under review

ப.வ. இராமசாமி ராஜு

From Tamil Wiki
பிரதாப சந்திர விலாசம் நாடகம் இரண்டாம் பதிப்பு

ப.வ. இராமசாமி ராஜு (பண்ருட்டி வல்லம் இராமசாமி ராஜு; 1852-1897) தமிழின் முன்னோடி நாடக ஆசிரியர். 1877-ல் பிரதாப சந்திர விலாசம் என்ற நாடக நூலை வெளியிட்டவர். லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்ற பின், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், சம்ஸ்கிருத மொழிகள் அறிந்தவர். சம்ஸ்கிருதத்திலும், ஆங்கிலத்திலும் நூல்கள் எழுதியிருக்கிறார். ஆங்கிலத்தில் நாடகம் எழுதிய தமிழ் முன்னோடிகளுள் ஒருவர்.

பிறப்பு, கல்வி

பண்ருட்டி வல்லம் இராமசாமி ராஜு என்னும் ப.வ. இராமசாமி ராஜு, 1852-ல், திண்டிவனத்தில், செல்வ வளம் மிக்க குடும்பத்தில் பிறந்தார். தந்தை அரங்கசாமி ராஜு, பிரிட்டிஷ் அரசில் உப்பளத் துறை அதிகாரியாகப் (Salt Assistant Superintendent) பணியாற்றி வந்தார். தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட குடும்பம். தந்தை தமிழ், தெலுங்கு, ஆங்கிலத்தில் வல்லவராக இருந்தார். ஆனால், இராமசாமி ராஜு ஆங்கிலம் அறியாதவராக, அதில் ஆர்வமற்றவராக வளர்ந்தார். அதனால் தந்தை கண்டித்தார். மனம் வருந்திய இராமசாமி ராஜுவை உறவினர் இராமச்சந்திர நாயுடு சென்னைக்கு அழைத்துச் சென்று வளர்த்தார்.

தொடக்கக் கல்வியை நிறைவு செய்த ராஜு, உயர் கல்வியை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்றார். தன் பகுதியில் வசித்த ஐரோப்பிய சிறுவர்களுடன் நெருங்கிப்பழகி ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டார். சரளமாக ஆங்கிலத்தில், எழுதுவதிலும், பேசுவதிலும் வல்லவரானார். சென்னை மாநிலக் கல்லூரியில் 1871-ல் பி.ஏ. பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

படிப்பை முடித்ததும் சென்னை பச்சையப்பன் கலாசாலையில் சில வருடங்கள் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் பின் காஞ்சிபுரம் பச்சையப்பன் கலாசாலைக்குத் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அங்கு மாணவர்கள் சேர்க்கையை அதிகரித்ததுடன் மாணவர்கள் ஊக்கமுடன் கல்வி பயில பல்வேறு நடைமுறைகளைக் கொண்டு வந்தார். அக்காலத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த சி. எஸ். க்ரோல், ஐ.சி.எஸ். இராமசாமி ராஜுவை கடல் சுங்கத்துறை அலுவலகத்தில் (Department of Sea Customs) இறக்குமதிப் பிரிவு மேலாளராக்கினார். சில வருடங்களிலேயே ராஜு 'இன்ஸ்பெக்டர் ஆஃப் சீ கஸ்டம்ஸ்’ (Inspector of Sea Customs) ஆகப் பதவி உயர்வு பெற்றார்.

லண்டனில் மேற்கல்வி

இராமசாமி ராஜு 1882-ல் லண்டனுக்குச் சென்றார். அங்கு 'இன்னர் டெம்பிள்’ அமைப்பில் பாரிஸ்டர் படிப்பை முடித்ததும் லண்ட ன் யூனிவர்சிட்டி கல்லூரியிலும், ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிட்டியலும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளின் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

1886-ல் இந்தியா திரும்பிய இராமசாமி ராஜு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பதிவு செய்து கொண்டு பணிபுரிந்தார். ஏஷியாடிக் சொசைட்டியின் உறுப்பினராக இருந்தார். தெய்வபக்தி அதிகம் உடையவர். காசி-ராமேஸ்வரம், ஹரித்துவார் போன்ற பல ஆன்மிகத் தலங்களுக்கு யாத்திரை சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.

அர்ஜூன் சிங் - ஆங்கில நாடகம் - இராமசாமி ராஜு
The Tales of the Sixy Manadarins by Ramaswamy Raju
Indian Fables by Ramaswami Raju

இலக்கிய வாழ்க்கை

ஆங்கில நாடகங்கள்

தமிழ்நாட்டிலிருந்து ஆங்கிலத்தில் முதன் முதலில் நாடகங்கள் எழுதிய முன்னோடிகளுள் இராமசாமி ராஜுவும் ஒருவர். இராமசாமி ராஜு எழுதிய முதல் படைப்பு 'Urjoon Sing, Or the Princess Regained, an Indian Drama' என்னும் ஆங்கில நாடகம். இது 1875-ல் வெளியானது. தொடர்ந்து ’Lord Likely: a drama' என்னும் நாடகம் 1876-ல் வெளியானது. இவற்றை ’ஹிக்கின்பாதம்ஸ்’ நிறுவனம் வெளியிட்டிருந்தது.

பிரதாப சந்திர விலாசம்

1877-ல் சமூகச் சீர்த்திருத்தத்தை நோக்கமாகக் கொண்டு 'பிரதாப சந்திர விலாசம்’ என்னும் நாடக நூலை எழுதினார். மேயோ கவர்னர் ஜெனரல் ஆட்சி செய்த காலத்தில் நிகழ்ந்ததாக எழுதப்பட்ட இந்த நாடகம் மேடையிலும் நடிக்கப்பட்டது.

(பார்க்க பிரதாப சந்திர விலாசம்)

ஆங்கிலக் கதைத் தொகுப்புகள்

இராமசாமி ராஜு லண்டனில் வாழ்ந்தபோது, Sakuntala, The Ameer's Daughter போன்ற சிறுகதைகளை Summer Quiet, Sunlight போன்ற இதழ்களில் எழுதினார். இராமசாமி ராஜு எழுதிய The Tales Of The Sixty Mandarins 1886-ல் வெளியானது. பேராசிரியர் ஹென்றி மோர்லே (Henry Morley) அதற்குச் சிறந்ததொரு முன்னுரையை எழுதியிருந்தார். கோட்டுச் சித்திரப் படங்களுடன் வெளியான அந்த நூலை லண்டனைச் சேர்ந்த கேஸ்ஸெல் அண்ட் கம்பெனி (Cassell & company) வெளியிட்டிருந்தது. தொடர்ந்து 1887-ல் , ஈசாப் நீதிக் கதைகள், அராபிய இரவுக் கதைகளைப் போன்ற கதைகளின் தொகுப்பாக ’Indian Fables' என்ற நூலை வெளியிட்டார். இது The Leisure Hour இதழில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு.

சம்ஸ்கிருத நூல் - ஸ்ரீமத் ராஜங்கள மஹோதியானம்

சம்ஸ்கிருதத்திலும் தேர்ந்தவராக இருந்த இராமசாமி ராஜு, 'ஸ்ரீமத் ராஜங்கள மஹோதியானம்' என்னும் தலைப்பில் நூல் ஒன்றை இயற்றினார். சம்ஸ்கிருதமும் மற்றும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பும் இணைந்தது இந்த நூல். இது குறித்து இந்திரா பார்த்தசாரதி, "இந்நூலின் பிரதி, பிரிட்டிஷ் மியுஸியம் நூல்நிலையத்தில் இருப்பதாக, அமரர் சிவபாதசுந்தரம் அவர்கள், 1982-ல் நான் லண்டனில் அவரைச் சந்தித்தபோது என்னிடம் சொன்னார். இதன் ஆங்கில மொழிபெயர்ப்பும் ராஜு அவர்களால் செய்யப்பட்டிருக்கிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.

படைப்புகளில் தேசபக்தி உணர்வு

தேசபக்தி அதிகம் மிக்கவராக இருந்தார் இராமசாமி ராஜு. அவற்றைத் தன் படைப்புகளில் வெளிப்படுத்தினார். பிரதாப சந்திர விலாசத்தில் இடம் பெற்றிருக்கும்,

ஆசைசேர் தந்தை தாயர் அன்புகூர் மனைவி மக்கள்
நேசர்கள் பலரோ டின்னும் நெருங்கிய சுற்றத் தார்மேல்
பாசமுற் றிருத்தல் இந்தப்பாரினில் இயற்கை யாகும்
தேசாபி மான மொன்றே தெய்வீக உணர்ச்சி யண்ணே
- என்ற பாடலும்,
ஒருமைப்பா டென்னுமோர் உசித வழக்கங்
தன்னை ஒருகாலும் அறியாரே அண்ணே
பெருமை குலைந்ததல்லை புறத்தார்க்குக் கீழ்ப்பட்ட
பேதமை அறியீரோ அண்ணே

- என்ற பாடலும் இவரது ஒருமைப்பாட்டுணர்வுக்கும், தேசிய உணர்வுக்கும் சான்றாக உள்ளன.

ஆங்கில இதழ்களுக்குப் பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அவற்றில் சில கட்டுரைகள், சில தொகுப்பு நூல்களில் இடம் பெற்றுள்ளன. இவர் எழுதிய ’The Name of India’ என்ற ஒரு கட்டுரை 'இந்தியா’விற்கு அப்பெயர் எப்படி வந்தது என்பதை ஆராய்கிறது. இவருடைய படைப்பு ஒன்று சீன மொழியில் ’Yindu yu yan' என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

மறைவு

ஜூலை 17, 1897-ல், ஊட்டியில் இராமசாமி ராஜு காலமானார்.

ஆவணம்

இராமசாமி ராஜுவுடைய 'பிரதாபசந்திர விலாசம்’ நூல் தமிழ் இணைய நூலகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. Urjoon Sing, The Tales Of The Sixty Mandarins, Indian Fables போன்ற நூல்கள் இணையத்தில் கிடைக்கின்றன. அமேசான் தளத்திலும் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

வரலாற்று இடம்

இராமசாமி ராஜு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நாடகங்கள் எழுதிய முன்னோடிகளுள் ஒருவர். சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார் போன்றோருக்கு முன் தமிழில் சீர்த்திருத்த நாடகங்களை எழுதிய முன்னோடி ப.வ. இராமசாமி ராஜு. இவரது படைப்பு முயற்சி குறித்து வெளி. ரங்கராஜன், "ராமசாமி ராஜூ தமிழ்க் கவிதை நடையையும், பேச்சு மொழி இயல்புகளையும் தன்னுடைய காலகட்டத்தின் குறிப்பிட்ட சிந்தனைத் தேவைகளுக்காக ஒரு நாடக பாணியில் வடிவமைத்ததை ஒரு முக்கியமான படைப்புச் செயல் என்றே கருத வேண்டும். முக்கியமாக அச்சமயங்களில் அதிகம் புழக்கத்தில் இருந்த மணிப்பிரவாள நடையை விலக்கி, கம்பரின் பாதிப்பில் உருவான தமிழ்க் கவிதை ஒட்டத்தையும் இசைத்தன்மையையும் உள்வாங்கி, தமிழ், தெலுங்கு மற்றம் ஆங்கில வார்த்தைகள் கொண்ட ஒரு பேச்சுமொழியை உரையாடலுக்குப் பயன்படுத்தியதை ஒரு வித்தியாசமான முயற்சி என்றே கொள்ள வேண்டும். [1]" என்று மதிப்பிடுகிறார்.

நூல்கள்

ஆங்கில நாடகங்கள்
  • Urjoon Sing, Or the Princess Regained, an Indian Drama (1875)
  • Lord Likely: a drama (1876)
ஆங்கில நூல்கள்
  • The Tales Of The Sixty Mandarins (1886)
  • Indian Fables (1887)
  • Sreemat Pandita Rajatarangini (1893)
  • Sreemat Rajangala Mahodyanam ( English & Sanskrit -1894)
தமிழ் நூல்கள்
  • பிரதாப சந்திர விலாசம் (நாடகம்-1877)
  • ரோமியோ ஜூலியட்டு என்பவர்களுடைய கதை (1877)

உசாத்துணை

குறிப்புகள்


✅Finalised Page