under review

ஈழகேசரி

From Tamil Wiki
Revision as of 20:40, 31 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Category Category:இதழ்கள் சேர்க்கப்பட்டது)

To read the article in English: Eezha Kesari. ‎

ஈழகேசரி
ஈழகேசரி 1935

ஈழகேசரி (1930 -1958) இலங்கையில் இருந்து வெளிவந்த தொடக்ககால தமிழ் இதழ். இது அரசியல், சமூகவியல் செய்திகளையும் இலக்கியப்படைப்புகளையும் வெளியிட்டது. இலங்கைத் தமிழர்களின் உரிமைக்குரலாகவும் ஒலித்தது

(ஈழகேசரி என்னும் பிற்கால இதழ் 1995 முதல் 1999 வரை லண்டனில் இருந்து வெளிவந்தது. பார்க்க ஈழகேசரி லண்டன்)

வெளியீடு

ஜூன் 22, 1930 அன்று ஈழகேசரி வார இதழின் முதல் இதழ் வெளியானது. ஈழகேசரியைத் தொடக்கியவர் நா. பொன்னையா என்பவர். இதழ் தமிழ் மக்களிடையே அரசியல் விழிப்புணர்வையும் சமூக மாற்றத்தையும் உருவாக்கும் நோக்கம் கொண்டிருந்ததை அதன் முதல் இதழ் அறிவித்தது

அறியாமை வயப்பட்டு உறங்கிக் கிடக்கும் மக்களைத் தட்டியெழுப்பி அறிவுச்சுடர் கொளுத்துவதற்கும் ஏற்ற நல்விளக்குப் பத்திரிகையே. நமது நாடு அடிமைக் குழியிலாழ்ந்து, அன்னியர் வயப்பட்டு, அறிவிழந்து, மொழிவளம் குன்றி, சாதிப்பேய்க்காட்பட்டு, சன்மார்க்க நெறியழிந்து, உன்மத்தராய், மாக்களாய் உண்டுறங்கி வாழ்தலே கண்ட காட்சியெனக் கொண்டாடுமிக் காலத்தில் எத்தனை பத்திரிகைகள் தோன்றினும் மிகையாகாது.

...மக்களாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் தன்னலமற்ற தியாக சிந்தையுடனும் யாதானுமொரு பணியிற் கடனாற்றுதல் வேண்டுமென்னும் பேரறிஞர் கொள்கை சிரமேற் கொண்டும் எமது சிற்றறிவிற் போந்தவாறு "பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவவானினும் நனிசிறந்தனவே" என்னும் ஆன்றோர் வாக்கின்படியும் தேசத்தொண்டு செய்தலே சிறப்புடையதெனக் கருதி இப்பணியை மேற்கொண்டோம்.

ஈழகேசரி பொன்விழா மலர்

ஈழகேசரி இதழ் இலங்கையில் தோன்றிய முதல் மதச்சார்பற்ற இதழ் என்றும், ஈழ அரசியலுரிமை கோரிக்கைகள் எழுந்ததை ஒட்டி இந்த இதழ் வெளியாயிற்று என்றும் கா.சிவத்தம்பி கருதுகிறார் (சிவத்தம்பி, கார்த்திகேசு; யாழ்ப்பாணம் சமூகம், பண்பாடு, கருத்துநிலை; குமரன் அச்சகம், கொழும்பு, ஆவணி 2000)

உள்ளடக்கம்

ஈழகேசரி முதன்மையாக இலங்கையின் அரசியலையே பேசுபொருளாகக் கொண்டிருந்தது. ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தைப் பற்றிய செய்திகளையும், தமிழர் உரிமைபற்றிய செய்திகளையும் வெளியிட்டது. பழந்தமிழ் இலக்கிய ஆய்வுகளுடன் இலங்கைத் தமிழில் எழுதப்பட்ட சிற்றிலக்கியங்கள் பற்றிய ஆய்வுகளையும் வெளியிட்டது.

ஈழகேசரியில் இலங்கைத்தமிழ் இலக்கியத்தின் தொடக்ககால எழுத்தாளர்களான இலங்கையர்கோன், சி.வைத்தியலிங்கம், சம்பந்தர் ஆகியோர் எழுதினார்கள். அடுத்த தலைமுறையைச் சேர்ந்த சொக்கன், கனக செந்திநாதன், வ.அ.இராசரத்தினம் ஆகியோரும் அதற்கடுத்த தலைமுறையைச் சேர்ந்த எஸ். பொன்னுத்துரை, டொமினிக் ஜீவா, கே.டானியல் ஆகியோரும் எழுதினார்கள். சோ. சிவபாதசுந்தரம், அ. செ. முருகானந்தம், இராஜ அரியரத்தினம் ஆகியோர் ஈழகேசரி ஆசிரியர்களாகப் பணிபுரிந்தனர்.

விமர்சனம்

ஈழகேசரி நவீன இலக்கியத்திற்கு போதிய இடம் அளிக்கவில்லை என்றும் அது மரபிலக்கிய ஆய்வையே முதன்மையாகக் கருதியது என்றும் அதன்மேல் விமர்சனம் உருவாகியது. ஈழகேசரியில் எழுதியிருந்த அ.ச.முருகானந்தன், நாவற்குழியூர் நடராசன், வரதர், பண்டிதர் பஞ்சாட்சர சர்மா ஆகியோர் மறுமலர்ச்சி சங்கம் என்னும் அமைப்பை நிறுவி மறுமலர்ச்சி என்னும் பெயரில் நவீன இலக்கிய இதழ் ஒன்றை தொடங்கினர்

உசாத்துணை


✅Finalised Page