under review

க.தா.செல்வராசகோபால்

From Tamil Wiki
Revision as of 11:12, 20 September 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Inserted READ ENGLISH template link to English page)

To read the article in English: K.T. Selvarasagopal. ‎

பூராடனார்
க. தா. செல்வராசகோபால்

க.தா. செல்வராசகோபால் ( 13 டிசம்பர் 1928 - 21 டிசம்பர் 2010) ஈழத்துப் பூராடனார் என்றும் அழைக்கப்படும் க.தா.செல்வராசகோபால் ஈழத்துத் தமிழறிஞர், ஆசிரியர், இலக்கணம் மற்றும் நாடக ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர். புலம் பெயர்ந்து கனடாவில் வாழ்ந்தார். கனடாவின் தமிழ் கலை, கலாசாரம், இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க முன்னோடி.கனடாவில் உலகத் தமிழ் பண்பாட்டு மையத்தை உருவாக்கினார். தமிழில் முதன்முதலில் கணிப்பொறியைப் பயன்படுத்தி நூல் அச்சிட்டார். இருநூற்று ஐம்பதுக்கும் மேல் நூல்களைப் பதிப்பித்தார்.

பிறப்பு,கல்வி

செல்வராசகோபால் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டம் செட்டிப்பாளையத்தில் டிசம்பர் 13, 1938 அன்று சாமுவேல் கதிர்காமத்தம்பிக்கும் வள்ளியம்மைக்கும் மகனாகப் பிறந்தார். தமிழறிவு பெற்ற குடும்பத்தில் (பாட்டனார் புலவர் இ.வ.கணபதிப்பிள்ளை, பெரியதந்தை வரகவி சின்னவப் புலவர்), தேற்றாத்தீவில் வாழ்ந்தவர்.

தொடக்கக்கல்வியைக் குருக்கள்மடம் மெதடிஸ்ட் மிஷன் தமிழ்ப்பாடசாலையிலும் உயர் கல்வியை மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிலும்,மருதானை கலைநுட்பக் கல்லூரியிலும்,குடந்தையிலும்(தமிழகம்) பயின்றார். ஓவியம். தட்டச்சு, சுருக்கெழுத்து, அச்சுக்கலை, ஓமியோ மருத்துவம் முதலானவற்றிலும் பயிற்சிபெற்றார்.

தனி வாழ்க்கை

வியற்றிஸ் பசுபதி அம்மையாரை மணந்து இதய மனோகர், இதய சந்திரா இதய ஜோதி, இதய அருள், இதய ராஜ் என்ற ஐந்து மக்களைப் பெற்றார். தம்பதியர் 30 வருடம் ஆசிரியப் பணி செய்து 1983-ல் இனக் கலவரத்தின் போது கனடாவுக்குப் புலம் பெயர்ந்தனர்.

இலக்கியப் பணி

  • ஆசிரியப்பயிற்சி மாணவராக இருந்தபொழுது இலங்கையிலிருந்து வெளிவந்த தினகரன், வீரகேசரி, சுதந்திரன், ஈழகேசரி, மின்னொளி, ஶ்ரீலங்கா மற்றும் தமிழகத்திலிருந்து வெளிவந்த தமிழன்,கல்கி,திங்கள்,ஆனந்தவிகடன்,கலைமகள் போன்ற பத்திரிகைகளில் கதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். 1954-ஆம் ஆண்டிலிருந்து இலங்கை வானொலியில் சொற்பொழிவாற்றியிருக்கிறார்.
  • ஈழத்தில் தன் மனோகரா அச்சகம் மற்றும் கனடாவின் ரிஃப்ளக்ஸ், ஜீவா அச்சகங்கள் மூலமாகப் பல நூல்களைப் பதிப்பித்துள்ளார். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை நாவலர்பெருமானின் வாழ்க்கைக் குறிப்புகள் (நடராசா, சற்குணம்), விபுலானந்தரின் கல்விச் சிந்தனைகள் (கா.சிவப்பிரகாசம்), கிழக்கின் பேரொளி புலவர்மணி ( ச.நவரத்தினம்),சிவகுமாரன் கதைகள். இவை தவிர ஈழத்து அறிஞர்கள் பலரின் நூல்களைத் தாமே பதிப்பித்துள்ளார்.
  • தன் அச்சகம் மூலம் கனடாவில் நிழல் என்னும் இதழை நடத்தினார்.
  • செல்வராசகோபால் தம்பதியினர் முதல்முதலில் கனடாவில் மொழிக் கல்வி அடிப்படையில் அனுமதி பெற்று தமிழ் கற்பித்தார்கள்
  • கனடாவில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தினை ஆரம்பித்தார்.
  • கனடாவில் தமிழ்த் திரைப்படவரலாற்றை 60 தொகுதிகளாக வெளியிட்டார்
  • தம் மக்களுடன் இணைந்து தமிழ்க்கணிப்பொறி எழுத்துகளைப் பயன்படுத்தி முதன்முதல் வெளியிடப்பட்ட தமிழ்நூல் பெத்லேகம் கலம்பகம் (1986)
  • சுவாமி விபுலானந்தர் இயற்றிய மதங்க சூளாமணியின் கருத்தைத் தழுவி வட மொழிச் சொற்களைத் தவிர்த்து அதன் மறுபதிப்பாகவும்,ஆய்வாகவும் கருதும்படி 320 செய்யுள்கள் கொண்ட கூத்துநூல்விருத்தம் எழுதினார்.பாடல்களுக்கு உரையெழுதுவதே உலக வழக்கம், ஈழப்பூராடனார் உரைக்குப் பாட்டெழுதினார்.
யாழ்
  • தமிழழகி காப்பியம் என்னும் பெயரில் வீரமாமுனிவரின் வரலாற்றைப் பன்னிரண்டாயிரம் செய்யுள்களாக ஒன்பது காண்டங்களாக (2070 பக்கங்களில்) உருவாக்கினார்.
  • செய்யுள் நடையில் நீரரர் நிகண்டு என்ற நிகண்டு நூலை எழுதினார். (அவர் மனைவி வியற்றிஸ் அம்மையாரின் விளக்கவுரையோடு). 35 ஆண்டுகள் தேடித் திரட்டிய சொற்களை, கலாசாரச் சொல் மஞ்சரி( 23 செய்யுள்கள்), இடப்பெயர் மஞ்சரி( 9 செய்யுள்கள்), உயர்திணைப் பெயர் மஞ்சரி (11 செய்யுள்கள்), தொழிற்பெயர் மஞ்சரி( 26 செய்யுள்கள்), அஃறிணைப் பெயர் மஞ்சரி (12 செய்யுள்கள்) என ஐந்து வகையாகப் பகுத்து எழுதினார். மட்டக்களப்பு மக்கள் நாளும் பயன்படுத்தும் சொற்கள் இந்த நூலில் உள்ளன. 1984-ல் முதல்பதிப்பும் (48 பக்கம்), இரண்டாம் பதிப்பு 1987-லும் வெளிவந்தது.

இறப்பு

ஈழத்து பூராடனார் 21 டிசம்பர் 2010 அன்று கனடாவில் உயிர் நீத்தார்.

விவாதங்கள்

ஈழத்துப் பூராடனார் 1965ல் எழுதிய "'யாரிந்த வேடர்" என்னும் நூலுக்காக 1981-ல் தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு இலங்கையில் கைதுசெய்யப்பட்டார். வழக்கின் முடிவில் விடுதலை செய்யப்பட்டாலும் அவருடைய நூல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இலக்கிய இடம்

புலம்பெயர்ந்த சூழலில் ஈழத்தமிழர்களின் இலக்கிய மரபின் தொடர்ச்சி அழியாமல் முன்னெடுப்பதில் ஈழத்துப் பூராடனார் பெரும் பணியாற்றியிருக்கிறார். ஈழத்து பழந்தமிழ்நூல்களை பதிப்பிப்பது, ஈழத்து நாட்டார் கலைகளை தக்கவைத்துக் கொள்வது ஆகியவற்றில் தொடர்ந்து பணியாற்றினார். இலங்கையின் மரபிலக்கியம் சார்ந்த தொடர்ச்சியை தன் நூல்கள் வழியாக நிலைநிறுத்தினார். ஈழத்துப்பூராடனாரின் நீரரர் நிகண்டு நவீன கால நிகண்டுக்களுக்கு உதாரணமாகச் சொல்லப்படுகிறது, இதில் ஈழத்து வட்டாரச் சொற்களும் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழழகி காப்பியம் நவீன காலகட்டத்தில் எழுதப்பட்ட பழையமரபைச் சேர்ந்த காப்பியங்களில் ஒன்று.

நூல்கள்

noolaham.com
நாடகங்கள்
  • கூத்தர் வெண்பா
  • கூத்தர் விருத்தம்
  • கூத்தர் குறள்
  • கூத்தர் அகவல்
  • கிழக்கு ஈழமரபுவழி இருபாங்கு கூத்துக்கலை ஆய்வுக்கான தகவல் திரட்டு
  • கூத்துக்கலைத் திரவியம்
  • வடமோடி கூத்து இலக்கணமும் மணிமேகலைக் காவியக் கூத்து இலக்கியமும்
  • கனடாவில் கூத்துக்கலையை வளர்த்த கல்கிதாசன்
  • தென்மோடி இலக்கணமும் சிலப்பதிகாரம் கூத்திலக்கியமும்
  • கனடாவில் இருபாங்கு மரபுக் கூத்துக்கலை
  • இரு பாங்குக் கூத்துக்கலைஞன் எசு.ஈ.கணபதி பிள்ளை அவர்களின் கலையும் பணியும்
  • மூனாக்கானா வளப்படுத்திய இருபாங்குக் கூத்துக்கலை
மொழிபெயர்ப்புகள்

1990-ல் கிரேக்கத்தின் ஆதி கவிஞரான ஹோமரின் இலியட், ஒடிசி (Iliad ,Odyssey)காப்பியங்களை (ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து ) மூலநூலைத் தழுவி தமிழ்ச் சூழலுக்கேற்ப செய்யுள் வடிவில் மொழியாக்கம் செய்து அமெரிக்க கிரேக்க மன்றின் பாராட்டைப் பெற்றார

சோபோகிள்ஸ்(Sophocles) நாடகத்தையும் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.

ஆய்வு நூல்கள்
  • ஐங்குறுநூற்று அரங்கம்
  • சூளாமணித் தெளிவு
  • கல்லாடம் கற்போம் சொல்லாடுவோம்
  • நைடதம் யாருக்கும் ஒரு ஔடதம் ஆய்வுக்கண்ணோட்டம்
  • சீவகசிந்தாமணி ஆய்வுச் சிந்தனைகள்
  • பெருங்கதை ஆய்வுநோக்கு
  • வல்வெட்டித்துறைக் கடலோடிகள்
பிற நூல்கள்
  • இலங்கை வரலாறு கூறும் பல நூல்களும்,உலகளவில் தமிழ்ப்பணிகள் பற்றிய நூலும் வரைந்துள்ளார்.
  • தமிழ்த் திரைப்படக்களஞ்சியம் அறுபது தொகுதிகளாக உருவாக்கியுள்ளார்.
  • மட்டக்களப்புப் பிரதேசத்தின் வழக்கு மரபுச்சொற்கள் சொற்றொடர்களினதும் அகராதி (1984)
  • மட்டக்களப்பு மாநிலப் பழமொழிகள் அகரவரிசை (1984)
  • நீரரர் நிகண்டு (1984)
  • மட்டக்களப்புச் சொல்வெட்டு (1984)
  • மட்டக்களப்புச் சொல்நூல் (1984)
  • மட்டக்களப்பு மாநில உபகதைகள் (1982)
  • சீவபுராணம் நெடுங்கதை (1979)
  • மட்டக்களப்பு மக்களின் மகிழ்வுப் புதையல்கள் (1978)
  • மட்டக்களப்புப் பனையோலைச் சுவடிகள் (1980)
  • மட்டக்களப்பியல்
  • மட்டக்களப்பு உழவர்மாட்சிக் கலம்பகம்
  • கன்னங்குடா உழுதொழிற்பள்ளு
  • மீன்பாடும் தேன்நாடு
  • வசந்தன்கூத்து ஒருநோக்கு
  • வயலும் வாரியும்
  • மட்டக்களப்பில் இருபாங்குக் கூத்துக்கலை

விருதுகள், பரிசுகள்

  • நாடகசேவை விருது- இந்து பண்பாட்டு அமைச்சு (1982)
  • டொரன்டோ சேக்கம் நிறுவனத்தின் கேடயம் (1987)
  • இலக்கியமணி விருது - மட்டக்களப்பு கலை பண்பாட்டு அவை
  • பாராட்டுப்பதக்கம் (1994)
  • தொரன்றோ சேக்கம் நிறுவனத்தின் கேடயம் (1987)
  • தமிழ்நெறிப்புலவர் விருது - மொரீசியஸ்
  • முனைவர் பட்டமும் (Doctor Of Letters) (2000)
  • தமிழர் தகவல் விருது (1992)
  • தாமோதரம் பிள்ளை விருது (1998)

உசாத்துணை


✅Finalised Page