ராம் தங்கம்

From Tamil Wiki
Revision as of 17:19, 17 June 2022 by SathishKorea (talk | contribs)

// ராம் தங்கம் page is being created by Sathish //

ராம் தங்கம், நன்றி: ராம் தங்கம் இணையதளம்

ராம் தங்கம் (28 பிப்ரவரி 1988) தமிழ் எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். முழுநேர எழுத்தாளராக, இலக்கியத்திலும், பத்திரிகைகளிலும் எழுதி வருகிறார். பல இலக்கிய நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வருகிறார். நாஞ்சில்நாட்டின் இயல்பான வெளிப்பாடுகளை தன்னுடைய கதைகளில் எழுதி வருகிறார்.

பிறப்பு கல்வி

ராம் தங்கத்தின் இயற்பெயர் த. ராமு. விகடன் இதழில் வேலை செய்த போது த.ராம் என்கிற பெயரில் எழுதியிருக்கிறார். பிற்பாடு கதைகள் எழுத தொடங்கிய பிறகு ராம் தங்கம் என்ற பெயரில் எழுத ஆரம்பித்தார்.

ராம் தங்கம் 28 பிப்ரவரி 1988-ல் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிறந்தார். சமாதானபுரம் அரசு தொடக்கப் பள்ளியிலும், அகஸ்தீஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் பள்ளிக்கல்வியை கற்றார். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் மூலம் இளங்கலை வரலாறு பட்டமும், டிப்ளமோ இன் மீடியா ஆர்ட் பட்டமும் பெற்றார்.

தனி வாழ்க்கை

ராம் தங்கம் ஆரம்பத்தில் இதழாளராக பணியை தொடங்கியவர். தினகரன், ஆனந்தவிகடன் போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியிருக்கிறார். இப்போது முழுநேர எழுத்தாளராக தொடர்ந்து இலக்கியத்திலும், பத்திரிகைகளிலும் எழுதி வருகிறார்.

படைப்புலகம்

திருக்கார்த்தியல், ராம் தங்கத்தின் முதல் சிறுகதை தொகுப்பு

ராம் தங்கத்தின் முதல் நூலான ‘காந்திராமன்’ மார்ச் மாதம் 2015 ஆம் ஆண்டு  வெளிவந்தது. இந்நூல் நாகர்கோயிலை சேர்ந்த சுதந்திர போராட்ட தலைவரான காந்திராமனின் வாழ்க்கை வரலாற்று நூல். ராம் தங்கம் காந்திராமன் நூலிற்காக சிறந்த வரலாற்றுப் புத்தகத்திற்கான ‘தெற்கு எழுத்தாளர் இயக்க விருது’ பெற்றார். மேலும் அடுத்தடுத்த ஆறுமாதங்களில் ராம் தங்கத்தின் இரண்டாவது நூல் ‘ஊர்சுற்றிப் பறவை' (2015  ஆகஸ்ட்), மூன்றாவது நூல் ‘மீனவ வீரனுக்கு ஒரு கோவில்’ (2016 ஜனவரி) வெளிவந்தது.  ராம் தங்கத்தின் முதல் இந்த மூன்று புத்தகங்களுக்கும் வரலாற்று ஆய்வாளர் அ.கா. பெருமாள் அவர்கள் அணிந்துரை எழுதியுள்ளார்.

எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன் மற்றும் மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீ ஆகியோரால் ஊக்கம்பெற்று ராம் தங்கம் புனைவு இலக்கியம் எழுத தொடங்கினார். ராம் தங்கத்தின் முதல் சிறுகதை ‘திருக்கார்த்தியல்’ டிசம்பர் 2017  ல் ஆனந்தவிகடனில்  வெளிவந்தது. அந்தச் சிறுகதைக்காக ராம் தங்கம் ஞானியின் கோலம் அறக்கட்டளையின்  ‘அசோகமித்திரன்’ விருது பெற்றார். ராம் தங்கத்தின் முதல் சிறுகதை தொகுப்பு ‘திருக்கார்த்தியல்’ 2018 ஆம் ஆண்டு வம்சி புக்ஸ் வெளியீடாக வெளிவந்தது.

இலக்கிய செயல்பாடுகள்

ராம் தங்கம் தமிழின் மூத்த எழுத்தாளரான பொன்னீலன் அவர்களின் வாழ்நாள் இலக்கிய பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் நவம்பர் 2019 ல் "பொன்னீலன் -80 " என்ற பெரும் விழாவை தன் இலக்கிய நண்பர்களுடன் இணைந்து ஒருங்கிணைத்து நடத்தினார். மேலும் அவ்விழாவில் எழுத்தாளர் பொன்னீலன் அவர்களின் வாழ்நாள் இலக்கிய செயல்பாட்டையும் அவரின் படைப்புலகம் குறித்தும் பல எழுத்தாளர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளை தொகுப்பாசிரியராக இருந்து தொகுத்து 'பொன்னீலன்-80 ' என்ற  புத்தகத்தை வெளியிட்டார். ராம் தங்கம் தன் நண்பர்களுடன் இணைந்து ‘திரிவேணி இலக்கியச் சங்கமம்’ என்கிற இலக்கிய அமைப்பை 2016-17 காலக்கட்டத்தில் நடத்தினார்.

மதிப்பீடு

ராம்தங்கத்தை நாஞ்சில்நாட்டின் வழித்தோன்றலாக எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிடும்பொழுது "பெரும்பாலும் எழுத்தாளனால் எழுதப்பட்ட நிலமே வரலாற்றில் நிலைகொள்கிறது, எழுதப்படாத நிலம் வெறும் பருப்பொருள் மட்டுமே என்றாகிறது. அவ்வகையில் தமிழில் நாஞ்சில் நாடே மிக அதிகமாக எழுதப்பட்ட நிலம். கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை முதல் நீடிக்கும் இதன் தலைமுறை தொடர்ச்சியில், நாஞ்சில் மண்ணை பற்றி இத்தலைமுறையில் எழுத வந்திருப்பவர்களில் குறிப்பிடத்தக்கவர் ராம் தங்கம். அவருடைய கதைகள் நாஞ்சில்நாட்டின் இயல்பான வெளிப்பாடுகளாக உள்ளன. ராம் தங்கத்தின் திருக்கார்த்தியல் தொகுதி அவரை நாஞ்சில் நாட்டின் மிகச்சரியான வாரிசாக அடையாளம் காட்டுகிறது"

நூல் பட்டியல்

சிறுகதைத் தொகுப்புகள்

  1. திருக்கார்த்தியல்
  2. புலிக்குத்தி

பிற நூல்கள்

  1. காந்திராமன்
  2. ஊர்சுற்றிப் பறவை
  3. மீனவ வீரனுக்கு ஒரு கோவில்

பயண நூல்கள்

  1. கடவுளின் தேசத்தில் – பாகம் 1
  2. கடவுளின் தேசத்தில் – பாகம் 2
  3. சிதறால்

மொழி பெயர்ப்பு நூல்கள்

  1. சூரியனை எட்ட ஏழு படிகள்
  2. காட்டிலே ஆனந்தம்

பரிசுகளும், விருதுகளும்

  • இவரது திருக்கார்த்தியல் சிறுகதைத் தொகுப்பு சுஜாதா விருது, அசோகமித்திரன் விருது, படைப்பு இலக்கிய விருது, வடசென்னை தமிழ்ச்சங்கம் இலக்கிய விருது, சௌமா இலக்கிய விருது, அன்றில் வளர் தமிழ் சிறுகதையாளர் விருது உட்பட ஆறு விருதுகளைப் பெற்றுள்ளது.
  • ராம் தங்கம் எழுதிய ராஜவனம் குறுநாவல் சிங்கப்பூர் மாயா இலக்கிய வட்ட குறுநாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றது. எழுத்தாளர் சாரு நிவேதிதா நடுவராக இருந்து ராஜவனம் நாவலை முதல் பரிசுக்கு  தேர்ந்தெடுத்தார். மேலும் ராஜவனம் நாவலுக்கு படைப்பு இலக்கிய விருதும், விஜயா வாசகர் வட்டம் வழங்கும் கவிஞர் மீரா விருதும் கிடைத்தது.

கவனம் பெறுபவை

  • ராம் தங்கத்தின் திருக்கார்த்தியல் தொகுப்பில் இடம்பெற்றுள்ள 'வெளிச்சம்' சிறுகதை நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரி தமிழ்த்துறையின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது

உசாத்துணை

  1. ராம் தங்கம், படைப்பாளிகள் அறிமுகம், அரூ கனவுருப்புனைவு மின்னிதழ்
  2. நாஞ்சில்நிலத்தின் நாக்கு - ராம் தங்கம் நாஞ்சில் நிலத்தின் கலைஞன், எழுத்தாளர் ஜெயமோகன், ஜெயமோகன் இணையதளம் 07 மார்ச் 2021
  3. எஸ்.ராவின் பயணங்கள் வாசகனுக்கான வாசல், ராம் தங்கம், அரூ கனவுருப்புனைவு மின்னிதழ் 10 May 2021
  4. படைப்பாளனுக்கு கிடைக்கும் அங்கீகாரம் விருது- விஜயா வாசகர் வட்டம் விருதுகளில் எழுத்தாளர் ராம் தங்கத்திற்கு கவிஞர் மீரா விருது, தினமலர் நாளிதழ் 06 March 2022

இணைப்புகள்

  1. ராம் தங்கம் வலைதளம்
  2. எழுத்தாளர் ராம்தங்கம் நேர்காணல் - உடை மட்டுமே மனிதர்களை தீர்மானிக்காது, மதிமுகம் தொலைகாட்சி 30 Oct 2019