under review

வெய்யோன் (வெண்முரசு நாவலின் ஒன்பதாம் பகுதி)

From Tamil Wiki
Revision as of 14:53, 31 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Removed non-breaking space character)
வெய்யோன் ('வெண்முரசு’ நாவலின் ஒன்பதாம் பகுதி)

வெய்யோன்[1] ('வெண்முரசு’ நாவலின் ஒன்பதாம் பகுதி) கர்ணனின் அங்கதேசத்தையும் அவன் மனைவியருடனான அவல வாழ்வு குறித்தும் விவரிக்கிறது. துரியோதனன் இந்திரபிரஸ்தத்தின் பளிங்கு மாளிகையில் மனத்தடுமாற்றம் கொள்வதும் அவன் பாண்டவர்களின் மீது வஞ்சம் கொள்வதும் சித்தரிக்கப்பட்டுள்ளன.

பதிப்பு

இணையப் பதிப்பு

'வெண்முரசு’ நாவலின் ஒன்பதாம் பகுதியான 'வெய்யோன்’ எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் டிசம்பர் 2015 முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்யாயம் என வெளியிடப்பட்டு மார்ச் 2016-ல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் இது விலைக்குக் கிடைக்கிறது.

அச்சுப் பதிப்பு

கிழக்கு பதிப்பகம் வெய்யோனை அச்சுப் பதிப்பாக வெளியிட்டுள்ளது.

ஆசிரியர்

'வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.

கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம்

தந்தை-தாய் யாரென அறியாத பிறப்பு; சாபத்தோடு கூடிய வில்வித்தைக் கல்வி; கொடையாகப் பெற்ற அங்கநாட்டு அரசுரிமை; அவனை மிகுதியாக விரும்புவதாலும் அவனைச் சூரியனின் மகன் என நம்புவதாலுமே அவனிடமிருந்து விலகியிருக்கும் முதல் மனைவி (சூதர்குலப் பெண்); அவனை மிகுதியாக வெறுப்பதாலும் அவனைச் 'சூதன் மகன்’ என நினைப்பதாலுமே அவனிடமிருந்து தன்னை விலக்கிக்கொள்ளும் இரண்டாம் மனைவி (கலிங்கநாடு இளவரசி) என விரியும் சூழல்கள் மூலம் கர்ணனின் உள்ளம் அடையும் கசாப்பை வெய்யோன் நாவல் பேசுகிறது. இந்திரப்பிரஸ்தம் செல்லும் வழியில் நாகர்களின் மூதன்னை திரியை உடனான சந்திப்பு கர்ணனின் பாதையை முற்றாக மாற்றுவதையும், நாகர்களின் இறுதிக் குழந்தையான அஸ்வசேனனைக் கையிலெடுத்து கர்ணன் வஞ்சினம் உரைப்பதையும் நாவல் விரிவாகப் பேசுகிறது.

வெய்யோனில் துரியோதனனின் உளவிரிவு முதன்மையாகக் காட்டப்பட்டுள்ளது. இந்திரபிரஸ்த ஒளிகோள் விழாவுக்கு பீமன்வந்து அழைத்ததும் தன் வஞ்சம் அனைத்தையும் மறந்து மனவிரிவு கொண்டு மூத்த சகோதரனாக, புதிய மனிதனாக துரியோதனன் மாற்றமடைந்து விழாவுக்கு செல்வதும், அங்கு திரெளபதியால் அவமானப்பட்டதாக உணர்ந்து மீள முடியாத வஞ்சத்திற்கு திரும்புவதும் விவரிக்கப்படுகிறது.

திரௌபதி துர்வாச மாமுனிவரின் சொல்லை ஏற்று, இந்திரப்பிரஸ்தத்தை உருவாக்குவதற்காகப் பாண்டவர்களைக்கொண்டு குளிர்மழைக் காண்டவத்தை அழித்தல், நாகர்களின் இடப்பெயர்வு, இந்திரப்பிரஸ்தத்தில் கலிங்கச் சிற்பிகளால் உருவாக்கப்பட்ட ஜலவிஹாரத்தில் (நீர்மாளிகை) நிகழ்த்தப்பட்ட ஆடிப்பாவை நிகழ்ச்சி எனக் கதை நகர்கிறது.

பானுமதியின் ஆலோசனையை ஏற்று, துரியோதனனும் கர்ணனும் சிவதரும் இணைந்து கலிங்க மன்னர் சித்ராங்கதனின் மகள்களைச் சிறையெடுப்பது, சிவதர் மட்டும் அகப்பட்டுக் கொள்ள மூன்றுமாதங்களுக்குப் பின்னர் ஈட்டுச்செல்வம் செலுத்தப்பட்டு மீட்கப்படுவதும் இந்தச் சிறையெடுப்பு நிகழ்வில் துரியோதனனின் தங்கை துச்சளையின் கணவரும் சிந்துநாட்டு அரசருமான ஜயத்ரதனுக்கு கர்ணன் பாடம் புகட்டுவதும் இந்த நாவலில் இடம் பெற்றுள்ளன.

இந்திரப்பிரஸ்தம் செல்லும்போது அஸ்தினபுரியின் படகில் துரியோதனனுக்கும் மகத மன்னருக்கும் நடைபெறும் மல்யுத்தம். கர்ணனின் இரண்டாம் மனைவியின் ஆணையைக் கர்ணனிடம் இறுமாப்புடன் கூறிய கலிங்கச் சேடியைப் பார்த்து கௌரவர் சுஜாதன் வஞ்சினம் உரைப்பது. துச்சளையும் ஜயத்ரதரும் அஸ்தினபுரிக்குள் நுழையும்போது அவர்களை வரவேற்பதற்காகக் கௌரவர்களின் பிள்ளைகள் ஏறத்தாழ 800பேர் கோட்டைவாயிலுக்குச் செல்வது. மண்ணுக்குள் இருக்கும் நாகர்களின் உலகம், கர்ணன் மகத மன்னருடன் நட்புக்கொள்ளுதல். எளிய மக்களுள் சிலர் அவ்வப்போது கர்ணனின் மணிக்குண்டலங்களையும் பொற்கவசத்தையும் காணுதல். துச்சளை-கர்ணன் இடையிலான அண்ணன் - தங்கை உறவுமுறை. அணுக்கர் சிவதரின் பேச்சை மீறி கர்ணன் அழையா விருந்தினராக இந்திரப்பிரஸ்தத்துக்குச் சென்று சில நிகழ்வுகளால் அவமானப்படுதல். கர்ணன் பேரரசி குந்தி தேவியின் அழைப்பினைப் புறக்கணித்தல். கௌரவர்களின் பிள்ளைகளோடு இணைந்து பீமன் ஏரியில் நீர்விளையாட்டை மேற்கொள்ளுதல். 'அனுமன் ஆலயத்தில் இருக்கும் யாராலும் தூக்கமுடியாத, வழக்கமான கதாயுதத்தைவிடப் பதினெட்டு மடங்கு பெரியதான கதாயுதத்தை ஏந்துபவனால் இந்த அஸ்தினபுரி முற்றழியும்’ என்று கூறும் கௌரவர் குண்டாசியின் 'தீர்க்கதரிசனம்’. நாகர்களின் இறுதி மகவான அஸ்வசேனனைக் கொல்லுமாறு இளைய யாதவர் கூறியும் அர்ஜுனன் அவனைக் கொல்லாதிருத்தல் என கதையோட்டக் காட்சிகள் இந்த வெய்யோனில் அடுத்தடுத்துஇடம்பெற்றுள்ளன.

இதில் ஓர் அங்கத நாடகம் இடம்பெற்றுள்ளது. திரௌபதியையும் பாண்டவர்களையும் இளைய யாதவரையும் எள்ளிநகையாடும் நோக்கில் தொடங்கும் இந்த நாடகம், உள்ளீடாக இந்திரப்பிரஸ்தத்தின் பெருமையைப் பாரதவர்ஷத்தின் அனைத்து ஷத்ரிய மன்னர்களுக்கும் அறிவிக்கும் வகையில் மலர்கிறது. இந்திரப்பிரஸ்தத்தின் ஒளிகோள் விழா கலைநிகழ்வுகளுள் ஒன்றாக இந்த நாடகத்தைத் திரெளபதி அரங்கேற்றிவிடுவது அவளுடைய அரசுசூழ்தலாகவே நாவலில் அமைகிறது.

கதை மாந்தர்

கர்ணன் முதன்மைக் கதைமாந்தராகவும் துரியோதனன், திரௌபதி, மகத மன்னன் ஜராசந்தன், நாகர்களின் மூதன்னை திரியை, சிவதர், அஸ்வசேனன், துச்சளை, ஜயத்ரதன், இளைய யாதவர், அர்சுனன், குந்தி, பீமன், சுஜாதன் ஆகியோர் துணைமைக் கதைமாந்தர்களாகவும் இடம்பெற்றுள்ளனர்.

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page