under review

கா.சி.வேங்கடரமணி

From Tamil Wiki
Revision as of 09:02, 23 August 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (changed single quotes)

To read the article in English: K. S. Venkataramani. ‎

கா.சி.வேங்கடரமணி
முருகன் ஓர் உழவன் தமிழ்
தேசபக்தன் கந்தன்
கா.சி.வேங்கடரமணி, சிறுகதைகள்

கா.சி.வேங்கடரமணி (K. S. Venkataramani ) ( 1891-1952) காவேரிப்பூம்பட்டினம் சித்தாந்த ஐயர் வெங்கடரமணி. தமிழில் காந்தியக் கொள்கைகளுடன் எழுதிய நாவலாசிரியர். வழக்கறிஞர் தொழில் செய்தார். தஞ்சை மாவட்டப்பின்னணியில் கதைகளை எழுதினார். காந்திய நோக்கில் கிராமிய பொருளியல் அழிவு, நகர்மயமாக்கலால் அன்னியமாகும் மக்கள் என்னும் கருப்பொருட்களில் Murugan the Tiller (1927) என்னும் இரு நாவலை ஆங்கிலத்தில் எழுதினார். அது தமிழில் முருகன் ஓர் உழவன் என்னும் தலைப்பில் மொழியாக்கம் செய்யப்பட்டன.

பிறப்பு,கல்வி

கா.சி.வேங்கடரமணி 1891-ல் மயிலாடுதுறையில் சித்தாந்த ஐயர் யோகாம்பாளுக்கு பிறந்தார். தந்தை சுங்கவரி விதிப்பு அதிகாரி. தஞ்சை மராட்டியர் காலம் முதலே அவர்களின் குடும்பம் வரிவசூல் அதிகாரிகளாக இருந்தது. கா.சி.வேங்கடரமணி இளமைக்கல்வியை மயிலாடுதுறை நேஷனல் உயர்நிலைப்பள்ளியில் முடித்தார். அதன் பின் சென்னை கிறிஸ்தவக்கல்லூரியில் படித்து பி.ஏ.பட்டம் பெற்றார். சென்னை மாநிலக்கல்லூரியில் படித்து சட்டத்தில் பட்டம்பெற்றார். சி.பி.ராமஸ்வாமி ஐயரின் உதவி வழக்கறிஞராக பணியாற்றினார்.

தனிவாழ்க்கை

கா.சி.வேங்கடரமணியின் தனிவாழ்க்கை பற்றி செய்திகள் இல்லை. சென்னையில் குறுகிய காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார். பின்னர் கிராமிய நிர்மாணப்பணியில் ஈடுபட்டார். சில ஆண்டுக்காலம் திருக்கடையூரில் தங்கியிருந்தார். பின்னர் மாயவரத்தில் இருந்தார். பின்னர் அக்கால ஆல்வார்(Alwar) சம்ஸ்தானத்தில் கிராம வளர்ச்சி ஆலோசகராக (Rural Development Advisor) பணியாற்றினார்.

இதழியல்

கா.சி.வேங்கடரமணி நான்காவது பாரம் ( ஒன்பதாம் வகுப்பு) படித்துக் கொண்டிருந்தபோது, மாயவரம் நகராட்சியினரின் ஊழல்களைக் கண்டித்து சென்னையில் இருந்து வெளிவந்த "இந்தியன் பேட்ரியாட்' நாளேட்டுக்கு எழுதிய கடிதம் ஒரு நிருபரின் செய்தியாக இவர் பெயரில் வெளிவந்தது. சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் படிக்கையில் விக்டோரியா விடுதியில் தங்கியிருந்தபோது இந்தியன் பேட்ரியாட், தி ஹிந்து இதழ்களில் சுதந்திர இதழாளனாக கட்டுரைகள் எழுதினார். அங்கே கல்விகற்றவர்கள் ஒலிம்பியன்ஸ் என்னும் ஒரு சிந்தனைக்குழுவாகச் செயல்பட்டனர்.

1922-ல் தமிழ் உலகு எனும் பத்திரிகையைத் தொடங்கி நடத்தினார். ஆனால், 2 ஆண்டுகளே அவரால் அதை நடத்த முடிந்தது. பிறகு 1938-இல் ஹிந்து பத்திரிகையின் துணையாசிரியராகவும், விக்னேஸ்வரா என்ற பெயரில் எழுதிப் புகழடைந்தவருமான என்.ரகுநாதன் துணையுடன் பாரதமணி எனும் இதழை தொடங்கி நடத்தினார். பெ.நா.அப்புசாமி, பி.ஸ்ரீ. போன்ற அறிஞர்கள், பல நல்ல எழுத்தாளர்கள் பாரதமணி'யில் தொடர்ந்து எழுதினர். இதில், கா.சி.வேங்கடரமணி ஆசிரியராக இருந்து எழுதிய ’போகிறபோக்கில்' என்ற தொடர் கட்டுரைகள் புகழ்பெற்றவை.

இலக்கியவாழ்க்கை

கா.சி.வேங்கடரமணி ஆங்கிலத்தில் 'தி மெட்ராஸ் மெயில்’, 'தி ஹிந்து’, 'திரிவேணி’ ஆகிய இதழ்களில் கதைகளும் கட்டுரைகளும் எழுதினார். அவை Paper Boats (1921) On the Sand-Dunes (1923) ஆகிய தொகுதிகளாக வெளிவந்தன. பின்னர்தான் Murugan the Tiller (1927) நாவலை ஆங்கிலத்தில் எழுதினார். 1928ல், சாந்திநிகேதனுக்குச் சென்று ரவீந்திரநாத் தாகூரைச் சந்தித்தார் . தாய்மொழியில் எழுதுமாறு தாகூர் சொன்னதற்கு இணங்க தமிழ் உலகு இதழை தொடங்கிய பின் அவர் எழுதிய கதைகள் 'ஜடாதரன் முதலிய கதைகள்' என்னும் தலைப்பில் ரகுநாதனின் முன்னுரையுடன் வெளியாகின. ’பட்டுவின் கல்யாணம்’ குறிப்பிடத்தகுந்த சிறுகதைப்படைப்பு. தேசபக்தன் கந்தன் என்னும் நாவலை தமிழில் எழுதி அவரே ஆங்கிலத்தில் Kandan the Patriot (1932) என்று மொழியாக்கம் செய்தார். தமிழில் முதல் தேசிய இயக்க நாவல் எழுதியவர். ஆங்கிலத்தில் முதன் முதலில் நாவல் எழுதிய தமிழ் எழுத்தாளர். இந்திய அளவில் பங்கிம் சந்திர சட்டர்ஜிக்குப் பிறகு ஆங்கிலத்தில் எழுதிய இரண்டாவது எழுத்தாளர்.

இவரது சிறுகதைகள் பலவற்றை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவர் இவரின் நண்பரான கு.ப.ரா. A Day with Sambu-வை வடமொழியில் மொழிபெயர்த்தவர் ய. மகாலிங்க சாஸ்திரி. அதே நூல் தெலுங்கிலும் வெளியானது. "கும்பா" என்ற புனைப்பெயரில் ஜோதிடம் பற்றிய ஆராய்ச்சி நூல் ஒன்றையும் எழுதினார். அன்னிபெசண்ட் பற்றிய நூல் ஒன்றையும் எழுதினார். 'போகிற போக்கில்" என்ற தலைப்பில் தன் வாழ்க்கை வரலாற்றை பாரதமணி இதழில் எழுதினார்.

அரசியல்வாழ்க்கை

கா.சி.வேங்கடரமணி காந்திய ஆதரவாளராக காங்கிரஸுடன் இணைந்து பணியாற்றினார். காந்தியின் கிராமநிர்மாணத் திட்டத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். கிராம முன்னேற்றத்துக்காக திருக்கடையூரில் 'மார்க்கண்டேயா’ என்னும் ஆசிரமத்தை தொடங்கி நடத்தினார்.ஆனால் இந்திய சுதந்திரமும் அதையொட்டிய தேசப்பிரிவினையும் அவரை உளச்சோர்வடையச் செய்தன "'எனக்கு, பதினைந்தாம் தேதி காலையில் புன்சிரிப்புக் கூட வரவில்லை. உலகம் முழுவதும் ஒரு பெரிய பொய், புரட்டு, பித்தலாட்டமாய்த் தோன்றிற்று. நமது நாட்டுக்கு உண்மையில் சுயராஜ்யம் கிடைத்த தினமாக எனக்குத் தோன்ற வில்லை. தேன் எடுக்கப் போய்த் தேனீ கொட்டி, கடுப்புத் தான் மிச்சம் போல் உணர்ச்சி. சர்க்கார், விடுமுறை நாள் கூலி கொடுத்தும், பிள்ளைகளுக்குப் பெப்பர்மெண்ட் கொடுத்தும், நேரு டில்லியிலிருந்து முழங்கியும், திருவாவடுதுறை ஆதீனம் நேருவுக்குத் தங்கச் செங்கோல் செலுத்தியும் என் மனசில் குதூகலம் பிறக்கவில்லை. நானும் அரசியல் துறையில் முப்பது வருஷம் என் தலைவர்கள் போல் வாயால் கதறிச் சொல்நயத்தால் சேவை செய்தவன்!" என்று பாரதமணியில் எழுதினார். அதன்பின் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொண்டார்.

ஆன்மிகம்

கா.சி.வேங்கடரமணி அன்னிபெசண்டின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தியோசஃபிக்கல் சொசைட்டியுடன் இணைந்து செயல்பட்டார். அவரது பேப்பர் போட்ஸ் என்னும் கட்டுரை நூலுக்கு அன்னிபெசன்ட் முன்னுரை வழங்கினார். பின்னர் அவருடைய ஆர்வம் பாண்டிச்சேரி அரவிந்தர் மேல் திரும்பியது. ஸ்ரீஅன்னைமேல் ஈடுபாடும்கொண்டிருந்தார். ஆன்மிகப் பணிக்காக ஸ்வேதாரண்ய ஆசிரமம் என்னும் அமைப்பை காவேரிப்பூம்பட்டினம் அருகே நிறுவி சிலகாலம் நடத்திவந்தார்.ரமணரைப் பற்றி எழுதிய பால் பிரண்டன்ர (Paul Brunton) அவருடைய A Search in Secret India என்னும் நூலில் ஆன்மிகசாதகம் செய்துவந்த ரமணியைச் சந்தித்ததைப் பற்றி எழுதியிருக்கிறார்..

மறைவு

கா.சி.வேங்கடரமணி 1951 மார் மாதம் சென்னையில் மறைந்தார். அவருக்கு காசநோய் இருந்தது. அதற்காக மருத்துவம் பார்த்துக்கொண்டிருந்தார்

பெ.சு,மணி எழுதிய வாழ்க்கை வரலாறு

வாழ்க்கை வரலாறு

  • என்.எஸ். ராமசாமி கா.சி.வேங்கடரமணியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கிறார் K.S. Venkataramani-N. S. Ramaswami
  • பெ.சு.மணி கா.சி.வேங்கடரமணியின் வாழ்க்கையை எழுத்திடைச் செழித்த செம்மல் -கா.சி.வேங்கடரமணி என்ற நூலாக எழுதியிருக்கிறார்

இலக்கிய இடம்

இந்திய அளவில் ஆங்கிலத்தில் நாவல் எழுதிய இரண்டாவது எழுத்தாளர் கா.சி.வேங்கடரமணி. (முதல் நாவல் எழுத்தாளர்: பங்கிம் சந்திர சட்டர்ஜி, ராஜ்மோகன்ஸ் வொய்ஃப், 1864) என்று ஆய்வாளர் அரவிந்த் சுவாமிநாதன் குறிப்பிடுகிறார்* தமிழில் காந்தியப் பார்வையுடன் எழுதப்பட்ட நாவல்களில் முக்கியமானது தேசபக்தன் கந்தன். இதில் அவர் உருவாக்கிய கந்தன் மகாத்மா காந்தியின் வடிவம்தான் என்று சிட்டி-சிவபாதசுந்தரம் அவருடைய தமிழ் நாவல் நூலில் குறிப்பிடுகிறார்கள்.

நூல்கள்

சிறுகதைகள்
  • பட்டுவின் கல்யாணம்
  • காகிதப் படகுகள்
  • மணல்மேட்டின் மீது
  • சாம்புவுடன் ஒருநாள்
கட்டுரைகள்
  • மறுமலர்ச்சி பெறும் இந்தியா
  • அடுத்த நிலை
  • படைப்புக் கலையின் இயல்பு
  • இந்திய கிராமம்
  • சோதிடத்தில் நேர்பாதை
நாவல்கள்
ஆங்கிலம்
  • Paper Boats (1921)
  • On the Sand-Dunes (1923)
  • Murugan the Tiller (1927)
  • The Next Rung (1828)
  • Renascent India (1929)
  • Kandan the Patriot (1932)
  • Jatadharan and Other Stories (1937)
  • The Indian Village (1936)
  • The Nature of Creative Art (1950)
  • Highways in Astrology. (1959)
  • My Pial Teacher & Other Stories From South-India
  • A Day with Sambu

உசாத்துணை


✅Finalised Page