under review

ஆண்டி சுப்பிரமணியம்

From Tamil Wiki
Revision as of 20:15, 31 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Category:நாடகாசிரியர்கள் சேர்க்கப்பட்டது)

To read the article in English: Andi Subramaniyam. ‎


ஆண்டி சுப்பிரமணியம் (ஆண்டி ராம சுப்பிரமணியம்) (1897-1981) தமிழறிஞர், நாடக இயக்குனர், நாடக ஆசிரியர், நாடக ஆய்வாளர், இலக்கிய விமர்சகர், சமூக செயற்பாட்டாளர். தமிழ் நாடக வரலாற்று நூல், நாடகங்கள் ஒப்பீட்டு ஆய்வு, நாடகக் கலைக்களஞ்சியம் ஆகியவை நாடகத்துறைக்கு ஆண்டி சுப்பிரமணியத்தின் பங்களிப்பு. A Theatre Encyclopedia என்ற நாடகக் கலைக்களஞ்சியமும், கேரள தோல்பாவைக் கூத்து பற்றி எழுதிய ஆங்கிலக் கட்டுரையும் ஆண்டி சுப்பிரமணியம் எழுதிய முக்கியமான படைப்புகள்.

பிறப்பு, கல்வி

ஆண்டி சுப்பிரமணியம் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டத்தில் உள்ள பீமநேரி என்ற குக்கிராமத்தில் 1897-ல் பிறந்தார். ராமசுப்பிரமணியத்துக்கு முன்பு பிறந்த நான்கு பேரும் அற்ப ஆயுளில் மாண்டு போக முருக பக்தரான அவரது தந்தை ஆண்டி என்ற பெயரால் மகனை அழைத்திருக்கிறார். (ஆண்டி என்ற பெயர் ஆயுளைக்கூட்டும் என்பது நம்பிக்கை) ஆண்டி சிறுவயதில் தந்தையை இழந்தார்.

ஆண்டி சுப்பிரமணியம் கோட்டாறு அரசுப்பள்ளியில் உயர்நிலைப் படிப்பையும் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் புகுமுகப் படிப்பையும் முடித்துவிட்டு திருவனந்தபுரம் அரசு கலைக்கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பி.ஏ. ஆனர்ஸ் படித்தார். 1917-ல் அன்னிபெசன்ட், அருண்டேல், வாடியா மூவரும் கைது செய்யப்பட்டதற்கான எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டதால் ஆண்டி சுப்பிரமணியம் ஆனர்ஸ் படிப்பை முடிக்காமலானார்.

தனிவாழ்க்கை

  • 1936-லிருந்து 1948 வரை திருவிதாங்கூர் அரசி சேது பார்வதிபாயின் பேரில் இருந்த ஸ்திரீ தர்மாலாயம் என்ற அமைப்பின் பொறுப்பாளராக ஆண்டி சுப்பிரமணியம் இருந்தார்.
  • 1965 முதல் 1966 வரை சென்னைப் பல்கலைக்கழகச் சமஸ்கிருதப் பேராசிரியர் வே. ராகவனின் வேண்டுதலில் மைலாப்பூர் குப்புசாமி சாஸ்திரி ஆராய்ச்சிக்கழகத்தின் நூலகராக ஆண்டி சுப்பிரமணியம் பணியாற்றினார்.
  • 1967-ல் சென்னை நாட்டிய சங்கத்தின் வருகைப் பேராசிரியராக பணியாற்றினார்.

பொதுப்பணிகள்

இந்தியச் சாரணர் சங்கத்தின் நிர்வாகியாக கே.எஸ்.காமத் இருந்தபோது ஆண்டி சுப்பிரமணியம் திருவனந்தபுரம் மாவட்டத் துணைத்தலைவராக இருந்தார்.

இலக்கியப்பணிகள்

ஆண்டி சுப்பிரமணியம் தமிழில் 12-க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதினார். புரட்சி மூவர், திரட்டுப்பால், யார் மூளைக்காரன்? என்னும் மூன்று நாடகங்களும் தினமணி கதிர் வெளியீடாக வந்தன. மாங்கல்யம் நாடகம், பொன்மொழி மாலை என்ற நூலின் பின்னிணைப்பாகச் சேர்க்கப்பட்டிருந்தது. வேறு சில நாடகங்களை அச்சிட அப்போது தினமணியில் இருந்த ஆண்டி சுப்பிரமணியம் உதவினார். சிறுபிரசுரங்கள், கலைக்களஞ்சியம் உட்பட ஆங்கிலத்தில் ஆண்டி சுப்பிரமணியம் எழுதிய நூல்கள் 20. அவற்றில் சில கையெழுத்துப் பிரதிகளாக இருந்து அழிந்துபோயின.

இதழியல்

ஆண்டி சுப்பிரமணியம் 1936-ல் ’ஸ்திரீ தர்மம்’ என்ற இருமொழிப் பத்திரிகையை (ஆங்கிலம், தமிழ்) நடத்தினார்.

நாடகக் கலைப் பங்களிப்பு

பேராசிரியர் ஸ்ரீனிவாசன் துணையுடன் அமெச்சூர் டிராமட்டிக் அசோசியேசன் (Amateur Dramatic Association) என்னும் அமைப்பை ஆண்டி சுப்பிரமணியம் ஆரம்பித்தார். அதில் ஷேக்ஸ்பியரின் ஒதல்லோ(Othello), மேக்பத்(Macbeth) போன்ற நாடகங்கள் மேடை ஏறின. பம்மல் சம்பந்த முதலியாரின் மனோகரா நாடகத்தை அக்குழு நடத்தியது. மனோகராவில் ஆண்டி சுப்பிரமணியம் சத்தியசீலனாக நடித்தார்.

ஆண்டி சுப்பிரமணியம் நாடக இயக்குநராக ஆனபின்பு போஜன், பாதுகாபட்டாபிஷேகம், நளன், இரண்டு சினேகிதர்கள், கள்வர் தலைவன் போன்ற தமிழ் நாடகங்களை நடத்தினார். ஆண்டி சுப்பிரமணியம் 1926 வரை மேடை நாடகங்களில் கவனம் செலுத்தினார். திருவனந்தபுரம் நீதிபதி சங்கரநாராயணன் உதவியுடன் 'Art Experimental Theatre' என்னும் பேரில் ஓர் அமைப்பைத் தொடங்கினார்.

கேரளத்தில் பகவதி கோவில்களில் நடிக்கப்படும் தோல்பாவைக் கூத்து நிகழ்வில் கம்பராமாயணத்தின் பாடல்களைப் பயன்படுத்துகின்றனர். அவற்றை சங்கீத அகாதமிக்காக ஆண்டி சுப்பிரமணியம் தொகுத்து 'Kamban Epic as Shadow Play' என்னும் சிறு நூலாக வெளியிட்டார். மத்தவிலாசக் கூத்து அடிப்படையில் பெற்ற தகவல்களை 'The Ascendancy and Eclipse of Jainism in Tamil Nadu' என்ற கட்டுரையாக எழுதினார்.

ஆண்டி சுப்பிரமணியம் சுதேசமித்திரன் வாரப் பத்திரிகையில் நவீனத் தமிழ் அரங்கின் புத்துயிர்ப்பும் வரலாறும் என்னும் தலைப்பில் பத்து வாரத் தொடர் ஒன்றை 1949-50 காலகட்டத்தில் எழுதினார். அது நாடக வரலாறு, ஆய்வு தொடர்பான கட்டுரைகளின் தொடர். தமிழ்க் கலைக்களஞ்சியத்தில் (பகுதி-5) உள்ள நாட்டியம் பற்றிய அவரது கட்டுரை டாக்டர் வே. ராகவனின் தூண்டுதலால் எழுதப்பட்டது. ஆண்டி சுப்பிரமணியம் 1961-ல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் ’Theatres - Indian and Western. Their Mutual Impacts’ என்ற தலைப்பில் விரிவாகப் பேசியிருக்கிறார்.

நாடக ஆய்வு

ஆண்டி சுப்பிரமணியம் 1945-க்குப் பின் நாடக ஆராய்ச்சியில் தீவிரமானார். கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியின் சிபாரிசில் UNESCO அமைப்பிற்காக 1961-1965 ஆண்டுகளில் Compilation of Directory of Indian Culture என்னும் தலைப்பில் ஆண்டி சுப்பிரமணியம் செய்த ஆய்வு புத்தகவடிவில் வந்தது. ஆனால் அதன் பிரதிகள் விற்பனைக்கு வராமலே தொலைந்துவிட்டன. ஆண்டி சுப்பிரமணியம் கிரேக்க நாடகங்களையும் - சமஸ்கிருத நாடகங்களையும் ஒப்பிட்டு ஆராய்ந்தார். ஆண்டி சுப்பிரமணியத்துக்கு இந்திய நாடகங்களில் குறிப்பாகப் பழைய சமஸ்கிருத நாடகங்களில்கூட கிரேக்கப் பாதிப்பு உண்டு என்பதில் முழுநம்பிக்கை இருந்தது.

  • பரதநாட்டிய சாஸ்திரத்தில் இந்திய நாடகங்கள் மேற்கோளாகக் காட்டப்படவில்லை என்ற காரணத்தைச் சொல்லி அலெக்சாண்டரின் படையெடுப்பு வழி பரவிய கிரேக்க நாடகங்களின் பாதிப்பே பரத சாஸ்திரம் என்ற கருத்தை ஆதாரபூர்வமாக மறுத்து ஆண்டி சுப்பிரமணியம் எழுதிய கருத்துகள் முக்கியமானவை.
  • சூத்ரகரின் ’மிருச்சகடிகம்’ நாடகம் யவன நாட்டுப் பழக்க வழக்கங்களை அடிப்படையாகக் கொண்டது என கருதினார் ஆண்டி சுப்பிரமணியம்.
  • விசாகதேவர் (கி.பி. 9-ஆம் நூற்றாண்டு) இயற்றிய ‘தேவிசந்திரகுப்தம்’ பைபிளின் பழைய ஏற்பாடு பகுதியில் வரும் ஜூடித் அத்தியாயத்தில் (Book of Judith-Old Testament) காணப்படும் கதையின் தாக்கம் என்று ஆண்டி சுப்பிரமணியம் கருதினார் .
  • ஆண்டி சுப்பிரமணியம் தமிழகத்தில் குறிப்பிட்ட சில சிவன் கோவில்களில் தேவதாசிகளால் நடிக்கப்பட்ட ‘சாரங்கநாதன்’ நாடகத்தில் யூரிபிடிஸ்ஸின் ஹிப்போலிடஸ் (Hippolytus by Euripides) என்ற நாடகத்தின் தாக்கம் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
நாடக கலைக்களஞ்சியம்

ஆண்டி சுப்பிரமணியம் ’A Theatre Encyclopedia’ என்னும் தலைப்பில் அறுபதாயிரம் உட்தலைப்புகள் கொண்ட கலைக்களஞ்சியம் ஒன்றைத் தொகுத்தார். கையெழுத்துப் பிரதியிலிருந்த அந்த நூலைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட சென்னைப் பல்கலைக்கழகம் அதைத் தவறவிட்டது. "இன்னும் 20 ஆண்டுகள் முயற்சி செய்தால் மறுபடியும் அதைத் தொகுத்து விடலாம்" என்று சொன்னபோது ஆண்டி சுப்பிரமணியத்துக்கு வயது எண்பது.

நாடக அமைப்புகள்

ஆண்டி சுப்பிரமணியம் ’அமெச்சூர் டிராமட்டிக் அசோசியேசன்’; ’Art Experimental Theatre’ என்ற நாடக அமைப்புகளை நடத்தினார்.

அரங்கேற்றிய நாடகங்கள்

தமிழ்
  • மனோகரா
  • போஜன்
  • பாதுகாபட்டாபிஷேகம்
  • நளன்
  • இரண்டு சினேகிதர்கள்
  • கள்வர் தலைவன்
  • மாங்கல்யம்
ஆங்கிலம்
  • ஷேக்ஸ்பியரின் ஒதல்லோ
  • மேக்பத்

திரைப்படம்

ஆண்டி சுப்பிரமணியம் 1950-1951-ல் சேச்சி என்ற மலையாளக் கதையின் தழுவலான ’நடிகை’ என்ற தமிழ் திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதினார்.

அரசியல்

ஆண்டி சுப்பிரமணியம் கோவில் நுழைவு அனுமதி அறிக்கை வந்த காலமான 1936-ல் கமலாதேவி சட்டோபாத்தியாயாவின் தலைமையில் 60 தலித் இளைஞர்களை அழைத்துக்கொண்டு திருவிதாங்கூர் கோவில்களுக்குள் நுழைந்தார்.

மறைவு

1982இல் சென்னையில் 84 வயதான ஆண்டி ராமசுப்பிரமணியத்தைச் சந்தித்ததை வெங்கட் சாமிநாதன் யாத்ராவில் ஒரு கட்டுரையில் எழுதினார். ஆண்டி சுப்பிரமணியம் தன் 84 வயதில் தள்ளாமையின் காரணமாகப் பீகாரில் இருந்த மகன் வீட்டிற்குப் போனார். அங்கேயே வாழ்ந்து சில வருடங்களில் காலமானார்.

நூல்கள் பட்டியல்

  • A Theatre Encyclopedia
  • Compilation of Directory of Indian Culture
  • Kamban Epic as Shadow Play
  • The Ascendancy and Eclipse of Jainism in Tamilnadu
  • நவீனத் தமிழ் அரங்கின் புத்துயிர்ப்பும் வரலாறும்
  • தமிழ்க் கலைக்களஞ்சியத்தில் (பகுதி-5)
  • Theatres - Indian and Western. Their Mutual Impacts (1963)
நாடகம்
  • புரட்சி மூவர்
  • திரட்டுப்பால்
  • யார் மூளைக்காரன்?
  • மாங்கல்யம் நாடகம்

உசாத்துணை


✅Finalised Page