under review

வ.த. சுப்ரமணிய பிள்ளை

From Tamil Wiki
Revision as of 20:13, 31 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Category:நீதிபதிகள் சேர்க்கப்பட்டது)
வ.த.சுப்ரமணிய பிள்ளை
திருப்புகழ்

வ.த.சுப்ரமணிய பிள்ளை (டிசம்பர் 11,1846- ஏப்ரல் 17,1909 ) வடக்குப்பட்டு தணிகாசலம் சுப்பிரமணிய பிள்ளை. தமிழறிஞர். திருப்புகழ் பாடல்களை தேடிக் கண்டடைந்து தொகுத்து வெளியிட்டார். மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றினார்.

பிறப்பு, கல்வி

வடக்குப்பட்டு தணிகாசலம் சுப்பிரமணிய பிள்ளை செங்கல்பட்டில் டிசம்பர் 11,1846-ல் தணிகாசலம் பிள்ளை-இலட்சுமி அம்மாளுக்கு பிறந்தார். திருத்தணிகை முருகன் இவர்களது குலதெய்வம். தணிகாசலம் பிள்ளை தனி ஆசிரியர் மூலம் வீட்டிலேயே சுப்ரமணிய பிள்ளைக்கு ஆரம்பக்கல்வி அளித்தார். தமிழும் தெலுங்கும் பயின்ற சுப்ரமணிய பிள்ளை 1857-ல் செங்கல்பட்டு மிஷன் ஸ்கூலில் சேர்ந்து உயர்நிலைக் கல்வியை முடித்து அங்கேயே சில ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். இந்நிலையில் பள்ளி ஆய்வுக்காக வந்த வில்லியம் மில்லர் இவருடைய அறிவுத்திறன் கண்டு சென்னைக்கு வந்து மாகிண்டோஷ் ஸ்காலர்ஷிப் தேர்வு எழுதி வென்றால் தகுந்த வேலை கிடைக்கும் என்றார். அவ்வாறே சென்னை சென்று தேர்வெழுதி வென்றார். மில்லர் வாக்களித்தபடி இவருக்கு மாதம் எட்டு ரூபாய் ஸ்காலர்ஷிப் தொகை கிடைத்தது. தொடர்ந்து U.C.S. தேர்வு எழுதி வென்றார். எஃப்.ஏ. வகுப்பில் சேர்ந்து அதிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.

தனிவாழ்க்கை

சுப்ரமணிய பிள்ளை பச்சையப்பன் கல்லூரியில் சிலகாலம் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் மில்லரின் பரிந்துரையின் பேரில், ஸ்காட்லாண்ட் மிஷன் பள்ளியில் ஆசிரியப்பணியில் சேர்ந்தார். 1868-ல் வள்ளியம்மாளுடன் திருமணம் நிகழ்ந்தது. பின்னர் ஆசிரியர் பணியில் இருந்து விலகி மில்லரின் நண்பர் ஹாட்ஸன் துரையின் பரிந்துரையின் பேரில் மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில் எழுத்தர் பணியில் சேர்ந்தார். தலைமை எழுத்தராக பதவி உயர்வு பெற்று பின்னர் முன்சீஃப் (Civil Higher Grade) தேர்வெழுதி வென்று 1882-ல் கடலூருக்கு மாவட்ட முன்சீஃப் ஆக நியமிக்கப்பட்டார். சோளிங்கர், விழுப்புரம் உள்ளிட்ட சில இடங்களில் பணியாற்றிய பின்னர் நாமக்கல்லில் முன்சீஃப் பொறுப்பேற்றார்.

நாமக்கல்லில் முன்சீஃப் பொறுப்பேற்ற பின்னர், மே 31, 1888-ல் அவர் எழுதிய குறிப்பில் "பெரிய ஊராகிய இந்த நாமக்கல்லில் ஒரு சிவன் கோயிலோ சைவக் கோயிலோ இல்லாதிருப்பது ஆச்சரியமாகவும் வருத்தத்தைத் தரத்தக்கதாயும் இருக்கிறது. குளக்கரையில் ஒரு பிள்ளையார் இருக்கிறார்; இவரே இவ்வூர்ச் சைவர்களுக்குள்ள மூர்த்தி" என்று குறிப்பிட்டிருக்கிறார். நாமக்கல்லில் மூன்றாண்டுகள் பணியாற்றிய பின்பு கும்பகோணம் சென்றார். கும்பகோணம் பற்றி தனது நாட்குறிப்பில் "கும்பகோணத்துக்கருகில் இவ்வளவு சிவஸ்தலங்கள் இருப்பது எனக்கு ஆநந்தமாயிருக்கிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒரு ஸ்தலமாவது தரிசித்து என் வாழ்நாள் பலன்படுகிறது" என்று எழுதியிருக்கின்றார். பின்னர் திருத்துறைப்பூண்டியில் சில ஆண்டுகாலம் வசித்தார். மதுரை, மானாமதுரை போன்ற இடங்களில் முன்சீஃபாகப் பணியாற்றிய பிள்ளை, 1901-ல் பணி ஓய்வு பெற்றார்.

வ.த.சுப்ரமணிய பிள்ளையின் மகன் புகழ்பெற்ற தமிழறிஞரான வ.சு. செங்கல்வராய பிள்ளை. சுப்ரமணிய பிள்ளையின் திருப்புகழ் பதிப்புப்பணி செங்கல்வராயபிள்ளையால் முன்னெடுக்கப்பட்டது

முருக வழிபாடு

ஒவ்வொரு மாதமும் கார்த்திகை தினங்களில் தவறாது முருகன் ஆலயத்திற்குச் செல்வதும், பாடல் பாடுவதும் இவர் வழக்கமாக இருந்தது. தினமும் தவறாமல் 32 முறை 'தணிகையன் துணை’ என்று எழுதியபின் தணிகேசன் மீது பாடல் பாடுவதைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.

மண்ணாசை என்கின்ற மாயையில் வீழ்ந்து மதிமயங்கி
எண்ணாது உனை மறந்தேயிருதேன் இனியாகிலும் என்
அண்ணா உன்றன் பொன்னடிக் கமலம் வந்தடையும் வண்ணம்
தண்ணார் அருள்புரியாய் தணிகாசல சண்முகனே."

என்று திருத்தணிகை முருகன் மீது நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். சிவபெருமான், உமையம்மை, மகாவிஷ்ணு, விநாயகர், நால்வர் மீதும் இவர் பல்வேறு காலகட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். திருப்புகழில் உள்ள 274 பாடல் பெற்ற தலங்களில் 176 இடங்களுக்குச் சென்று தரிசித்திருக்கிறார்.

திருப்பணிகள்

அறச்செயல்களில் ஈடுபாடு கொண்டிருந்த சுப்பிரமணிய பிள்ளை பல்வேறு மடங்களுக்கும், ஆலயங்களுக்கும் திருப்பணிகள் செய்தார். விளக்குகள் அளிப்பது, பாத்திரங்கள், ஆலயமணிகள், வேல், ஆபரணங்கள் போன்றவற்றைத் தருவது, ஆலயங்களைப் புதுப்பிப்பது, கவனிப்பின்றி இருக்கும் தெய்வச் சிலைகளை ஆலயங்களில் பிரதிஷ்டை செய்வது போன்ற பணிகளைத் தொடர்ந்து செய்தார். மதுரையில் இருக்கும் பழமுதிர்சோலை ஆலயம் பாழ்பட்டுக் கிடப்பதைக் கண்டு வருந்தி அதைச் சீர்செய்வதில் முன்னின்றவர் பிள்ளை. சைவப் பணிக்காகவே பிறந்த நகரத்தார்களுக்கு இவர் "நாட்டுக்கோட்டைச் செட்டிமார்களுக்கு ஓர் விண்ணப்பம்" என்பதை எழுதி அனுப்பி ஆலயத்தைச் சீர்த்திருத்துமாறு வேண்டிக் கொண்டார். இவர் முயற்சியின் பேரில் நாளடைவில் ஆலயம் சீரமைக்கப்பட்டு சிறப்புப் பெற்றது.

திருப்புகழ் பதிப்பு

சுப்ரமணிய பிள்ளை சிதம்பரத்தில் ஒரு விவாதத்தில் தீட்சிதர்கள் தங்கள் பெருமையை நிலைநாட்ட

வேத நூன்முறை வழுவாமே தினம்
வேள்வியால் எழில்பு னை மூவாயிர
மேன்மை வேதியர் மிகவே பூசனைபுரி கோவே

என்ற திருப்புகழ்ப் பாடலை எடுத்துக்காட்டிடக் கேட்டு திருப்புகழ் பாடல்கள் மேல் ஆர்வம் கொண்டார். அப்போது திருப்புகழ் தனிப்பாடல்களாக சிதறிக் கிடந்தது. பெரும்பாலான பாடல்கள் மறக்கப்பட்டிருந்தன. சுப்ரமணிய பிள்ளை திருப்புகழ் சுவடிகளைச் சேகரிக்க ஆரம்பித்தார். இது குறித்துத் தனது நாட்குறிப்பில் அவர், "இன்று 'நல்வெள்ளிக்கிழமை’ என்னும் பண்டிகை நாள். அருணகிரிநாதருடைய திருப்புகழ்ப் பாடல்களை ஓலைப் புத்தகங்களினின்றும் பெயர்த்தெழுத இன்று ஆரம்பித்தேன். எவ்வளவு பாடல் சேகரிக்கக் கூடுமோ அவ்வளவு சேகரித்து, நல்ல தமிழ் வித்துவானால் அவைதமைத் திருத்துதல் என் கருத்து. இம்முயற்சி நிறைவேறக் கடவுளே அருள்புரிய வேண்டும்" என்று எழுதியுள்ளார். மற்றொரு குறிப்பில், "திருப்புகழ்ப் பாட்டுக்களைச் சேகரஞ்செய்து வருகின்றேன். முருகப்பெருமானுடைய அநுக்கிரகத்தினாலே ஆயிரம் பாடலாவது திருத்தமாக அகப்பட்டால் அச்சிட்டு விடலாம். ஜனோபகாரமாயும் வெகு புண்ணியமாயுமிருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

திருப்புகழ் சுவடிகளுக்காக தொடர்ந்து பயணம் செய்தார். உ.வே.சாமிநாதையர் போன்றவர்களுக்கு கடிதம் எழுதி சுவடிகள் கோரினார். 1876-ம் ஆண்டு ஆறுமுக நாவலர் எழுதிய சைவ வினா-விடையில் திருப்புகழின் ஆறு பாடல்கள் இருந்தன. 1878-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி அன்று காஞ்சிபுரம் புத்தேரி தெரு அண்ணாமலை பிள்ளை என்பவரிடமிருந்து 750 பாடல்கள் கொண்ட ஏட்டுச்சுவடிகள் கிடைத்தன. அதே வருடம் பின்னத்தூர் சீனிவாச பிள்ளையிடம் 450 பாடல்களும், பின்னர் அவரிடமே 150 பாடல்களும் கிடைத்தன. மார்ச் 20, 1881-ல் கருங்குழி ஆறுமுக ஐயர் என்ற வீர சைவரிடமிருந்து 900 பாடல்கள் திருப்புகழ்ச் சுவடிகள் கிடைத்தன. 1903-ம் ஆண்டு திருமாகறல் என்ற ஊரில் 780 பாடல்கள் கிடைத்தன.

மஞ்சக்குப்பம் பள்ளி ஆசிரியர் சிவசிதம்பர முதலியார், சேலம் சரவணப்பிள்ளை, அனந்த ராம ஐயர் போன்றவர்களின் உதவியுடன் திருப்புகழ் முதல் பதிப்பை வெளியிட்டார். ஜூன் 5,1891 அன்று சிவசிதம்பர முதலியார் செப்பம் செய்து சீர்திருத்தி வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்களிடம் ஒப்படைத்து விட்டார். ஏப்ரல் 9, 1895 அன்று திருத்தம் செய்யப்பட்ட திருப்புகழ் பாடல்களை அச்சிற்குப் பதிப்பிக்கக் கொடுத்தார். சிவ சிதம்பர முதலியார் அச்சு வடிவத் திருப்புகழ் புத்தகத்தைக் காணாமலேயே இறந்துபோய் விட்டார்.

வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் திருப்புகழைப் புத்தக வடிவில் கண்ட அன்று தனது டைரிக்குறிப்பில் ஏப்ரல், 9 1895 அன்று இவ்வாறாகக் குறிப்பிடுகிறார். ’கடந்த 24 வருடங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட திருப்புகழ் பதிப்பு வேலை முடிய இவ்வளவு காலம் சென்றுள்ளது. இப்போதும் பாதி அளவே முடிந்துள்ளது’. (ரெங்கையா முருகன்[1])

கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் இப்பணியில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தார். அந்தத் தொகுப்பிற்கு தமிழறிஞர்களிடையே மிக நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்த பாகம் வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தையும் பிள்ளைக்கு உண்டாக்கியது. உடனே அந்த முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தார். ஓய்வுபெற்றபின் தமது இறுதிக் காலம் முழுக்கத் திருப்புகழ் பாடல்களைத் தொகுப்பதிலேயே ஈடுபட்டார். 1902-ல் திருப்புகழ் இரண்டாம் பாகத்தை அச்சிட்டு வெளியிட்டார். திருப்புகழ் மூன்றாவது பாகத்தைத் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அது நிறைவேறுவதற்கு முன் மறைந்தார்.

பிற இலக்கியப் பணிகள்

சுப்ரமணிய பிள்ளை திருப்புகழ் சுவடிகளைத் தேடும்போதே "பிரச்னோத்திர காண்ட வசனம்" என்ற நூலை எழுதி அச்சிட்டார். 1879-ல் வெளியான இதுவே அச்சில் வந்த அவரது முதல் நூல். வேத வேதாந்த விளக்கங்கள் குறித்தும், ஆங்கில நூல்கள், கட்டுரைகள் குறித்தும் இவர் 'ஜனவிநோதினி’ உள்ளிட்ட சில இதழ்களில் தொடர்ந்து எழுதினார். இவர் எழுதிய 'திருத்துறைப்பூண்டி ஸ்தல புராணம்’ என்னும் நூல் திருத்துறைப்பூண்டி ஆலயத்தால் வெளியிடப்பட்டது.

'சுந்தர விளக்கம்’ (1904), 'சிவஸ்தல மஞ்சரி’ (1905) ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டார். 'சிவஸ்தல அகராதி’யாகக் கருதப்படும் அந்த நூலை உ.வே.சா., வள்ளல் பாண்டித்துரைத் தேவர் உள்ளிட்டோர் வெகுவாகப் பாராட்டியிருந்தனர். திருத்தணி மீதான திருப்புகழையும் தனியாக அச்சிட்டு வெளியிட்டார். ஓய்வு நேரத்தில் பல சுவடிகளை ஆராய்ந்து பல ஸ்தல புராணங்களை எழுதி வெளியிட்டார். அவற்றில் திருவாரூர் புராணம், வேதாரண்ய புராணம், மானாமதுரை ஸ்தல புராணம், திருநீடூர் தல புராணம் போன்றவை குறிப்பிடத்தக்கன. நாமக்கல் செங்கழுநீர் விநாயகர் நவரத்தின மாலை, திரு உத்தரகோச மங்கை மங்களேஸ்வரி பிள்ளைத்தமிழ் போன்றவை இவரால் அச்சிடப்பட்ட குறிப்பிடத் தகுந்த படைப்புகள்.

பாராட்டுகள்,விருதுகள்

இவரது தமிழ்ப் பணியையும், நூல் வெளியீட்டுப் பணியையும் பாராட்டி, சேலம் கல்லூரி தமிழ்ப் பண்டிதர் சரவணப் பிள்ளை தனது வாழ்த்துரையில்,

நிறைமதியன் மெய்ப்புகழ்சேர் நீதிபதி அதிகார நிகழ்த்து மேலோன்
நறையொழுகு கடம்பணிவேள் அடிபணிம்சுப்பிரமணிய நயவான் மன்னோ

என்று புகழ்ந்துரைத்திருக்கிறார்.

மறைவு

சுப்ரமணிய பிள்ளை ஏப்ரல் 17, 1909-ல் மாரடைப்பால் காலமானார்.

பிள்ளையின் விருப்பப்படி அவருடைய சமாதி, திருத்தணி கோவில் ராஜகோபுரத்தை நோக்கியவாறு அமைக்கப்பட்டது. நந்தியும் லிங்கமும் அங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டன.

நினைவுநூல்கள்

  • இவரது மறைவிற்குப் பின் இவரது மகன்களான வ.சு. சண்முகம் பிள்ளை மற்றும் வ.சு. செங்கல்வராய பிள்ளை இருவரும் இணைந்து திருப்புகழ்ப் பாடல்களைத் தொகுத்து வெளியிட்டனர்.
  • இவருடைய வாழ்க்கை வரலாற்றை 121 பாடல்களாக 'திருப்புகழ் சுப்பிரமணிய நாயனார்’ என்ற தலைப்பில் வரகவி தென்னுர் சொக்கலிங்க பிள்ளை பாடியுள்ளார்.
  • வ.சு. செங்கல்வராய பிள்ளையும் தந்தையின் மறைவுக்குப் பின் அவரது வாழ்க்கை வரலாற்றை, 'வ. சுப்பிரமணிய பிள்ளை சரித்திரம்’ என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்திருக்கிறார்.

நூல்கள்

எழுதியவை
  • பிரச்னோத்திர காண்ட வசனம்
  • கோகர்ணபுராண சாரம்
  • சுந்தர விளக்கம் (1904)
  • சிவஸ்தல மஞ்சரி (1905)
பதிப்பித்தவை
  • திருப்புகழ் (இருபதிப்புகள்)
  • திருவாரூர் புராணம்
  • வேதாரண்ய புராணம்
  • மானாமதுரை ஸ்தல புராணம்
  • திருநீடூர் தல புராணம்
  • நாமக்கல் செங்கழுநீர் விநாயகர் நவரத்தின மாலை
  • திரு உத்தரகோச மங்கை மங்களேஸ்வரி பிள்ளைத்தமிழ்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page