under review

சி. பாலகப்போடி அண்ணாவியார்

From Tamil Wiki
Revision as of 09:07, 23 August 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (changed single quotes)
சி. பாலகப்போடி அண்ணாவியார் (நன்றி: noolaham.net)

சி. பாலகப்போடி அண்ணாவியார் (டிசம்பர் 1, 1944 - ஜனவரி 22, 2011) ஈழத்தமிழ் கூத்துக் கலைஞர். மட்டக்களப்புப் படுவோன் கரையில் தென்மோடி அண்ணாவி பரம்பரையை உருவாக்கிய பா. நாகமணிப்போடி அண்ணாவியாரின் பிரதான சீடர். 1994-ல் இவர் அரங்கேற்றிய அல்லி நாடகம் குறிப்பிடத்தகுந்தது. கன்னன்குடாவில் தென்மோடி குரு பரம்பரையின் தொடர்ச்சியாக இருந்தார். கலாபூசணம், கலாவித்தகர் பட்டம் பெற்றவர்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டம் வாவியால் இரு பிரிவாக உள்ளது. இதில் சூரியன் எழும் கடலை அண்டிய பகுதியை எழுவான் கரை எனவும், சூரியன் மறைகின்ற பெரு நிலப்பரப்புடன் கூடிய பகுதி படுவான் கரை என்றும் அழைக்கின்றனர். வாவியின் ஓரத்தில் படுவான்கரையில் தமிழர்கள் வாழும் கிராமமான கன்னன்குடாவில் பாலகப்போடி பிறந்தார். பாரம்பரிய கலை வடிவங்களான கூத்து, வசந்தன், கும்மி, கரகம் போன்றவை தொடர்ச்சியாக இருந்து வந்த அண்ணாவிமார்களால் வளர்த்தெடுக்கப்பட்டது. பாலகப்போடி அவ்அண்ணாவிமார்களில் குறிப்பிடத்தகுந்தவர்.

பாலகப்போடி டிசம்பர் 1, 1944-ல் சின்னவிப்போடி, மாரிமுத்து இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவரின் அண்டை வீட்டிலிருந்த கூத்து ஏடுகள் எழுதிக் கொடுப்பவரான கணபதிப்பிள்ளை வைத்தியரின் மூலம் சிறுவயதிலிருந்தே பலகப்போடிக்கு கூத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. பாரம்பரிய விவசாய முறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்.

டிசம்பர், 2004-ல் சுனாமிப்பேரலை தாக்கத்தால் குடும்பத்தோடு மட்டக்களியில் இடம்பெயர்ந்தார். அதன் பின்னும் சிதறிய கன்னன்குடாவின் கலைஞர்களை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். மனைவியின் இறப்பும், மகனின் இறப்பும் அவரை மனதளவில் பாதித்தது. நீரிழிவு நோய் உடலளவில் பாதித்தது.

தோற்றம்

கறுப்பு நிறம், அகண்ட முகம், ஆஜானுபாகுவான தோற்றம், கணீரென்ற பேச்சு என்று மௌனகுரு பதிவுசெய்கிறார்

கலை வாழ்க்கை

பாலகப்போடி அண்ணாவியார் மத்தளம் வாசித்தல்

மட்டக்களப்புப் படுவோன் கரையில் தென்மோடி அண்ணாவி பரம்பரையை உருவாக்கிய பா. நாகமணிப்போடி அண்ணாவியாரின் சீடர். தென்மோடி, வடமோடிக் கூத்துப்பாடல்கள், ஆட்ட நுணுக்கங்கள், தாளக்கட்டுகள் போன்றவற்றை நாகமணிப்போடி அண்ணாவியாரிடம் கற்றார். மத்தளம் அடிப்பதில் வல்லவர். பல சீடர்களைப் பெற்றிருந்தாலும் நாகமணிப்போடி தனக்கு மிகவும் விருப்பமானவராக பாலகப்போடி அண்ணாவியாரைக் குறிப்பிடுகிறார். நாகமணிப்போடி பழக்கிய நாடகங்களில் குறிப்பிடத்தகுந்த நாடகமான அல்லி நாடகத்தை பாலகப்போடி 1994-ல் அரங்கேற்றினார். அல்லி நாடகத்தின் போது நாகமணிப்போடி காப்பு விருத்தம் பாடி முடித்தபின் பாலகப்போடியிடம் மத்தளத்தை அவிழ்த்து தூக்கிக் கொடுத்ததை ஒரு மரபு குருவிலிருந்து சீடருக்கு கையளிக்கப்படும் சிலிர்ப்பான தருணமென நேரில் கண்ட பேராசிரியர் மெளனகுரு தன் "பழையதும் புதியதும்" புத்தகத்தில் நினைவுகூர்கிறார்.

நாகமணிப்போடி அண்ணாவியாருடன் இணைந்து பழக்கிய வடமோடிக் ஆகூத்தான 17-ஆம், 18-ஆம் போர்க்கூத்தில் விஜயகர்ணன் பாத்திரம் ஏற்று ஆடினார். தென்மோடிக் கூத்தான சாம்பேந்திரன் நாடகத்தில் பிராமணன் பாடம் ஏற்று ஆடினார். வாளவீமன் நாடகம் அவர் முழுமையாக தயாரித்து கன்னன்குடா கண்ணகை அம்மன் கோயில் சடங்கில் அரங்கேற்றிய நாடகம். பாலகப்போடி அண்ணாவியார் எட்டு வடமோடிக் கூத்துக்களும், பத்து தென்மோடிக் கூத்துக்களும் பழக்கி அரங்கேற்றியுள்ளார். பழந்தமிழ் புராண இதிகாச நாடகங்களையும் எழுதி நடித்துள்ளார்.

பாலகப்போடியுடன் சீடர்கள்

கிழக்கு பல்கலைக்கழக கலைப்பீடத்தில் கலை நிகழ்வுகளில் பாலகப்போடி அண்ணாவியார் தன் சீடர்களுடன் கலந்து கொண்டு கூத்து அரங்கேற்றம் செய்தார். "லயம்" என்ற நிகழ்வில் தன் ஊர்க்கலைஞர்களுடன் பாலகப்போடி கலந்து கொண்டு தென்மோடி ஆட்டங்களை அவைக்கு அறிமுகம் செய்தார். பாலகப்போடியின் கூத்தை யாழ் திருமறைக் கலாமன்றம் நடத்திய கூத்து விழாவில் காண்பிக்க கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஜெயசங்கர் ஏற்பாடு செய்தார். அந்த அவையில் மட்டக்களப்பின் மரபுவழி தென்மோடிக் கூத்தின் ஒருதோற்றத்தை யாழ்ப்பானக் கூத்தபிமானிகளுக்கு பாலகப்போடி காண்பித்தார். கிழக்கு பல்கலைக்கழகம், பாடசாலைகள், உள்ளூர் மன்றங்களோடும் சேர்ந்து கூத்து வளர்ச்சிக்கு பங்காற்றினார். உடல் உபாதைகள் இருந்தும் கூட தன் சைக்கிளின் பின்னால் மத்தளத்தை வைத்துக் கொண்டு பயணம் செய்து கலையை வளர்க்க அலைந்தார். 2003-ல் நடைபெற்ற உலக நாடக தின விழாவில் வாளவீமன் கூத்தில் தன் உடல் நலிவு காரணமாக களரியின் மத்தியில் அல்லாமல் கதிரையில் இருந்து கொண்டு மத்தளம் அடித்தார். "கூத்து மரபு தவறாது ஆடப்பட வேண்டும்"; "கூத்தை நாட்டுக்கூத்து என்றழைப்பது தவறு"; அண்ணாவியார் என்போர் முழுமையானவராக இருக்க வேண்டும்" போன்ற திட்டவட்டமான கருத்துக்களைக் கொண்டிருந்தார்.

பாலகப்போடி அண்ணாவியார்
சிறப்புகள்
  • பாலகப்போடி கூத்து பழக்குகின்ற போது கலைஞர்களுக்கு வடமோடி தென்மோடி தாளக்கட்டுகளை பிரித்து அவற்றின் நுணுக்கங்களுக்கேற்ப சொல்லிக் கொடுக்கும் ஆளுமை மிக்கவர்.
  • வடமோடி, தென்மோடிக் கூத்து பாடல்களை அதன் மெட்டு வேறுபாடுகளுக்கேற்ப படிக்கும் தன்மை கொண்டவர்.
  • கூத்து ஆடுபவர்களின் கால் தாளத்திற்கேற்ப மத்தளம் அடிப்பார். இரண்டு மோடி தாளக்கட்டுகளுக்கேற்ப மத்தளம் அடிப்பார்.
  • பாரம்பரிய சடங்காசார முறைப்படி கூத்தை முன்னெடுத்தார். (பாரம்பரிய முறைப்படி சட்டம் கொடுத்தல், சதங்கயணி விழா, அரங்கேற்றத்திற்கான களரி கட்டும்போது கால்களை நடுதல், எட்டு கால்களை நடும்போது பாடல்கள் பாடுதல்)
  • அரங்கேற்ற நிகழ்வுகளையும் பாரம்பரிய முறைப்படி செய்தார்.
சீடர்கள்
  • மா. பசுபதி அண்ணாவியார்
  • நா. குருகுலசிங்கம் அண்ணாவியார்
  • கு. தேவராசா அண்ணாவியார்
  • சி. வினாயகலிங்கம் அண்ணாவியார்
  • கு. பிரபாகரன் அண்ணாவியார்

விவாதம்

ஒரேயொரு கூத்தில் ஆடிய அனுபவமும் இரண்டொரு தாளக்கட்டுகளும் தெரிந்தவர்கள் அண்ணாவியாராக வலம் வருவது இவருக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது. பாடசாலை மட்டப் போட்டிகளில் கூத்து அல்லாத ஆனால் கூத்து என பெயர் பெற்ற சில கூத்துகள் முதலிடம் பெறுவதை பாலகப்போடி விரும்பவில்லை. கூத்தறியாதவர்கள் போட்டிகளுக்கு நடுவராக இருப்பதையும் தன் மனக்குமுறலாக பதிவு செய்துள்ளார்.

விருதுகள்

  • 1992-ல் கன்னன்குடா வித்தியாலயத்தில் பாலகப்போடி பழக்கிய கூத்து தமிழ்மொழி தினப்போட்டியில் மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்றது.
  • ஜனவரி 18, 1999-ல் வடக்கு கிழக்கு கலாச்சார அமைச்சு நடத்திய விழாவில் பாராட்டப்பட்டார்.
  • ஏப்ரல் 8, 2000-ல் நடைபெற்ற தேசியபண்பாட்டு தென்மோடி கூத்துக்கு இவர் ஆற்றிய பணிக்காக கலாவித்தகர் விருது கிடைத்தது.
  • ஏப்ரல் 18, 2000-ல் மட்டக்களப்பு மாவட்ட கல்விச் சமூகத்தினால் "கலாவித்தகர்" பட்டம் பெற்றார்.
  • மே 22, 2006-ல் கலாச்சார அமைச்சகம் "கலாபூசணம்" விருது வழங்கியது.
  • ஆகஸ்ட் 28, 2007-ல் கலாச்சார திணைக்களம் பாலகப்போடி கூத்துக்கு ஆற்றிய சேவைக்காக விருது வழங்கியது.

மறைவு

ஜனவரி 22, 2011-ல் மாரடைப்பால் காலமானார்.

கூத்து பயிற்சி

அரங்கேற்றிய கூத்துகள்

தென்மோடிக் கூத்துகள்
  • செட்டிவர்த்தன நாடகம்
  • அல்லி நாடகம்
  • புவனேந்திரன் நாடகம்
  • மதுரவாசகன் நாடகம்
  • வாளபீமன் நாடகம்
  • மயில் ராவணன் சண்டை
  • அலங்கார ரூபன் நாடகம்
  • அனுருத்திரன் நாடகம்
  • சாரங்கரூபன் நாடகம்
  • சாம்பேந்திரன் நாடகம்
வடமோடிக் கூத்துகள்
  • சூரசம்ஹாரம்
  • பகதத்தன்
  • கடோற்கஜன் சண்டை
  • ராம நாடகம்
  • குருக்கேத்திரன் போர்
  • 17ஆம் 18ஆம் போர்
  • அரிச்சந்திரன் நாடகம்
  • விராட பர்வம்
  • சந்திரசேனன் சண்டை
  • பவளக்கொடி நாடகம்
  • பிப்ரவாகன் நாடகம்
  • லவ குச நாடகம்

வெளி இணைப்புகள்

உசாத்துணை

  • "நாடகம் – அரங்கியல்: பழையதும் புதியதும்" பேராசிரியர் சி. மெளனகுரு: குமரன் புத்தக இல்லம்: கொழும்பு-சென்னை 2021


✅Finalised Page