under review

வைக்கம் முகமது பஷீர்

From Tamil Wiki
பஷீர்
நன்றி ஜெயமோகன்.இன்
பஷீர் வரலாறு
பஷீர்
பஷீரும் ஃபாபியும்
பஷீரும் ரேடியோவும்
பஷீர் கையெழுத்து
பஷீர்
பஷீர்
பஷீரும் ஃபாபியும்
ஃபாபி பஷீர்
பஷீர்
பஷீர்
basheer

வைக்கம் முகம்மது பஷீர் (ஜனவரி 19, 1908- ஜூலை 5,1994). மலையாள எழுத்தாளர். நவீன மலையாள எழுத்தாளர்களில் முதன்மையானவராகக் கருதப்படுகிறார். சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டவர். நாடோடியாக வாழ்ந்தவர். இஸ்லாமிய சூஃபி மெய்ஞான இயக்கத்தில் ஆர்வம் கொண்டவர். வெளிப்படையான நையாண்டியும், சுயஎள்ளலும் கொண்ட படைப்புகளை எழுதியவர். வைக்கம் முகமது பஷீரின் சாகச வாழ்க்கையும், தன் வரலாற்றுத்தன்மை கொண்ட அவருடைய கதைகளும் அவரை ஒரு பெரும் ஆளுமைச்சித்திரமாக நிறுவியுள்ளன.

பிறப்பு, கல்வி

வைக்கம் முகம்மது பஷீர் ஜனவரி 19, 1908-ல் பழைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் (இன்றைய கேரளத்தின் வைக்கம் தாலுகாவில்) தலையோலப்பரம்பு என்னும் சிற்றூரில் ஆறு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் மூத்த பிள்ளையாகப் பிறந்தார்.பஷீரின் தந்தையார் பெயர் காயி அப்துல் ரகுமான், தாயார் பெயர் குஞ்ஞாச்சுமா. அப்துல் காதர், பாத்தும்மா, ஹனீஃபா, ஆனும்மா, அபுபக்கர் ஆகியோர் உடன்பிறப்புகள். இவர்கள் பஷீரின் நாவல்களில் கதாபாத்திரங்களாக வருபவர்கள்.

பஷீர் தலையோலப்பறம்பு மதரஸாவில் இஸ்லாமிய மார்க்கக் கல்வியும், மலையாளப் பள்ளியில் ஆரம்பக்கல்வியும் பயின்றார். பின்னர் வைக்கம் ஆங்கிலப் பள்ளியில் மூன்றாம் ஃபாரம் (எட்டாம் வகுப்புக்கு நிகர்) படித்தார்.

தனிவாழ்க்கை

இந்திய சுதந்திரப்போராட்ட காலத்தில் வைக்கம் முகமது பஷீர் நாடோடியாக வட இந்தியாவில் அலைந்து திரிந்தார். கப்பல் கலாசி, சமையற்காரர், தெருவிற்பனையாளர், சுமைதூக்கும் தொழிலாளர் எனப் பலவகையான வேலைகளைச் செய்தார். மல்யுத்த ஆசிரியர், சூஃபி துறவி என பல வடிவங்களில் வாழ்ந்தார். பாலியல்தொழிலாளர்களுடனும், நகர்ப்புறச் சேரிகளிலும் வாழ்ந்தார்.

பின்னர் கேரளத்திற்கு திரும்பி கதைகள் எழுதலானார். அரசியல் பிரச்சாரத்திற்காக முன்னர் எழுதிய தீவிரமான மொழிநடை கொண்ட எழுத்துக்கள் எதுவுமே கிடைக்காமல் ஆக்கிய பஷீர் அக்காலத்தைய தன் வாழ்க்கையில் இருந்து துண்டித்துக்கொண்டார். எர்ணாகுளத்தில் ஒரு புத்தகக் கடையைச் சிறிதுகாலம் நடத்தினார். பெரும்பாலும் எழுத்துக்கள் வழியாக்க கிடைத்த குறைந்த வருவாயிலேயே வாழ்ந்தார். குறுகிய காலம் சித்தப்பிரமைக்கு ஆளாகி வைத்யமடம் ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

வைக்கம் முகமது பஷீர் கோழிக்கோட்டில் எஸ்.கே.பொற்றேக்காடு, எம்.டி.வாசுதேவன் நாயர், என்.பி.முகம்மது ஆகிய எழுத்தாளர்களின் ஆதரவில் இருந்த காலகட்டத்தில் அவருடைய 'நீலவெளிச்சம்' என்னும் சிறுகதை 'பார்கவி நிலையம்' என்னும் பெயரில் திரைப்படமாகியது. அந்த வருவாயில் கோழிக்கோடு அருகே போப்பூர் என்னும் பழைய துறைமுக நகரில் அவர் ஒரு நிலத்தை வாங்கினார். நண்பர்கள் பார்த்த பெண்ணையும் மணந்துகொண்டார். இறுதிவரை போப்பூரில் வாழ்ந்தார். ‘நான் போப்பூரில் ஒரு சுல்தானைப்போல் வாழ்கிறேன்’ என அவர் எழுதியதை ஒட்டி போப்பூர் சுல்தான் என அவர் பிரியத்துடன் அழைக்கப்பட்டார்.

பஷீரின் மனைவியின் பெயர் பாத்திமா பீபி என்ற பெயருடைய ஃபாபி (ஜூலை 15, 1937 - ஜூலை 15, 2015). அரீக்காடன் கோயக்குட்டி மாஸ்டருக்கும் புதுக்குடிப் பறம்பியில் தொண்டியில் கதீஜாவுக்கும் பிறந்தவரான பாத்திமாவை பஷீர் டிசம்பர் 18,1957-ல் தன் நாற்பதாவது வயதில் மணந்துகொண்டார். பஷீருக்கு ஷாபினா பஷீர், அனீஷ் பஷீர் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்

ஃபாபி பஷீர் ‘பஷீரின் எடியே’ என்ற பெயரில் தன் 36 ஆண்டுக்கால மணவாழ்க்கையையும் பஷீரையும் பற்றி ஒரு நூல் எழுதியிருக்கிறார்கள். தாகா மாடாயி என்னும் எழுத்தாளர் ஃபாபி பஷீர் சொல்லக்கேட்டு எழுதிய இந்நூல் 1995-ல் வெளியாகியது

அரசியல்

வைக்கம் முகமது பஷீர் தன் பதினொரு வயதில் ரயிலில் சென்ற காந்தியை பாய்ந்து ரயிலுடன் ஓடிச்சென்று தொட்டதாகத் தன்வரலாற்றில் குறிப்பிடுகிறார். அந்தத் தொடுகை அவர் வாழ்க்கையை மாற்றியது. எட்டாம் வகுப்பு முடிப்பதற்குள் வீட்டை விட்டு ஓடி இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டார்.1930-ல் கோழிக்கோடு நகரில் கேளப்பன் -கே.பி.கேசவமேனன் தலைமையில் நடந்த உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைத்தண்டனை அனுபவித்தார்.

1934-ல் பஷீர் நாட்டுவிடுதலைக்காக பகத் சிங் பாணியிலான தீவிரவாத அமைப்பொன்றை உருவாக்கி இயங்கினார். அவ்வமைப்பின் கொள்கை இதழாக 'உஜ்ஜீவனம்’ எனும் வாரப் பத்திரிகையும் தொடங்கினார். அதில் ‘பிரபா’ என்ற புனைபெயரில் கட்டுரைகள் எழுதினார். பஷீரின் பத்திரிகை தடை செய்யப்பட்டு அவரைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அதிலிருந்து தப்பிக்க வட இந்தியாவுக்குச் சென்றார். ஏறத்தாழ பத்தாண்டுகள் இந்தியா முழுவதும் சுற்றித் திரிந்து நாடோடி போலக் கழித்தார். ஆப்பிரிக்கா, அரேபியா போன்ற நாடுகள் வரைக்கும் கூடக் கப்பல் கலாசியாகப் பயணம் செய்திருக்கிறார்.

பஷீர் இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையை இறுதிவரை ஏற்றுக்கொள்ளவில்லை. தன்னைப்போன்ற தேசியப்போராட்டவீரர்கள் ஏமாற்றப்பட்டதாகவே அவர் எண்ணினார். காந்தியின் கொலையும் அவரை சோர்வுறச் செய்தது. 1948-க்குப்பின் பஷீர் அரசியலில் ஈடுபாடு காட்டவில்லை. அரசியல் பற்றிய பகடிகளை மட்டுமே எழுதியிருக்கிறார். எதிர்மறைத்தன்மை இல்லாத அவருடைய புனைவுலகில் அரசியல் விமர்சனங்களும் பெரும்பாலும் இல்லை.

இலக்கிய வாழ்க்கை

தொடக்கம்

வைக்கம் முகம்மது பஷீர் தன்னுடைய 21-ஆம் வயது முதல் வெவ்வேறு அரசியல் இதழ்களில் கட்டுரைகள் எழுதிவந்தார். அவரே நடத்திய 'உஜ்ஜீவனம்' என்ற இதழிலும் எழுதினார். ஆனால் அவை இன்று கிடைப்பதில்லை. 1946 ல் பத்மநாப பை ஆசிரியராக இருந்து நடத்திய 'ஜயகேசரி' என்னும் இதழில் எழுதிய 'தங்கம்' என்னும் சிறுகதையே முதல் புனைவுப்படைப்பு. வேலைதேடி பத்மநாப பையை அணுகிய பஷீரிடம் அவர் வேலை இல்லை, ஆனால் ஏதாவது கதை எழுதித்தந்தால் பணம் தருவதாகச் சொன்னதனால் இதை எழுதினார். கோர உருவம் கொண்ட பிச்சைக்காரியை உடலூனமுற்ற பிச்சைக்காரர் காதலிக்கும்கதை அது. காதல்கொண்ட அவர் கண்களுக்கு அவள் அழகியாகத் தெரிகிறாள். வாழ்க்கைமேல் நம்பிக்கையும், கனவும் கொண்ட பஷீரின் உலகம் அக்கதையில் இருந்து தொடங்குவதாக விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

வைக்கம் முகமது பஷீர் தொடக்க காலத்தில் தன் கதைகளைத் தானே அச்சிட்டு சுமந்து சென்று விற்றார். ஆகவேதான் தன் புத்தகங்கள் எவற்றையும் பெரியதாக எழுதவில்லை என்று அவர் பல பேட்டிகளில் கூறியிருக்கிறார். பேருந்துக்குக் காத்திருக்கும் சாமானிய வாசகன் வாசிக்கும்படியே அவர் தன் படைப்புகளை எழுதினார். பஷீரின் தொடக்ககால நூல்களைப் புகழ்பெற்ற மங்களோதயம் பதிப்பகம் வெளியிடத் தொடங்கியதும் பஷீர் புகழ்பெற்றார். அவ்வனுபவங்களை 'பகவத்கீதையும் கொஞ்சம் முலைகளும்' என்னும் கதையில் எழுதியிருக்கிறார்.

முற்போக்கு இலக்கிய இயக்கம்

கேரளத்தில் 1946-ல் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி ஆதரவில் முற்போக்கு இலக்கிய அணி உருவாக்கப்பட்டது. தகழி சிவசங்கரப்பிள்ளை, பி.கேசவதேவ், பொன்குந்நம் வர்க்கி போன்றவர்கள் அதன் முதன்மை ஆளுமைகளாக அறியப்பட்டார்கள். அவர்களில் ஒருவராக பஷீர் அடையாளம் காணப்பட்டார். அடித்தள மக்களைப் பற்றிய பஷீரின் சித்தரிப்புகள் எம்.பி.பால் போன்ற முற்போக்கு இலக்கிய விமர்சகர்களால் பாராட்டப்பட்டன. இடதுசாரி இயக்கத்தவர்களால் உருவாக்கப்பட்ட கேரள எழுத்தாளர் கூட்டமைப்பான கேரள சாகித்யப் பிரவர்த்தகக் கோஅபரேடிவ் சொசைட்டி பஷீரின் நூல்களை வெளியிட்டது. பஷீரின் நீலவெளிச்சம் என்னும் சிறுகதை பார்கவி நிலையம் என்றபெயரில் புகழ்பெற்ற சினிமாவாக வெளிவந்தது. விளைவாக அவர் அறியப்பட்ட எழுத்தாளராக ஆனார்.

இரண்டாம் எழுச்சி

சாகித்ய பிரவர்த்தகச் சங்கம் பொறுப்பில் இருந்த டொமினிக் சாக்கோ கிழக்கேமுறி 1974-ல் வெளியேறி டி.சி.புக்ஸ் என்னும் நிறுவனத்தை தொடங்கினார். அவருடைய முயற்சியால் பஷீர் பேருரு எடுத்தார். டி.சி. பஷீரின் படைப்புகளை சிறிய நூல்களாக வெளியிட்டார். பஷீரின் தனிவாழ்க்கையை ஒரு தொன்மம் போல விரிவாகப் பரப்பி நிலைநிறுத்தினார். அடுத்தடுத்த தலைமுறையினர் பஷீரை கண்டடைய டி.சி.முதன்மையான காரணம்.

முதல்தலைமுறை இலக்கிய விமர்சகர்கள் எம்.பி.பால், ஆகியோர் பஷீரை முற்போக்கு எழுத்தாளர்களான பி.கேசவதேவ், தகழி சிவசங்கரப்பிள்ளை ஆகியோருடன் இணைத்து மூவராக முன்னிறுத்தினர். அடுத்த தலைமுறை இலக்கியவிமர்சகர்களான கல்பற்றா நாராயணன், எம்.என்.காரசேரி, போன்றவர்கள் பஷீரை மலையாள இலக்கியத்தின் முதன்மைப் படைப்பாளியாக நிலைநாட்டினர். ஓ.வி.விஜயன், வி.கே.என், எம்.டி.வாசுதேவன் நாயர், எம்.பி.நாராயணப் பிள்ளை போன்ற எழுத்தாளர்களும் பஷீரை ஓர் ஆளுமைச்சித்திரமாகப் புனைந்து முன்வைத்தனர். எழுத்தாளர், இலக்கிய ஆளுமை என இருவகையிலும் பஷீர் இன்றிருக்கும் வடிவை அடைந்தார்.

இறுதிக்காலப் படைப்புகள்

வைக்கம் முகமது பஷீர் இறுதி இருபதாண்டுக்காலம் குறிப்பிடும்படி ஏதும் எழுதவில்லை. இதழாளர்களின் கட்டாயத்துக்கு உட்பட்டு அவர் எழுதியவை சிறப்புற அமையவில்லை.' சிங்கிடிமுங்கன்', 'மாந்த்ரிகப்பூச்ச' போன்றவை இக்காலத்தைய படைப்புகள். இறுதியாகப் பஷீர் எழுதிய நாவல் 'பிரேம் பாற்றா' (காதல் கரப்பான்பூச்சி) இது அவர் மரணத்திற்குப்பின் 1988-ல் டி.சி.புக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.

இலக்கிய அழகியல்

பஷீரின் எழுத்துமுறை மற்ற சமகால எழுத்துக்களிலிருந்து தனித்தன்மை கொண்டது. அவருடைய படைப்புகள் பெரும்பாலும் ஆசிரியர்கூற்றாக அமைபவை, பெரும்பாலும் அவற்றில் பஷீரே மையக்கதாபாத்திரமாகவும் இருப்பார். ‘எழுத்துகாரன்’ ‘வினீதனாய சரித்ரகாரன்’ (பணிவான வரலாற்றாசிரியன்) என அவர் தன்னைச் சொல்லிக்கொள்வார். நேரடியான பேச்சு போல அமையும் நடை கொண்டவை அவருடைய கதைகள். விரிவான விவரணைகள் அவற்றில் இருப்பதில்லை. வரலாற்றுச் சித்திரங்களும் சூழல்சித்திரங்களும் இல்லை. கதைமாந்தரும் பெரும்பாலும் பஷீரின் குடும்பத்தினரோ அவருக்கு அறிமுகமானவர்களோதான். புகழ்பெற்ற கேரள ஆளுமைகள் பலர் அவர் கதைகளில் நேரடியாகவும், பகடிக்கதாபாத்திரங்களாக உருமாற்றப்பட்டும் வருகிறார்கள். (உதாரணம் சாத்தங்கேரி மனைக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு என்ற பெயரில் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு வருகிறார்).

பஷீர் உணர்ச்சிகரமான கதைச்சூழலையும், கதைமுடிச்சுகளையும் உருவாக்குவதில்லை. பெரும்பாலான கதைகளில் கதை என்னும் மரபான வடிவமே இருப்பதில்லை. நிகழ்வுகள் மட்டுமே சித்தரிக்கப்பட்டுள்ளன. அவற்றினூடாக ஓடும் ஆசிரியனின் தனிப்பிரக்ஞை ஒன்று ஒரு பிரபஞ்சதரிசனத்தைச் சொல்லாமல் உணர்த்துகிறது. அவ்வகையான கதைகளே பஷீரின் இலக்கிய வெற்றிகளாகக் கருதப்படுகின்றன. அது நிகழாமல் வெறும் அனுபவப்பதிவுகளாக அமைந்த கதைகளும் ஏராளமாக உள்ளன.

பஷீரின் கதைகளில் எதிர்மறைத்தன்மை இல்லை. சமூகவிமர்சனத்தன்மை சப்தங்கள் போன்ற தொடக்ககாலப் படைப்புகளிலேயே உள்ளது. பால்யகாலச் சகி போன்ற தொடக்ககாலக் கதைகளில் கற்பனாவாதத் தன்மையும் அவலமுடிவும் உள்ளது. பிற்காலக் கதைகள் பெரும்பாலும் வாழ்க்கையின் ஒளியை முன்வைப்பவை. மெல்லிய பகடியுடன் மனிதர்களுக்கிடையேயான அன்பின் கணங்களை எழுதிக்காட்டியவை. உதாரணம் பாத்துமாவின் ஆடு. அவ்வகைக் கதைகள் வழியாகவே பஷீர் பெரும்படைப்பாளியாக விமர்சகர்களால் கருதப்படுகிறார்.

நாவல்

பஷீர் எழுதிய ஒரே நாவல் 'ஒரு காமுகன்றே டைரி'. இது பின்னர் எம்.டி.வாசுதேவன் நாயரால் 1983-ல் ‘அனுராகத்தின்றே தினங்கள்’ என்ற பெயரில் தலைப்பு மாற்றம் செய்யப்பட்டது. இது ஒரு காதல்கதையை ஆசிரியரின் டைரிக்குறிப்புகள் வழியாகச் சொல்லும் படைப்பு.

குறுநாவல்கள்

வைக்கம் முகமது பஷீரின் குறுநாவல்களே அவருடைய முதன்மைப் படைப்புகளாகக் கருதப்படுகின்றன. அவர் எழுதியவற்றில் நீளமான குறுநாவல்களை நாவல் என்றே வெளியிட்டுள்ளனர்.

பால்யகால சகி (1944)

இளம்பருவத்து தோழி என்ற பெயரில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள இந்நாவல் பஷீரின் தன்வரலாற்றுச் சாயல் உள்ளது. மஜீத் என்னும் மையக்கதாபாத்திரத்தின் தந்தை தொழில் வீழ்ச்சி அடைந்து வறுமை அடைகிறார். வீட்டைவிட்டுச்செல்லும் மஜீத் தன் இளமைப்பருவத்துத் தோழி சுஹராவை நினைத்துக்கொண்டிருக்கிறான். அவன் திரும்பி வரும்போது சுஹரா மணமாகி, நோயுற்று மறைகிறாள்.

சப்தங்கள் (1947)

பஷீரின் நாவல்களில் உரத்து ஒலிக்கும் படைப்பான இக்குறுநாவல் ஒரு முன்னாள் படைவீரன் தன் கொந்தளிப்பான வாழ்க்கையைச் சொல்வதுபோலவும் அதைக் கதைசொல்லி இருளிலிருந்து கேட்பதுபோலவும் எழுதப்பட்டது

என் தாத்தாவுக்கு ஓர் யானை இருந்தது (1951)

'என்டுப்புப்பாக் கோரான யுண்டார்னு’ இஸ்லாமிய சமூகத்தில் இருந்த பழம்பெருமை பேசும் பழக்கத்தைப் பகடி செய்து, அதேசமயம் எளிய காதல்கதையாக பஷீர் எழுதிய நாவல்.

பாத்துமாவின் ஆடு (1959

பஷீர் சில காலம் மனநோயால் பீடிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்குப்பின் ஓய்வுக்காகத் தலையோலப்பறம்பில் தன் சொந்த வீட்டில் வந்து அவர் தங்கும்போது நிகழ்ந்தவையாக இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. ‘பாத்துமாவின் ஆடு’ உற்சாகமான ஒரு குடும்பசித்திரம். மனநிலை பிறழ்ந்து, சிகிச்சைக்குப்பிறகு, ஓய்வெடுக்கும் பொருட்டுத் தன் குடும்ப வீட்டுக்கு வந்து தங்குகிறார் பஷீர். அங்கு அவருடைய உம்மா, தம்பி ஹனீபா, அவர் மனைவி, தங்கை, அவள் கணவன் இவர்களுடைய குழந்தைகள் மற்றும் உம்மாவின் வளர்ப்புக் கோழிகள் உள்ளனர். பக்கத்தில் தங்கை பாத்துமாவும் அவள் குழந்தைகளும் கணவனும் அவளுடைய செல்ல ஆடும் வசிக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணாதிசயம். ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறார்கள். ஏமாற்றுகிறார்கள். ஏமாறுகிறார்கள். அன்பு செலுத்துகிறார்கள். இந்தக் குடும்ப நாடகத்தை நகைச்சுவையுடன் கூறுகிறார் பஷீர். இந்நாடகத்தில் மையக்கதாபாத்திரம் பாத்துமாவின் ஆடுதான். பஷீரின் படைப்பியக்கத்தின் சிறப்பான இடங்கள் குழந்தைகளையும் மிருகங்களையும் அவர் காட்டுமிடங்கள்தான். இந்நாவலை அதற்கு சிறந்த உதாரணமாக கல்பற்றா நாராயாணன் சுட்டிக்காட்டுகிறார்

ஆனவாரியும் பொன்குரிசும் ( 1951)

பஷீரின் கதைக்களமான ஸ்தலம் என்னும் சந்தை விவரிக்கப்படும் இந்நாவல் ஆனவாரி ராமன்நாயர், பொன்குரிசு தோமா ஆகியோரை கதைமாந்தராகக் கொண்டது. இதில் ஆனவாரி ராமன் நாயர் அரசியல் தலைவரான என்.ஸ்ரீகண்டன் நாயரின் பகடி வடிவம் என்றும், பொன்குரிசு தோமா இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சித்தலைவர் தாமஸின் பகடிவடிவம் என்றும் சொல்லப்படுவதுண்டு. சாத்தங்கேரி மனைக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடும் ஒரு பகடிக்கதாபாத்திரம்.

மதிலுகள் (1965)

இந்திய சுதந்திர போராட்டம் நடைபெற்று வந்த வேளையில் இளைஞரான பஷீர் தனது வீட்டை விட்டு வெளியேறி, விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுத்ததால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் 'மதிலுகள்’ எனும் நாவலாகப் பின்னாளில் உருவானது. சிறையில் இருக்கும்போதே அவருக்கு சிறையில் பெண்கள் பகுதியில் இருக்கும் ஒருவருடன், மதில் ஒன்றின் இருபுறமும் இருந்து பேசிகொள்வதன் வாயிலாக உருவாகும் காதலும், அதன் பின்னர் நடைபெறும் சம்பவங்களும் இந்தக் கதையில் விவரிக்கப்பட்டுள்ளன.

முச்சீட்டுகாரனின் மகள் ( 1951)

ஒற்றைக்கண் போக்கர் என்னும் மூன்றுசீட்டு ஆடுபவனின் மகளுக்கும் அந்தச் சந்தையிலுள்ள மண்டன் முத்தபா என்பவனுக்குமான காதலைச் சொல்லும் குறுநாவல். இதில் பஷீர் பல கதைகளில் ‘ஸ்தலம்’ என்று சொல்லும் சந்தை களமாகியது. எட்டுகாலி மம்மூஞ்ஞு, பொன்குரிசு தோமா, ஆனவாரி ராமன் நாயர் முதலிய புகழ்பெற்ற கதைமாந்தர் இந்நாவலில் உள்ளனர்

சிறுகதைகள்

எழுத்தாளன் ஒருவன் தன் பிறந்தநாளன்று உண்ண உணவின்றிப் போராடுவதை மையப்படுத்தி 1945-ல் பஷீர் எழுதி வெளிவந்த 'ஜென்மதினம்’ சிறுகதை அவருக்குப் பெரிய அளவில் வாசகர்களிடையே வரவேற்பைப் பெற்றுத்தந்தது . நீலவெளிச்சம், கால்பாடு, உலகப்புகழ்பெற்ற மூக்கு போன்ற பஷீரின் கதைகள் புகழ்பெற்றவை.

விவாதங்கள்

1947-ல் 'சப்தங்கள்’ நாவல் வெளியான போது, வன்முறையும், கொச்சையும் நிரம்பிக் கிடப்பதாகச் சொல்லப்பட்டு மரபான பார்வைகொண்டவர்களால் விமர்சிக்கப்பட்டது. எம்பி.பால் அந்நாவல் ‘வாழ்க்கையில் இருந்து கிழித்தெடுத்த பக்கங்களால் ஆனது. விளிம்புகளில் குருதி கசிகிறது’ என அதற்கு பதில் எழுதினார்

'என்டுப்புப்பாக் கோரான யுண்டார்னு’ ( எனது தாத்தாவிடம் ஒரு யானை இருந்தது) என்ற நாவல் 1956ல் அன்றைய இடதுசாரி அரசில் கல்வியமைச்சராக இருந்த ஜோசப் முண்டசேரி சிபாரிசால் கல்லூரிப்பாடமாக ஆக்கப்பட்டபோது இஸ்லாமிய சமூகத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இடதுசாரி ஆட்சி கவிழ்ந்தபின் வந்த காங்கிரஸ் அரசால் சிலகாலம் இந்த நாவலுக்குத் தடையும் விதிக்கப்பட்டது.

மறைவு

வைக்கம் முகமது பஷீர் ஜூலை 5, 1994-ல் மறைந்தார்.

விருதுகள்

  • பத்மஸ்ரீ விருது- 1982
  • கேரள சாகித்ய அக்காதமி விருது-1970
  • மத்திய சாகித்ய அக்காதமி விருது- 1972
  • கேந்த்ர சாகித்ய அக்காதமி பெல்லோஷிப் 1981
  • சம்ஸ்கார தீபம் விருது 1987
  • கோழிக்கோடு பல்கலையின் கௌரவ டாக்டர் பட்டம் 1987
  • லலிதாம்பிகா அந்தர்ஜனம் விருது 1992
  • வள்ளத்தோள் விருது- 1993
  • முட்டத்து வர்க்கி விருது-1993

வாழ்க்கை வரலாறுகள்,நினைவுகள்

நூல்கள்
  • பஷீர் தனிவழியிலோர் ஞானி -பேராசிரியர் எம்.கே.ஸாநு ( தமிழில் யூமா வாசுகி. பாரதி புத்தகாலயம்).
  • பஷீர் தனிமையில் பயணிக்கும் துறவி- பேராசிரியர் எம்.கே சானு (தமிழில் நிர்மால்யா) சாகித்ய அக்காதமி வெளியீடு
  • வைக்கம் முகம்மது பஷீர்- காலம் முழுதும் கலை - இ.எம்.அஷ்ரப். (தமிழில் குறிஞ்சிவேலன்-கிழக்கு பதிப்பகம்)
  • வைக்கம் முகமது பஷீர் - எம்.என்.காரசேரி- சாகித்ய அக்காதமி இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை.
ஆவணப்படம்

எம்.ஏ.ரஹ்மான் எடுத்த பஷீர் த மான் என்னும் ஆவணப்படம் பஷீர் இருக்கையிலேயே படமாக்கப்பட்டது. இதில் பஷீரின் பழையகால வாழ்க்கையை ஓவியர் நம்பூதிரி படங்களாக வரைந்தார். (பஷீர் த மான் ஆவணப்படம் காணொளி )

பஷீர் தினம்

கேரளத்தில் ஜூலை 4 ஆம் தேதி பஷீர்நாள் ஆக கொண்டாடப்படுகிறது. அன்று பஷீர் மீதான வாசிப்பு, விவாதம் ஆகியவை நிகழ்கின்றன.

திரைப்படங்கள்

  • பார்கவி நிலையம் ( ) பஷீரின் நீலவெளிச்சம் என்னும் கதையை ஒட்டி, பஷீர் எழுதிய திரைக்கதையின் சினிமா வடிவம். ஏ.வின்செண்ட் இயக்கியது. ( காணொளி இணைப்பு)
  • பால்யகால சகி 1967ல் சசிகுமார் இயக்கத்தில் வெளியாகியது. இது குறிப்பிடும்படி அமையாத படம்
  • பால்யகால சகி 2014 ல் பிரமோத் பையன்னூர் இயக்க மீண்டும் திரைப்படமாகியது. இதுவும் குறிப்பிடும்படி அமையவில்லை.
  • அடூர் கோபால கிருஷ்ணன்’ திரைக்கதை எழுதி இயக்க, மம்முட்டி நாயகனாக நடித்து ’மதிலுகள்’ திரைப்படம் 1990-ல் வெளிவந்தது.

இலக்கிய இடம்.

‘எல்லா இலையும் இனிக்கும் காட்டில்’ என்று கல்பற்றா நாராயணன் பஷீரின் புனைகதை உலகம் பற்றி எழுதிய நூலுக்கு தலைப்பிட்டிருக்கிறார். பஷீரின் ஆடுதான் பஷீர். அது பெரும்பசி கொண்டது, ஆகவே எல்லா இலைகளும் இனிக்கின்றன. அதுவே பஷீரின் புனைவுலகு. எதிர்மறைப் பண்புகள் இல்லாத, வாழ்க்கைமேல் நம்பிக்கை கொண்ட, இனிய உலகம். விமர்சனங்கள்கூட பகடிகள். கதையின் மையம் எப்போதும் நுட்பமான குறியீடுகள் வழியாக உணர்த்தப்படுகிறது.

’பஷீரின் கதைகள் வலுவான மையக்கரு கொண்டவை அல்ல. திட்டவட்டமான கதைக்கட்டுமானம் உடையனவும் அல்ல. ஆழமுள்ள கதைமாந்தரும் அவர்கள் சுமக்கும் மதிப்பீடுகளும் அம்மதிப்பீடுகள் மோதும் நாடகீயத் தருணங்களும் அவற்றில் இல்லை. புனைவுத்தருணங்கள் கவித்துவ தரிசனத்தின் ஒளியுடனோ தத்துவத் தரிசனத்தின் உக்கிரம் கொண்டோ வெளிப்படுவதில்லை. பஷீரின் ஆக்கங்கள் அவற்றின் மொழிநடையால் மட்டுமே பேரிலக்கியங்களாக ஆகின்றன. உலகமெங்கும் நகைச்சித்திரங்களை உருவாக்குபவர்கள் அவற்றை விமரிசனம் கலந்து கேலிச்சித்திரங்களாக ஆக்குவதே வழக்கம். பஷீர் அதிலிருந்து முற்றாக வேறுபடுகிறார். பஷீரில் கேலியே இல்லை. காரணம் அவர் எதையுமே விமரிசனம் செய்வதில்லை. பஷீர் நாம் நம்மைச்சுற்றிக் காணும் எதிர்மறைக் கூறுகள் ஏதுமில்லாத ஓர் உலகத்தை உருவாக்கி நம் முன் காட்டுகிறார். அந்தச் சிரிப்பு பஷீரின் மொழியிலேயே உள்ளது. பஷீரின் கலையின் சாரம் அதுவே

பஷீரின் இலக்கிய உலகம் முற்றிலும் அவரை மையமாக்கி இயங்குவது. பஷீர் தான் நேரடியாகவும் வேறு பெயரிலும் அவருடைய படைப்புலகு முழுக்க நிரம்பியிருக்கிறார். மலையாள மொழியைக் கற்கத் தொடங்கும் வாசகன் முதலில் வாசிக்கக்கூடிய எழுத்து பஷீருடையது. மிகமிக எளிமையான நடை. அவருடைய மிக நீளமான நாவல்கூட அதிகபட்சம் 80 பக்கம் நீளம் உடையதுதான். பஷீர், அவர் கதைகளில் வரும் சம்பவங்களும், சமூகம், தலைவர்கள், சம்பிரதாயங்கள் பற்றிய கிண்டல்களும், அதே கிண்டல் கலந்த பார்வையையும் கொண்டு சமூகத்தின் மீது கேள்வி எழுப்புபவராக இருக்கிறார்.திறனாய்வுகளின் மூலம் புதிய புதிய இலக்கிய முறைகளில் பஷீர் மலையாளத்தில் இன்று மீண்டும் மீண்டும் கண்டுபிடிக்கப்படுகிறார். வெறுமையில் மகத்துவத்தையும் மகத்துவத்தில் வெறுமையையும் கண்டு தெளிந்த சூஃபி தரிசனத்தின் பின்னணியில்தான் பஷீரை புரிந்து கொள்ளமுடியும். எந்த நவீனப் படைப்பாளியையும் விட பஷீருடன் ஒப்பிடத்தக்கவர்கள் குணங்குடி மஸ்தான் சாகிப் முதலிய சூஃபி துறவியர்தாம். ஆன்மிகம் உயரிய அங்கதத்தைச் சந்திக்கும் இடம் இதில் முக்கியமானதாகும்’ என்று ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.

நூல்கள்

நாவல்
  • ஒரு காமுகன்றே டைரி (1952) (அனுராகத்தின்றே தினங்கள்) 1984
குறுநாவல்கள்
  • காதல் கடிதம்- 1942
  • சர்ப்பயக்ஞம் 1943
  • பால்யகால சகி- 1944
  • சப்தங்கள்- 1947
  • எங்க உப்புப்பாவுக்கொரு ஆனையிருந்தது- 1951
  • மரணத்தின் நிழலில்- 1951
  • மூன்றுசீட்டு ஆட்டக்காரனின் மகள் 1951
  • ஆனவாரியும் பொன்குரிசும் 1952
  • ஸ்தலத்தே பிரதான திவ்யன் 1953
  • வாழ்க்கையின் நிழற் சுவடுகள்- 1954
  • பாத்துமாவின் ஆடு- 1959
  • மதிலுகள்- 1965
  • தாரா ஸ்பெஷல்ஸ்- 1968
  • மாந்திரிகப் பூனை- 1968
  • காதல் கரப்பான்- 1988

சிறுகதைகள்

  • ஜென்ம தினம்
  • போலீஸ்காரனின் மகள்
  • ஐசுக்குட்டி
  • நினைவுக் குறிப்பு
  • அம்மா
  • மூடர்களின் சொர்க்கம்
  • ஏழைகளின் விலைமாது
  • உலகப் புகழ்பெற்ற மூக்கு
  • ஒரு சிறைப்பறவையின் புகைப்படம்
  • பசி
  • நீலவெளிச்சம்
  • ஒரு பகவத் கீதையும் சில முலைகளும்
  • ஆனை முடி
  • அனல் ஹக்
  • சிரிக்கும் மரப்பாச்சி
  • செகண்ட் ஹாண்ட்
  • பூமியின் வாரிசுதாரர்கள்
  • பூவன்பழம்
  • சிங்கிடி முங்கன்
  • புனிதரோமம்
  • யா இலாஹி
  • கள்ள நோட்டு
  • மனைவியின் காதலன்
  • பூ நிலவில்
  • நிலவைக் காணும்போது
  • அபூர்வ தருணங்கள்
  • முதல் முத்தம்
  • ஆளரவமற்ற வீடு
  • ஏழைகளின் விலைமாது
  • கால் சுவடு
  • இடியன் பணிக்கர்
  • இரட்டிப்பு
  • வளையிட்ட கை
  • தங்கம்
  • பூமியின் வாரிசுதாரர்கள்
  • நூறுரூபாய் நோட்டு
  • எனது நைலான் குடை
  • பர்ர்ர்...
  • சிரிக்கும் மரப்பாச்சி
  • தங்க மாலை
  • எட்டுக்காலி மம்மூஞ்ஞு
  • ரேடியோகிராம் என்னும் ரதம்
  • ஒரு கணவனும் மனைவியும்
  • மனைவியைத் திருடிச்செல்ல ஆள் தேவை
  • நோட்டு
மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்
தமிழ்
  • பஷீரின் இரண்டு சிறு நாவல்களின் மொழிபெயர்ப்பு ஒரு நூலாக தமிழில் குமாரி சி.எஸ். விஜயம் மொழிபெயர்ப்பில் தேசிய புத்தக நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.
  • பஷீர் கதைகள்- ஆசிரியர் குளச்சல் மு.யூசுப் , நா. சுகுமாரன் (தொகுப்பாசிரியர்)
  • சுகுமாரன் பஷீரின் மதில்கள் நாவலை மொழியாக்கம் செய்திருக்கிறார்
  • நீல பத்மநாபன் மதில்கள் நாவலை மொழியாக்கம் செய்திருக்கிறார்.
  • பஷீர் நாவல்கள் முழுத் தொகுப்பு- ஆசிரியர் குளச்சல் மு.யூசுப்
  • உதயஷங்கர் பஷீரின் சப்தங்கள் நாவலை மொழிபெயர்த்திருக்கிறார்.
  • சுரா வைக்கம் முகமது பஷீரின்' காதல்கடிதம்', 'மரணத்தின் நிழல்' உட்படப் பல நூல்களை தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார்
ஆங்கிலம்
  • எ.இ. ஆஷர் அவர்களின் மொழிபெயர்ப்பில் (My grandpa had an elephant and other stories.) ஆங்கிலத்தில் வெளிவந்தது. பஷீரின் நூல்கள் பதினெட்டு இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

உசாத்துணை



✅Finalised Page