under review

ஞாநி

From Tamil Wiki
Revision as of 18:36, 31 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Category:இலக்கிய விமர்சகர்கள் சேர்க்கப்பட்டது)
எழுத்தாளர் ஞாநி

எழுத்தாளர் ஞாநி (ஞாநி சங்கரன்) (ஜனவரி 4, 1954 - ஜனவரி 15, 2018) எழுத்து, ஓவியம், நாடகம், இதழ் ஆசிரியர், பதிப்பாளர், அரசியல் விமர்சகர், சமூகப் போராளி என்று பன்முகங்கள் கொண்டவர். சமூக விமர்சன நோக்குள்ள வீதிநாடகங்களும், மேடைநாடகங்களும் நடத்தி வந்தவர். சிறுவர்களுக்கான இதழியலில் பல புதுமைகளைச் செய்தவர்.

பிறப்பு , கல்வி

ஞாநி சென்னையில் ஆங்கில பத்திரிக்கையாளராக பணியாற்றிய வேம்புசாமி (1907-1997)மற்றும் பங்காரு அம்மாள் தம்பதியினருக்கு ஜனவரி 4, 1954 அன்று செங்கற்பட்டில் பிறந்தார்.அவருக்கு மூன்று சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் இருக்கிறார்கள். ஞாநியின் இயற்பெயர் வே. சங்கரன் .செங்கற்பட்டு புனித சூசையப்பர் பள்ளியில் பதினோராவது வரை படித்தார். பிறகு தாம்பரத்திலுள்ள சென்னை கிறித்துவக் கல்லூரியில் ஆங்கில இளநிலை பயின்றார். பின்னர் அதிலிருந்து விலகி 1974-ல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் பட்டப் படிப்பை முடித்தார்.

தனிவாழ்க்கை

ஞாநி செப்டம்பர் 7, 1983-ல்பத்திரிக்கையாளர் பத்மாவை பரீக்ஷாவின்'தேடுங்கள்’நாடகம் ம்யூசியம் தியேட்டரில் தொடங்குவதற்கு முன் மாலை மாற்றித் திருமணம் செய்து கொண்டார். பத்தாண்டுகளுக்குப் பின் கணவன் மனைவி உறவில் விலகி நண்பர்களாக நீடித்தனர். இவருக்கு மனுஷ் நந்தன் என்ற மகன் உள்ளார்.

இதழியல் படிப்பை முடித்து விட்டு 1975-ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் நிருபராகப் பணியாற்றினார். பின்னர் அதிலிருந்து விலகி விகடன், கல்கி, தினமணி, கதிர், கணையாழி, விசிட்டர், விசிட்டர் லென்ஸ், அமுதசுரபி ஆகிய இதழ்களில் கதைகளும், கட்டுரைகளும் எழுதினார். 1978, 1985-லும் சென்னை நிருபர்கள் சங்கத்தின் செயலாளராக இரு முறை பொறுப்பு வகித்தார். 1983-ல் ’ ஜூனியர் விகடன்’ தொடங்கப்பட்டபோது அதில் வாரச்சம்பள அடிப்படையில் எழுத்தாளராக பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

ஞாநியின் எழுத்துக்கள் வெளிப்படையான சமுதாய சாடல்கள், விமர்சனங்களைக் கொண்டவை. தமிழ் எழுத்தாளர்களில் சுஜாதாவுக்கு அடுத்து, இணைய தளத்தைப் பயன்படுத்தி, தட்டச்சு செய்யத் துவங்கிய இரண்டாவது நபர் ஞாநி.

இதழியல்

கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே ’வம்பன்' என்ற கையெழுத்து இதழை நடத்தினார் மற்றும் பூச்செண்டு என்ற மாணவர் இதழில் கட்டுரைக்கு பரிசு பெற்ற ஊக்கம் வாயிலாக அவர் முழுநேர எழுத்தாளனாக உருவாகினார். 1980-ல் தினகரன் நடத்திய 'இந்தியன் சன் ’, 'அஸ்வினி’, ஆற்காடு வீராசாமி நடத்திய 'எதிரொலி தினசரி ’ போன்ற இதழ்களில் பணியாற்றினார். இதழியலில் செய்தி விமர்சன இதழ்கள் உருவாகாத காலகட்டத்திலேயே 1982-ல் தீம்தரிகிட என்ற இதழை நடத்தி முன்னேர் செலுத்தினார். பன்னாட்டு வணிக நிறுவனங்களிடம் விளம்பரம் பெற மாட்டேன் என்று பிடிவாதமாக அந்த பத்திரிக்கையை வெறும் சந்தாவை மட்டுமே நம்பி நடத்தினார். விற்பனையாளர்கள் ஒருவரும் சொல்லியபடி பணத்தை தராததால், மிகுந்த மன வருத்தத்தோடு தீம்தரிகிட இதழை நிறுத்தினார். ஜூனியர் போஸ்ட் இதழை ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்கும் தரமான இதழாக 1993-ல் மாற்றிக் காட்டினார். 1996-ல் தினமணி ஏட்டின் மேகஸின் எடிட்டர் பதவியில் பணியாற்றிய போது பொங்கல் மலர், தீபாவளி மலர், மகளிர் மலர், மாணவர் மலர், மருத்துவ மலர் போன்றவற்றை அறிமுகப்படுத்தினார்.

சுமார் 30 வருடங்கள் முன்பே தொலைக் காட்சிக்கான முதல் இதழ் 'டி.வி.உலகம்' , சென்னை நகரத்துக்கான முதல் இதழ் 'ஏழு நாட்கள்' ஆகியவை இவர் முயற்சிகள். தேங்கிக் கிடந்த சிறுவர் இதழியலை மாற்றும் விதத்தில் 1999-ல் சுட்டி விகடன் இதழை வடிவமைத்து உருவாக்கி வெற்றி பெறச் செய்தார். 2003-ல் தொடங்கி இரண்டாண்டு காலம் 'இந்தியா டுடே’ பத்திரிக்கையில் பத்தி எழுத்தாளராக அறியப்பட்டார் . 2016-ல் தமிழில் மாணவரகளுக்கான முதல் இதழாக தினமலர் வெளியிடும் பட்டம் இதழை வடிவமைத்து உருவாக்கி அதன் ஆலோசகராக இருந்து வந்தார். சிறுவர்கள், இளைஞர்களுக்கு உலக சுகாதார நிறுவனம் வரையறுத்திருக்கும் பத்து வாழ்க்கைத்திறன்களைப் பயிற்றுவிக்கும் பணியில் சுமார் பத்தாண்டுகளாக ஈடுபட்டார். 2005-ல்ஆனந்த விகடனில் அப்போதைய அரசியல் நிகழ்வுகளை விமர்சித்து'ஓ பக்கங்கள்’ என்ற புகழ்பெற்ற தொடரை வாரம்தோறும் எழுதினார். பின்னர் ஆனந்தவிகடன் நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடால் விலகிக்கொண்டார்.

ஞாநி பரீக்‌ஷா நாடகக்குழுவில்
நாடகம்

நாடக மேதையான பாதல் சர்க்காரால் பயிற்றுவிக்கப்பட்ட ஞாநி 1978 முதல் அவர் வாழ்ந்த காலம் வரை பரீக்‌ஷா என்ற நாடகக்குழுவை நடத்தி வந்தார் . சென்னையில் வீதி நாடக இயக்கத்தின் முன்னோடி. 40-க்கும் மேற்பட்ட நாடகங்களை இயக்கியுள்ளார். மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நான்கு ஆண்டுகளில் 400 மாணவர்களுக்கு வீதி நாடகப்பயிற்சி வழங்கினார்.

சென்னை நகரில் கிறித்துவக் கல்லூரிக்காக இரு முறை நாடகம் தயாரித்து கொடுத்துள்ளார். பெரியார் வாழ்க்கை பற்றிய இரண்டரை மணி நேரப் படத்தை 'அய்யா என்ற தலைப்பில் 2003-ல் உருவாக்கினார். 40-க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களையும், ஐந்து கதைப் படத் தொடர்களையும் இயக்கியுள்ளார்.

அரசியல் களத்தில் ஞாநி
அரசியல்

1971-ல் செங்கற்பட்டு மாவட்டம் முழுவதும் சோஷலிச அரசியல் ஆதரவுப் பிரசாரத்தில் ஈடுபட்டவர். வி.பி.சிங்கின் மொழிபெயர்ப்பாளராக எழுபதுக்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களில் கலந்துகொண்டார். எழுத்தில் அரசியல் விமர்சனாகவும் பல இடதுசாரி அமைப்புக்களின் மேடைகளில் விமர்சனப் பேச்சாளராகவும் இருந்த ஞாநி 1987 முதல் நேரடி அரசியல் களப்பணிகளில் ஈடுபட்டார். ஈழத்தமிழர் உரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினராக செயல்பட்டார். 2014-ல் எளிய மக்கள் கட்சியின் சார்பாக ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டார். ஜூன் 28,2014-ல் எளிய மக்கள் கட்சியிலிருந்து விலகினார்.

விருதுகள்

2016-ல் விடுதலை சிறுத்தைகள் இயக்கம் சார்பில் அயோத்திதாசர் ஆதவன் விருது வழங்கப்பட்டது.

இலக்கிய முக்கியத்துவம்

ஞாநி திரைத்துறை, நாடகத் துறை, இதழியல், இலக்கியம், கவிதை என்று ஒவ்வொரு துறையிலும், மக்கள் மற்றும் மக்கள் நலனை மட்டுமே ஞாநி முன்நிறுத்துவார்.ஞாநி தான் நம்பும் சித்தாந்தங்களின் அடிப்படையில் எந்த விஷயத்திலும் தர்க்கரீதியாக சமரசமின்றி தன் கருத்தைப் பதிவு செய்தவர். ஒரு பத்திரிக்கையாளனாகவும், எழுத்தாளராகவும் சமூகத்தின் மனசாட்சியாக செயல்படவே முயற்சி செய்கிறேன் என ஞாநி கூறுகிறார்.ஞாநி ஒரு வகையான போராட்ட உணர்வுடன் தான் உணர்ந்த அறத்தை முன் வைத்தவர் என எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.

மறைவு

சிறுநீரக கோளாறால் தொடர் சிகிச்சை பெற்று வந்த ஞாநி ஜனவரி 15, 2018-ல் காலமானார்.

படைப்புகள்

கட்டுரைகள்
  • பழைய பேப்பர்
  • மறுபடியும்
  • கண்டதைச் சொல்லுகிறேன்
  • கேள்விகள்
  • மனிதன் பதில்கள்
  • நெருப்பு மலர்கள்
  • பேய் அரசு செய்தால்
  • அயோக்யர்களும்முட்டாள்களும்
  • கேள்விக் குறியாகும் அரசியல்
  • அறிந்தும் அறியாமலும்
  • ஓ பக்கங்கள் (ஆறு தொகுதிகள்)
  • என் வாழ்க்கை என் கையில் (இணையாசிரியர்: மா)
  • ஆப்பிள் தேசம் (தினமணி கதிர்-ல் வெளிவந்த பயணக் கட்டுரைத் தொடர்)
  • சங்கராச்சாரியார் யார்?
  • ஊழலே உன் வேர் எங்கே?
  • ஏன் இந்த உலைவெறி?
  • கேள்விகள்
  • கண்டதை சொல்லுகிறேன்
நாடகம்
  • பலூன்
  • வட்டம்
  • எண் மகன்
  • விசாரணை
  • சண்டைக்காரிகள்
நாவல்கள், சிறுகதை தொகுப்புகள்
  • தவிப்பு (1998)
  • ஞாநி சிறுகதைகள்
  • மாலுவின் டைரி
திரைக்கதை
  • அய்யா (பெரியாரின் வாழ்க்கை)
குறும்படங்கள்
  • அய்யா
  • ஜேம்ஸ் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? (ஒரு ரீல் இயக்கத்தின் சார்பில் ஒரே ரீலில், ஒரே டேக்கில் எடுக்கப்பட்டது)
  • 48.2%
  • நிலா(2017)

உசாத்துணை


✅Finalised Page