under review

உதயணன்

From Tamil Wiki
Revision as of 20:08, 31 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Category:நாவலாசிரியர்கள் சேர்க்கப்பட்டது)

To read the article in English: Udhayanan. ‎

எழுத்தாளர் உதயணன்

உதயணன் (செப்டம்பர் 6, 1949) எழுத்தாளர், பதிப்பாளர், கள ஆய்வாளர், சரித்திர நாவலாசிரியர், வரலாற்று நாவலாசிரியர். பல்லவ மன்னர்களை பற்றி கள ஆய்வு செய்து பல நாவல்களை எழுதியுள்ளார். எழுத்தாளர் சாண்டில்யனை ஆதர்சமாகக் கொண்டவர். இவர் எழுதியுள்ள சரித்திர, வரலாற்று நாவல்களுள் 20-க்கும் மேற்பட்ட நாவல்கள் ஆயிரம் பக்கங்களை கொண்டவை

(பார்க்க : உதயணன் (கனடா) )

பிறப்பு, கல்வி

உதயணனின் இயற்பெயர் நரசிம்மன். செப்டம்பர் 6, 1949-ல் காஞ்சிபுரத்தில் ஆந்திராவைச் சேர்ந்த சீனிவாசன் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சீரங்கம்மாள் இணையருக்கு பிறந்தார்.சீனிவாசன் பெருமாள் கோவில் தர்மகர்த்தாவாக இருந்தார். அவருக்கு ஒன்பது பிள்ளைகள். ஏழு ஆண்கள், இரண்டு பெண்கள்.

உதயணன் 1969-ல் காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

உதயணன் சென்னையில் 1971 முதல் மருத்துவத் துறையில் பணியாற்றினார். 1983-ல் வைதேகி என்பவரை திருமணம் செய்துகொண்டார். தன் மனைவியின் பெயரிலும் (வைதேகி பதிப்பகம்) தன்னுடைய புனைபெயரிலும் (உதயணன் பதிப்பகம்) பதிப்பகங்களை தொடங்கினார். அவற்றின் வழியாக பத்துப் புத்தகங்களை வெளியிட்டார். பெரும் இழப்பு ஏற்பட்டதால் இரண்டு பதிப்பகப் பணிகளையும் நிறுத்திக்கொண்டார். இவரின் மனைவி வைதேகி 2012-ல் காலமானார்.

இலக்கிய வாழ்க்கை

உதயணன் மாணவராக இருக்கும்போதே 'மனோன்மணியம்’ செய்யுள் மீது ஈடுபாடுகொண்டார். அதன் உந்துதலால் கல்லூரிப் பருவத்திலேயே எழுதத் தொடங்கியிருந்தார். பின்னர் அவரின் விருப்பம் சரித்திரக் கதைகளின் மீது திரும்பியது. இதன் விளைவாக தனக்கு 'உதயணன்’ என்ற புனைபெயரை வைத்துக்கொண்டார்.

எழுத்தாளர்கள் கல்கி, சாண்டில்யன் ஆகியோரின் செல்வாக்குடன் வரலாற்று நாவல்களை எழுதத் தொடங்கினார். இவர் காஞ்சிபுரத்தில் பிறந்தவர் என்பதால், அந்த ஊரைச் சுற்றியுள்ள பகுதிகளை மையப்படுத்தி, பெரும்பான்மையான சரித்திர, வரலாற்று நாவல்களை எழுதியுள்ளார். குறிப்பாக பல்லவ மன்னர்களை மையப்படுத்தி எழுதியுள்ளார்.

பின்னாளில் 'வானதி பதிப்பகம்’ இவருடைய மூன்று நாவல்களையும் யாழினி பதிப்பகம் இவரின் ஒரு புத்தகத்தையும் வெளியிட்டன. கௌரா பதிப்பகம் இவரின் அனைத்துப் புத்தகங்களையும் வெளியிட்டுள்ளது.

சரித்திர, வரலாற்று நாவல்கள் - 33, சமூக நாவல்கள் – 6, சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகள் என இதுவரை இவரின் 44 புத்தகங்கள் வெளிவந்துள்ளன.

எழுத்தாளர் உதயணன்

இலக்கிய இடம்

களஆய்வு மேற்கொண்டு பல்லவ மன்னர்களைப் பற்றிய நாவல்களை எழுதியவர்களில் இவர் குறிப்பிடத்தக்கவர். இவரது சரித்திர, வரலாற்று நாவல்களில் எழுத்தாளர்கள் கல்கி, சாண்டில்யன் ஆகியோரின் மொழிநடைத் தாக்கம் உள்ளது. பொதுவாசிப்புக்குரிய சாகசத்தன்மையும் கற்பனாவாதப் பண்பும் கொண்ட கதைகள் இவை.

நூல்கள்

உதயணன் எழுதிய நாவல்கள் சிலவற்றின் முன் அட்டைப் படங்கள்
சமூக நாவல்கள்
  1. மலராத மொட்டு
  2. வேதவிலாசம்
  3. மனவிலங்கு
  4. வெண்தாமரை
  5. நான்
  6. வாழ்க்கை விலங்கு
சரித்திர, வரலாற்று நாவல்கள்
  1. வேள்வித்தூண்
  2. சோழ குலாந்தகன்
  3. மானவர்மன்
  4. சிங்களத்துப் புயல்
  5. பாண்டியன் முரிசு
  6. வெற்றி வேந்தன்
  7. பல்லவ முரசு
  8. மகாவம்சம்
  9. பராந்தகன் கனவு
  10. மயில் கோட்டை
  11. ரோம ராஜ்யம்
  12. மயில்நிற மங்கை
  13. மௌரியப் புயல்
  14. ஆபுத்திரன்
  15. ஸ்ரீமுகன்
  16. வேங்கை வாசல்
  17. பரிமேலழகன்
  18. விஷ்ணு பல்லவன்
  19. உத்தமச் செல்வி
  20. கடல் கோட்டை
  21. விஹார மகாதேவி
  22. மேல்கோட்டை
  23. அரேபியச் சேரமான்
  24. மங்கை வேந்தன்
  25. மாய பாண்டியன்
  26. கடம்பவனத்துக் குயில்
  27. சோழ மோகினி
  28. மன்னன் மகன்
  29. பள்ளிகொண்ட பெருமாள்
  30. கடல்நிலா
  31. இரத்தின தீபம்
  32. நாகபல்லவன்
சிறுகதைத் தொகுப்பு
  1. என்னைப் பார்த்து ஒருத்தி சிரிக்கிறாள்
  2. உதயணனின் சரித்திரச் சிறுகதைகள்
கட்டுரைத் தொகுப்பு
  1. உதயணனின் கட்டுரைகள்
பிற நூல்கள்
  1. இவை பொன்மொழிகள் அல்ல (விமர்சன நூல்)
  2. பொன்மொழிகள் 1000 (தொகுப்பாசிரியர்)
  3. பெரிய கடவுள் (ஆன்மிக நூல்)

உசாத்துணை


✅Finalised Page