under review

பத்தினிக்கோட்டம்

From Tamil Wiki
Revision as of 21:32, 20 June 2022 by Madhusaml (talk | contribs) (Finalized)
பத்தினிக்கோட்டம்
பத்தினிக்கோட்டம் - கல்கி

பத்தினிக்கோட்டம் (1964,1976) ஜெகசிற்பியன் எழுதிய சரித்திர நாவல். பல்லவர்களை சாளுக்கியர்கள் தாக்கி காஞ்சீபுரத்தைக் கைப்பற்றியதையும் பல்லவர்கள் போராடி தங்கள் ஆட்சியை மீட்டுக்கொண்டதையும் சித்தரிக்கிறது.

எழுத்து வெளியீடு

ஜெகசிற்பியன் எழுதிய பத்தினிக் கோட்டம் நாவலின் முதல் பாகம் 1964-ல் கல்கியில் தொடர் கதையாக எழுதப்பட்டது. 'பத்தினிக் கோட்டம்' நாவலின் இரு பாகங்களையும் வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

பின்புலம்

சாளுக்கிய அரசன் முதலாம் விக்ரமாதித்யன் (பொ.யு. 655–680) இரண்டாம் புலிகேசிக்குப்பின் ஆட்சிக்கு வந்தார். அப்போது சாளுக்கிய நாடு நரசிம்மவர்ம பல்லவனால் கைப்பற்றப்பட்டு பதிமூன்று ஆண்டுகளாகப் பல்லவர் ஆட்சியின் கீழ் இருந்தது. மேலைக் கங்க ஆட்சியாளரின் மகள் கங்கமகாதேவியை மணந்து அவர்களின் படையுதவியுடன் விக்ரமாதித்யன் வாதாபியைக் கைப்பற்றினார். தன் தாயாதிகளை ஒழித்து சாளுக்கிய அரசை வலுவாக நிலைநிறுத்தினார்.

விக்ரமாதித்யன் நரசிம்மவர்ம பல்லவனின் மகன் இரண்டாம் மகேந்திரவர்ம பல்லவனுடன் தொடர்ந்து எல்லைப்போர்களில் இருந்தார். அதன்பின் மகேந்திரவர்ம பல்லவனின் மகன் முதலாம் பரமேஸ்வர வர்மனுடன் போரிட்டார். பாண்டிய அரசன் அரிகேசரி பராங்குச மாறவர்மன் துணையுடன் பல்லவர்களைத் தாக்கினார். பல்லவர் தலைநகரமான காஞ்சிபுரத்தைக் கைப்பற்றி உறையூர் வரை படைகொண்டு வந்தார்.

பரமேஸ்வர வர்மன் காஞ்சிபுரத்தில் இருந்து அகன்று படைகளை திரட்டிக்கொண்டு விக்ரமாதித்யனின் நட்புநாடான கங்கநாட்டின் மேல் படையெடுத்துச் சென்று கங்கமன்னர் பூவிக்ரமனை விளாந்தை என்னும் இடத்தில் பொ..யு 670-ல் நடந்த போரில் தோற்கடித்தார். அதன்பின் பொ.யு. 674-ல் பெருவளநல்லூர் என்னும் இடத்தில் நடந்த போரில் விக்ரமாதித்யனின் படைகளை தோற்கடித்தார். விக்ரமாதித்யனின் மகன் வினயாதித்யனும் பேரன் விஜயாதித்யனும் தோற்கடிக்கப்பட்டனர். பல்லவநாடு தன் ஆட்சியை மீட்டுக்கொண்டது. பரமேஸ்வர வர்மனுக்குப் பின் புகழ்பெற்ற அரசனாகிய இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவன் ஆட்சிக்கு வந்தான்

கதைச்சுருக்கம்

இரண்டாம் மகேந்திரவர்ம பல்லவன் மறைந்ததும் பரமேஸ்வர வர்மன் ஆட்சிக்கு வருகிறான். சாளுக்ய அரசன் முதலாம் விக்ரமாதித்யன் காஞ்சிமேல் படைஎடுத்துவந்து தலைநகரை கைப்பற்றுகிறான். பரமேஸ்வர வர்மன் தலைமறைவாகத் தப்பி ஓடுகிறான். சிற்ப கலைஞர் பரவாதிமல்லரின் இல்லத்தில் ஓவியக் கலைஞனாக மறைந்து வாழும் பரமேஸ்வரன் மீது கங்கநாட்டு இளவரசி உத்தமசீலி காதல் கொள்கிறாள். பல்லவர்களுக்கும் சாளுக்கியர்களுக்குமான போரும், சாளுக்கியர்களின் தாயாதிகள் நடுவே ஓடும் சூழ்ச்சிகளும் விரிவாக விளக்கப்படுகின்றன. இறுதியில் பல்லவ அரசன் பரமேஸ்வர வர்மன் காஞ்சியைக் கைப்பற்றுகிறான்

நடை

சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டங்கள் நிறைந்த பல்லவப் பெருநாட்டின் சோழ மண்டலக் கோநகரான பல்லவபுரத்துக்கு வடமேற்கே, காஞ்சியிலிருந்து உறையூர் செல்லும் நெடுஞ்சாலையொன்றில், நாற்புறமும் வராகச் சின்னங்களுடன் கூடிய நூலாக் கலிங்கத் திரைகளால் மூடப் பெற்றிருந்த ஓர் அழகிய சிவிகை வெகு வேகமாக வந்து கொண்டிருந்தது.

திருவாசி வடிவிலே முன்னும் பின்னுமாக வளைந்திருந்த அந்தச் சிவிகையின் நுகங்களைத் திண்தோள் வீரர்களாய் விளங்கிய அறுவர் விநய உற்சாகத்தோடு சுமந்து 'திம், திம்மென விரைந்து கொண்டிருந்தனர். அவர்களின் அந்த ஒட்ட நடைக்கேற்ப, காலில் அணிந்திருந்த இரும்புத் தண்டைக் காப்புகளும், கையில் பற்றியிருந்த ஈட்டிகளின் வளையங்களும் 'ஜல், ஜல்'லென்ற ஒலியை எழுப்பின. கோமளச் சூரியன் குட திசையில் சாயும் நேரம். மரஞ் செடி கொடிகளெல்லாம் மஞ்சள் குளித்துச் சீதளத் தென்றலில் சிகை உலர்த்தத் தொடங்கும் சமயம்.

தொடர்ச்சிகள்

கல்கியின் சிவகாமியின் சபதம் நாவல் முதலாம் நரசிம்ம வர்ம பல்லவன் வாதாபியை வென்ற கதையைச் சொல்கிறது. சாண்டில்யன் எழுதிய ராஜதிலகம் நாவலும் இதே கதைக்களத்தைக் கொண்டது

இலக்கிய இடம்

'பத்தினிக் கோட்டம்' வெளிவந்த காலத்தில் விரும்பப்பட்ட நாவலாக இருந்தது. ஜெகசிற்பியன் நாவல்களில் இதுவே பெரியது. ஆனால் இதன் கட்டமைப்பு தொடர்கதையாக அமைந்தமையால் கதை பெரிதும் அலைக்கழிந்து மையமிழந்ததாகவே உள்ளது. பல்லவர்களின் ஒரு காலகட்டத்தின் சித்தரிப்பு.

உசாத்துணை

பத்தினிக் கோட்டம் சிலிக்கான் ஷெல்ப்


✅Finalised Page