under review

ஜேசுதாசன்

From Tamil Wiki
Revision as of 22:31, 1 June 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Inserted READ ENGLISH template link to English page)

To read the article in English: Professor Jesudasan. ‎

பேராசிரியர் ஜேசுதாசன்

பேராசிரியர் சி. ஜேசுதாசன் (1919 - மார்ச் 6, 2002) தமிழ் நவீன இலக்கியத்தில் ஆழ்ந்த பாதிப்பை செலுத்திய கல்லூரி ஆசிரியர், திறனாய்வாளர், இலக்கிய வரலாற்றாசிரியர். நாவலாசிரியர் ஹெப்சிபா ஜேசுதாசன் இவருடைய மனைவி

பிறப்பு கல்வி

கன்யாகுமரி மாவட்டம் கல்குளம் வட்ட சேனவிளை என்னும் ஊரில் எளிய குடும்பத்தில் பிறந்தவர் ஜேசுதாசன். குளச்சல் உயர் நிலைப்பள்ளியிலும், திருவனந்தபுரத்திலும் தமிழ் பட்டப்படிப்பை முடித்த பின், தன் தமிழிலக்கிய முதுகலைப்பட்டத்தை அண்ணாமலை பல்கலை கழகத்தில் நிறைவு செய்தார். திருவிதாங்கூர் சம்ஸ்தானத்தின் உதவித்தொகை அவருக்குக் கிடைத்தது. கோட்டாறு குமாரசாமிபிள்ளை இவரது தமிழாசிரியர். அண்ணாமலைபல்கலையில் கா.சு.பிள்ளையிடம் தமிழ்கற்றார்

தனிவாழ்க்கை

ஜேசுதாசன் நாவலாசிரியை ஹெப்சிபா ஜேசுதாசனின் கணவர். சிறிதுகாலம் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வேலை பார்த்தார். 1945-ல் திருவனந்தபுரம் பல்கலைகழக கல்லூரியில் சேர்ந்தார். பாலக்காடு சித்தூர் கல்லூரியிலும் பணியாற்றினார். திருவனந்தபுரம் பல்கலைக் கழகக் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக இருந்து 1974-ல் ஓய்வு பெற்றார். சிறப்புப்பேராசிரியராக மேலும் ஐந்தாண்டுகள் பணியாற்றினார்.ஓய்வுக்குப்பின் மனைவியின் சொந்த ஊரான புலிப்புனத்தில் ஒரு ஆங்கிலப்பள்ளியை நடத்தினார். ஜேசுதாசன்- ஹெப்சிபா தம்பதியினருக்கு நம்பி, தம்பி தங்கக்குமார் என்று இரண்டு மகன்களும் புவி தங்ககுமாரி என்று ஒரு மகளும் உண்டு. நம்பி தங்ககுமார் கல்லூரிப் பேராசிரியர். புவி பிரெஞ்சு மொழி ஆசிரியை. தம்பி தங்கக்குமார் இயற்பியல் பேராசிரியர்.

பேரா.ஜேசுதாசன் 80 ஆண்டு விழா, ஜெயமோகன், சுந்தர ராமசாமி

ஆசிரிய வாழ்க்கை

பேராசிரியர் ஜேசுதாசன் அடிப்படையில் ஒரு ஆசிரியர். விமரிசனம் உட்பட அவரது பிற பங்களிப்புகள் எல்லாமே அந்த பணியின் பகுதிகள் மட்டுமேயாகும். வகுப்பறையில் மிக விரிவாக மரபிலக்கியமும் தமிழிலக்கியமும் கற்பிப்பார். அவருடைய பணி திறன் வாய்ந்த மாணவர்களை உருவாக்கியது அவருடைய மாணவர்களில் புகழ்பெற்றவர்கள்

பேராசிரியர் ஜேசுதாசன் பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளையின் வழி வந்தவர். வையாபுரிப் பிள்ளையின் மாணவரான மு.சண்முகம் பிள்ளையின் மாணவர். ஒரு நீண்ட ஆசிரிய மாணவ மரபில் அவர் இருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

ஜேசுதாசன் நூல்

ஜேசுதாசன் கம்பராமாயணம் மீது ஆழமான பிடிப்பு கொண்ட தமிழறிஞர். அவரது வாழ்க்கையின் தொடக்கம் முதல் இறுதிக்கணம் வரை கம்பராமாயணம் அவருடன் இருந்தது. வகுப்புகளில் கம்பராமாயணத்தையும், ஆண்டாளையும் விரிவான ரசனையுடன் உரைப்பது அவர் வழக்கம். பாடல்களை இசையுடன் பாடி வகுப்பெடுக்கும் பழைய முறையைச் சேர்ந்தவர்

ஜேசுதாசன் நவீன இலக்கியத்திலும் ஈடுபாடுள்ளவர், நவீன இலக்கியம் தமிழ் கல்வித்துறையால் புறக்கணிக்கப்பட்ட காலகட்டத்தில் அதன் முக்கியத்துவத்தை கல்வி நிலையங்கள் ஏற்கச் செய்ய கடுமையாக போராடினார். நகுலன், ஆ. மாதவன், நீல பத்மநாபன், காசியபன், மா. தட்சிணாமூர்த்தி போன்ற தமிழ் எழுத்தாளர்களும் அய்யப்ப பணிக்கர், கே எஸ் நாராயணபிள்ளை போன்ற மலையாள எழுத்தாளர்களும் அன்று ஒரு கூட்டாக இயங்கினார்கள். நவீன தமிழிலக்கியத்தின் திருப்பு முனையாக கணிக்கப்படும் குருஷேத்ரம் என்ற தொகை நூல் (நகுலன் தொகுத்தது) அப்போது வெளியானது. அதில் பேராசிரியருக்கும் பங்கு உண்டு.கல்வித்துறையில் நவீன இலக்கியத்தை அறிமுகம் செய்ய அமைப்பு ரீதியாக போராடியவர் ஜேசுதாசன். புதுமைப்பித்தனைப் பற்றிய முதல் முனைவர் பட்ட ஆய்வு அவரது மாணவரான முனைவர் ஏ சுப்ரமணியபிள்ளையால் அவரது வழிகாட்டலில் நடத்தப்பட்டது. புதுமைப்பித்தன், ஆர். சண்முகசுந்தரம் ஆகியோரின் படைப்புகள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவும் அவரே காரணமாக அமைந்தார்.

இலக்கிய விமரிசகராக மிகக் குறைவாகவே பேராசிரியர் எழுதியுள்ளார். நீல பத்மநாபன், ஆர் ஷண்முக சுந்தரம், க நா சு ஆகியோர் குறித்து அவர் எழுதிய விமரிசனங்கள் முக்கியமானவை. பிற்பாடு அவருடைய வழிகாட்டலில் ஹெப்சிபா ஜேசுதாசன் மூன்று பகுதிகளாக ஆக்கிய 'தமிழிலக்கிய வரலாறு' (ஆங்கிலம்: Count Down from Salamon, Hepsipaa Jeesuthaasan) ஒரு முழுமையான இலக்கிய வரலாற்றுப் பதிவு

பேராசிரியர் ஜேசுதாசன் இசைப்பயிற்சி உடையவர். இசைச்செல்வர் லட்சுமணபிள்ளையின் மாணவரான கிருஷ்ணசாமியிடம் இசை பயின்றவர். தமிழிசையார்வம் உண்டு. அழகிய இசைப்ப்பாடல்கள் பல எழுதியுள்ளார். அவரே நன்றாக பாடவும் செய்வார். வீணை வாசிப்பார்.

பேராசிரியரின் விரிவான பேட்டி சொல்புதிது ஜனவரி 2002 இதழில் வெளிவந்தது. 'ஒரு மகத்தான விரிவான வகுப்பு அது. பேட்டி எடுத்தவர்களும் கொடுத்தவரும் மிக உயர்ந்த அறிவார்ந்த தளத்தில் இருக்கும்போது நடந்துள்ளது.. என்று அசோகமித்திரன் விருட்சம் பிப்ரவரி 2002 இதழில் அதைப்பற்றி சொல்கிறார்.

இலக்கிய இடம்

பேராசிரியர் ஜேசுதாசன் இரண்டு வகைகளில் தமிழிலக்கியத்தில் பங்களிப்பாற்றியிருக்கிறார். அவருடைய மாணவர்களிடம் அவர் உருவாக்கிய கருத்துச் செல்வாக்கு வழியாகவும், அவர் வழிகாட்டலில் ஹெப்சிபா ஜேசுதாசன் எழுதிய தமிழிலக்கிய வரலாறு வழியாகவும் அவர் தமிழில் தன் கருத்துக்களை நிலைநிறுத்தினார்.

மறைவு

பேராசிரியர் ஜேசுதாசன் மார்ச் 6, 2002 அன்று புலிப்புனம் கிராமத்தில் மறைந்தார்.

நினைவுநூல்கள்

எம்.வேதசகாய குமார் பேராசிரியர் ஜேசுதாசனின் வாழ்க்கையை இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசைக்காக எழுதியிருக்கிறார்.

நூல்கள்

கவிதை
  • முதற்கனி, 1954 (மரபுக்கவிதைத் தொகுப்பு)
ஆய்வு
  • History of Tamil Literature (YMCA Calcutta), 1961
மொழியாக்கம்
  • பண்டைய கேரளம் - பேரா இளங்குளம் குஞ்ஞன்பிள்ளை, 1979

உசாத்துணை


✅Finalised Page