under review

நடேச சாஸ்திரி

From Tamil Wiki
Revision as of 09:04, 23 August 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (changed single quotes)
பண்டித நடேச சாஸ்திரி

எஸ்.எம். நடேச சாஸ்திரி (பண்டித நடேச சாஸ்திரி) (1859 - ஏப்ரல் 11, 1906) தமிழின் தொடக்க காலநாவலாசிரியர், பண்பாட்டு ஆய்வாளர், வரலாற்று ஆய்வாளர். தமிழில் நவீன இலக்கியத்தில் பகடி இலக்கியத்தின் தொடக்கநூல் எனப்படும் தலையணை மந்திரோபதேசம் என்னும் நூலை எழுதியவர்.

பிறப்பு, கல்வி

பண்டித நடேச சாஸ்திரி 1859-ஆம் ஆண்டு திருச்சி அருகே மணக்கால் என்னும் ஊரில் சங்கேந்தி மகாலிங்க சாஸ்திரிக்கும் அகிலாண்டேஸ்வரிக்கும் மகனாகப்பிறந்தார். இவருடைய அன்னை இளமையிலேயே மறைந்தமையால் பாட்டியால் வளர்க்கப்பட்டதாக நாடோடிக்கதை தொகுதியின் முன்னுரையில் சொல்கிறார். பாட்டியின் ஊரான தஞ்சையில்தான் இளமைப்பருவம் கழிந்தது. தஞ்சையில் தொடக்கக் கல்வி. கும்பகோணம் கல்லூரியில் புகுமுக படிப்பை முடித்துவிட்டு சென்னை மாநிலக்கல்லூரியில் பி.ஏ. பட்டம்பெற்றார்.

தனிவாழ்க்கை

நடேச சாஸ்திரியின் கையொப்பம்

பண்டித நடேச சாஸ்திரியின் மனைவி பெயர் நாகலட்சுமி. இவருக்கு சாம்பவி, அகிலாண்டேஸ்வரி,கமலா ஆகிய மகள்களும் சந்திரசூடன்,சந்திரமௌலீஸ்வரன், பஞ்சநதீஸ்வரன், சந்திரசேகரன் ஆகிய மகன்களும் இருந்தனர். *

1881-ல் இந்திய சாசன- சிற்ப காப்பகத்தில் ஊழியராகச் சேர்ந்தார். தொல்லியலில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த நடேச சாஸ்திரி தென்னிந்திய சிற்பக்கலைகளை ஆராய்ந்து ஆவணப்படுத்திய இ.பி.ஹாவல் அவர்களின் நெருக்கமான உதவியாளராக இருந்தார். தென்னகம் முழுக்க பயணம் செய்தார். இவருக்கு பதினெட்டு மொழிகள் தெரியும் என்றும் தென்னக கல்வெட்டுகள் மற்றும் சுவடிகளை ஒப்பிட்டு ஆராய்வதில் மிகப்பெரிய பங்களிப்பாற்றினார் என்றும் இவருடைய வாழ்க்கைக்குறிப்பில் சொல்லப்பட்டுள்ளது.ஆங்கில ஆட்சியாளர்களின் கீழ் பல வேலைகளைப் பார்த்த நடேச சாஸ்திரி பதிவுத்துறை பொதுக் கண்காணிப்பாளர் பதவியை அடைந்தார்.

மறைவு

ஏப்ரல் 11, 1906-ல் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயத்தில் நடந்த திருவிழாவில் கலந்துகொண்டார். அப்போது போடப்பட்ட அதிர்வெடியை கேட்டு அஞ்சி ஓடிய குதிரை இவரை உதைத்து கீழே தள்ளியதனால் உயிரிழந்தார். அப்போது இவருக்கு வயது நாற்பத்தேழு.

இலக்கியவாழ்க்கை

பண்டித நடேச சாஸ்திரி முதன்மையாக ஆய்வுப்பணிகளையே செய்திருக்கிறார். தமிழ்நாட்டில் இருந்த பல வாய்மொழிக்கதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து 1885 மற்றும் 1886-களில் ஆங்கில இதழ்களில் வெளியிட்டார். அதன் வழியாக தமிழ் வரலாறு, பண்பாடு மேல் ஆங்கிலேய ஆய்வாளர்கள் கவனம்கொள்ளச் செய்தார். சம்ஸ்கிருத நாடகங்களை தமிழாக்கம் செய்தார். 1900-ஆம் ஆண்டில் தீனதயாளு என்னும் தன் முதல் நாவலை வெளியிட்டார். இந்நாவலில் பண்டித நடேச சாஸ்திரி நாவல் என்றால் என்ன என்றும், தான் எழுதுவது எவ்வகையில் நாவலாகிறது என்றும் முன்னுரையில் குறிப்பிடுகிறார். மற்ற முன்னோடி ஆசிரியர்களை விட பண்டித நடேச சாஸ்திரியின் நாவல் பற்றிய புரிதல் கலைநோக்கு கொண்டதாக உள்ளது என்று சிட்டி-சிவபாத சேகரம் கருதுகிறார்கள். ’நாவல் என்பதன் பதார்த்தம் (சொற்பொருள்) புதுமை என்பதாம். அவ்வாறே இக்கிரந்தம் புதிய நடையில் எழுதப்பட்டிருக்கும் கதையாகின்றபடியால் இதற்கு நாவல் என்ற பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. நமது தீனதயாளுதான் தமிழில் முதல்நாவல்’ என்கிறார். முன்னரே பிரதாப முதலியார் சரித்திரத்தில் தொடங்கி ஆறுநாவல்கள் வெளிவந்திருப்பது நடேச சாஸ்திரிக்கு தெரியும். ஆனால் வடிவ அடிப்படையில் தன்னுடையதே முதல் நாவல் என்று அவர் எண்ணினார். தீனதயாளு நாவலை ஒரு சுதேசமித்திரன் என்ற பெயரில்தான் முதலில் வெளியிட்டார். தமிழில் தன் படைப்புக்கு 'நாவல்’ என்ற சொல்லை பயன்படுத்தியவர் பண்டித நடேச சாஸ்திரிதான்.

நடேச சாஸ்திரி மாதவையாவுக்கு பல ஆண்டுகள் மூத்தவர். மாதவையா எழுத தொடங்குவதற்கு முன்பு கதை இலக்கியங்கள் பல எழுதியிருந்தார். ஆங்கிலத்தில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார். 1894-ஆம் ஆண்டிலேயே நடேச சாஸ்திரி A.Porteous என்னும் ஆங்கில நண்பர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தமிழில் தானவன் என்னும் துப்பறியும் நிபுணரை நாயகனாக்கி தானவன் துப்பறிந்த வழக்குகளை கதைத்தொகையாக வெளியிட்டிருக்கிறார். Joyce Emmerson Preston Muddock (1842-1934) எழுதிய Dick Donovan என்ற பழையகால துப்பறியும் நிபுணர் இக்கதாபாத்திரத்தின் முன்மாதிரி. தமிழின் முதல் துப்பறியும் கதாபாத்திரம் தானவன்தான். இந்நூல் பின்னாளில் வடுவூர் துரைசாமி அய்யங்கார் போன்றவர்களுக்கு முன்னுதாரணமாக ஆகியது.. தீனதயாளுவுக்குப்பின் கோமளம் குமரியானது, திக்கற்ற இருகுழந்தைகள், மதிகெட்ட மனைவி, மாமிகொலுவிருக்கை போன்ற நூல்களையும் எழுதியிருக்கிறார். தக்காணத்து மத்யகால கதைகள், நான்கு பக்கிரிகளின் கதை, தென்னிந்திய நாட்டுப்புறக் கதைகள் போன்ற நாட்டார்கதைகளை தொகுத்திருக்கிறார். வடமொழியிலிருந்து சாகுந்தலம், குமாரசம்பவம், ரகுவம்சம் போன்றவற்றை மொழியாக்கம் செய்திருக்கிறார்.

பண்டித நடேச சாஸ்திரி பெரும்பாலும் விவேகபோதினி இதழிலேயே எழுதியிருக்கிறார். வசதோத்யானம் என்னும் மொழியாக்க நூலை சுதேசமித்திரனில் 1903 முதல் 1904 வரை எழுதினார். 1922-ல் இது நூலாகியது. மீர் அம்மான் என்னும் உருது கவிஞர் எழுதிய நான்கு பக்கிரிகளின் கதை என்னும் கவிதைநூலின் மொழியாக்கம். இது அமீர் குஸ்ருவால் முதலில் சொல்லப்பட்டது, அவர் தன் குரு உடல் நலிந்திருந்த போது நாள் தோறும் சொன்ன கதைகளின் தொகுதி இது. அமீர் குஸ்ரு பாரசீக மொழியில் எழுதியதை மீர் அம்மான் உருதுவுக்கு மொழியாக்கம் செய்தார்.

நாட்டாரியல்

பண்டித நடேச சாஸ்திரி தமிழ்நாட்டாரியலின் முன்னோடி அறிஞர். வாய்மொழிக் கதைகளை தொகுத்து Folklore of South India என்னும் நான்கு தொகுதிகளை 1884 - 1893-களில் வெளியிட்டார். இத்தொகுதிக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. இங்கிலாந்தின் ராயல் சொசைட்டி இவரை உறுப்பினராகச் சேர்த்துக்கொண்டது

இலக்கிய இடம்

தமிழில் நாவல் என்னும் கலைவடிவைப் பற்றிய புரிதலுடன் எழுதிய முன்னோடி என நடேச சாஸ்திரியைச் சொல்கிறார்கள். செய்யுளின் சாயல் இல்லாத நடை கொண்டவர். தமிழின் முதல் துப்பறியும் கதைகளின் ஆசிரியர்.தமிழ் பகடி இலக்கியத்திற்கு இவருடைய தலையணை மந்திரோபதேசம் முன்னோடியானது. நாட்டாரியலுக்கும் முன்னோடியான அறிஞர்.

நூல்கள்

தமிழ்
  • தீனதயாளு
  • தானவன் என்ற போலிஸ் நிபுணன் கண்டுபிடித்த அற்புத குற்றங்கள் (ஐந்து கதைகள்), 1894
  • திக்கற்ற இரு குழந்தைகள், 1902
  • தலையணை மந்திரோபதேசம், 1901
  • மதிகெட்ட மனைவி
  • மாமி கொலுவிருக்கை
  • தூக்கு தூக்கி
  • தெனாலிராமன் கதைகள்
  • திராவிட பூர்வகாலக் கதைகள்
  • திராவிட மத்தியகாலக் கதைகள்
மொழியாக்கப்படைப்புகள்
  • வசந்தோத்யானம் அல்லது நான்கு பக்கிரிகளின் கதை (உருதுவில் மீர் அம்மான் எழுதிய கவிதைநூல்)
  • ரகுவம்சம்
  • ஹர்ஷசரித விமர்சனம்
  • வால்மீகி ராமாயணம்
  • குமாரசம்பவம்
ஆங்கிலம்
  • Folklore of South India, 1884
  • Tales of Tennalirama, 1890
  • The Dravidian Nights Entertainments (மதனகாமராஜன் கதை), 1886
  • The King and his four ministers
  • Hindu Feasts, Fasts and Ceremonies, 1903
  • Indian Tales of Fun, Folly and Folk-Lore

உசாத்துணை


✅Finalised Page