under review

கி. ராஜநாராயணன்

From Tamil Wiki
Revision as of 17:19, 22 March 2023 by Jeyamohan (talk | contribs)
Ki.Ra2.jpg
கி. ராஜநாராயணன் இளமையில் (நன்றி: புரவி இதழ்)
கிரா சிலை திறப்பு
கி.ரா பாண்டிச்சேரி அரசு விருது
கி.ரா நூறு வெளியீட்டு விழா மார்ச் 13 2023

கி. ராஜநாராயணன் (செப்டம்பர் 16, 1922 - மே 17, 2021) நவீன தமிழிலக்கியத்தின் முதன்மைப் படைப்பாளிகளுள் ஒருவர். கரிசல் நிலத்தைத் தன் இலக்கியத்தில் எழுதியவர். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், அனுபவக் கட்டுரைகள் எழுதியவர். 'கரிசல் வட்டார அகராதி' என்ற வட்டார தமிழ் அகராதியை உருவாக்கியவர். 'கதைசொல்லி' என இலக்கிய வட்டாரத்தில் அழைக்கப்படுபவர்.

பிறப்பு, கல்வி

கணவதி அம்மாள் - கி. ராஜநாராயணன்

கி.ரா என்றழைக்கப்படும் கி. ராஜநாராயணனின் இயற்பெயர் ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமனுஜ நாயக்கர். கி. ராஜநாராயணன் செப்டம்பர் 16, 1922 அன்று ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம் (தற்போது தூத்துக்குடி மாவட்டம்) கோவில்பட்டி அருகில் உள்ள இடைசெவல் என்னும் கிராமத்தில் ஸ்ரீ கிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதிக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தார்.

ஏழாம் வகுப்பு வரை படித்த கி.ரா. பின் விவசாயம் செய்தார். இயல்பில் விவசாயி ஆக இருந்த கி.ரா தன் பள்ளிக் கல்வியைப் பற்றிச் சொல்லும் போது, "நான் மழைக்குத் தான் பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கியவன். பள்ளியைப் பார்க்காமல் மழையைப் பார்த்துக் கொண்டு நின்றுவிட்டேன்" என்கிறார்.

தனி வாழ்க்கை

Ki.Ra3.jpg
கி. ரா. குடும்பம்

கி. ராஜநாராயணன் கணவதி அம்மாளை செப்டம்பர் 6, 1954 அன்று திருமணம் செய்து கொண்டார். கி.ரா கணபதி அம்மாள் தம்பதியருக்கு திவாகரன், பிரபாகரன் என்று இரண்டு மகன்கள். மருமகள்கள் முறையே விஜயலட்சுமி, நாச்சியார்.

கி.ரா. 1989 வரை இடைசெவலில் விவசாயம் செய்தார். 1989 -ல் இருந்து பாண்டிசேரி பல்கலைக்கழகத்தின் சிறப்பு பேராசிரியராகப் பணியாற்றினார். ஓய்விற்கு பின் மனைவி, மகன்களுடன் பாண்டிசேரியில் வசித்தார். அங்கே கணபதி அம்மாள் 2019-ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

இடைசெவலில் எழுத்தாளர் கு. அழகிரிசாமி வீடு இருந்த அதே தெருவில் கி.ராவின் வீடும் இருந்தது. அவர்கள் இளமைக்கால நண்பர்கள். (தமிழகத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த இருவர் சாகித்ய அகாதெமி விருது பெற்றது இடைசெவலில்தான்).

கி.ரா எனும் கீதாரி

கி. ரா. மரபிசையில் ஆர்வமும், பயிற்சியும் கொண்டிருந்தார். கி.ரா. கோவில்களில் பாட்டு கச்சேரியும் செய்துள்ளார் என கு. அழகிரிசாமி அவருக்கு எழுதிய கடிதம் மூலம் தெரிய வருகிறது. கி.ரா. ஊரில் மணம் புரிந்திருந்த நாதஸ்வரக் கலைஞர் காருக்குறிச்சி அருணாசலம் அங்கு வரும்போதெல்லாம் உடனிருந்து இசை கேட்பார்[1].

இலக்கிய வாழ்க்கை

Kirajanarayanan.jpg
தொடக்கம்

கி.ரா எழுதி முதல் சிறுகதை 'சொந்த சீப்பு'. 1958 ஆம் ஆண்டு அவர் சரஸ்வதி இதழில் எழுதிய 'மாயமான்' சிறுகதை விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. அதன் பின் இவரது 'கதவு' சிறுகதையும் பெரும் வாசகர் கவனம் பெற்றது. அக்கதையைப் பாராட்டி சுந்தர ராமசாமி, அக்கதை ஆண்டன் செகாவ் பாணியில் இருப்பதாகக் கடிதம் எழுதினார்.

சிறுகதைகள்

கி.ராவின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் பற்றி பேசுவது. கரிசல் மண்ணையும், அதன் மனிதர்களையும் பற்றி எழுதிய கி.ரா வின் கதைகள் தொகுதிகளாக வெளிவந்தன. 'கதவு' கி.ரா எழுதி வெளிவந்த முதல் தொகுதி

நாவல்கள்

கி.ராஜநாராயணனின் முதல் நாவல் கோபல்ல கிராமம் (1976) தமிழகத்தில் தெலுங்கு மக்கள் குடியேறி, நிலம் திருத்தி, ஒரு சமூகமாக அமைந்தமை பற்றிய நாவல். குலக்கதைகள், தொன்மங்கள், நாட்டார் வழக்குகள் ஆகியவற்றின் தொகுப்பாக அமைந்த சீரான நேர்வேகம் அற்ற நாவல் தமிழில் ஒரு புதிய தொடக்கமாகக் கருதப்படுகிறது. பின்னர் 'கோபல்லபுரத்து மக்கள்' என்னும் பெயரில் அதன் தொடர்ச்சியாக இன்னொரு நாவலையும் எழுதினார்.

அகராதி

கரிசல் வட்டாரத்தில் சிறப்பாக வழங்கும் தமிழ்ச் சொற்களுக்கான கரிசல் வட்டார வழக்கு அகராதியை உருவாக்கினார்.

சிறுவர் இலக்கியம்

கி.ராஜநாராயணன் 'பிஞ்சுகள்' என்னும் சிறுவர்களுக்கான நாவலை எழுதியிருக்கிறார்.

நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்

நாட்டுப்புற இலக்கியங்களைத் தேடி, ஆராய்ந்து ஒரு தொகுப்பாக வெளியிட்டார். அது 'நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்' என்ற தலைப்பில் நூலாக அன்னம் வெளியீட்டில் வந்தது. நாட்டுப்புறப் பாலியல் கதைகளையும் தொகுத்துள்ளார்.

கடித இலக்கியம்

கி.ராஜநாராயணனுக்கும், கு.அழகிரிசாமிக்கும் டி.கே.சிதம்பரநாத முதலியார் மீது மிகப்பெரிய ஈடுபாடு இருந்தது. அவருடைய கடிதமெழுதும் பாணியை அவர்கள் கடைப்பிடித்தனர். தமிழ் கடித இலக்கியத்தில் அவர்கள் எழுதிய கடிதங்களுக்கு முக்கியமான இடம் உண்டு. கி.ராஜநாராயணன் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் கடிதம் எழுதும் வழக்கம் உடையவர். அவருக்கு சுந்தர ராமசாமி, கு. அழகிரிசாமி என மற்ற எழுத்தாளர்கள் எழுதிய கடிதங்கள் 'அன்புள்ள கி.ரா.வுக்கு' என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.

மறைவு

கி. ராஜநாராயணன் மே 17, 2021 அன்று தனது 99-ஆவது வயதில் பாண்டிசேரியில் இயற்கை எய்தினார். கி.ரா வின் உடல் அவரது சொந்த ஊரான இடைசெவலில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

விவாதங்கள்

கி.ராஜநாராயணன் சண்டே இண்டியன் இதழில் அளித்த பேட்டியில் தலித் வாழ்க்கை பற்றி ஏன் எழுதவில்லை என கேட்கபட்டபோது "அவன் மொழி எனக்கு தெரியாது, அதனால் எழுதவில்லை" என்று பதிலளித்தார். அது அச்சாதிமீதான அவமதிப்பு என்று குற்றம்சாட்டி கதிரேசன் என்பவர் நீதிமன்றத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்தார். கி.ரா தான் அவமதிக்கவில்லை என்றும், பேச்சுவழக்கில் அனைவரையுமே அவன் என்றே சொல்லும் வழக்கம் உள்ளது என்றும் சொல்லி மதுரை உயர்நீதிமன்றத்தில் அவ்வழக்கை ரத்துசெய்யக்கோரி வழக்கு தொடுத்தார். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்மேல் தொடுக்கப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து இந்திய அரசமைப்புச்சட்டம் பேச்சுரிமையை வலியுறுத்துவதாகவும், கி.ரா போன்ற ஒரு மூத்த படைப்பாளிமேல் தொடுக்கப்பட்ட வழக்கு உள்நோக்கம் கொண்டது என்றும் அக்டோபர் 2020-ல் தீர்ப்பளித்தார். கி.ரா வுக்கு ஞானபீட விருது அளிக்கப்பட வேண்டும். அதற்கு மிகத் தகுதிவாய்ந்த நபர் கி.ரா என்று பலர் விரும்புவதாகக் குறிப்பிட்ட நீதிபதி "இந்த வழக்கை ரத்து செய்வதன் மூலம் இந்த குறைந்தபட்ச மரியாதையையாவது கி.ரா அவர்களுக்கு அளிக்கும் கடன்பட்டுள்ளது இந்த நீதிமன்றம்" என்று கூறினார்

நினைவுகள், வாழ்க்கை வரலாறுகள்

கி.ரா மணிமண்டபம்
  • கி.ராஜநாராயணனின் 60-ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி 1981-ல் அன்னம் பதிப்பகம் ஒரு விழா எடுத்து 'ராஜநாராயணீயம்' என்னும் நூலை வெளியிட்டது.
  • கி.ராஜநாராயணனுக்கு 95 வயது நிறைவடைந்ததை ஒட்டி 'கி.ரா என்னும் கீதாரி' என்னும் ஆய்வுத்தொகைநூல் வெளியிடப்பட்டது.
  • கி.ரா வின் மறைவுக்குப்பின் தமிழக அரசு 2021-ல் கோயில்பட்டியில் அவருக்கு நினைவு மணிமண்டபம் அமைத்தது. அதன்முன் அவரது முழுவுருவச்சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 20,2022-ல் அதைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
  • கி.ராஜநாராயணனின் முழுப்படைப்புகளையும் கி.ரா.படைப்புகள் என்னும் தலைப்பில் அகரம் பதிப்பகம் 9 தொகுதிகளாக வெளியிட்டது.
  • கி.ராஜநாராயணனைப் பற்றி எழுதப்பட்ட நூறு கட்டுரைகள் இரு தொகுதியாக கி.ரா.நூறு என்னும் தலைப்பில் 13 மார்ச் 2023 ல் வெளியிடப்பட்டது. (தொகுப்பாசிரியர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன்)

விருதுகள்

  • தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம் விருது (1971)
  • சாகித்ய அகாடமி விருது (1991)
  • இலக்கிய சிந்தனை விருது (1979)
  • தமிழக அரசின் 2021-ஆம் ஆண்டுக்கான உ.வே.சா விருது
  • கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016-ஆம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது
  • பேரா. சுந்தரனார் விருது
  • மா. சிதம்பரம் விருது (2008)

இலக்கிய இடம்

Kirajanarayanan1.jpg
Ki.ra. kai ezhuthu pirathi.jpg

கி.ராஜநாராயணன் தமிழிலக்கியத்தில் இரண்டு வகையில் மதிப்பிடப்படுகிறார். நீண்ட நாட்டார்மரபு கொண்டது தமிழ்ப்பண்பாடு என்றாலும் நவீன தமிழிலக்கியம் நாட்டார்மரபின் அழகியலை பயன்படுத்திக்கொள்ளவில்லை. அதை நவீனப்பார்வையிலேயே அணுகியது. தமிழ் வணிக இலக்கியமும் அவ்வாறே அதை அணுகியது. ஆனால் ஆய்வுச்சூழலில் கி. வா. ஜகந்நாதன், மு. அருணாசலம், நா. வானமாமலை ஆகியோர் தொடங்கி நாட்டாரியலை ஆய்வுநோக்கில் பதிப்பிக்கும் பணி நடைபெற்றுவந்தது. நவீன இலக்கியத்தில் நாட்டார் அழகியலை பயன்படுத்திய முன்னோடி கி.ராஜநாராயணன்.

நவீனத் தமிழிலக்கியம் ஓர் அழகியல் உத்தி என்னும் வகையில் வட்டாரவழக்கைப் பயன்படுத்தி வந்தது. ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியின் மொழி, சொலவடைகள், நாட்டாரியல் கூறுகள், வேளாண்மைச் செய்திகள், சமூகப்பதிவுகள் ஆகியவற்றை முழுமையாகச் சார்ந்து தனக்குரிய அழகியலை உருவாக்கும் எழுத்து கி.ராஜநாராயணனிடமிருந்தே தொடங்கியது. அவர் எழுதிய நிலம் கரிசல் மண். ஆகவே கரிசல் இலக்கியவாதி என கி.ராஜநாராயணன் அழைக்கப்படுகிறார். கரிசல் இலக்கியவாதிகள் என ஒரு வரிசை அவருக்கு பின் உருவாகியது. பூமணி, கோணங்கி, சோ. தர்மன், சூரங்குடி அ .முத்தானந்தம் போன்றவர்கள் அவ்வகையில் முக்கியமானவர்கள்.

நாட்டாரியல் ஆய்வாளராகவும் கி.ராஜநாராயணன் முன்னோடித்தன்மை கொண்டவர். கரிசல் வட்டாரவழக்கு அகராதியை அவர் உருவாக்கினார். கழனியூரன், பாரததேவி போன்ற ஆய்வாளர்கள் அவரை முன்னுதாரணமாகக் கொண்டு நாட்டாரியல் ஆய்வில் ஈடுபட்டனர். கண்மணி குணசேகரன் , பெருமாள் முருகன் போன்றவர்கள் அவரைப்போலவே வட்டாரவழக்கு அகராதிகளை உருவாக்கினர்.

"கி. ராஜநாராயணன், ஜானகிராமனின் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜானகிராமனைப் போலவே அபூர்வமான அழகுணர்ச்சியும் ரசனையில் திளைக்கும் மனோபாவமும் கொண்டவர். இவரது கதை உலகத்தைத் தமிழ் மண்ணுக்கே உரித்தான ஒரு பழத்தோட்டம் என்று சொல்லலாம். வித்தியாசமான மனிதர்களைக் கதாபாத்திரங்களாக மாற்றும் ஆற்றல் இவர் கலை வன்மை. இதே உலகத்தைச் சேர்ந்த அழகிரிசாமியின் கதைகளிலிருந்து வித்தியாசமாக, தன்னைச் சார்ந்த உலகத்தை அன்னியரின் பார்வையில் பார்க்க முற்படும் தருணங்களில், இவருடைய சகஜங்களே இவருக்கு சகஜமற்றுப் போகின்றன. நினைவில் நீங்காது நிற்கும் பல அருமையான கதைகளை உருவாக்கியவர்" என்று சுந்தர ராமசாமி கி.ராஜநாராயணனை மதிப்பிடுகிறார்.

கி. ராஜநாராயணனின் கதைக்களமும், கதை சொல்லும் முறையும் இலக்கியத்தில் தனித்த இடம் கொண்டவை. அவை யதார்த்தவாத கதைப் பாணியில் அமைந்தவை. ஆனால் கி.ரா. அதனுள் நாட்டார் கூறுகளையும் சேர்த்துக் கொண்டார். ஒரு குலக்குழுவின் பாடகன் நவீன இலக்கியத்தின் அழகியலை கைக்கொண்டபோது உருவான படைப்புகள் என அவற்றைச் சொல்லலாம் என வரையறுக்கும் ஜெயமோகன் தன் இலக்கிய முன்னோடிகள் நூலில் கி.ராஜநாராயணனை இனக்குழு அழகியலின் முன்னோடி எனக் குறிப்பிடுகிறார்.

Ki.Ra Ganapathy.jpg
Ki.Ra Ganapathy1.jpg

கி. ராவின் நாவல்களை முன்வைத்து எஸ். ராமகிருஷ்ணன், "வாய்மொழி வரலாற்றைப் பொது வரலாறு ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், அதை மாற்றித் தனது படைப்புகளின் வழியே வாய்மொழி வரலாற்றின் உண்மைகளை வரலாற்றின் சாட்சியங்களாக மாற்றினார். கி.ரா. 'கோபல்ல கிராமம்’, 'கோபல்லபுரத்து மக்கள்’ இரண்டு படைப்புகளும் இதற்கான சிறந்த உதாரணங்கள்" என்று குறிப்பிடுகிறார்.

நூல்கள்

அகராதி
  • கரிசல் வட்டார வழக்கு அகராதி
நாவல்கள்
  • கோபல்ல கிராமம்
  • கோபல்லபுரத்து மக்கள் (1991, சாகித்திய அகாடமி விருது வென்றது)
  • அந்தமான் நாயக்கர்
குறுநாவல்கள்
சிறுகதை தொகுதிகள்
  • கன்னிமை
  • மின்னல்
  • கோமதி
  • நிலை நிறுத்தல்
  • கதவு (1965)
  • பேதை
  • ஜீவன்
  • நெருப்பு
  • விளைவு
  • பாரதமாதா
  • கண்ணீர்
  • வேட்டி
  • மாயமான்
  • புதுவை வட்டார நாட்டுப்புறக் கதைகள்
  • காதில் விழுந்த கதைகள்
  • மிச்சக் கதைகள் (2021)
கட்டுரைகள்
  • வயது வந்தவர்களுக்கு மட்டும்
  • ருஷ்ய மண்ணின் நிறம் என்ன?
  • புதுமைப்பித்தன்
  • மாமலை ஜீவா
  • இசை மகா சமுத்திரம்
  • அழிந்து போன நந்தவனங்கள்
  • கரிசல் காட்டுக் கடுதாசி
  • மாந்தருள் ஒரு அன்னப்பறவை
  • கிராமிய விளையாட்டுகள்
அனுபவக் கட்டுரைகள்
  • கரிசல்கதைகள்
  • கி.ரா- பக்கங்கள்
  • கிராமியக் கதைகள்
  • குழந்தைப் பருவக் கதைகள்
  • கொத்தை பருத்தி
  • பெண்கதைகள்
  • பெண்மணம்
  • கதை சொல்லி(2017)
தொகுதி
  • நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்
திரைப்படமாக்கப்பட்ட கதைகள்
  • ஒருத்தி (கிடை என்ற கதையினை அடிப்படையாகக் கொண்டு அம்சன் குமார் இயக்கிய திரைப்படம்)
  • கரண்டு (கரண்டு என்ற கதையினை அடிப்படையாகக் கொண்டு ஹரிகரன் இயக்கிய இந்தி திரைப்படம்)

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page