under review

சு. வேணுகோபால்

From Tamil Wiki
Revision as of 20:26, 31 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Category:சிறுகதையாசிரியர்கள் சேர்க்கப்பட்டது)
சு. வேணுகோபால்

சு. வேணுகோபால் (பிறப்பு: மே 20, 1967) நவீனத் தமிழிலக்கிய எழுத்தாளர். சிறுகதை, குறுநாவல், நாவல், விமர்சனக் கட்டுரைகள் எழுதி வருகிறார். தேனி மாவட்டத்தில் விவசாயப் பின்னணியில் வளர்ந்த சு. வேணுகோபாலின் புனைவுலகு பெரும்பாலும் விவசாயம் சார்ந்ததும், கிராமியப் பின்னணி கொண்டதுமாகும்.

பிறப்பு, கல்வி

Venugopal.jpg
Venugopal2.jpg

சு. வேணுகோபால் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே போடி. அம்மாபட்டியில் ந. சுருளிவேல், பொண்ணுத்தாயி இணையருக்கு மே 20,1967-ல் பிறந்தார். தேனி மாவட்டத்தில் ஐநூறாண்டுகளுக்கு முன்பு குடியேறிய கன்னட வொக்கலிக குடியில் வந்த சு. வேணுகோபாலின் குடும்பம் அம்மாப்பட்டியில் பத்து தலைமுறைக்கு மேல் விவசாயப் பின்புலம் கொண்டது. சு. வேணுகோபாலுடன் பிறந்தவர்கள் ஏழு பேர், மூவர் சிறு வயதிலேயே மறைந்து விட்டனர். ஐவரில் மூத்தவர் அக்கா, மூன்று அண்ணன்கள்.

சு. வேணுகோபால் தன் ஆரம்பப் பள்ளியை அம்மாபட்டி ஊராட்சி ஒன்றிய இளையோர் ஆதாரப் பள்ளியில் பயின்றார். ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை அருகில் உள்ள சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். மேல்நிலைக் கல்வியை போடிநாயக்கனூர் திருமலாபுரம் நாட்டார் மேல்நிலைப் பள்ளியில் கற்றார். 1989-ல் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் (எம்.ஏ, எம்.ஃபில்) பட்டங்கள் பெற்றார்.

தனி வாழ்க்கை

Su.ve2.jpg

சு. வேணுகோபால் நவம்பர் 30, 1998-ல் வணிகவியல் துறை பேராசிரியரான பிருந்தாவை மணந்து கொண்டார். மகன்கள் நிதின், நிகில்.

சு. வேணுகோபால் எம். ஃபில் முடித்ததும் (1992) ஓராண்டு கோடைக்கானலில் உள்ள செயிண்ட் பீட்டர் மேல்நிலைப் பள்ளியில் வேலை செய்தார். பின் ஊருக்குத் திரும்பி ஒன்பது வருடம் அம்மாபட்டியில் விவசாயத்தைக் கவனித்து வந்தார். 2000-ஆம் ஆண்டு மதுரை தியாகராசர் கல்லூரியில் மீண்டும் வேலைக்குச் சேர்ந்தார். சுய நிதிக் கல்லூரியில் வேலை செய்த காரணத்தினால் தன் பணியில் பல்வேறு கல்லூரிகளுக்கு மாறினார். கோவை சி.பி.எம் கல்லூரியில் இரண்டு வருடம், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஐந்து வருடம், பொள்ளாச்சி ஸ்ரீ சரஸ்வதி தியாகராசர் கல்லூரியில் ஆறு வருடம் எனப் பணியாற்றினார். தற்போது கோவை குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியில் நான்கு ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். அம்மாபட்டியில் அண்ணன்களுடன் சேர்ந்து விவசாயத்தையும் பார்த்துக் கொள்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

Venugopal1.jpg
Su.ve1.jpg

சு. வேணுகோபால் உயர்நிலைப் பள்ளி நாட்களில் கண்ணதாசனின் பாடல் வரிகளால் ஈர்க்கப்பட்டு எழுத்தார்வம் கொண்டார். பன்னிரெண்டாம் வகுப்பு விடுமுறை நாட்களில் ஒரு தலித் இளைஞனின் வாழ்க்கை தத்தளிப்பைப் பற்றி சிறுகதை எழுதினார். தன் கல்லூரி முதல் ஆண்டில் கல்லூரிக்கு ஜெயகாந்தன் வருகை தந்ததை ஒட்டி அவரின் நாவல்கள், குறுநாவல்களை வாசித்தார். அவரின் எழுத்தின் மேலும், நேரில் சந்தித்த ஜெயகாந்தன் என்னும் ஆளுமையின் மேலும் வந்த ஈர்ப்பு சு. வேணுகோபாலை நவீன இலக்கியம் நோக்கித் திருப்பியது. ஜெயகாந்தனின் வருகைக்கு பின் தொடர்ந்து நவீன இலக்கியம் வாசிக்கத் தொடங்கினார். புதுமைப்பித்தன் தொடங்கி, சுந்தர ராமசாமி வரை இளங்கலை கல்லூரி நாட்களிலேயே வாசித்து முடித்தார்.

எம்.ஃபில் இறுதி ஆண்டில் மதுரையில் சுந்தர ராமசாமியக்கு மூன்று நாள் கருத்தரங்கு ஒன்றை பேராசிரியர் சாமுவேல் சுதானந்தா, தி.சு. நடராஜன் உதவியுடன் ஏற்பாடு செய்தார். அதில் வண்ணதாசன், ஜெயமோகன், சுரேஷ்குமார இந்திரஜித், நா. ஜெயபாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு சுந்தர ராமசாமியின் படைப்புகள் பற்றி பேசினர். சு.வேணுகோபால் தன்னை இலக்கியவாதியாக உணர அந்த நிகழ்ச்சி வழிவகுத்தது.

சு. வேணுகோபால் தன் எழுத்தின் இலக்கிய முன்னோடிகளாக புதுமைப்பித்தன், தி. ஜானகிராமன், கு. அழகிரிசாமி, சுந்தர ராமசாமி நால்வரையும் குறிப்பிடுகிறார். தி. ஜானகிராமனை ஆதர்சமாகக் கருதுகிறார். "சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் எழுத்து நடையின் பாதிப்பு என்னிடம் இல்லாவிட்டாலும் அவர்கள் நான் எழுதக் காரணமானவர்கள். நான் எழுத்தாளன் என என்னைக் கர்வம் கொள்ளச் செய்தவர்கள். அந்த வகையில் அவர்கள் என் முன்னோடிகள்" என்கிறார் சு. வேணுகோபால்.

நாவல்

சு.வேணுகோபால் 1994-ஆம் ஆண்டு ’நுண்வெளி கிரகணங்கள்' என்ற தன் முதல் நாவலை எழுதி முடித்தார். இந்நாவல் சுஜாதா ஏற்பாடு செய்த 1995-ஆம் ஆண்டின் ’குமுதம் ஏர் இந்தியா’ விருதைப் பெற்றது. அதற்குப் பரிசாக அளிக்கப்பட்ட அமெரிக்கப் பயணமும் முக்கியமான அனுபவமாக அமைந்தது. நடுவராக இருந்து நுண்வெளி கிரகணங்கள் நாவலைத் தேர்வு செய்த கோவை ஞானி பின்னாளில் சு. வேணுகோபாலின் குருவாகவும், நண்பராகவும் ஆனார். கோவை ஞானி வழி எஸ்.என். நாகராஜனிடம் சு. வேணுகோபாலுக்கு நட்பு ஏற்பட்டது.

நுண்வெளி கிரகணங்கள் நாவலை தொடராக புதிய பார்வையில் வெளியீட விரும்பிய பாவை சந்திரனுடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. பின்னாளில் சு. வேணுகோபாலின் பல குறுநாவல்கள், சிறுகதைகள் பிரசுரமாக பாவை சந்திரன் உதவினார். நுண்வெளி கிரகணங்கள் நாவல் வெளிவர தாமதமாகி 1997-ஆம் ஆண்டு வெளிவந்தது.

சிறுகதைகள்

சு.வேணுகோபால் முதன்மையாக அவருடைய சிறுகதைகளுக்காகவே நினைவுகூரப்படுகிறார். நேரடியாகவே சிறுகதைத் தொகுதியாக வெளிவந்த அவருடைய ’வெண்ணிலை’ தமிழின் சிறந்த சிறுகதைத் தொகுதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. யதார்த்தவாத அழகியல் கொண்ட சு.வேணுகோபாலின் கதைகள் வழக்கமான சிறுகதை இலக்கணத்தை மீறி ஒரு கதைக்குள் முழு வாழ்க்கையையும் முன்வைப்பவை. ’கூந்தப்பனை’ என்னும் அவருடைய குறுநாவலும் தமிழின் முதன்மையான படைப்புகளிலொன்றாக மதிப்பிடப்படுகிறது.

இலக்கிய இடம்

Su venugopal.jpg

தமிழில் பூடகத்தன்மையும், வடிவச்சுருக்கமும் கொண்ட நவீனத்துவச் சிறுகதைகள் வெளிவந்துகொண்டிருந்த காலகட்டத்தில் அதற்கு மாற்றாக மிகுபுனைவுக்கதைகள் வெளிவரத்தொடங்கின. அச்சூழலில் விரிவான கதைக்களமும் நேரடித்தன்மையும் கட்டற்ற கதைமொழியும் கொண்ட யதார்த்தவாதக் கதைகள் வழியாக சு.வேணுகோபால் ஓர் உடைவை உருவாக்கினார். 'கட்டற்ற யதார்த்தவாதக் கதைசொல்லல்' என்னும் அழகியல்போக்கு கொண்ட பிற்காலப் படைப்பாளிகள் பலருக்கும் சு.வேணுகோபால் முன்னோடியானவர்.

சு. வேணுகோபால் யதார்த்த தளத்தில் மனித வாழ்க்கையின் நேரடிப் பார்வையை எழுதியவர். சு. வேணுகோபாலின் எழுத்துலகை, "வேணுகோபால் வெறுமே உத்திக்காகவோ, புதுமைக்காகவோ கதை சொல்வதில்லை. மனித மனசெயல்பாட்டின் புரிந்துகொள்ளமுடியாத ஆழமே அவருக்கு எப்போதுமே இலக்காக உள்ளது. மனிதமனத்தின் உச்சங்களைவிட சரிவுகளில்தான் அவரது கவனம் மேலும் குவிகிறது. சமகாலத்து தமிழ் வாழ்வின் பல அவலக் கூறுகளை சதையைப் பிய்த்துப் போடுவதுபோன்ற மூர்க்கத்துடன் தன் கதைகளில் அவர் எடுத்து முன் வைத்திருக்கிறார்” என ஜெயமோகன் மதிப்பிடுகிறார்

"வாழ்க்கையில் மிகமிக இயற்கையாக மனிதர்களின் மேன்மை வெளிப்படும் தருணங்களை அடையாளப்படுத்துவதுபோலவே, மனிதர்களின் கீழ்மை வெளிப்படும் தருணங்களையும் அவருடைய படைப்புகள் முன்வைக்கின்றன. மேன்மைகளையும் கீழ்மைகளையும் எவ்வித சார்புகளும் அற்று மதிப்பிடும் பக்குவமும் முன்வைக்கும் தேர்ச்சியும் அவரிடம் ஒருங்கே காணப்படுகின்றன. அந்தக் குணமே, தமிழில் அவரைச் சிறந்த படைப்பாளியாக அடையாளப்படுத்த உதவும் பண்பாக இருக்கிறது." என்று பாவண்ணன் மதிப்பிடுகிறார்.

நூல்கள்

நாவல்கள்
  • நுண்வெளி கிரகணங்கள் (1997, வேர்கள் இலக்கிய அமைப்பு, 2017 தமிழினி)
  • ஆட்டம் (2013, நாவல்)
  • நிலமென்னும் நல்லாள் (2013, நாவல்)
  • வலசை (2017, எழுத்து பிரசுரம், 2019 தமிழினி)
குறுநாவல் தொகுப்ப
  • கூந்தப்பனை (2001, தமிழினி)
  • திசையெல்லாம் நெருஞ்சி (2008, தமிழினி)
  • பால்கனிகள் (2013, தமிழினி)
சிறுகதைத் தொகுப்பு
  • பூமிக்குள் ஓடுகிறது நதி (2000, தமிழினி)
  • களவு போகும் புரவிகள் (2001, தமிழினி)
  • வெண்ணிலை (2006, தமிழினி)
  • தாயுமானவள் (2020, தமிழினி)
  • ஒரு துளி துயரம் (2008, தமிழினி, தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைத் தொகுப்பு)
  • உறுமால்கட்டு ( 2018, சிறுவானி வாசகர் வட்டம், தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைத் தொகுப்பு)
  • உயிர்ச்சுனை (2019, தியாகு நூலகம், தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைத் தொகுப்பு)
விமர்சனக் கட்டுரைத் தொகுப்பு
  • தமிழ் சிறுகதை பெருவெளி (2018, தியாகு நூலகம், கட்டுரைத் தொகுப்பு)

விருதுகள்

  • பாரதிய பாஷா பரிஷத் விருது (மேற்கு வங்கம்)(2012)
  • நுண்வெளி கிரகணங்கள் நாவலுக்காக குமுதம் ஏர் இந்தியா விருது (1995).
  • கூந்தப்பனை நாவலுக்கு கு. அழகிரிசாமி நினைவு விருது பெற்றார்.
  • வெண்ணிலை சிறுகதைத் தொகுப்பிற்கு கேரளா பண்பாட்டுக் கழக விருது கிடைத்தது.
  • வெண்ணிலை சிறுகதைத் தொகுப்பிற்கு தமிழ்நாடு அரசு விருது (2006 – 2007).
  • ப. சிதம்பரம் உருவாக்கிய எழுத்து அமைப்பின் சார்பாக 2017 ஆண்டின் சிறந்த நாவலாக வலசை நாவல் விருது பெற்றது.
  • தன்னறம் இலக்கிய விருது (2022)

வெளி இணைப்புகள்



✅Finalised Page