under review

பூமணி

From Tamil Wiki
Revision as of 06:41, 10 January 2023 by Logamadevi (talk | contribs)
பூமணி, நன்றி : சொல்வனம்

பூமணி (மே 12, 1947) சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர். கரிசல் வட்டாரத்து வாழ்க்கையின் நுட்பங்களை அதன் முழுமையோடு தனது எழுத்தில் கலைப்படுத்தியவர். அஞ்ஞாடி நாவலுக்காக 2014-ல் சாகித்ய அகாதெமி விருது பெற்றார். இவரது பெரும்பாலான படைப்புகள் கரிசல் நிலத்தில் வாழும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டவை.

பிறப்பு, கல்வி

பூமணி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த இளையரசனேந்தல் அருகேயுள்ள ஆண்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். இவரது இயற்பெயர் பூ.மாணிக்கவாசகம். பெற்றோர் பூலித்துறை, தேனம்மாள்.

பூமணி, இளையரசனேந்தலில் தன் தொடக்ககால பள்ளிப்படிப்பையும், விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் இளநிலை இயற்பியல் பட்டபடிப்பையும் பயின்றார்.

தனிவாழ்க்கை

பூமணியின் மனைவியின் பெயர் செல்லம். இவருக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். எழுத்தாளர் சோ. தர்மன் இவரின் மருமகன். தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறையில் முதுநிலை ஆய்வாளராக பணியில் சேர்ந்த இவர், சென்னையில் கூட்டுறவு துறை துணைப் பதிவாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சென்னையில் 30 வருடம் பணியாற்றி ஓய்வுபெற்றபின் இப்போது கோவில்பட்டியில் வசித்து வருகிறார்.

இலக்கியவாழ்க்கை

பூமணி, நன்றி : தினமலர்

பூமணி கல்வி அறிவும் இலக்கிய அறிவும் பெற்றதற்கு அவர் அம்மாவே முதன்மை காரணம். சிறு வயதில் தன் அம்மாவிடம் கேட்டறிந்த நூற்றுக்கணக்காண மாயமந்திர கதைகள்தான் அவரின் கற்பனையை வளர்த்து இலக்கியத்திற்கு ஆட்படுத்தியிருக்கின்றன. "மழைக்கஞ்சியாக கதைகளைக் கரைத்து ஊட்டிய அம்மாவுக்கு" என சாகித்ய அகாதெமி விருது பெற்ற அங்காடி நாவலை தனது தாய்க்குச் சமர்ப்பணம் செய்திருக்கிறார். பூமணியின் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாவது வழிகாட்டி, கல்லூரியில் அவருக்கு ஆசிரியராக வந்த விமர்சகர் சி.கனகசபாபதி. பூமணி, விமர்சகர் சி. கனகாபதியுடன் தொடர் உரையாடலில் ஈடுபட்டு இலக்கிய அடிப்படைகளையும், நவீன இலக்கியத்தையும், யதார்த்த இலக்கிய அழகியலையும் கற்றுக்கொண்டார். பூமணியின் இலக்கிய வாழ்க்கையில் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் மூன்றாவது பெரிய ஆளுமை. கி.ராஜநாராயணனின் கதைகள் அளித்த கொந்தளிப்பை பலமுறை பலவகைகளில் பூமணி பதிவு செய்திருக்கிறார். கி.ராஜநாராயணனுடன் தொடர் உரையாடலில் இருந்த பூமணி, அவரால் சிறுகதைகள் எழுத ஊக்குவிக்கப்பட்டார். 1971இல் பூமணியின் முதல் சிறுகதை 'அறுப்பு’ தாமரை இதழில் வெளிவந்தது. அதன் பிறகு தாமரை இதழின் ஆசிரியராக இருந்த தி. க. சிவசங்கரன் பூமணியை தொடர்ந்து எழுத ஊக்குவித்தார்.

பூமணி 1966-ஆம் ஆண்டு முதல் கவிதைகள் சிறுகதைகள் எழுதி வருகிறார்.பூமணி எழுதிய மொத்த 51 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு "அம்பாரம்" பொன்னி பதிப்பகத்தால் 2007-ல் வெளியிடப்பட்டது. முதல் நாவலான "பிறகு" 1979-ஆம் வருடம் வெளியானது. தொடர்ந்து வெக்கை, நைவேத்தியம், வரப்புகள், வாய்க்கால், அங்காடி ஆகிய நாவல்கள் எழுதினார். இதில் ஆறாவது நாவலான "அஞ்ஞாடி", 2014-ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது பெற்றது. அங்காடி நாவல் சுமார் 1100 பக்கங்கள் கொண்டது. 1899-ல் நிகழ்ந்த சிவகாசி கலவரம் மற்றும் தென்மாவட்டங்களில் நிகழ்ந்த பல்வேறு வன்முறை நிகழ்வுகள் குறித்து 150 கிராமங்களில் மேற்கொண்ட கள ஆய்வு மூலம் உருவாக்கப்பட்ட நாவல் இது. ஏழு ஆண்டுகால உழைப்பில் உருவான "அஞ்ஞாடி" நாவல், 2012-ல் கிரியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இவரது மற்றொரு நாவலான "வெக்கை" அசுரன் என்ற பெயரில் தமிழ் திரைப்படமாக வெளிவந்துள்ளது.

இலக்கிய இடம்

சாகித்ய அகாதெமி விருது பெரும் எழுத்தாளர் பூமணி. நன்றி : தினமணி

பூமணி தமிழின் யதார்த்தவாத (இயல்பு வாதம்) [naturalist] இலக்கியத்துக்குப் பெருமை சேர்த்த படைப்பாளிகளுள் முக்கியமானவர். அவரது 'பிறகு’, 'வெக்கை’ ஆகிய இரு நாவல்களும் ' ரீதி ' என்ற சிறுகதைத் தொகுப்பும் அவ்வகையில் முன்னோடியான ஆக்கங்கள். ஓங்கிய பிரச்சாரக் குரலோ, பிரச்சினைகளை எளிமைப் படுத்தும் போக்கோ இல்லாத சமநிலை கொண்ட கலைப் படைப்புகள் அவருடையவை. அவரது நாவல்கள் ஒரு வகையில் யதார்த்தவாத புனைவெழுத்தின் உச்சங்களை தொட்டவை. அதன் மூலம் தொடர்ந்து தமிழில் அடுத்தகட்ட எழுத்துக்களான யதார்த்தத்தையும் மீமெய்மையையும் பிணைக்கும் படைப்புகள் பிறக்க சாத்தியங்களை அமைத்தவை.

பூமணியின் எழுத்து பெரும்பாலும் வறண்ட கரிசல் நிலத்து மண் மற்றும் அதை சார்ந்து வாழும் மக்களை மையம் கொண்டே உருவாக்கப்பட்டது. மண்ணின் காட்சிகள், மண் சார்ந்த தகவல்கள், மண் சார்ந்த படிமங்கள் என ஒவ்வொரு கணத்திலும் மண்ணை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும் நடை அவருடையது. பூமணி நில அடிமைகளின் கதையை எழுதவில்லை மாறாக சிறு நில உடைமையாளர்களை, வறட்சியால் அல்லது வேறு காரணங்களால் கூலிவிவசாயத்துக்குச் செல்லும் மக்களையே தன் கதைகளில் காட்டுகிறார். அவரது கதைகளில் நில உடைமையாளாருக்கும் உழைப்பாளர்களுக்குமான நுட்பமான மோதல் மௌனமாக வெளிப்படுகிறது. பூமணியின் புனைவுலகில் அவர் எந்தத் தரப்பின் குரலாகவும் ஒலிப்பதில்லை. எல்லாவற்றையும் ஆழ்ந்த சமநிலையுடன், விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு உள்ளது உள்ளபடியே யதார்த்த வாத நடையில் பதிவுசெய்கிறார்.

அஞ்ஞாடி (நாவல்)

பூமணியை பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் "பூமணியின் படைப்பில் புறவுலகம் காண்பதுபோல அப்படியே பதிவாக்கப்படுகிறது. அக ஓட்டங்கள் அப்படியே சொல்லி செல்லப்படுகின்றன. எதுவும் விளக்கப்படுவதோ அல்லது சுருக்கப்படுவதோ இல்லை. நவீன தமிழ் இலக்கியத்தில் இத்தகைய யதார்த்தவாத புனைவெழுத்தின் தமிழ் முன்னோடி பூமணி அவர்களே. பூமணியின் கதைகளில், அவர் காட்டும் உலகில் சாதியின் ஏற்றத்தாழ்வும் சுரண்டலும் உள்ளது, ஆனால் அதை மீறிய மானுட உறவுகளும் அசலாக பதிவாகியுள்ளன. பூமணி சமூக மோதல்களைக்கூட மனித வாழ்க்கைக்குள் கொண்டுவந்து உறவுகளின் சிக்கல்களாக மட்டுமே காட்டுகிறார். அவரது கலையின் சிறப்பம்சமே இதுதான்" என குறிப்பிடுகிறார்.

விருதுகள்

  • இலக்கியச் சிந்தனை பரிசு
  • அக்னி விருது
  • திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க விருது
  • விஷ்ணுபுரம் விருது - 2011
  • சாகித்திய அகாதெமி விருது - 2014 (அஞ்ஞாடி நாவல்)

பங்களிப்பு

சிறுகதைத் தொகுப்புகள்
  • வயிறுகள்
  • ரீதி
  • நொறுங்கல்கள்
  • நல்லநாள்
  • அம்பாரம் (51 சிறுகதைகள் தொகுப்பு)
நாவல்கள்
  • வெக்கை
  • நைவேத்தியம்
  • வரப்புகள்
  • வாய்க்கால்
  • பிறகு
  • அஞ்ஞாடி
மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்

வெக்கை நாவல் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

திரைப்படங்கள்
  • கருவேலம்பூக்கள் (இயக்கம்)
  • அசுரன் (கதை)

தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவனத்துக்காக இவர் இயக்கிய கருவேலம்பூக்கள் திரைப்படம் பல முக்கிய உலகத் திரைப்பட விழாக்களில் பங்கு பெற்றது.

உசாத்துணை


✅Finalised Page