under review

மு. இளங்கோவன்

From Tamil Wiki
மு.இளங்கோவன்

மு.இளங்கோவன் (பிறப்பு: ஜூன் 20, 1967): இலக்கிய ஆவணப்பதிவாளர், இலக்கியவரலாற்றாசிரியர். இலக்கியப்படைப்புகளை பதிப்பதிலும் ஈடுபட்டிருக்கிறார். இணையவழிக் கல்வியை மாணவர்களிடம் பரப்புவதில் பெரும்பணி ஆற்றியவர். இலக்கண ஆய்வுகளிலும் ஈடுபட்டிருக்கிறார்.

பிறப்பு, கல்வி

கங்கைகொண்ட சோழபுரத்தை அடுத்துள்ள இடைக்கட்டு என்னும் சிற்றூரில் ஜூன் 20, 1967-ல் சி. முருகேசன் - மு. அசோதை அம்மாள் இணையருக்கு பிறந்தார். தொடக்கக் கல்வியையும் உயர்நிலைக் கல்வியையும் உள்கோட்டை அரசினர் தொடக்க, உயர்நிலைப் பள்ளிகளில் முடித்தபின் மேல்நிலைக் கல்வியை மீன்சுருட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படித்தவர். வறுமைச் சூழலால் படிக்க இயலாமல் மூன்றாண்டுகள் உழவுத் தொழிலில் ஈடுபட்டிருந்தபின் துணிக்கடை ஒன்றில் பகுதிநேரப் பணியையும் செய்தார். பின்னர் புலவர் ந. சுந்தரேசன் என்னும் தமிழாசிரியரின் வழிகாட்டலில் திருப்பனந்தாள் காசித் திருமடத்திற்கு உரிமையான செந்தமிழ்க் கல்லூரியில் சேர்ந்து இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பயின்றார் கல்லூரிப் பருவத்தில் முதல் வகுப்பில், முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார்.

புதுவைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் க.ப. அறவாணன் தலைமையில் இயங்கிய தமிழியல்துறையில் "மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்' எனும் தலைப்பில் ஆய்வு செய்து எம்.ஃபில் பட்டம் பெற்றார். திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக நிதியுதவியுடன் முனைவர்பட்ட ஆய்வினை (1993 - 1996) நிறைவு செய்தவர். முனைவர் பட்டத்திற்கு இவர் "பாரதிதாசன் பரம்பரை' என்ற தலைப்பில் ஆய்வு செய்தார். மு.இளங்கோவனின் நெறியாளராக விளங்கியவர் பேராசிரியர் மா. இராமலிங்கம்(எழில்முதல்வன்)

தனிவாழ்க்கை

1997-ல் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் "தமிழியல் ஆவணம்' எனும் திட்டப்பணியில் ஆய்வு உதவியாளராகப் பணிபுரிந்த பின்பு 1998-ல் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இசையறிஞர் வீ.ப.கா. சுந்தரம் அவர்களின் தமிழிசைக் கலைக்களஞ்சியம் எனும் நூலெழுத அவரின் உதவியாளராக ஓராண்டு பணிபுரிந்து களஞ்சியத்தின் நான்காம் தொகுதி வெளிவர உதவினார். பின்பு மேல்மருவத்தூர் அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் அறநிலைக்கு உரிமையான கலவை ஆதிபராசக்தி கலை அறிவியல் கல்லூரியில் ஜூன் 16, 1999 முதல் ஆகஸ்ட் 17, 2005 வரை தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். இந்திய அரசின் தேர்வாணையத்தால் (U.P.S.C) தேர்ந்தெடுக்கப்பெற்று ஆகஸ்ட் 18, 2005-ல் பாண்டிச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியில் இணைந்தார். காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். (மு. இளங்கோவனின் மேற்பார்வையில் நே. கலைச்செல்வி என்ற ஆய்வு மாணவர் ஜெயமோகனின் 'கொற்றவை' புதினம் பற்றி ஆய்வு செய்து 2020-ல் முனைவர் பட்டம் பெற்றார்)

மு.இளங்கோவனின் மனைவியின் பெயர் இ.பொன்மொழி. இவர்களுக்குக் கானல்வரி, தமிழ்க்குடிமகன், கண்ணகி என்னும் மூன்று மக்கள்

இலக்கியவாழ்க்கை

மாணவப் பருவத்தில் மரபிலக்கியம் மற்றும் இலக்கணங்களில் ஈடுபாடு கொண்டிருந்த மு. இளங்கோவன் மாணவராற்றுப்படை, அச்சக ஆற்றுப்படை உள்ளிட்ட மரபு இலக்கியங்களை எழுதி வெளியிட்டார். பேராசிரியர் கு. சுந்தரமூர்த்தி, பேராசிரியர் ம. வே. பசுபதி ஆகியோரிடம் தமிழ்ப்பாடம் கேட்டார். காசித்திருமடத்தின் அதிபர் அவர்களின் பணப் பரிசினை அக்காலத்தின் திருப்பனந்தாள் காசித் திருமடத்தின் காறுபாறு சுவாமிகளாக விளங்கி பின்னர் தருமபுர ஆதீனத்தின் குருமகா சந்நிதானமாக விளங்கும் தவத்திரு மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளிடமிருந்து பெற்றார்.

விடுதலைப் போராட்ட வீரர் வெ. துரையனார் அடிகளின் தன் வரலாற்று நூலை மாணவப்பருவத்திலேயே மு.இளங்கோவன் பதிப்பித்தார். படிக்கும் காலத்தில் தமிழக அளவில் கல்லூரி, பல்கலைக்கழக அளவில் பல கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப் பதக்கங்கள், சான்றிதழ்கள் பெற்றார். ஜெயங்கொண்டம் தமிழோசை நற்பணிமன்றம் நடத்திய 'தாய்மொழிவழிக் கல்வி' எனும் தலைப்பிலான ஆய்வுக்கட்டுரைப் போட்டியில் முதல்பரிசாகத் தங்கப்பதக்கம் பெற்றார். நெல்லைத் தனித்தமிழ் இலக்கியக் கழகம் நடத்திய கட்டுரைப் போட்டியில் 'மூதறிஞர் வ.சுப. மாணிக்கனாரின் தமிழ்ப்பணிகள்' எனும் தலைப்பிலும், 'பாவலர் முடியரசனாரின் தமிழ்த்தொண்டு' எனும் தலைப்பிலும் இருமுறை ஆய்வுக்கட்டுரை எழுதி இரண்டு தங்கப்பதக்கங்கள் பெற்றார்.

கவிஞர் சுரதா, நாரா.நாச்சியப்பன், சாமி. பழநியப்பன் உள்ளிட்ட பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களிடம் பழகி, திராவிட இயக்க ஏடான 'பொன்னி' இலக்கிய இதழைப்பற்றி ஆராய்ந்து 'பொன்னி ஆசிரியவுரைகள்', 'பொன்னி பாரதிதாசன் பரம்பரை', 'பொன்னி சிறுகதைகள்'(அச்சில்) உள்ளிட்ட நூல்களை வெளியிட்டார்.

மு. இளங்கோவனின் நூல்களுள் மணல்மேட்டு மழலைகள் (ஒலிநாடா வடிவம் கண்டுள்ளது), இலக்கியம் அன்றும் இன்றும், வாய்மொழிப் பாடல்கள், பழையன புகுதலும், அரங்கேறும் சிலம்புகள், பாரதிதாசன் பரம்பரை, நாட்டுப்புறவியல், அயலகத் தமிழறிஞர்கள், இணையம் கற்போம், தொல்லிசையும் கல்லிசையும் முதலியவை குறிப்பிடத்தக்கன..

தமிழகத்தில் வழங்கும் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடவும், ஆய்வுசெய்யவும் திறன்பெற்றவர். மேலும் கேரள, ஈழத்து நாட்டுப்புறப்பாடல்கள் பற்றியும் ஆய்வு செய்தவர். திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தின் வழியாக இவரது நாட்டுப்புறப் பாடல்கள் சிறப்பு இலக்கியப் பேருரைகளாக ஒலிபரப்பப்பட்டுள்ளன. தொலைக்காட்சிகளிலும் இவரின் நேர்காணல்கள் ஒளிபரப்பாகியுள்ளன.

கல்விப்பணி

பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக்கத்து மாணவர்கள் தமிழ் இணையம் பற்றிய விழிப்புணர்ச்சி பெறுவதற்குத் தமிழகத்திலும் கடல் கடந்த பிறநாடுகளிலும் நூற்றுக்கணக்கான தமிழ் இணையப் பயிலரங்குகளை நடத்தினார்.

'இணையம் கற்போம்' என்னும் தலைப்பில் இவர் எழுதிய நூல் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளிலும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஏற்பளிப்புக் கல்லூரிகளிலும் தமிழ் பயிலும் மாணவர்களுக்குப் பாட நூலாக உள்ளது. 'தமிழ் நாட்டுப்புறக் கலைகள்' என்னும் தலைப்பில் இவர் எழுதிய பாட நூல் சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகத்தில் பாடமாக உள்ளது.

ஆவணப்பணி

பண்ணிசை ஆய்வாளர் குடந்தை ப. சுந்தரேசனாரின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படமாக உருவாக்கியுள்ளார். ப. சுந்தரேசன் ஒருவருக்குதான் பரிபாடல், சிலப்பதிகாரம், திருமுறைகள், ஆழ்வார் பாசுரங்கள், சித்தர் பாடல்களைப் பண்முறையில் பாடும் ஆற்றல் உண்டு.

பெருமழைப்புலவர் என்ற பொ.வே. சோமசுந்தரனாரின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தை முன்னெடுத்தார். வட அமெரிக்க தமிழ் மக்கள் பேரவையில் ஜூலை 4, 2011 அன்று பெருமழைப் புலவர் நூற்றாண்டு விழா மலர் மு. இளங்கோவனால் வெளியிடப்பட்டது. வறுமையில் வாடும் அவரது குடும்பத்தினருக்கு தமிழக அரசின் நிதி உதவி கிடைக்க ஆவன செய்தார்.

இலங்கையில் பிறந்த விபுலானந்த அடிகளார் வாழ்க்கை வரலாற்றையும் ஆவணப்படமாக்கினார்

தமிழறிஞர்களின் வாழ்வு பணிகளையும் குறித்து ஆயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட பதிவுகளை எழுதினார்[1]. பலநூறு புகைப்படங்களை இணையத்தில் பதிவுசெய்தார். மூத்த அறிஞர்களை ஊர்தோறும் தேடிச்சென்று, பேசச்செய்து யூடியுபில் ஐம்பதுக்கும் மேற்பட்ட காணொளிகளில் பதிவுசெய்துள்ளார்.

அமைப்புப்பணிகள்

உலகத் தொல்காப்பிய மன்றம் என்னும் அமைப்பைத் தொடங்கி, பிரான்சில் அதன் தொடக்க விழாவையும், கனடாவில் முதல் கருத்தரங்கையும் நடத்தியதுடன் ஜப்பான், மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் அதன் கிளைகளை மு.இளங்கோவன் நிறுவியுள்ளார். உலகத் தொல்காப்பிய மன்றத்திற்குத் தனி இணையதளம் உள்ளது (தொல்காப்பியம் - tholkappiyam.org[2]). அந்தத் தளத்தில் தொல்காப்பியம் சார்ந்த அரிய செய்திகள் தொகுத்து ஓரிடத்தில் வைக்கப்பட்டுள்ளன

விருதுகள்

  • இந்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் செம்மொழி இளம் அறிஞர் விருது (2006-2007) இவருக்கு வழங்கியுள்ளது.
  • தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் வழங்கும் ஊடகத்துறை விருது 2021 ஆண்டுக்காக

பங்களிப்பு

மு.இளங்கோவன் பாரதிதாசன், தேவநேயப் பாவாணர் ஆகியோரின் ஆய்வுப்பார்வையை அடியொற்றி ஆய்வுசெய்பவர். ஆங்கிலக் கல்வி உருவாக்கும் தொடர் மாற்றங்களால் விரைவில் தமிழிலக்கியங்களும் பண்பாட்டுப் பதிவுகளும் மறைந்துகொண்டிருப்பதை உணர்ந்து அவற்றை ஆவணப்படுத்துவதை முதன்மைப் பணியாகச் செய்து வருபவர். பாவாணர் மரபைச் சேர்ந்த பிற ஆய்வாளர்களை போலன்றி நாட்டாரியல், கணிப்பொறியியல் ஆகியவற்றையும் கற்று ஆய்வுசெய்பவர்.

நூல்கள்

  • மணல்மேட்டு மழலைகள்
  • இலக்கியம் அன்றும் இன்றும்
  • வாய்மொழிப்பாடல்கள்
  • பழையன புகுதலும்
  • அரங்கேறும் சிலம்புகள்
  • பாரதிதாசன் பரம்பரை
  • பொன்னி பாரதிதாசன் பரம்பரை
  • பொன்னி ஆசிரியவுரைகள் (ப.ஆ.)
  • நாட்டுப்புறவியல் (வயல்வெளிப் பதிப்பகம்,2006)
  • அயலகத் தமிழறிஞர்கள் (வயல்வெளிப் பதிப்பகம், 2009)
  • இணையம் கற்போம் (வயல்வெளிப் பதிப்பகம், 2009)
  • பாவலர் முடியரசனாரின் தமிழ்த்தொண்டு
  • செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல்
  • கட்டுரைக் களஞ்சியம்
  • அச்சக ஆற்றுப்படை
  • மாணவராற்றுப்படை
  • பனசைக் குயில் கூவுகிறது
  • விடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள் (ப.ஆ)
  • மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page