under review

வெங்கலராசன் கதை

From Tamil Wiki
Revision as of 14:13, 16 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected section header text)
வெங்கலராசா போர்-நடுகல், முரம்பன், ஓட்டப்பிடாரம் வட்டம், தூத்துக்குடி மாவட்டம்

நாஞ்சில்நாட்டில் புகழ்பெற்றிருக்கும் ஒரு நாட்டார் கதைப்பாடல் வெங்கலராசன் கதை. வில்லுப்பாட்டு வடிவிலும் இது உள்ளது. இது ஒரு நாட்டார்காவியம் . தென்னாட்டின் நாட்டார் காவியங்களில் அளவிலும் வீச்சிலும் உலகுடையபெருமாள் காவியத்திற்கு அடுத்தபடியானது. நாட்டுப்புறக் காவியங்களின் மொழியில் அமைந்துள்ள இந்நூலில் வரலாற்றுச் செய்திகள் உள்ளன என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

பதிப்பு வரலாறு

குமரிமாவட்ட நாட்டாரிலக்கியங்களை பதிப்பித்த முன்னோடியான ஆறுமுகப்பெருமாள் நாடார் "வலங்கை நூல் எனும் வெங்கலராசன் காவியம்" என்ற தலைப்பில் 1979 -ஆம் ஆண்டில் வெங்கலராஜன் கதையை பதிப்பித்தார்.

அ.கா. பெருமாளின் மாணவரான தே.வே. ஜெகதீசன் வெங்கலராஜன் கதையின் சுவடியை கண்டு எடுத்து ஒப்பிட்டு விரிவான ஆய்வுக்குறிப்புகளுடன் தன் முனைவர்பட்ட ஏட்டை வெளியிட்டார். அது பின்னர் ’பத்ரகாளியின் புத்திரர்கள்’ என்றபேரில் தமிழினி வெளியீடாக வந்தது.

ஆசிரியர்

இந்த பாடல் கி.பி, 1605-ல் (மலையாளக் கொல்லம் ஆண்டு 781) அகஸ்தீஸ்வரம் ஆறுமுகப் புலவர் என்பவரால் இயற்றப்பட்டது என்பதற்கான சான்று பாடலில் உள்ளது.

கதை

திரிவிக்ரமன் தம்பி பதிப்பித்த வெங்கலராஜன் கதையின் வடிவம் இது.

சோழநாட்டிலிருந்து பத்ரகாளியின் மைந்தர்களான ஒரு குடியினர் பாண்டிநாட்டை கடல்வழியும் கரைவழியும் கடந்து குமரிக்கடற்கரைக்கு வந்து சேர்கிறார்கள். அவர்களின் தலைவனின் பெயர் வெங்கலராஜன். நாஞ்சில்நாட்டிலுள்ள பறக்கை என்ற ஊரை அவர்கள் தங்கள் வாழ்விடமாக தெரிவுசெய்தனர். வெங்கலராஜன் அப்பகுதியின் அரசனாக ஆனார்

பறக்கை என்பது பக்ஷிராஜபுரம் என்று பெயர் பெற்ற வைணவத்தலம். அதன் தமிழ்ப்பெயர் பறவைக்கரசனூர்,அதன் சுருக்கமே பறக்கை. பறக்கை கோயிலில் வழிபடுவதற்காக வஞ்சிநாட்டை ஆட்சிசெய்த ராமவர்மா மகாராஜா வருகிறார். அவர் விழாவில் ஒர் அழகியைப் பார்க்கிறார். அவள் யாரென விசாரிக்கிறார். அவள் வெங்கலராஜனின் மகள் என்று தெரிகிறது

வெங்கலராஜனிடம் மகாராஜா ராமவர்மா அவர் மகளை அரசியென கேட்கிறார். குடிமாறி பெண்கொடுக்கச் சித்தமில்லாத வெங்கலராஜன் மறுக்கிறார். ராமவர்மா மகாராஜா கோபமடைந்து படைகொண்டு வருகிறார். வஞ்சிநாட்டின் பெரிய படையை எதிர்க்கும் படைபலம் வெங்கலராஜனிடம் இல்லை. ஆகவே அவர் தன் மகளின் கழுத்தை வெட்டி தலையை ஒரு தாம்பாளத்தில் வைத்து ராமவர்மாவுக்கு பரிசாக அளிக்கிறார். பறக்கையியிலிருந்து கிளம்பி நெல்லை சென்று பாண்டிய எல்லைக்குள் குரும்பூர் என்ற ஊரில் குடியேறிவிடுகிறார். அங்கே ஒரு சிறிய அரசை அமைக்கிறார்

பிறவடிவங்கள்

இதே கதைகொண்ட இன்னொரு கதைப்பாடல் உள்ளது, அது வெங்கலவாசல் மன்னன் கதைப்பாட்டு எனப்படுகிறது. இதுவும் கிட்டத்தட்ட வெங்கலராஜன் கதைதான். ஆனால் கதை நடப்பது மணவாளக்குறிச்சி அருகே உள்ள படைநிலம் அல்லது படர்நிலம் என்ற ஊரில். அரசன் திருவிழா பார்க்க வருவது மண்டைக்காட்டு கோயிலில். ஒரு மகளுக்கு பதில் இரண்டு மகள்கள். தலைவெட்டி காணிக்கையாக்கவில்லை, இரு மகள்களையும் கிணற்றில் தள்ளிக் கொன்றுவிட்டு தானும் கிணற்றில் குதிக்கிறார்

வெங்கலவாசல் மன்னன் கதை பிற்காலத்தையதாக இருக்கலாம். ஏனென்றால் மண்டைக்காடு ஆலயமே பிற்காலத்தையது. மேலும் கதையும் மிக எளிமையானதாக உள்ளது

முனைவர் எஸ்.இராமச்சந்திரன் ஆய்வுக்கட்டுரை ஒன்றில் இக்கதையின் நெல்லைப்பகுதி வடிவங்கள் மேலும் விரிவாக உள்ளன என்கிறார்.

அக்கதைகளின்படி காந்தம ரிஷி வழிவந்தவர்களாளாகிய வலங்கை நாடார்கள் சோழநாட்டில் புட்டாபுரம் என்னும் ஊரில் ஆட்சி புரிந்து வருகின்றனர். சோழ அரசன் அவர்களிடம் காவேரிக்கு குறுக்காக ஓர் அணையைக்கட்ட ஆணையிடுகிறான். அதை ஏற்க அவர்கள் மறுக்கிறார்கள். போர்க்குடியினராகிய தாங்கள் எந்நிலையிலும் தலையில் மண்சுமக்க மாட்டோம் என்கிறார்கள்.

சோழனுடன் போர் வருகிறது. எழுநூற்றுவர் எனப் பெயர் பெற்ற வலங்கைத் தலைவர்கள் புட்டாபுரம் கோட்டையிலிருந்து இடம் பெயர்ந்து செல்கின்றனர். தொண்டைநாடுக்கு ஒரு கிளை செல்கிறது. ஒருகிளை இலங்கைக்குச் செல்கிறது. இலங்கைக்குச் சென்றவர்களின் இளம்பனைக்கா எனப்படும் இடத்துக்குச் சென்று கள்ளிறக்கும் தொழில் செய்து பெருஞ்செல்வர்கள் ஆகிறார்கள்.

அந்த குலத்தைச் சேர்ந்த வீரசோழ நாடான் என்பவன் ரசவாதம் கற்றுப் பொருள் சேர்த்து அதிகாரமும் செல்வாக்கும் பெறுகிறார். அவனுக்கு வெள்ளைக்காரனின் ஆதரவு கிடைக்கிறது. வீரசோழ நாடான் 'சாணான் காசு’ எனப்படும் பொற்காசு அடித்துப் புழக்கத்தில் விடுகிறார். தனது உருவத்தைக் காசில் பொறித்து வெளியிடுமாறு வெள்ளைக்காரன் கேட்கிறான். வீரசோழ நாடான் மறுத்ததால் வெள்ளைக்காரன் வீரசோழ நாடானைக் கொன்று விடுகிறான். வீரசோழ நாடானின் மகன் வெங்கலராசன் எஞ்சிய குடும்ப உறுப்பினர்களுடன் தப்பி உயிர் பிழைத்துக் கப்பலேறித் தென் தமிழகக் கடற்கரைக்கு வருகிறார்.

வெங்கலராஜன் குமரிக்கருகிலுள்ள மணக்குடிக் காயலில் கரையிறங்கிச் சாமிக்காட்டு விளையில் வெண்கலக் கோட்டை கட்டி வாழ்கிறார். கம்மாளர் உதவியுடன் காசு அடித்து வெளியிடுகிறார். ஒரு முறை சுசீந்திரம் தேரோட்டம் காண அவருடைய இரு மகள்களும் சென்றிருந்த போது திருவிதாங்கோட்டு ராஜா ராமவர்மா அவர் மகளைக் கண்டு ஆசைப்பட பூசல் உருவாகிறது. அவர் தன் மகள்களை கொன்றுவிட்டு இடம்பெயர்கிறார்

தொல்லியல் சான்றுகள்

வெங்கலராஜன் கதைக்குத் தொல்லியல் சான்றுகள் உள்ளன என்று ஆய்வாளர் எஸ்.ராமச்சந்திரன் கருதுகிறார். "தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டத்தில் இளவேலங்கால் என்ற ஊர் உள்ளது. இவ்வூரில் சகவருடம் 1469 (கி.பி.1546-47)-ல் திருநெல்வேலிப் பெருமாள் எனப்பட்ட வெட்டும் பெருமாள் பாண்டிய மன்னர் முகாமிட்டிருந்த போது, வெங்கலராசா வடுகப் படையுடன் வந்து தாக்கினார். அத்தாக்குதலை எதிர்கொண்டு போரிட்ட குண்டையன் கோட்டை மறவர்கள் பதின்மர் வீர சொர்க்கம் அடைந்தனர். "மிண்டுவெட்டி சொர்க்கம் சேர்ந்த" அவ்வீர மறவர்களுக்கு எடுக்கப்பட்ட நடுகற்களில் இச்செய்தி பொறிக்கப்பட்டுள்ளது. இந்நடுகற்கள், தற்போது பாளையங்கோட்டையிலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன" என்று அவர் குறிப்பிடுகிறார்.

நெல்லை மாவட்டம் நான்குநேரி வட்டம் திருக்குறுங்குடியில் நம்பியாற்றுப் படுகையில் அணிலீஸ்வரம் என்ற பெயருடனமைந்த சிவன் கோயில் உள்ளது. அக்கோயிலில் பொ.யு. 1551-ஆம் ஆண்டில் வெங்கலராசா சில திருப்பணிகளை மேற்கொண்டார் என்பதை உணர்த்தும் வகையில், "விரோதிகர வருஷம் மார்கழி மாசம் 3-ஆம் தேதி ஸ்ரீமன் மகாமண்டலேசுரன் ராமராசா விட்டல தேவ மகாராசாவின் காரியத்துக்குக் கர்த்தரான வேலம் பாட்டி வெங்கள தேவ மகாராசா" என்ற வாசகம் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளது என்றும் எஸ்.ராமச்சந்திரன் குறிப்பிடுகிறார்.

நாணயவியல் ஆய்வாளர் அளக்குடி ஆறுமுக சீதாராமன், 1995-ஆம் ஆண்டில் நெல்லையில் இரு பழங்காசுகளைக் கண்டறிந்து சேகரித்தார். அக்காசுகள் வரலாற்று ஆய்வாளர் நெல்லை நெடுமாறன் அவர்கள் மூலமாக எனது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டன. அவற்றில் "வெங்க" என்ற எழுத்துக்கள் தெளிவாகவும் "ல" என்ற எழுத்து இவ்வெழுத்துக்களுக்கு இடையிலும் பொறிக்கப்பட்டுள்ளன. இக்காசுகள் பொ.யு. 16-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியைச் சேர்ந்தவை என்பதில் ஐயமில்லை. என்பதும் எஸ்.ராமச்சந்திரன் கருத்து[1].

வரலாற்று, பண்பாட்டுப் பின்புலம்

இந்நூல் நாடார் குலத்தவரைப் பற்றியது. நாடார்கள் இந்நூலில் வலங்கை உய்யக்கொண்டார்கள் என்று குறிப்பிடப்படுகிறார்கள். இவர்கள் சோழநாட்டில் இருந்து கிளம்பி தென்குமரி நாட்டுக்கு வந்த கதை பல்வேறு மகாபாரதப் புராணக்கதைகளுடன் கலந்து சொல்லப்படுகிறது. இவர்கள் கந்தம முனிவரிடமிருந்து தோன்றியவர்கள். வெவ்வேறு முனிவர்களின் கோத்திரங்களும் உள்ளே உள்ளன. குமரிமாவட்டத்திற்கு கதை வந்தபின்னர்தான் வரலாற்றுச்செய்திகள் துலக்கமடைகின்றன. பண்டைய திருவிதாங்கூரின் ஊர்களும் மரபுகளும் சொல்லப்படுகின்றன

வெங்கலராஜன் என்ற பெயர் அவருடைய இயற்பெயர் அல்ல. அந்த சிறுமன்னன் தன் மாளிகையில் வெண்கலத்தாலான பெரிய கதவை வைத்திருந்தார். ஆகவே அப்பெயர் பெற்றார். வெண்கலத்தாலான கோட்டை என்று அது புகழ்பெற்றது

தென் நாஞ்சில்நாட்டில் வந்து
சிறந்த வெங்கலக் கோட்டையிட்டு
வெங்கல கோட்டையதிலே
வீற்றிருக்கும் நாளையிலே
பங்கஜம்சேர் பூவுலகில்
பறக்கை நகரமானதிலே
மதுசூதனப்பெருமாளுக்கு
வருஷத்திருநாள் நடத்தி
பதிவாக தேரோடி
பத்தாம் நாள் ஆறாட்டும் நடத்தி

என்னும் வகையில் ஒழுக்குள்ள நாட்டுப்புற பண்ணுடன் இப்பாடல் அமைந்திருக்கிறது.

இந்நூலில் ஆய்வாளர் கருத்தில்கொள்ளும் வரலாற்றுச் செய்திகள்

  • இடங்கை வலங்கைப் பூசல். இதில் நாடார்கள் வலங்கைப்பிரிவைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கும் சோழ மன்னர்களுக்கும் நிகழ்ந்த போர். சோழநாட்டில் பதினொன்றாம் நூற்றாண்டில் முதலாம் குலோத்துங்கன் காலம் முதல் சாதிகள் நடுவே வலங்கை இடங்கைப்பூசல் நிகழ்ந்திருக்கிறது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்கன் காலகட்டத்தில் அது உச்சத்தை அடைந்து சோழப்பேரரசின் வீழ்ச்சிக்கே காரணமாகியது.
  • சாதிப்படிநிலை மாற்றத்தை விரும்பாமல் ஊரைவிட்டுச் சென்றவர்களின் வரலாறாக நாடார்களின் இடம்பெயர்வை ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அவர்களில் ஈழத்துக்குச் சென்று செல்வம் சேர்த்து அங்கிருந்து திரும்பி நாஞ்சில்நாட்டுக்கு வந்திருக்கிறார்கள். ஈழத்தில் அவர்கள் ஓரிரு நூற்றாண்டுகள் இருந்திருக்கலாம். ஏனென்றால் அவர்கள் அங்கிருந்து மீண்டும் கிளம்ப வெள்ளைக்காரர்கள் காரணமாகிறார்கள்.
  • இவர்கள் குமரிநிலத்துக்கு வந்த காலகட்டம் பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதி அல்லது பதினாறாம் நூற்றாண்டாக இருக்கலாம். சோழர்களின் ஆதிக்கம் பதிமூன்றாம் நூற்றாண்டில் அழிந்தது. பதினேழாம்நூற்றாண்டில் திருவிதாங்கூர் அரசு மார்த்தாண்டவர்மாவால் வலுவாக நிறுவப்பட்டது. இவ்விரு காலகட்டங்களுக்கு நடுவே உள்ள நிலையற்ற ஆட்சிக்காலத்தில் இக்கதை நிகழ்ந்திருக்கலாம்
  • இந்தக் கதை நாடார்கள் பதநீர் காய்ச்சும் தொழில்நுட்பத்தை கற்று அதை கொண்டுவந்ததை காட்டுகிறது. பனை பத்ரகாளி என்று சொல்லப்படுகிறது. பத்ரகாளியின் புத்திரர்கள் என நாடார்கள் தங்களை அழைத்துக்கொண்டனர். பனைத்தொழில் விரிந்தபோது பல்லாயிரம்பேரை தொழிலுக்காகச் சேர்த்துக்கொண்டனர். அவ்வாறு மேலும் பெருகினர். அவர்களின் கதையாக எப்படி இந்த நூலை வாசிக்கலாம் என்பதை தெ.வே.ஜெகதீசனின் நூல் விரிவாக விளக்குகிறது.

உசாத்துணை

  • பத்ரகாளியின் புத்திரர்கள்: தெ.வே.ஜெகதீசன்
  • தெக்கன் பாட்டுகள்- டாக்டர் திரிவிக்ரமன் தம்பி

இணைப்புகள்


✅Finalised Page