under review

ஜே.பி. சாணக்யா

From Tamil Wiki
Revision as of 09:04, 23 August 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (changed single quotes)
ஜெ.பி. சாணக்யா (நன்றி-இந்து தமிழ் திசை)

ஜெ.பி. சாணக்யா (மே 28, 1973) தமிழ் சிறுகதை எழுத்தாளர், ஓவியர். திரைக்கதையாசிரியர். தமிழில் பாலியல் நுட்பங்களை உருவக அழகியலோடு எழுதியவர். அடித்தள மக்களின் வாழ்க்கையை எழுதுபவராகவும் அறியப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

தமிழகத்தின் கடலூர் மாவட்டம் முடிகண்டநல்லூர் கிராமத்தில் மே 28, 1973-ல் எம்.அப்பாதுரை - எம்.கே. தெய்வக்கன்னி தம்பதியருக்கு பிறந்தவர். பெற்றோர் இருவரும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்.

தனிவாழ்க்கை

ஜே.பி.சாணக்யா 2015-ல் திருமணமானவர். மனைவி ஜமுனாராணி. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தமிழிசைக் கல்லூரியில் கர்னாடக சங்கீத வாய்ப்பாட்டு பயின்றவர். ஓவியக்கலையில் பட்டயப்படிப்பு முடித்தவர். எழுத்தாளர். தமிழ் திரைப்படத்துறையில் இயக்குனர் பாலுமகேந்திரா, மணிரத்னம், ஆகியோருடன் பணிபுரிந்துள்ளார். "மெட்ராஸ், கபாலி" ஆகியத் திரைப்படங்களில் திரைக்கதையாசிரியராக பணிபுரிந்துள்ளார். சென்னையில் வசித்து வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

ஜெ.பி. சாணக்யா 1998 முதல் தமிழில் சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது கதைகள் காலச்சுவடு, தீராநதி, தலித் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன. ஜெ.பி. சாணக்யாவின் சிறுகதைகள் இதுவரை (2022) மூன்று தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. ’சுரா’ (சுந்தர ராமசாமி) விருதும், ’கதா’ விருதும் பெற்றுள்ளார். இவருடைய புவியீர்ப்பு விசை சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பத்திரிக்கை பிரிவான தமிழ் தலித் எழுத்தில் வெளிவந்துள்ளது. சாணக்யாவின் "ஆண்களின் படித்துறை" காலச்சுவடு சிறுகதைப்போட்டியில் முதல் பரிசு பெற்றது. சிறுகதைகளை மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அமெரிக்கன் கல்லூரி, திரவியம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ் மாணவர்கள் M.Phil பட்ட ஆய்வுக்குப் பயன்படுத்தியுள்ளனர்.

இலக்கிய இடம்

ஜெ.பி. சாணக்யா (நன்றி-காலச்சுவடு)

ஜே.பி. சாணக்யாவின் கதைகளில் வரும் மனிதர்கள் பெரும்பாலும் விளிம்புநிலை மனிதர்கள். இவர் கதைகளின் கதாபாத்திரங்களின் வழியே மனநிலையையும் அவர்களின் வாழ்க்கை நெருக்கடிகளையும் கூறுகிறார். இவரது கதைகளிலும் காமம் பேசுபொருளாக இருந்தாலும் மனப்பிறழ்வுகளை எதிர்கொள்ளும் மனிதர்களும் உள்ளனர்.

அடித்தள மக்களின் வாழ்க்கையின் உறவுச்சிக்கல்களை மிகைப்புனைவின் வழியாக எழுதியவர் ஜெ.பி.சாணக்யா. கோணங்கியின் கதைசொல்லும் முறையை அடியொற்றி பல கதைகளை உருவாக்கியிருக்கிறார். பாலுறவுச் சித்தரிப்புகள் கொண்ட இவரது கதைகள் பரவலாக கவனத்துக்கு உள்ளானவை. "ஜெ.பி.சாணக்யாவின் கதை உடல்சார்ந்த ஒரு தருணத்துடனேயே நின்றுவிடுகிறது. அதற்கு அப்பால் செல்வதில்லை. அதற்குமேல் மொழியின் புழுதி மூடியிருக்கிறது" என்று ஜெயமோகன் சொல்கிறார். "கதைகளில் பாலியல் கூறுகள், வர்ணனைகள் அதிகமாகவே காணப்பட்டாலும் இலக்கியத்துக்கான இலக்கணத்தை மீறாமல் இருப்பதாகவும் சாரு நிவேதிதா கூறுகிறார்."ஜெ.பி. சாணக்யாவின் சிறுகதைகளின் களமும் மனிதர்களும் வலிந்து எழுதப்பட்டவையா? அல்லது தான் கண்ட மனிதர்களை புனைவுகளினூடாய் பதிவிக்கும் முயற்சியா? அல்லது கட்டமைக்கப்பட்ட உறவப் புனிதங்களை கலைத்துப் போடும் முயற்சியா? என தெளிவுகளற்றிருப்பினும் இன்னொரு மனிதர்களை, இன்னொரு வாழ்வை தனது கதைகளினூடாய் காட்சிப்படுத்தியும், அபூர்வ தளங்களை, அலைவுறும் மனிதர்களை சாதாரண மொழியில் காட்சிப்படுத்தியிருக்கிறார்" என அய்யனார் விஸ்வநாத் கூறுகிறார்.

விருதுகள்

  • மத்திய அரசின் கதா விருது - 'ஆண்களின் படித்துறை' சிறுகதை
  • நெய்தல் அமைப்பின் சிறந்த இளம் படைப்பாளிக்களுக்கான 'சுரா' விருது

நூல் பட்டியல்

சிறுகதைத்தொகுப்புகள்
  • என் வீட்டின் வரைபடம், காலச்சுவடு பதிப்பகம், 2002
  • கனவுப் புத்தகம், காலச்சுவடு பதிப்பகம், 2005
  • முதல் தனிமை, காலச்சுவடு பதிப்பகம், 2016

உசாத்துணை


✅Finalised Page