under review

கடவுள் தொடங்கிய இடம்

From Tamil Wiki
Revision as of 06:54, 29 July 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Inserted READ ENGLISH template link to English page)

To read the article in English: Kadavul Thodangiya Idam (Novel). ‎

கடவுள் தொடங்கிய இடம்

கடவுள் தொடங்கிய இடம் (2012 ) அ.முத்துலிங்கம் எழுதிய நாவல். ஈழத்தமிழர்களின் புலம்பெயர்தலின் துயரங்களையும், அந்த அறைகூவலை ஏற்று அவர்கள் வென்று வாழ்க்கையை பல நாடுகளில் அமைத்துக்கொண்டதையும் சித்தரிக்கும் படைப்பு

எழுத்தும் வெளியீடும்

அ. முத்துலிங்கம் எழுதிய கடவுள் தொடங்கிய இடம் 2011-ல் ஆனந்த விகடன் வார இதழில் தொடராக வெளிவந்தது. 2012-ல் விகடன் பிரசுரத்தால் நூலாக வெளியிடப்பட்டது.

கதைச்சுருக்கம்

1992-ல் இருந்து 2003 வரை ஈழத்தில் இருந்து போரை அஞ்சி புலம்பெயர்பவர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் நாவல் இது. 1992-ல் தனது பத்தொன்பதாவது வயதில் இலங்கையின் குப்ளான் எனும் சிறு கிராமத்திலிருந்து அகதியாக கிளம்பி ரஷ்யா, ஜெர்மனி வழியே கள்ளத்தனமாக பல நாட்டு எல்லைகளை கடந்து கனடாவுக்குள் நுழைந்து, 2003-ல் அகதி உரிமம் பெற்று, நிலையான பணியில் அமரும் நிஷாந்த் எனும் இளைஞனின் பயணம் இந்நாவலில் சொல்லப்படுகிறது. அவனுடைய அனுபவங்கள், அவன் பார்த்ததும் கேட்டதுமான அனுபவங்கள் வழியாக அகதிவாழ்க்கையின் ஒட்டுமொத்த சித்திரம் விரிகிறது.

இலக்கிய இடம்

ஈழ இலக்கியத்தில் புலம்பெயர்தலின் துயரை தன்வரலாற்றுத் தன்மையுடனும், அரசியல் பார்வையுடனும் சித்தரித்த பல நாவல்கள் உண்டு. கடவுள் தொடங்கிய இடம் அவற்றில் இருந்து வேறுபடுவது அதன் மிகையுணர்ச்சி அற்றதும் மெல்லிய நகைச்சுவை கலந்ததுமான கூறுமுறையாலும், அரசியல் கலவாத விலகிய பார்வையாலும்தான். இந்நாவல் வெவ்வேறு நாடுகள் வழியாக செல்லும் கதைச்சரடு வழியாக ஓர் உலகதரிசனத்தை அளிப்பதாகவும் உள்ளது. போர், இடம்பெயர்தல் ஆகியவற்றின் சமகால அரசியல் காரணங்களை நோக்கிச் செல்லாமல் சரித்திரம் முழுக்க நிகழ்ந்துகொண்டிருக்கும் மானுட அலைச்சலின் உளநிலைகளைக் காட்டுவதாக இந்நாவல் மாறுவது அந்த விலக்கம் கொண்ட முழுமைப்பார்வையால்தான்.

உசாத்துணை


✅Finalised Page