under review

பாரதமணி (இதழ்)

From Tamil Wiki
Revision as of 09:05, 23 August 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (changed single quotes)
பாரதமணி

பாரதமணி (1938-1950; 1987 - இன்று வரை)காந்திய எழுத்தாளர் கா.சி.வெங்கடரமணி அவருடைய நண்பர் ரகுநாதன் உதவியுடன் நடத்திய இதழ். பின்னர் இவ்விதழ் பாரதமணி சீனிவாசன் என்னும் காந்தியவாதியால் அதே பெயரில் தொடர்ந்து நடத்தப்பட்டது. மார்ச் 2012-ல் நிறுத்தப்பட்டது

கா.சி.வெங்கடரமணியின் பாரத மணி

கா.சி.வெங்கடரமணி 1922-ல் தமிழ் உலகு என்னும் இதழை தொடங்கினார். இரண்டு ஆண்டுகளில் அவ்விதழ் நின்றுவிட்டது. அதன்பின் 1938-ல் ஹிந்து பத்திரிகையின் துணையாசிரியராகவும், ரஸிகன் மற்றும் விக்னேஸ்வரா என்ற பெயர்களில் எழுதி புகழடைந்தவருமான என். ரகுநாதன் துணையுடன் பாரதமணி எனும் இதழை தொடங்கி நடத்தினார். பாரதமணி'உழவுக்கும் தொழிலுக்கு வந்தனை செய்வோம்’ என்ற பாரதியின் வாக்கை முகப்பில் கொண்டு வெளியானது. மொத்த பக்கங்கள்: 24. விலை தனிப்பிரதி 1 அணா. வருஷ சந்தா உள்நாடு - 4 ரூபாய்; வெளிநாடு - 6 ரூபாய். முதல் இதழில் எஸ்.வி.வி. ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். வ.ராமசாமி ஐயங்கார், கு.ப. ராஜகோபாலன், வே.நாராயணன், பெ.நா.அப்புசாமி, சிட்டி உள்ளிட்டோர் கட்டுரைகள் எழுதியுள்ளனர். சுத்தானந்த பாரதி, கொத்தமங்கலம் சுப்புவின் கவிதைகள் வெளியாகியுள்ளன. இதழின் ஆரம்ப கட்ட வளர்ச்சிக்கு கு.ப.ரா. மிகவும் உழைத்திருக்கிறார் என்று ஆய்வாளர் அரவிந்த் சுவாமிநாதன் கூறுகிறார்.[1] கு.ப.ராஜகோபாலன் இவ்விதழில் சிறிதுகாலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.

பாரதமணி

அடுத்தடுத்த இதழ்களில் ரஸிகன் (என்.ரகுநாதன்), ந. பிச்சமூர்த்தி, சி.சு. செல்லப்பா, குமுதினி, கு.ப.சேது அம்மாள், ஜயலக்ஷ்மி சீனிவாசன், குகப்பிரியை, வஸந்தன் உள்ளிட்ட பலர் கதைகள் எழுதியுள்ளனர். ரா.ஸ்ரீ. தேசிகன், டி.டி.கிருஷ்ணமாச்சாரி, பி.ஸ்ரீ. ஆச்சார்யா, வரகவி அ.சுப்பிரமணிய பாரதி, கி.சந்திரசேகரன், மஞ்சேரி எஸ். ஈஸ்வரன், வே.ராகவன், கம்பதாசன், ஆர். குஞ்சிதபாதம், தி.நா.சுப்பிரமணியம், வே.நாராயணன், ய.மகாலிங்க சாஸ்திரி, ராவ்சாகிப் கே.சுப்பிரமணியம், எம்.எஸ். சுப்பிரமணியம், விஜயராகவாச்சாரியார், ரா.ராகவையங்கார், பஞ்சாபகேசய்யர், சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் கட்டுரைகளை எழுதியுள்ளனர். ஏ.எம் ரஷீத் (ஏ.மொஹம்மது ரஷீத்) என்பவரது சிறுகதைகளும் அவ்வப்போது வெளியாகியிருக்கின்றன. பாரதமணி 50 இதழ்களே வெளிவந்தன. வார இதழாக வெளிவந்து பின் மாத இதழாகியது 1950-ல் பாரதமணி நிறுத்தப்பட்டது.

பி.என். சீனிவாசனின் பாரதமணி

பாரதமணி-சீனிவாசன்

சுதந்திரப்போராட்ட வீரரான பி.என்.சீனிவாசன் காந்திய தரிசன கேந்திரம் என்னும் அமைப்பைத் தொடங்கி கா.சி.வெங்கடரமணி நடத்திவந்த பாரதமணி இதழை 1987 முதல் வெளியிட்டார். இவ்விதழ் மார்ச் 2012-ல் பொருளியல் சிக்கல்களால் நிறுத்துவதாக அறிவித்தார். ஆனால் அவருடைய மகன் வெங்கட்ராகவன், ரவி, பேத்தி அர்ச்சனா ஆகியோர் முன்னெடுப்பில் இதழ் தொடர்ந்து வெளிவருகிறது. இவ்விதழுக்கு இதழாளர் லா.சு.ரங்கராஜன் உதவிசெய்து வந்தார். பி.எம்.சீனிவாசன் செப்டெம்பர் 7, 2013-ல் காலமானார்.

முகவரி

பாரதமணி, நிர்வாக அலுவலகம், 1, 5-வது குறுக்குத் தெரு, சர்வமங்களா நகர், சிட்லபாக்கம், சென்னை-600064, தொலைபேசி-22234453

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page