under review

அப்பூதியடிகள்

From Tamil Wiki
Revision as of 21:04, 31 December 2022 by Madhusaml (talk | contribs)

To read the article in English: Apputhi Adigal. ‎

அப்பூதியடிகள் - வரைபட உதவி நன்றி - www.tamilhindu.com
அப்பூதியடிகள் - நன்றி - www.tamilhindu.com

அப்பூதியடிகள் சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

அப்பூதியடிகள் சோழ நாட்டில் திங்களூர் எனும் ஊரில் அந்தணர் குலத்தில் பிறந்தவர். திருநாவுக்கரசர் மேல் அன்பும் பக்தியும் கொண்டவர். அதனால் தான் அமைத்த அன்னசத்திரம், உறைவிடம், தண்ணீர்ப்பந்தல் போன்ற அனைத்தையும் திருநாவுக்கரசர் பெயரால் செய்துவந்தார். ஒரு முறை திருநாவுக்கரசர் அப்பூதி அடிகள் வசித்த திங்களூருக்குச் சென்ற போது, தன்னுடைய பெயரால் தர்மங்கள் நடப்பதைக் கண்டு வியந்தார். அப்பூதி அடிகளார் பற்றிக் கேள்விப்பட்டு அவரில்லம் சென்றார் திருநாவுக்கரசர்.

அப்பூதியடிகளை சந்தித்த திருநாவுக்கரசர், தர்மச் செயல்களைச் அப்பூதியடிகள் பெயரில் செய்யாமல் திருநாவுக்கரசரின் பெயரில் ஏன் செய்கிறார் என்று கேட்டார். அதற்கு அப்பூதியடிகள் திருநாவுக்கரசர் சமண சமயத்தில் பெரும் துறவியாய் இருந்ததையும், சிவனருளால் அச்சமயம் விட்டு சைவ மதமேற்று தொண்டுகள் பல புரிந்து வருவதையும் கூறினார். இறைவனின் மீது அன்பு கொள்வதை விடவும், அவனுடைய அடியார்கள் மேல் அன்பு கொள்ளுதல் மேலும் சிறப்பானது என்று எடுத்துரைத்தார்.

அப்பூதியடிகளின் அன்பில் நெகிழ்ந்த திருநாவுக்கரசர் தன்னை வெளிப்படுத்தினார். திருநாவுக்கரசரே தன்னுடைய இல்லம் வந்திருப்பதை அறிந்து மகிழ்ந்த அப்பூதி அடிகள் அவரை உணவு உண்ண அழைத்தார். அவருக்காக வாழை இலை அறுக்கச் சென்ற அப்பூதி அடிகளின் மகன் பாம்பு தீண்டி இறந்தார். திருநாவுக்கரசர் வந்திருக்கும் போது மகன் இறந்து போனதால், அதைக் கூறி திருநாவுக்கரசரை உணவு உண்ண தடை செய்து விடக்கூடாதென அப்பூதி அடிகளும், அவரது மனைவியும் தங்கள் துயரை மறைத்து உணவு படைத்தனர். ஆனால் திருநாவுக்கரர் தன்னுடன் அப்பூதியடிகளின் மகனையும் உணவருந்த அழைத்து வருமாறு சொன்னார்.

வேறு வழியின்றி, அப்பூதி அடிகள் தன்னுடைய மகன் பாம்பு தீண்டி இறந்ததைத் தெரிவித்தார். அனைத்தும் இறைவனின் திருவிளையாடல் எனப் பாடல்பாடி அப்பூதி அடிகளின் மகனை திருநாவுக்கரசர் உயிர்ப்பித்தார்.

சைவ சமயத்தில் சிவபெருமானும், சிவனடியாரும் ஒன்றே என்பதை விளக்க அப்பூதி அடிகள் கதை கூறப்படுகிறது. அப்பூதி அடிகள் திருநாவுக்கரசர் எனும் சிவனடியாரை வணங்கியே வீடுபேறடைந்தார் என்று இத்தொன்மம் குறிப்பிடுகிறது.

பாடல்கள்

  • திருத்தொண்டர் திருவந்தாதியில் அப்பூதியடிகள் கதையை விளக்கும் பாடல்:

தனமாவது திருநாவுக் கரசின் சரணமென்னா
மனமார் புனற்பந்தர் வாழ்த்திவைத் தாங்கவன் வண்தமிழ்க்கே
இனமாத்தனது பெயரிடப் பெற்றவன் எங்கள்பிரான்
அனமார் மயல் திங்களூரினில் வேதியன் அப்பூதியே

  • திருத்தொண்டர் புராணத்தில் அப்பூதியடிகள் கதையை விளக்கும் பாடல்:

அந்தமில் நற்றிங்களூர் வரும்அப் பூதி
அருமறையோர் திருநாவுக் கரசின் நாமம்
பந்தரிடை எழுதக்கண்டரசும் எய்தப்
பணிந்துபரி கலநேடிப் படப்பை சேர்ந்த
மைந்தனுயிர் உயர்கதலி இலைமேல் துஞ்சும்
வாளரவு கவரஉடன் மறைத்தல் கேட்டுச்
சிந்தைமகிழ் துயர்பதிக மருந்தால் தீர்த்துத்
திருவமுது செயஅருளைச் சேர்ந் துளாரே

குருபூஜை

அப்பூதியடிகளுக்கு ஒவ்வோர் ஆண்டும், தை மாதம் சதய நட்சத்திரத்தில், சிவாலயங்களில் குருபூஜை கொண்டாடப்படுகிறது.

உசாத்துணை



✅Finalised Page