under review

கோட்டை சுப்பராய பிள்ளை

From Tamil Wiki
Revision as of 09:03, 23 August 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (changed single quotes)

கோட்டை சுப்பராய பிள்ளை (1843 - 1919) பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த நாதஸ்வரக் கலைஞர்.

இளமை

கோட்டை சுப்பராய பிள்ளை மாரிமுத்தாபிள்ளையின் வழிவந்தவராகிய கோட்டை பிரம்மநாத பிள்ளை என்ற நாதஸ்வரக்காரரின் பேரன். தரங்கம்பாடிக் கோட்டையில் இருந்த சிவன் கோவிலில் வாசித்ததால் 'கோட்டை’ என்னும் அடைமொழி பெயரோடு சேர்ந்துவிட்டது.

பிரம்மநாத பிள்ளைக்கு சுந்தரம் பிள்ளை என்ற மகனும், சுந்தரநாயகி என்ற மகளும் இருந்தனர். சுந்தரநாயகி அம்மாள் திருவாரூர் பழனிவேல் பிள்ளையின் மனைவி.

சுப்பராய பிள்ளை, கோட்டை சுந்தரம் பிள்ளைக்கு 1843ஆம் ஆண்டு பிறந்தார். இவர் பிறந்த ஓராண்டில் அன்னை காலமானார். தந்தை சுந்தரம் பிள்ளை சுப்பராயனை பழனிவேல் பிள்ளையிடம் ஒப்படைத்து, அவருக்கு நாதஸ்வரம் கற்றுத்தருமாறும், வளர்ந்தபின் சொத்துக்களை சுப்பராய பிள்ளையிடம் சேர்க்குமாறும் சொல்லிவிட்டு காசிக்கு சென்றுவிட்டார்.

சுப்பராய பிள்ளை, பழனிவேல் பிள்ளையிடம் நாதஸ்வரமும் வாய்ப்பாட்டும் கற்றுக்கொண்டார். அவருக்குத் தன் மகளைத் திருமணம் செய்து வைத்து, சுந்தரம் பிள்ளை ஒப்படைத்துச் சென்ற சொத்தையும் சுப்பராய பிள்ளையிடம் சேர்ப்பித்தார் பழனிவேல் பிள்ளை.

தனிவாழ்க்கை

பழனிவேல் பிள்ளையின் மூன்றாவது மகள் அல்லியங்கோதையை மணந்தார். அல்லியங்கோதை குழந்தை பெறுவதற்கு முன்னதாகவே இறந்து போனார். பின்னர் செம்பொன்னார்கோவில் ராமஸ்வாமி பிள்ளையின் உறவினரான சிவபாக்கியம் என்பவரை மணந்து கொண்டார். இவர்களுக்கு ராமலிங்கம் பிள்ளை, நடராஜசுந்தரம் பிள்ளை என இரண்டு மகன்கள்.

இசைப்பணி

சுப்பராய பிள்ளையின் நாதஸ்வர இசை தெளிவான ஒலி கொண்டது. மரபின் வழி வாசிப்பதும், அபஸ்வரங்கள் ஏதுமின்றி வாசிப்பதும் இவரது இயல்பு. இவரது கச்சேரியில் வர்ணங்கள் தவறாது வாசிப்பார். 300க்கும் மேற்பட்ட வர்ணங்களைக் கற்றிருந்தார். ஏற்கனவே இசை பயின்று தன்னிடம் மேலும் கற்க வரும் மாணவர்களிடம் அவர்கள் எத்தனை வர்ணங்கள் கற்றிருக்கிறார்கள் என்பதையே கேட்பார்.

இவரது ராக ஆலாபனை அந்தந்த ராக லட்சணத்தை தெளிவாகப் புலப்படுத்தும். காம்போஜி, தோடி இவ்விரு ராகங்களயும் இவர் அதிகம் வாசித்திருக்கிறார்.

மாணவர்கள்

கோட்டை சுப்பராய பிள்ளையின் முக்கியமான மாணவர்கள்:

மறைவு

கோட்டை சுப்பராய பிள்ளை 1919-ஆம் ஆண்டு மறைந்தார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013


✅Finalised Page