்ரீவேணுகோபாலனின் இயற்பெயர் வேணுகோபால். திருநெல்வேலி மாவட்டம், கீழநத்தம் கிராமத்தில் 1931-ல் பிறந்தவர். பதின்ம வயதிலேயே வேலை தேடி சென்னைக்கு குடிபெயர்ந்துவிட்டார். முதலில் பெஸ்ட் அண்ட் கம்பெனியிலும் பிறகு சிறிது காலம் தபால்துறையிலும் பணியாற்றி இருக்கிறார். பிறகு முழு நேர எழுத்தாளராக மாறிவிட்டார். திருமணம் செய்து கொள்ளவில்லை. நவம்பர் 2013-ல் மறைந்தார்.

நூல் சேகரிப்பில் ஆர்வம் கொண்டிருந்த ஸ்ரீவேணுகோபாலன் பெரிய நூலகம் ஒன்றை வைத்திருந்தார் என்று இதழ்ச்செய்திகள் குறிப்பிடுகின்றன

பங்களிப்பு

ஸ்ரீவேணுகோபாலன் என்ற தன் இயற்பெயரிலும் புஷ்பா தங்கதுரை என்ற புனைபெயரிலும் எழுதினார். ஸ்ரீவேணுகோபாலன் என்ற பெயரில் பெரும்பாலும் வரலாற்றுக் கதைகளை எழுதினார். புஷ்பா தங்கதுரை என்ற பெயரில் சமூகக் கதைகள், குற்றப் பின்னணி உள்ள கதைகள், துப்பறியும் கதைகளை எழுதினார்.

ஸ்ரீவேணுகோபாலன்

ஸ்ரீவேணுகோபாலன் எழுதிய இரண்டு தொடக்க காலப் படைப்புகள் அவரை கவனிக்க வைத்தன. குண்டலகேசியின் கதையை கற்பனையால் விரிவாக்கி ஒரு நாவலாக எழுதினார். குமுதம் நடத்திய நாடகப்போட்டியில் 'கலங்கரை தெய்வம்’ என்னும் நீள்நாடகத்தை துரோணன் என்ற பெயரில் எழுதினார். இது ஆட்டனத்தி-ஆதிமந்தி கதையை ஒட்டி எழுதப்பட்டது. சில்பி ஓவியத்துடன் வெளிவந்த இந்நாடகம் பெரிதும் பேசப்பட்டது.

இவர் எழுதிய 'திருவரங்கன் உலா’ ’மதுரா விஜயம்’ என்னும் நாவல்கள் ஸ்ரீரங்கம் ஆலயத்தின் உற்சவர் சிலையின் பயணம் மீட்பு ஆகியவற்றைப் பற்றியவை. பின்னாளில் டில்லி சுல்தானாக ஆட்சி புரிந்த முகம்மது பின் துக்ளக் [உலுக் கான்] தலைமையில் ஒரு பெரும்படை 1326-ல் தமிழகம் வரை படையெடுத்து வந்ததும், அந்தப் படையெடுப்பின்போது ஸ்ரீரங்கத்து ரங்கநாதனின் உற்சவமூர்த்தி ஊர் ஊராக மறைத்து எடுத்துச் செல்லப்பட்டதும் 47 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் விஜயநகர அரசின் தளபதி கோபண்ணா முயற்சியால் அந்த உற்சவமூர்த்தி ஸ்ரீரங்கத்தில் திரும்ப கொண்டுவரப்பட்டு நிறுவப்பட்டதும் வரலாறு. முதல் பாகமான திருவரங்கன் உலா நாவலில் அரங்கர் ஸ்ரீரங்கத்திலிருந்து கிளம்பி மதுரை, திருவனந்தபுரம், கோழிக்கோடு, மேல்கோட்டை வழியாக திருப்பதி காடுகளை சென்றடைந்திருக்கிறார். மதுராவிஜயத்தில் அவர் காட்டில் கண்டுபிடிக்கப்பட்டு திருமலை கோவில், செஞ்சி அருகே உள்ள சிங்கவரம், சமயபுரம் வழியாக ஸ்ரீரங்கம் வந்தடைகிறார்.

விமர்சகர் ஜெயமோகன் திருவரங்கன் உலா நாவலை 2000-த்துக்கு முன் வந்த சிறந்த வரலாற்று மிகுபுனைவு நூல்களில் சேர்க்கிறார்.

புஷ்பா தங்கதுரை

ஸ்ரீவேணுகோபாலன் தினமணிக் கதிர் ஆசிரியராக இருந்த சாவியின் வேண்டுகோளால் என் பெயர் கமலா என்னும் தொடர்கதையை தினமணிக் கதிர் வார இதழில் எழுதினார். இது ஓர் இளம்பெண் மும்பைக்குக் கொண்டு செல்லப்பட்டு பாலியல் தொழிலுக்கு விற்கபட்டதை பற்றிய கதை. ஆனால் பாலியல் தொழில் பற்றிய வர்ணனைகளுடன் பரபரப்பூட்டும்படி எழுதப்பட்டிருந்தது. இக்கதைகளுக்காக புஷ்பா தங்கதுரை என்று பெயர் வைத்துக்கொண்டார். தொடர்ந்து அன்றைய அளவுகோல்களுக்கு சற்று மிகையான காமச் சித்தரிப்புடன் பல நாவல்களை வணிக நோக்குடன் பொதுவாசிப்புக்காக எழுதினார்.

புஷ்பா தங்கதுரை என்னும் பெயரில் இவர் எழுதிய நாவல்களில் நந்தா என் நிலா, ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது ஆகியவை முக்கியமானவை. விமர்சகர் ஜெயமோகன் ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது நாவலை 2000-த்துக்கு முன் வந்த வணிகக் கேளிக்கை நூல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார்.

துப்பறியும் நாவல்களையும் எழுதியிருக்கிறார். இன்ஸ்பெக்டர் சிங் என்னும் துப்பறியும் கதாபாத்திரத்தை உருவாக்கினார்

விருதுகள்

  • மதுரகவி நாடகத்துக்காக மத்திய அரசின் கலாசார விருது

நூல்கள்

புஷ்பா தங்கதுரை
  • என் பெயர் கமலா
  • ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது
  • நந்தா என் நிலா
  • லீனா மீனா ரீனா
  • மங்களா சுபமங்களா
  • ராகினி ஒரு ஹிப்பி நீ
  • காபரே இலவசம்
  • துணிந்தபின் சுகமே
  • வெள்ளி மோகினி
  • ஒரு சிவப்பு விளக்கு எரிகிறது
  • காதலே போய் வா
  • நீ நான் நிலா
  • நான் ராமனல்ல
  • தாரா தாரா தாரா
  • காதல் இல்லை காதலி
  • சரிதா சரிதா
  • துள்ளுவதோ இளமை
  • மன்மத மருந்து
  • துரோகம் துரத்துகிறது
  • இளமைக்கு ஒரு விசா
  • கடலுக்குள் ஜூலி
  • அடுத்த ரூம் பெண்
  • என்றும் இரவுப் பூக்கள்
  • கடைசி வரை காதல்
ஸ்ரீவேணுகோபாலன்
  • திருவரங்கன் உலா, மதுராவிஜயம்
  • மோகவல்லி தூது
  • சுவர்ணமுகி
  • தென்மேற்குப் பருவம்
  • மன்மத பாண்டியன்
  • கள்ளழகர் காதலி
  • மதுரகவி (நாடகம்)
  • கலங்கரைத் தெய்வம் [நாடகம்]
  • அழகிக்கு ஆயிரம் நாமங்கள் [பக்திநூல்]
  • மோகினி திருக்கோலம் [பக்திநூல்]

திரைப்படங்கள்

புஷ்பா தங்கத்துரையின் கீழ்க்கண்ட நூல்கள் திரைப்படமாகியுள்ளன

  • ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது
  • நந்தா என் நிலா

இணைப்புகள்


✅Finalised Page