under review

சம்பந்தன்

From Tamil Wiki
Revision as of 20:56, 20 April 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Reviewed by Je)
சம்பந்தன்

சம்பந்தன் (கந்தையா திருஞானசம்பந்தன்) (அக்டோபர் 20, 1913 - ஜனவரி 7, 1995) ஈழத்துச் சிறுகதையாசிரியர், சிற்றிதழாளர், இலக்கியச் செயல்பாட்டாளர்.

பிறப்பு, கல்வி

சம்பந்தன் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் கந்தையா, இராசமணி ஆகியோருக்குப் பிறந்தார். பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் மாணவர். திருநெல்வேலி சைவ வித்தியாசாலையில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

இலங்கை உள்நாட்டுப்போர் மூண்டதை ஒட்டி 1990-ஆம் ஆண்டில் லண்டனுக்குப் புலம்பெயர்ந்து சென்றார். அங்கிருந்து அவர் எழுதிய காவிய மகளிர் எழுவர் பற்றிய நூல் தர்மவதிகள் என்ற தலைப்பில் அவர் இறந்த பின்னர் 1997-ஆம் ஆண்டில் வெளிவந்தது. இந்நூலுக்கு பேராசிரியர் கா. சிவத்தம்பி அணிந்துரை வழங்கியிருந்தார்.

இலக்கியவாழ்க்கை

சம்பந்தனின் முதலாவது சிறுகதை தாராபாய் 1938-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் கலைமகள் இதழில் வெளிவந்தது. இவரது 11 சிறுகதைகள் கலைமகளில் வெளிவந்துள்ளன. இது தவிர மறுமலர்ச்சி, கலைச்செல்வி, கிராம ஊழியன், ஈழகேசரி ஆகிய இதழ்களிலும் இவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளன.

1966 ஆகஸ்ட் மாத விவேகி இதழ் "சம்பந்தன் சிறுகதை மலராக" அவரது ஐந்து சிறுதைகளைத் தாங்கி வெளிவந்தது. இலங்கை இலக்கியப் பேரவை 1998-ஆம் ஆண்டில் சம்பந்தன் சிறுகதைகள் என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டது. இத்தொகுதியில் 10 சிறுகதைகள் அடங்கியிருந்தன.

1960-களில் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். 1963-ஆம் ஆண்டில் இவர் எழுதித் தயாராக வைத்திருந்த சாகுந்தல காவியம் 1987-ஆம் ஆண்டிலேயே நூலாக வெளிவந்தது. கலைமகள் ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன் இந்நூலுக்கு அணிந்துரையும், பண்டிதமணி கதிரேசன் செட்டியார் ஆசியுரையும் வழங்கியிருந்தனர்.

மறைவு

சம்பந்தன் ஜனவரி 7, 1995-ல் லண்டனில் மறைந்தார்

நினைவுநூல்கள், அமைப்புகள்

சம்பந்தனின் நினைவாக ஆண்டுதோறும் "சம்பந்தன் விருது" எனும் இலக்கிய விருது வழங்கப்பட்டு வருகிறது.

இலக்கிய இடம்

சம்பந்தனின் கதைகள் மரபான கதைக்கருக்களை நேரடியான மொழியில் கூறுபவை. நவீனச் சிறுகதைக்குரிய உள்ளடுக்குகள் அற்றவை. புதுமைப்பித்தனுக்குப் பின் சிறுகதைகளில் உருவான சிறுகதை வடிவமும் விமர்சனக் கண்ணோட்டமும் அவற்றில் அமையவில்லை. ஆயினும் அவை வாழ்க்கையின் சில தருணங்களை நுட்பமாகச் சித்தரிக்கின்றன. உள்ளடக்கம், மொழிநடை, வடிவம் ஆகியவற்றில் தி.ஜ.ரங்கநாதன், த.நா.சேனாபதி, பி.எஸ்.ராமையா போன்றவர்களின் வரிசையில் வைக்கப்படவேண்டிய எழுத்தாளர்.

நூல்கள்

  • சாகுந்தல காவியம் (1987)
  • தர்மவதிகள் (1997)
  • சம்பந்தன் சிறுகதைகள் (1998)

உசாத்துணை


✅Finalised Page