under review

சி. மோகன்

From Tamil Wiki
Revision as of 20:26, 31 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Category:சிறுகதையாசிரியர்கள் சேர்க்கப்பட்டது)
சி. மோகன்
சி. மோகன்
சி.மோகன்
சி.மோகன்

சி. மோகன் (ஜூன் 12, 1952) தமிழ் இலக்கிய ஆய்வாளர், இலக்கிய விமர்சகர், மொழிபெயர்ப்பாளர். நாவல்களும் சிறுகதைகளும் எழுதியவர். 'வயல்', 'புனைகளம்' ஆகிய சிற்றிதழ்களின் ஆசிரியர், வயல் வெளியீடாக நூல்களைக் கொண்டுவந்தவர். இவருடைய இலக்கிய நினைவுக்குறிப்புகளான 'நடைவழிக் குறிப்புகள்' புகழ்பெற்றவை.

பிறப்பு, கல்வி

சி. மோகன் ஜூன் 12, 1952 அன்று மதுரையில் பிறந்தவர். வேறு ஊர்களில் இளமைக்கால வாழ்க்கை அமைந்தாலும், பத்தாம் வகுப்பு படிக்கும்போது குடும்பத்தோடு 1967-ல் மதுரைக்கு வந்தார். மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் தமிழ் முதுகலை படித்தார். மதுரைப் பல்கலையில் முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்தார், முடிக்கவில்லை.

சி.மோகன்

தனி வாழ்க்கை

காலச்சுவடு பதிப்பகத்தின் துவக்க காலத்தில் ஜி. நாகராஜன் எழுத்துக்களைத் தொகுத்தார். ஜி. நாகராஜன் முழுத்தொகுப்பு அவ்வாறு முதலில் வெளியானது. அதன் பிறகு பாளையங்கோட்டையில் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்தின் பதிப்புத்துறையில் பணியாற்றினார். அங்கு பணியாற்றியபோது நாகர்கோவிலுக்கு அடிக்கடி சென்று காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்புப் பணியும் செய்து வந்தார். 1967 முதல் 1983 வரை மதுரையில் வாழ்ந்திருக்கிறார். கிரியாவில் பணியாற்றி இருக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் தமிழ் முதுகலை படிக்கும் நாட்களில் சிறுபத்திரிகை செயல்பாடுகளில் தீவிரமாக இருந்தார். 'விழிகள்’, 'வைகை’ போன்ற சிற்றிதழ்களில் எழுதினார். ஓவியம், ஓவியர்கள் மீதான இவரது தீவிர ஈடுபாடு 'விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’ எனும் நாவலில் தெரிகிறது. இந்த நாவல் மறைந்த ஓவியர் கே. ராமானுஜத்தைப் பற்றியது. தி.ஜானகிராமனின் நடையும் சாயலும் கொண்டது சி.மோகனின் நாவல் கமலி.

இலக்கிய நட்புகள்
சி.மோகன் (பவா செல்லத்துரை, நா.முத்துக்குமாருடன்)

சி.மோகன் வெவ்வேறு இலக்கியவாதிகளுடனான நட்புகளை பதிவுசெய்தமையால் பெரிதும் அறியப்படுபவர். மதுரையில் இருந்தபோது சி.மோகனுக்கு ஜி. நாகராஜனின் இறுதிக்காலத்தில் அவரோடு பழகும் வாய்ப்பும் கிடைத்தது. அவரை மருத்துவமனையில் சேர்த்தது தொடங்கி, தத்தநேரியில் தகனம் செய்யும் வரை உடன் இருந்தார். அந்த நினைவுகளை 'ஓடிய கால்கள்’ என்ற சிறுகதையாகவும் எழுதியிருக்கிறார். ஜி. நாகராஜன் 'வாழ்வும் எழுத்தும்' என்ற நூலின் வாயிலாக அவரது ஆளுமையைப் பதிவு செய்திருக்கிறார். சாகித்ய அகாதெமி வெளியிட்ட 'இலக்கியச் சிற்பிகள்' என்ற தொகுப்பில் ஜி. நாகராஜன் பற்றி எழுதியிருக்கிறார்.

சி.மோகன்

மதுரையில் வாழ்ந்த ப. சிங்காரம் அவர்களை சந்தித்திருக்கிறார். ’புயலிலே ஒரு தோணி’, 'கடலுக்கு அப்பால்’ நாவல்கள் குறித்த சி.மோகனது கட்டுரை வாயிலாக அந்த நூல்களின் மீது புதிய கவனம் உருவாகியது. ஜனவரி 31, 1975 அன்று சுந்தர ராமசாமியை மதுரை ரயில்நிலையத்தில் சந்தித்தார். சுந்தர ராமசாமி நடத்திய 'காகங்கள்’ முதல்கூட்டத்தொடரிலேயே பேசும் வாய்ப்பும் சி.மோகனுக்கு கிடைத்தது. வெங்கட் சாமிநாதனை மதுரையில் சந்தித்து அவரோடு உரையாடினார். தருமுசிவராம் இலங்கையிலிருந்து வந்து தமிழகத்தில் இருந்த காலத்தில் அவரோடு சி.மோகனுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. மதுரையில் அவர் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். க்ரியா ராமகிருஷ்ணன் அழைப்பின் பேரில் சென்னைக்கு 1983-ல் சென்றார். அப்போது க்ரியா பதிப்பகம் சம்பத்தின் 'இடைவெளி’ நாவலைக் கொண்டுவந்த போது சம்பத்துடன் பழகும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது. க்ரியாவில் பணியாற்றிய போது எழுத்தாளர்கள் பிரபஞ்சன், கோபிகிருஷ்ணன் ஆகியோரோடு பணியாற்றினார்.

நூல் மேம்படுத்துதல்

நூல்களின் மொழிநடையையும் வடிவத்தையும் மேம்படுத்துதல், பழைய நூல்களை பிரதி ஒப்புமை நோக்கி பதிப்பித்தல் ஆகியவற்றில் சி.மோகன் திறன் கொண்டவர். சம்பத்தின் 'இடைவெளி’, சுந்தர ராமசாமியின் 'ஜே.ஜே.சில குறிப்புகள்’, அசோகமித்திரனின் 'தண்ணீர்’ போன்ற நாவல்களில் பிரதி செம்மையாக்கும் பணியை செய்து கொடுத்திருக்கிறார்.

சி.மோகன்
மொழியாக்கம்

சி.மோகன் மொழிபெயர்த்த, ஜியாங் ரோங் எழுதிய சீன நாவல் 'ஓநாய் குலச்சின்னம்’ தமிழில் மிகவும் வரவேற்பு பெற்றது.

பதிப்பு
சி.மோகன்

சி.மோகன் வயல் பதிப்பகம் என்னும் வெளியீட்டு நிறுவனத்தை நடத்தினார். தி.ஜானகிராமனின் 'கொட்டுமேளம்’, 'சிவப்பு ரிக்‌ஷா’ என்ற இரண்டு சிறுகதைத் தொகுப்புகளை 1980-ல் சிறப்பாக கொண்டுவந்திருக்கிறார். புனைகளம் சிற்றிதழை சில இலக்கங்கள் வெளியிட்டிருக்கிறார். மிதிலா அச்சகம் என்னும் நிறுவனத்தையும் நடத்தினார்.

இலக்கிய இடம்

ஓநாய் குலச்சின்னம்
ஓநாய் குலச்சின்னம்

சி.மோகன் முதன்மையாக ஓர் இலக்கியச் செயல்பாட்டாளர். இலக்கிய விவாதங்களை ஒருங்கிணைப்பது, இலக்கியச் சிற்றிதழ்களை நடத்துவது, பதிப்பகம் என பல தளங்களில் செயல்பட்டவர். விமர்சகர் என்னும் களத்தில், எழுதியதை விட உரையாடல்கள் வழியாக உருவாக்கிய மதிப்பீடுகள் முக்கியமானவை. க.நா.சுப்ரமணியம், சுந்தர ராமசாமி வழிவந்த அழகியல்மைய நோக்கு கொண்ட விமர்சகர். இலக்கியத்திற்கும் இசை ஓவியம் போன்ற நுண்கலைகளுக்குமான இடத்தை வலியுறுத்திவந்தவர்.

எழுத்தாளர் ஜெயமோகன் "தமிழிலக்கியப்பரப்பில் முக்கியமான பங்களிப்பை தன் விமர்சனக்கருத்துக்கள் வழியாகவும், பதிப்புகள் மூலமாகவும் நிகழ்த்தியவர்" என்று குறிப்பிடுகிறார்.[1]

விருதுகள்

  • விளக்கு விருது (2014)
  • கனடா இலக்கியத்தோட்ட விருதுகள் (2013)

படைப்புகள்

சிறுகதை
  • மஞ்சள் மோகினி (சிறுகதைத் தொகுப்பு)
  • நவீன உலகச் சிறுகதைகள் (மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்)
  • ரகசிய வேட்கை (சிறுகதைத் தொகுப்பு)
  • ஆசை முகங்கள்
  • சவாரி விளையாட்டு
நாவல்கள்
  • விந்தைக்கலைஞனின் உருவச்சித்திரம்
  • கமலி
மொழிபெயர்ப்புகள்
  • ஓநாய் குலச்சின்னம்
  • இரவு உணவு (க.நா.சுப்ரமணியம், சி.மோகன், புதுமைப்பித்தன்)
கவிதைகள்
  • தண்ணீர் சிற்பம்
  • எனக்கு வீடு நண்பர்களுக்கு அறை
கட்டுரைகள்
  • காலம் கலை கலைஞன்
  • நடைவழிக்குறிப்புகள்
  • நடைவழி நினைவுகள்
  • ஜி.நாகராஜன் வாழ்வும் எழுத்தும்
  • சுந்தரராமசாமி சில நினைவுகள்
  • சி.மோகன் கட்டுரைகள்
நேர்காணல்கள்
  • அங்கீகரிக்கப்படாத கனவின் வலி

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page